குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Saturday, December 29, 2007

37.அந்தக் கணமும் , சில பொழுதுகளும்...



விசிறிச் சிதறும் சக்கர வட்டம்,
பாதிப் பட்டுப் புடவையில் உன்னுடை;
சிலீர் சிலீரென சிதறும் புன்னகை,
சிரிக்கும் கண்கள் கலைந்து,கலைத்திட;
தோழிகள் நடுவே சுடரும் சுடர் நீ,
தோன்றும் இடமெலாம் சத்த வெடிச்சரம்;
ஏழிரு வயதின் உறைந்த நினைவு
ஆழ்ந்த மனதின் பெட்டகப் பதிவாய் !



நெஞ்சம் அணைக்கும் புத்தகம்,கைகள்,
நெருங்கித் தணிந்த பேச்சில் தோழியர்;
வகுப்பறை நேரம் வன்மைக் கவனம்,
வதனம் நயணம் அறிவின் ஒளிச்சுடர்;
மின்னி மறையும் மின்மினியாய்,கணம்
மீண்டெனை மறையும் மின்னல் பார்வை;
ஷேக்ஸ்பியர் எழுதிய sonnets எல்லாம்,
சிந்தை முழுதும் உந்தன் வடிவினில் !



பாதைகள் மறைந்த பாசிப் படித்துறை,
பன்னிப் பதியும் கொலுசின் நடையொலி,
தோள்கள் சாய்ந்து கைகள் கோர்த்து,
பேசிய கவிதையும் பாட்டும் ஆயிரம்;
தங்கச் சுடராய் மஞ்சள் வெயிலில்
அங்கம் எங்கும் பொங்கும் களியில்,
மெல்லிய த்வனியில் மீட்டிய வீணையாய்
சில்லெனச் சிதறிய 'ஸ்வர ராக சுதா' !!




சிற்றிடை அசைய சித்திர நடையில்
பொற்பதப் பூக்கள் போகும் பாதைகள்,
என்மன வானின் அகன்ற வெளியில்
பொன்னொளிச் சுடரின் புதிய வானவில்;
எதிரெதிர் பார்க்க ஏதும் பொழுதினில்
என்னுயிர் கலந்து மீளும் விழிகளில்
உலக முழுமையின் அன்பும் நேசமும்;
உவப்பின் உச்சியில் உயிரும்,உணர்வும் !




ஓடி மறையும் மேகத் திட்டாய்
ஒரு நாள் பிரிவாய் என்றறியாமல்,
பேசித் திரிந்த கதைகள் பற்பல;
பேச மறந்த கதைகள் பற்பல..
புறப்படும் பொழுதில் எழுப்பிய கேள்வி,
எப்படி உணர்வாய்,எந்தன் பிரிவை?
எப்படி உணர்வேன்,உறையும் கணங்கள்,
மௌனக் கடலின் புதைந்த பொக்கிஷம் !!

-அறிவன்.

Wednesday, December 26, 2007

^^^ 36.மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் !!!

குறிப்பு : இக்கட்டுரை திண்ணை மின்னிதழிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.


மாற்றம் மட்டுமே உலகில் மாறாதது என்ற சொலவடை நினைந்து,நினைந்து ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று.
டெக்னாலஜி எனச் சொல்லப்படுகிற அறிவியலின் வளர்ச்சி,வாழ்வில் நமக்கு பல்வேறுவிதமான காரியங்களை எளிதாக்கியிருக்கிறது;
உதாரணமாக
கணினி,
கணிப்பான் – கால்குலேட்டர்-,
கைத்தொலைபேசி
போன்ற உபகரணங்கள் நமக்களித்த சௌகர்யங்கள்(இந்த வார்த்தை தமிழ்தானா???) ஏராளம்.

அதுவும் இப்போதைய,பால்காரர் முதல் பாரவண்டிக்காரர் வரை, நம் அனைவருக்கும் கைத்தொலைபேசியை மறந்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால்,கையொடிந்தது போலாகிவிடுகிறது.(இன்னும் கல்லூரிக் காளைகள்,கன்னிகள் கைத்தொலைபேசி இல்லாமல் வந்துவிடும் நாட்களில் தொடர் கை நடுக்கம் ஏற்பட்டு,கல்லூரியின் அன்றைய நாளில் நிறுத்தப் போராட்டம்-ஸ்ட்ரைக்- நடத்தலாமா என்று யோசிக்கும் அளவுக்கு சென்று விடுவதாகக் கேள்வி!)

இந்த உபகரண சௌகர்யங்கள் ஓசைப்படாமல்,நமது சிற்சில திறமைகளை,ரசனைகளை அழித்துக் கொண்டிருக்கிறது என்பது,நாம் அதிகம் சிந்திக்காத ஒரு கோணம்;

அழகாக எழுதும் கையெழுத்து,
மனக் கணக்காக கூட்டும் கணிதத் திறன்,
காதருகில் பேசுகின்ற சுகம் போன்ற கடிதங்கள்,
ஆகியவை இவற்றில் சில.

என்னுடைய மாமா,மற்றும் கல்லூரிக்காலத்திய நெருங்கிய சகதோழன் சுந்தரவடிவேல் (இன்றைய பதிவர் உலகிலும் அறியப்பட்ட அதே சுந்தரவடிவேல்தான்!) ஆகியோரின் அழகான கையெழுத்தைப் பார்த்து,அவர்களை விஞ்ச வேண்டும் என்ற உத்வேகமே என் கையெழுத்தைப் பெருமளவில் சீர்செய்தது.

ஆனால் இன்றைய நாட்களில் கையெழுத்துக்கள் மறைந்து,அருகி வரும் ஒரு விதயமாகின்றன....

சமீபத்தில் ஆவி.யில் ஒரு இளைஞர் ஒரு லட்சம் அஞ்சலட்டைகள் வாங்கி,மனதில் தோன்றுகின்ற நபர்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள் அனுப்பிக் கொண்டிருகிறார்,கடிதம் எழுதும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டி!
அடுத்ததாக 10 லட்சம் அஞ்சலட்டைகள் அனுப்பப் போகிறாராம் !!!

சமீபத்திய நியூயர்க்கர் இதழில் மும்பை தலைமைதபால் நிலைய வாசலில் ‘கடிதம் எழுதி’யாக வாழ்க்கையைக் கழித்த ஜி.பி.சாவந்த்’ன் படக்காட்சிப் பேட்டி பார்க்க நெகிழ்ச்சியாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மும்பையின் பல அடித்தட்டு மக்களுக்காக 10000’க்கும் மேற்பட்ட கடிதங்களை அவர் எழுதி இருக்கிறாராம்;அவை தாங்கிச் செல்லும் அன்பு,பாசம்,மிரட்சி,வேதனை ஆகிய அனைத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார் அவர்.
அவர் பலருக்கு எழுதித் தரும் கடிதங்களில் பணம் வைத்து அனுப்ப நேரிடும்போது அரக்கு உருக்கி அவர் பெயரிட்ட உலோகஎழுத்துப் பதிப்பால் முத்திரை பதித்து அனுப்புவது வரை அனைத்தையும் பகிர்ந்துகொண்ட அவர்,காதல் கடிதங்களை மட்டும் என் தொழில் வாழ்க்கையில் யாருக்காகவும் எழுத மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

நான் சிறுவனாக பதின்ம வயதுகளில் இருந்த போது எங்கள் பெரியப்பா-அவர் கனரா வங்கியில் முதன்மை மேலாளராகப் பணி செய்தார்,வாழ்வின் சிறு ரசனைகளைப் பேணும் மனிதர்-எழுதும் கடிதங்கள் வரும்போது,சூடான பலகாரங்களுக்கு நடக்கும் சண்டையாய் வீட்டுக்குள்,அதை யார் முதலில் படிப்பது என்ற போட்டி நடக்கும.
அவ்வளவு ரசனையாகக் கடிதங்கள் எழுதும் ஒரு entertainer அவர்.

உதாரணமாக 80 களின் மத்தியில் சென்னையிலிருந்து,கல்கத்தா கிளைக்கு மாற்றலாகி,பிள்ளைகள் படிப்புக்காக குடும்பம் சென்னையிலேயே இருக்க,தனியாகக் கல்கத்தாவுக்குச் சென்ற பின் எழுதிய 15 பக்க முதல் கடிதம் “விமானம் 25000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது;பக்கத்தில் பெண்டாட்டி இல்லையாதலால் தைரியமாக ஏர்ஹோஸ்டஸ் பெண்ணுடன் சிரித்துப் பேச முடிந்தது...” என ஆரம்பித்து தெருவோரம் பீறிடும் தண்ணீர் குழாய்களில் குளிக்கும் மாநகர் வாசிகள்,சவரம் முதல்கொண்டு நடைபாதையில் நடக்கும் காட்சி என மொத்த கல்கத்தாவின் ஒரு ‘அவுட்லுக்கை’ அக்கடிதம் கொடுக்கும்.
ஆரம்ப நாட்களில் என்னுடைய அவதானிப்புகள் கூர்மையடைய அவரின் கடிதங்களும் ஒரு காரணம்.
அவரே நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற மன உந்துதல்கள்,எனது கடிதக் கலையின் நேர்த்திக்கு ஆரம்பக் காரணிகள்.(பின்னால் நான் எழுதிய கடிதங்கள் பல, பெரியப்பா உள்பட,என் உறவினர்கள்,நண்பர்களால் சிலாகிக்கப்பட்டதை இங்கே சொல்ல என் அவையடக்கம் தடுக்கிறது எனச் சொல்லிவைக்கிறேன்!)
இப்போது 2005’ல் கல்கத்தா செல்ல நேர்ந்த போது அவரின் கடிதமெழுதும் திறன் பற்றிய எனது எண்ணம் எனக்கு மேலும் வலுப்பட்டது.

சாவந்த் முத்தாய்ப்பாக சொன்ன செய்தி,கடைசியாக அவர் எழுதிய கடிதம் 3 ஆண்டுகளுக்கு முன் !

மின்மடல்கள்,குறுந்தகவல்கள் பெருகிவிட்ட இக்காலத்திலும்,10 மின்மடல்களுக்கிடையில் ஒரு கடிதமாவது எழுதப் பழகுவோம்....உறவுகளும்,ரசனைகளும் மேம்படும் !

Monday, December 24, 2007

35-மோடியின் தேர்தல் வெற்றி

மோடியின் வெற்றி குறித்ததான திணமணியின் பின்வரும் தலையங்கம் பெருமளவு ஒத்துக்கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும், இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராகிறார் என்பதும், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் சிலரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தாலும், குஜராத் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு ஏற்புடைய தீர்ப்பு என்பதால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

தீர்ப்பு தவறாகிவிட்டது என்றும், மக்கள் முட்டாள்கள் என்றும் கூறுபவர்கள் மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் கூற வேண்டும். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு தரப்படும்போது வரவேற்பதும், பாதகமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் சரியான அணுகுமுறையாகாது. குஜராத் மக்களின் நன்மதிப்பை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத்தான் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.

ஒருவகையில் பார்த்தால், தமிழகத்தில் ஜெயலலிதாவால் செய்ய முடியாத சாதனையை, குஜராத்தில் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அதிமுக, நடிகர் விஜயகாந்தின் தேமுதிக களத்தில் இறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கும் சாதனையைச் செய்திருக்குமோ என்னவோ?

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, குஜராத்திலுள்ள 180 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 91 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நரேந்திர மோடியின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கணித்தது அதனால்தான். அதே நிலை தொடர்ந்திருந்தால் நிச்சயமாகக் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால், தனது செல்வாக்குச் சரிவை நரேந்திர மோடி தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது என்றால் அது அரசியலில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் நரேந்திர மோடி என்கிற அரசியல் ராஜதந்திரியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவருக்கு நிகரான செல்வாக்குடைய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதும், நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதும், குஜராத்தியர்களின் சுயமரியாதைக்கு அடையாளமாக நரேந்திர மோடி கருதப்படுகிறார் என்பதும் பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் காரணங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும்தான் நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்கள் என்று சொல்ல வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளை, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதுபோல காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சித்திரித்ததை, குஜராத்திலுள்ள சிறுபான்மையினரே விரும்பவில்லை என்று தெரிகிறது. சிறுபான்மையினரில் 99 சதவீதம் பேர் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர். மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து வாழ ஆசைப்படுபவர்கள். தங்களுக்குத் தீவிரவாத முலாம் பூசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், வாக்களிக்காமல் இருந்தவர்கள் ஏராளம் என்று கூறப்படுகிறது.

அது போகட்டும். நரேந்திர மோடியின் வெற்றி தேசிய அளவில் சில நல்ல விஷயங்களுக்கு உதவப் போகிறது. முதலில், நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது. இரண்டாவதாக, மன்மோகன் சிங் அரசு தனது அணுசக்தி ஒப்பந்தப் பிடிவாதத்தைத் தளர்த்தி, ஒப்பந்தத்தை ஒத்திப்போட்டுவிடும். மூன்றாவதாக, ஆட்சியைக் கவிழ்த்தால், பாரதிய ஜனதா மீண்டும் பதவிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில், இடதுசாரிகள் அரசை மிரட்ட மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஏதோ, ராகுல் காந்தியால் காங்கிரஸ் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய பலத்தைப் பெற்றுவிடும் என்கிற நப்பாசையும், நரேந்திர மோடியின் தயவால் நைத்துப் போய்விட்டது. உத்தரப் பிரதேசத்திலும் சரி, குஜராத்திலும் சரி அவருக்குக் கூடிய கூட்டம் வேடிக்கை பார்க்கத்தான் வந்ததே தவிர வாக்களிக்க அல்ல என்பது தெளிவாகி விட்டது. இனிமேல், பிரியங்காவை முன்னிறுத்தி வேடிக்கை காட்டுவார்கள் என்று நம்பலாம்.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பின்னால் அவரது உழைப்பும், தன்னம்பிக்கையும் தெரிகிறது. அதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். அதேநேரத்தில், இந்த வெற்றியின் போதைக்கு அவர் அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும். தான் ஒட்டுமொத்த குஜராத் மக்களின் முதல்வர் என்பதை மறந்துவிடாமல் ஆட்சியில் தொடர சரித்திரத்தின் பக்கங்களை அவர் அடிக்கடி புரட்டிப் பார்ப்பது நல்லது!



2002 சம்பவங்களில் ஒரு முதல்வராக,அவரது குறைபாடுகளை இந்த வெற்றி வெளையில் அவர் பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் அவர் மேலும் ஒரு பன்முகத் தலைவராக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

*******************************************

பிற்சேர்க்கை:ஒரு அர்த்தமுள்ள கேள்வியும்,பொருத்தமான பதிலும்.(இந்தியா டுடே இதழில் ஆசிரியர் கேள்விகளில் இருந்து)

How did the BJP win in Gujarat despite all the opposition from the media?
Prabhu answers: Unfortunately, for both the print and electronic media, the voters in Gujarat were Gujaratis and not mediapersons from outside.

Even the local media was running a campaign against Modi. I hate to admit but the fact is that some of us have lost touch with our own readers and viewers. It is a dangerous trend that voting intentions of media personalities are now being reflected more aggressively in their writing and opinions.

It poses a greater danger to the credibility of the media than that of the politician.

***************************************

Why is the media so anti-Modi when he has brought about development in Gujarat unseen in any other state in the last 60 years?

Prabhu answers: There seems to be a very wide communication gap between Narendra Modi and the English media. Since he doesn't speak English, he isn't in a position to put across his point of view to the English media because of its inherent biases.

Most of the English media, according to Modi, is dominated by those who have not visited a village or understand the real India. Once this communication gap is bridged, Modi may get a better deal from those who think he doesn't belong to their class.

Friday, December 21, 2007

34.கொஞ்சம் சிரிப்பு


நியூயார்க்கர் இதழின் கேலிச்சித்திரங்கள் மிகவும் பேசப்படுபவை.

அவற்றிலிருந்து சில,வாரவிடுமுறை புன்னகையுடன்.
1.On Internet,nobody knows you are a dog..
2.Never,ever think outside the box( Man to cat,near to litter box)
3....
4.Take my advice-Never let anybody talk you into joining the Tie of the Month' Club
5.You reckon,it might be time to start to think about a new nickname,Slim ?

Wednesday, December 19, 2007

33.சிந்திக்க சிறிது இலக்கியம்-தமிழின் தொண்மையும் அழகும் !

அறிந்த வெழுத்தம்முன் பன்னிரண்டாவிக ளான;கம் முன்
பிறந்த பதினெட்டு மெய் ;நடு வாய்தம் ; பெயர்த்திடையா
முறிந்தன யம்முத லாறும்;ஙஞண நமனவென்று
செறிந்தன மெல்லினம்; செப்பாத வல்லினம்; தேமொழியே.


பொருள்:அறிந்த எழுத்து அம்முன் பன்னிரண்டு ஆவிகளான- அறிந்து சொல்லப்பட்டு நின்ற எழுத்துக்களுக்குள்ளே அகரம் முதல் ஔகாரம் ஈறாக சொல்லப்பட்ட பன்னிரண்டு எழுத்தும் உயிரெழுத்து என்னும் பெயர் உடையன; கம்முன் பிறந்த பதினெட்டுமெய்- ககர ஒற்று முதல் னகர ஒற்று ஈறாக சொல்லப்பட்ட பதினெட்டும் மெய்ய்யெழுத்து என்னும் பெயரவாம்; நடுவாய்தம்- உயிரெழுதிற்கும் மெய்யெழுத்திற்கும் நடுவாந் தன்மையாய் இருக்கின்ற அஃகேதனம் என்னும் தனிநிலை எழுத்தானது ஆய்த எழுத்து என்னும் பெயரதாம்; பெயர்த்து இடையா முறிந்தன யமுதல் ஆறும்-முன் சொன்ன பதினெட்டு மெய்களுக்குள்ளே யரவலளழ வென்னும் ஆறெழுத்தும் இடையின எழுத்தென்னும் பெயரவாம்;செப்பாத வல்லினம்- இவற்றில் சொல்லாத கசடதபற என்னும் ஆறெழுத்தும் வல்லின எழுத்துக்களாம்.
மேற்சொன்ன பாடல் ஒரு தமிழ் நூலின் முதல் பாடல்.
தமிழ் மொழி காலத்தால் அறுதியிட்டுச் சொல்ல முடியாத முதல் மொழிகளுள் ஒன்று என்பதை நாளும் விளக்கி நிற்கும் நூல்களில் இது ஒன்று.
தமிழின் அடிப்படை இலக்கணமான ஐந்திலக்கணங்கள் எனச் சொல்லப்படுகின்ற எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி என்னும் அடிப்படை இலக்கணத்தைப் விளக்கும் பாடல்களால் ஆனது இந்நூல்.

எழுத்து-மொழியின் எழுத்துக்களைப் பற்றிய விளக்கம்
சொல்-சொற்கள் அமைவதற்கான விதி
பொருள்-சொற்களுக்கான பொருள் எவ்விதம் கொள்ளப்படவேண்டும்
யாப்பு-சொற்களைக் கொண்டு பாடல்கள் அமைக்கும் விதிகள்
அணி-பாடல்களில் அமையும் அழகுகள்-எ-டு-உவமை,உருவகம் போன்றவை

இந்நூலின் பெயர்:வீரசோழியம்.எழுதிய ஆசிரியர் பெயர்: புத்தமித்திரனார்.இவர் புத்தமதத்தைத் தழுவியவர்,ஆதலால் இப்பெயரைச் சூட்டிக் கொண்டவர்.
வீரசோழியத்திற்கு முதல் நல்ல உரை எழுதியவர் பெருந்தேவனார்.

இந்நூல் இடைச் சங்க காலத்து நூல்களில் ஒன்று.நூலின் பெயர்க் காரணம் நூலாசிரியருக்கு புரவலராய் இருந்து ஆதரித்த வீர ராசேந்திர சோழன் என்னும் மன்னன்;எனவே நன்றியறிதலாக மன்னனின் பெயரையே நூலுக்கு வைத்து விட்டார் ஆசிரியர்.

மூலைக்கு மூலை டிவி ரிப்பேர் செய்வது எப்படி என்பது போன்ற புத்தகங்கள் இருக்கக் காரணம் தொ.கா. என்னும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு பலகாலம் பயன்படுத்தப்பட்டு அதன் சிறப்புகள்,அமைப்புகள் அனைத்தும் முழுப் பயன்பாட்டில் இருக்கும் காலம்,ஆதாலால் எளிதில் அதன் ஆதார விதிகள் அனைத்தும் எல்லோருக்கும் புரியும் அளவிற்கு காணக்கிடைக்கின்றன.

அது போலவே ஒரு மொழி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து செம்மையடைந்திருந்தால் மட்டுமே,அதன் எழுத்துக்கள் முதல் பயன்பாடு வரைக்கும்,அனைத்து இலக்கணத்திற்கும் செறிவான பல விதி-நூல்கள்(Rule Structures) ஆக்கப்பட்டிருக்க முடியும்.

தமிழின் தொன்மையும் பெருமையும் நினைத்து நினைத்து மகிழ்வு கொள்ள வேண்டிய ஒன்று.

இப்படி ஒருநூல் இருப்பதே நம் தலைமுறையினர் பலருக்குத் தெரியாது என நினைக்கிறேன்.எனவே இந்த சிறிய அறிமுகம்.

அறிமுகங்கள் அவ்வப்போது தொடரும் !!!!!!

Sunday, December 16, 2007

32.புரியல்லை,தெரிந்தவர்கள் விளக்கவும்.......

ஒரு சரித்திரச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாக எல்லா ஊடகங்களும் வர்ணிக்கும் ஒரு நிகழ்ச்சி,நடக்கும் திமுக கட்சியின் நெல்லை மாநாடு.
இதற்கு சில நாட்களுக்கு முன் சரத்குமார் இது மாதிரி ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.அதற்கு முன் விஜயகாந்த் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.
இம்மாதிரிக் கூட்டங்கள் நடக்கும்போது வெளிவரும் ஏற்பாடுகளுக்கான செலவுகள் பற்றிய செய்திகள் கோடிகளில் இருக்கும்.
இவ்வகை மாநாடுகளுக்கு இயல்பான ஆர்வத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கை,மொத்த கூட்டத்தவரில் நாலில் ஒரு பங்கு கூட இருக்குமா என்பது சந்தேகமே.
இம்மாதிரிக் கூட்டங்களுக்கான் செலவுகள் நாட்டின் பல மாவட்ட்கங்களில் இருந்து நிதியாகப் பெறப் படுகிறது என ஒரு சாரரும்;அரசின் பல நிர்வாக நிலைகளில் முறையற்ற லஞ்சம்,கமிஷன் முதலான வழிகளில் ஈட்டப்படும் பணம் இவ்வகை நிதிவசூல்களாகக் காட்டப்பட்டு கட்சிகளின் அதிகாரப்பூர்வ சொத்துக்களாக (அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் வரி விதிப்புக்கு உட்பட்டவை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்) மாற்றப்படுகின்றன என இன்னொருசாராரும் கூறுவது பொய்யென்று ஒதுக்கிவிட முடியாதது.
இவ்வகை மாநாடுகளினால் பொதுஜனங்களுக்கு என்ன நன்மை விளைகிறது என்று நானும் ரொம்பவும் சிந்தித்துப் பார்த்தேன்....
புரியல்லை,தெரிந்தவர்கள் விளக்கவும்.......

Friday, December 14, 2007

31- ^^^ ஐடி'யாளர்களின் பார்வை சரியா,தவறா?

குறிப்பு: இக்கட்டுரை திண்ணை இதழில் மீள்பதிவாக பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.


இன்றைய ஹைடெக் நகரங்கள் என சொல்லப்படும் இந்திய தகவல்தொழில்துறை சார்ந்த நகரங்களில் ஏற்பட்டிருக்கும் வேகமான மாற்றங்கள் மற்றவர்கள் பார்வையில் வெறுப்பையும்,அந்த நகரங்களில் வாழும் மற்ற துறைகளைச் சார்ந்த மக்களின் பார்வையில் ஐடி துறையாளர்களைப் பொறாமையுடனும்,விரோத மனப்பான்மையுடன் பார்க்கும் மனோபாவமும் வளர்ந்து வருகிறது எனச் சொல்கிறது அவுட்லுக் இதழின் ஒரு கட்டுரை.
அது அளிக்கும் புள்ளி விவரங்களின் படி பெருவாரியான தூண்டப்படாத தாக்குதல்கள்,அடிதடி சண்டைகளில்-சுமார் 65 % க்கும் அதிகமான,பதிவான வழக்குகளில்(Unprovoked assaults) ஐடி யாளர்களே இலக்காக இருந்திருக்கிறார்கள்.
இதற்கான காரணங்களாக அது பட்டியலிடுவது எட்டமுடியா நிலைக்குப் போய்விட்ட வீடு,வணிக இடத்துக்கான வாடகை நிலை,இதன் காரணமான நடுத்தர வாசியின் சிதைந்து விட்ட ‘அரையடி அகல சொந்தவீடு’ கனவு;எல்லாப் பொருள்களிலும் உள்ளாகியிருக்கும் விலை ஏற்றம்-இதற்கு ஐடி யாளர்கள் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது எனினும்,இந்தியா போன்ற ஒரு under developed தேசத்தில் ஒரு சாரார் எளிதாக சம்பாதிக்கும் 30000,40000 ஆன மாத சம்பளம்,நாட்டின் பொருளாதாரத்தில் பாய்ச்சப்படும் போது,சந்தையின் பண உள்வரவு அதிகமாகிறது,அது இயல்பான பணவீக்கத்திற்குக் காரணமாகிறது என்னும் நிலை;
இவை எல்லாமே ஓரளவு ஒத்துக் கொள்ளக் கூடிய வாதங்களாகவே இருக்கின்றன.
இன்போஃசிஸ் மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ஒரு சமூக ஆர்வலர் என்பது நமக்குத் தெரியும்,அவர் விரித்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி இதற்கெல்லாம் ஒரு உரைகல்.அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே பெங்களூருவில் ஒரு பூ விற்கும் பெண்மணி ஒரு ஐடி’யாளருக்கு பூ விற்கையில் அப்போதைய நிலவும் விலையை விட சுமார் 35 சதம் அதிகம் விலை சொல்லி விற்றிருக்கிறார்,சுதா அப் பூப் பெண்மணியிடம் ‘ஏனம்மா இப்படி அதிகவிலை சொல்கிறாய்’ எனக் கேட்க, ‘நீ சும்மா இரு,அவர் ஐடி கம்பெனியில் இருக்கிறார்(அந்த இளைஞர் தன் அலுவலக கழுத்துப் பட்டையை அணிந்திருந்திருக்கிறார்,பெரும்பாலான ஐடி’யாளர்கள் இதை பெருமையுடன் செய்கிறார்கள்),இவ்வளவு சம்பாதிக்கும் போது அவர்கள் கொடுக்கலாம்,உன் வேலையப் பார்த்துக் கொண்டு போ’ என்ற பதில் கிடைத்திருக்கிறது.
இந்த நிலை வந்ததற்கு,பெருவாரியான இதர சக சமூக மக்கள் ஐடி’யாளர்களை எதிரி மனோபாவம் கொண்டு பார்க்கும் நிலைக்கு,யார் காரணம்? உடனே,அவர்களின் சம்பாதிக்க இயலாத,பொறாமைதான் காரணம் என்று buck passing முறையில் நம்மில்(நானும் ஐடி துறையில்தான் இருக்கிறேன்)பலர் பதில் கூறலாம் எனில்,அது இன்னும் பொது சமூகத்திலிருந்து நம்மை வேறுபடுத்துமோ என்ற எண்ணம் தோன்றுவது தவிர்க்க இயலாததாயிருக்கிறது.

நான் பிறந்தது ஒரு கிராமும் இல்லாத,டவுனும் இல்லாத ஒரு இரண்டும்கெட்டான் ஊரில்.பள்ளிப் படிப்பெல்லாம் ஊரில்தான்,கிராமம் சார்ந்த கல்வி,இளங்கலை கணிதம் மதுரை விவேகானந்தாவிலும்,பட்டயக் கணக்காளர்-Chartered Accountant-கல்வி கோவையிலும் படித்தேன்.
90 களின் ஆரம்பத்தில் சிஏ முடித்தவர்கள் அப்போதைய நிலவரத்தில் கம்பெனிகளில் நல்ல வேலை கிடைத்தால் வருடம் 5 லட்சம் அல்லது 6 லட்சம் ஆண்டு வருமான அளவில் கிடைக்கும்,இது இந்திய அளவில் முதன்மைத் தர வரிசைகளில் வந்தால்.இல்லாதவர்கள் ஆனாலும் நல்ல கல்வித் தகுதியுடன் இருப்பவர்கள் சுமார் 4.5 லட்சம் அளவில் கிடைக்கும்.
பொறியாளர்கள் போன்ற மற்ற துறையாளர்கள், 90 களின் ஆரம்பத்தில் ரூ.4000 மும் அதற்குக் குறைந்த சம்பளத்திலும் வேலை செய்ய தயாராய் இருந்தார்கள்.
ஆனால் இப்போது ஒரு பொறியியல் பட்டம் பெற்றவர்,சரியான முன்னேற்பாட்டுடன் முயற்சி செய்தால் ஐடி துறையில் ஆரம்ப சம்பளம் 30000 வாங்க முடிகிறது.இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் 4 கம்பெனிகள் தாண்டுவதன் மூலம் 8 லட்சம் அளவுக்கு வந்து விடுகிறார்கள்.ஆனால் இன்றும் கல்லூரி விரிவுரையாளர்,கணக்காளர்,மருத்துவர் என அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் இந்தவித வேகமான சம்பாத்திய வழிமுறை இல்லை.இன்னும் மெட்ரோ தவிர்த்த மற்ற ஊர்களில் நகர்களில் சாதாரண மக்களின் நித்த வருமானம் ரூ200 க்குள் இருப்பது சாதாரணம்.

இந்த வேகமான,எளிதான சம்பாத்தியமே ஐடி’யாளர்களின் சமூகம் சார்ந்த பார்வைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறதோ என்பதும் என் எண்ணம்.

இந்த எளிதான பணம் வாழ்க்கையின் சகல திக்குகளையும் உரசிப் பார்க்கும் சோதனை மனோபவத்தை அளிக்கிறது;பெரும்பாலான ஐடி’யாளர்கள் வேலையின் பொருட்டு பெற்றோரை விட்டு தள்ளி வசிக்கும் இன்றைய சூழ்நிலையில் ‘எதையும் ஒருமுறை’ முயற்சித்துப் பார்க்கும் இளமை மனோபாவம் எந்தவித கட்டுறுத்தல்களோ,தடுமாற்றமோ இன்றி Pub, Party சார்ந்த வாழ்க்கைச் சூழலுக்கு எளிதாக மாறிவிடுகிறது.
மத்திய 90 களில் நான் கணக்காளராக பணி புரிந்த நாட்களில் நான் தங்கியிருந்த மேன்சன் என்றழைக்கப்படுகிற விடுதிகளின் 20 அறைகளில் மிஞ்சினால் 2 அறைகாரர்கள் பீர் மட்டும் திரவ வகைக் காரர்களாக இருப்பார்கள்;ஆனால் இன்றைய நிலை அப்படியா என எண்ணினால் நமக்குக் கிடைப்பது ஆயாசமே.
அது அவரவர் உரிமை,அவர் சம்பாத்தியம் அவர் குடிக்கிறார்,அவரால் சமூகத் தொந்தரவு ஏதும் இல்லை என வாதிடலாம்; ஆயினும் வாழ்வின் விழுமியங்கள் எனக் கருதப்பட்ட விதயங்கள் இன்று எளிதாய் புறந்தள்ளப் படுகின்றன என்பது கண்கூடு;இதன் பிற் சேர்க்கையாக எவையெல்லாம் நல்லன என நாம் வாழ்ந்த சமூகம் சொன்னதோ அதையெல்லாம் ‘ஹெ’ என எள்ளும் ஒரு பார்வையும் வந்தாயிற்று,சமீபத்திய ஒரு பதிவின் பின்னூட்டங்களைப் பார்த்த போது திருமுறைகள் பற்றிய சில பதிவாளர்களின் எள்ளல் விமரிசனங்கள் கண்ணில் பட்டன;இந்தவகை விமர்சனங்கள், திருமுறைகள் பற்றிய முழுமையான அறிவும் அந்த காலகட்ட வரலாறு,சமூகப் நிலைகள் பற்றிய முழுமையான அறிவுக்கு அப்புறம் வந்தால் அது ஓரளவு புரிந்துகொள்ளப் பட வேண்டியதே;எதையுமே முழுக்க அறியாமல் வரும் இவ்வகை விமர்சனங்களின் காரணம் மேற்சொன்ன எள்ளல் மனோபாவமே,வாழ்வை-அதாவது பிழைக்கும் வழியை-வசப்படுத்திவிட்ட எனக்கு எல்லாம் எளிதானவையே என்ற ஒரு பார்வையின் விளைவு.
நம்மைச் சுற்றிய சமூகத்தில் இன்னும் ஒரு நாளில் 50 ரூபாய் சம்பாதிக்க நாள் முழுதும் மண் வெட்டும் தொழிலாளியும் இருக்கிறார்,அவரையும் உள்ளடக்கியதுதான் இந்த சமுதாயம்,நாமும் அந்த சமுதாயத்தின் ஒரு அங்கமே என்ற எண்ணம் நம்மில் வருவதையும் அந்த எள்ளல் மனோபாவமே தடுக்கிறது.
இதன் ஒட்டு மொத்த தாக்கம் நிச்சயம் சமூக வாழ்வில் இருக்கும்,நாம் நம்ப மறுத்தாலும் கூட !

Tuesday, December 11, 2007

30.ஸ்டெம்செல்கள் சிகிச்சையில் ஒரு புரட்சி

உங்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ஸ்டெம் செல்கள் மனிதக் கருவின் உருவாகும் முதல் செல்கள் ஸ்டெம் செல்கள் என்றழைக்கப் படும்;இவையே மனித உயிரில்-கருவில் அனைத்து மனித உடலின் பாகங்களும் ஸ்டெம் செல்களில் இருந்தே வளருகின்றன.
சமீபத்தில் கூட ஆவி யில் ஒரு இரத்தப் புற்றுநோய் கண்ட ஒரு 29 வயது இளைஞனுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் உடலின் மொத்த ரத்த செல்களும் வெளியேற்றப்பட்டு புதிய ரத்த செல்களின் கூறுகள்,ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் செலுத்தப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டது செய்தியாக வந்தது.
எனவே ஸ்டெம் செல்களைப் பற்றி ஆராய வேண்டுமெனில் மனித கருமுட்டைகளிலிருந்துதான் ஆராய்ச்சி செய்ய முடியும்.
இதுபோன்ற சிக்கல்களின் காரணமாக ஸ்டெம் செல் பற்றிய ஆராய்ச்சிகள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஊக்குவிக்கப்படாமலோ,அரசின் கோட்பாடுகளுக்கு எதிரானதாகவோ இருந்தன.
ஆனால் இப்போது ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப் பட்டிருக்கிறது;மனித தோல் செல்களில் இருந்தே ஸ்டெம் செல்களை உருவாக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இது மனிதகுலத்தின் பல தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கும் கட்டத்தின் முதல்படி.
இந்த சாதனை ஒரு ஜப்பானிய விஞ்ஞானியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
மின்னனுவியல் உபகரனங்கள் மட்டுமே செய்ய முடிந்த ஒரு நாடு என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு நாட்டின் விஞ்ஞானி இந்த சாதனையை செய்தது ஒரு திருப்புமுனையே.
ஜப்பானின் யமானகா (Dr.Yamanaka) என்ற மருத்துவ விஞ்ஞானியே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.45 வயதாகும் இவர் எலிகளில் இந்த சோதனையை வெற்றிகரமாக முதலிலேயே நிகழ்த்தி இருக்கிறார்.
சாதாரண செல்களில் இருக்கும் சில க்ரோமோசோம்களில் மாஸ்டர் ரெகுலேட்டர் என்றழைக்கப்படும் சில ஜீன்களை இணைப்பதன் மூலம் சாதரண தோல் செல்கள்,ஸ்டெம் செல்களப் போலவே செயல்படுகின்றனவாம்.
ஆயினும் இன்னும் ஒரு கட்டம் பாக்கியிருக்கிறது,இப்போதைய முறையில் ரெட்ரோவைரஸ்(Retroviruses) என்றழைக்கப்படும் வைரஸ் கிருமிகளே ரெகுலேட்டர் ஜீன்களை,க்ரோமோசோம்களில் செலுத்தப் பயன்படுகின்றன;இந்த ரெட்ரோவைரஸ் தான் செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் கேன்சர் செல்களையும் தூண்டுகின்றன;எனவே இந்த ரெட்ரோவைரஸ்களின் துணையில்லாமல் ரெகுலேட்டர் ஜீன்களை க்ரோமோசோம்களில் செலுத்தும் கட்டம் வெற்றி பெரும் போது இந்த சோதனை முழுவெற்றியாகும்.

Saturday, December 8, 2007

29.ரூபாயின் மதிப்பு-ஒரு விஷுவல் ட்ரீட்-சி.ஐ.ஏ வின் பொய்கள்

பல வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 40 க்குக் கீழ் வந்திருப்பது இப்போதுதான்.
இது மேலெழுந்தவாரியாக மகிழ்வளிக்கும் செய்தி என்றாலும்,இந்திய ஏற்றுமதியாளர்கள் புலம்புகிறார்கள்;
அவர்கள் டாலர் செலாவணியில் விற்பனைக்கான தொகையை வாங்கும் போது ரூபாய் மதிப்பு அதிகமாகிவிடுவதால் நிகரத்மதிப்புத்தொகை குறைந்து அவர்களில் லாபம் அதிக பட்சம் 13 சதம் வரை குறைகிறதாம்.
உண்மையில் இது வருத்தும் செய்தி எனினும்,இவை எல்லாவற்றிற்கும் இடையிலும் ஏற்றுமதி வணிகம் மொத்தத்தொகை இந்த வருடம் 35 சதம் டாலர் மதிப்பில்(Quantum) அதிகரித்திருக்கிறது !
அனைத்திலும் புன்னகைக்க வைக்கும் செய்தி ஒன்றும் உள்ளது.தாஜ்மஹால் போன்ற இடங்களில் அரசு இதுவரை இந்தியர்களிடம்,இந்திய ரூபாயிலும்,சுற்றுலா வரும் வெளிநாட்டவரிடம் டாலரிலும் நுழைவுக் கட்டணம் நிர்ணயித்திருந்ததாம்;இப்போது வெளிநாட்டவர் உள்பட எல்லோரிடமும் ரூபாயிலேயே கட்டணம் வசூலிக்கப் படுகிறது....
கமான் இந்தியா,கமான் !

*************************************************************************************

தமிழ் சினிமாக்களில் பல அபத்தக் களஞ்சியமாக இருப்பது வாடிக்கை,நம்பி இருக்கலாம்,பார்க்க வேண்டாம் என்று!
ஆயினும் அவ்வப்போது சில பார்க்கலாம்-வகைப் படங்களும் வரும்.
காதலுக்கு மரியாதை அதில் ஒன்று.
பலமுறை பார்த்த படம்தான் எனிலும்,மற்ற சாதாரண படங்களைப் போலவே ஆட்டமும் பாடல்களும் உள்ள படம்தானெனினும்,இன்று தொலைக்காட்சியில் இப்படம் பார்த்தபோது இதன் இறுதிக்காட்சிகள் ரசிக்கவைத்தன.
நாயகனும்,நாயகியும் மற்றவரை மறுத்து குடும்பம்,பெற்றோரை புண்படுத்தக் கூடாதென்று வந்துவிட்ட பிறகு,நாயகனின் அப்பா(சிவகுமார்),மனைவியிடம் சொல்லுவார்,’அவன் எங்களுக்காகவெல்லாம் திரும்ப வரவில்லை,உன்மீது உள்ள அன்பினால்தான் வந்திருக்கிறான்,அந்த அன்புக்கு நம்பிக்கை செய்ய அப்பெண்ணை விட பல மடங்கு சிறந்த பெண்ணாக உன் மகனுக்குப் பார்க்க வேண்டியது உன் கடமை’ என..
சரி,அந்தப் பெண்ணை விட சிறந்த பெண்ணைத் தேடுவோம்,அதற்கு அப்பெண்ணை முதலில் பார்ப்போம் என அம்மா நாயகி வீட்டுக்குச் சென்று,பின்,நாயகியே மிகப் பொருத்தமான பெண் என முடிவு செய்ததும்,மகனை கிட்ட அழைத்து வாத்சல்யம் காட்டும் இடம், ‘உன்னை அருமையான முறையில் வளர்த்தேன்,அருமையாக நானே அனைத்தும் உனக்குச் செய்வேன் என நினைப்பதும்,பின் மகனின் தேர்வு தான் செய்வது போலவே நல்ல தேர்வு என உணர்வதும்,அப்படித் தெரிந்தும் என் மீது அன்பும்,நம்பிக்கையும் வைத்து,என்னிடமே பொறுப்பை ஒப்படைத்தாயே?’ எனக் கேட்பது போல ஸ்ரீவித்யாவிடம் மிக நல்ல பாவனைகளும்,காட்சி அமைப்பும்....
பிள்ளைகளை மதிக்கும் பெற்றோர்களும்,பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளும் எப்படி குணாதிசயிப்பார்கள் என்ற விஷுவல் ட்ரீட் ரசிக்கும்படியானது.

************************************************************************************

சி.ஐ.ஏ ( Central Intelligence Agency ) சில பயங்கரவாத விசாரணைக் கைதிகளை விசாரித்த காட்சிப் பதிவு ஆதாரத்தை அழித்து விட்டோம் என்று அறிவிக்க அமெரிக்க ஊடகங்களில் புயல் கிளம்பியுள்ளது.
அந்த ஆவனங்களுக்கு ஏதும் ‘புலனாய்வு மதிப்பு’(Intelligence Value) இல்லாததாலும்,அவை ரகசியமாக வெளிப்பட்டு விட்டால்,விசாரிப்பாளர்களின் சுதந்திர வாழ்வுக்கு தீவிரவாத சக்திகளால் அச்சம் உண்டாகும் என்ற காரணத்தாலேயே அவை அழிக்கப் பட்டன என்கிறார் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் ஹேடன்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து அப்படிப்பட்ட கட்டளை/வேண்டுகோள் செல்லவில்லை என்கிறது வெள்ளைமாளிகை.
தங்களை ஏவும் அரசியல் தலைமை,தங்களை அடைகாக்கும் கடமையிலிருந்து பின்வாங்குவதாக சி.ஐ.ஏ கருதுவதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் புலனாய்வு அமைப்புகளை முடுக்கிவிட்டு தான் விரும்புவதை சாதிப்பதும்,பின்னர் கேள்விமுறை என வரும்போது வாளாவிருப்பதும்,எல்லா நாடுகளிலும் பொதுவான காட்சியாகிவருகிறது.

-Aknowledgements : Time Magzine

28.மருத்துவ மாணவர்-கிராமசேவை-ஒரு பார்வை

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊடகங்கள்,மருத்துவர் ராமதாசு உட்பட அரசியல் தலைவர்கள் மாற்றி மாற்றி கருத்துச் சொல்லும் அளவிற்கு பற்றியெரியும் ஒரு விஷயம்,மருத்துவ மாணவர்கள் கிராமப்புற சேவை ஆற்ற வேண்டும் என்ற அரசின் சட்டமுன் வரைவு பற்றியது.
மருத்துவ மாணவர்கள்/மாணவிகள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியைத் திருமணம் செய்து கொள்ள அழைக்கும் வினோதப் போராட்டங்களெல்லாம் நடத்துகிறார்கள்.
ஆதாரமாக இதில் வெளிப்படையாகத் தெரியும் இரண்டு விஷயங்கள் 1.மாணவர்கள் கிராமங்களைத் தவிர்க்க விரும்புகிறார்கள்,பெரும்பாலும் இது சுயநல நோக்கே.
2.அரசு ஆதாரமாகச் சீர் செய்யப்பட வேண்டிய விதயங்களை ஆராயாமல்,மாணவர்கள் மீது சட்டத்தைத் திணிக்க முயல்கிறது.
சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அரசின் கூற்று:
-அரசு மருத்துவ மாணவர்களுக்கு,அதாவது அவர்களின் கல்விக்கு,பெருமளவு பணம் செலவு செய்தும் அவர்கள் வெளிநாடுகளுக்குப் பறக்கவும்,மெட்ரோபாலிடன் நகரங்களிலும்தான் ‘தொழில்’ செய்ய விழைகிறார்கள்;
-எவ்வளவு வேண்டியும் கிராமங்களில் தங்கி வேலை செய்ய ஒப்புவதில்லை;
-எனவே இதை சட்டமாக்கித் திணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை;
-கிராம மக்களின் மருத்துவத் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாத கடமை அரசுக்கு இருக்கிறது.
மாணவர்கள் கூற்று
-மருத்துவம் ஒரு தொழில் சார் கல்வி(Professional course),அதை நாங்கள் கடினப்பட்டுத்தான் படித்துத் தேர்கிறோம்;எனவே நாங்கள் எங்கே வேலை செய்ய வேண்டும் என்று தீர்மாணிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.
-அரசு பொறியாளர்களையோ,தகவல் தொழில் நுட்ப திறனாளர்களையோ இவ்வாறு கட்டாயப் படுத்தாதபோது,மருத்துவ மாணவர்களைக் கட்டாயப் படுத்த என்ன யோக்கியதை இருக்கிறது?
-ஏற்கனவே ஐந்தரை ஆண்டு காலம் படிக்கிறோம்,மேலும் ஓராண்டை கல்விக்காக செலவு செய்ய முடியாது.
இரு தரப்பிலும் நியாயங்கள் இருப்பதாகத்தான் தோன்றுகிறது,எனில் தீர்வுக்கான களம்தான் என்ன?
1.அரசு பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் ஏராளம்.கிராமங்களுக்குச் செல்ல ஏன் எல்லோரும் மறுக்கிறார்கள்?ஏன் கிராமங்களுக்கும் நகர்களுக்கும் இடையில் இவ்வளவு வாய்ப்பு வேறுபாடுகள்?
குறைந்தபட்சம் அரசு சார்ந்த அமைப்புகளிலாவது இவை சரி செய்யப் பட வேண்டும்,உதாரணமாக செனையில் இருக்கும் அரசு மருத்துவ விடுதிக்கும்,பட்டிவீரன்பட்டியில் இருக்கும் அரசு மருத்துவ விடுதிக்கும் அமைப்பு,கருவிகள்,வசதிகள் நோக்கில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.எல்லா இடங்களில் வாழ்பவர்களும் மக்கள்தான்,சென்னையில் தேவ தூதர்களும்,கிராமங்களில் பாவப்பட்ட புழுக்களும் வாழ்வதில்லை.
இதை செயல்படுத்த அரசுக்கு வக்கில்லை,தெரியவில்லையெனில்,செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுக்களை அனுப்பி கற்றுக் கொள்ளலாம்,தப்பில்லை.
தகவல் தொழில் நுட்பத்துறையில் அரசின் ஆக்கம் இன்றியே இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன,மதுரை,திருச்சி,கோவை எனப் பல இடங்களை த.தொ.துறை நிறுவனங்கள் பார்க்க ஆரம்பிக்கின்றன,என்ன காரணம்? அவை செயல் படத் தேவையான மனிதவளம் எல்லா இடங்களிலும் கிடைப்பதும்,சென்னை தறிகெட்டுப் போய் மூச்சுமுட்டுவதும் இயல்பான காரணங்களாகி கிராமப் புறம் சார்ந்த வேறு இடங்கள் பார்க்கப் படுகின்றன.
இதைப் போண்ற இயல்பான மாற்றம் நிகழ கிராமங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டும்;அவை நிகழும் போது இயல்பாகவே நகர்ப் புறக் கூட்டம் குறைந்து எல்லாத் துறைகளுமே கிராமம் சார்ந்த இடங்களில் முன்னேறும்.
2.மருத்துவ மாணவர்கள் மேற்படிப்பிற்கு,கிராமப் புற சேவை செய்தவர்களுக்கு முன்னுரிமை/உதவித் தொகை கொடுக்கலாம்.
3.நகர்ப்புறம்/டவுன் பஞ்சாயத்து/கிராமப் புறங்கள் வகைப்படுத்தப் பட்டு கிராம்ப் புற சேவைக்கு ஊதியங்களில் வேறுபாடு கொண்டுவரலாம்.
4.அரசுக் கல்லூரிகளில் தகுதி அடிப்படையில் ஒதுக்கப்படும் இடங்களில் படிக்கும் மாணவர்கள்,கிராமப் புற சேவையும் செய்த பிறகு அவர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை அளிக்கலாம்.
5.எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்கள்,மெற்றோர்கள் பார்வையில் நவீன காலங்களில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை பிறழ்வுகளில் நிகழ வேண்டிய மாற்றங்கள்-மருத்துவம் என்பது மாவட்ட ஆட்சித் துறை(Indian Administration Service),காவல்துறை (Indian Police Service) போன்ற ஒரு சேவை சார்ந்த துறை.அதை முழுக்க முழுக்க பணம் மற்றும் சம்பாதித்தல்/தொழில் சார்ந்த துறையாகப் பார்க்கும் நம் சமுதாயப் பார்வையின் நிறக்குருடு மாற வேண்டும்.மருத்துவம் தொழில் முறையாகி விட்டாலும் அதன் அடிப்படை சேவை சார்ந்தது என்பதை நாம் எல்லோரும் நம் நினைவுக்குக் மீள் கொண்டு வர வேண்டும்.
ஏனெனில்,நீங்களும்,நானும்,மற்றவர்களும் சேர்ந்ததுதான் சமூகமும் நாடும் !

Thursday, December 6, 2007

27-வாழ்க்கை,குடும்பம்,மகவு ??????????

குழந்தைகள் கோடை விடுப்பு எடுப்பது போல நான் ஆண்டுக்கு (குறைந்தபட்சம்) ஒருமுறை இந்தியா சென்று திரும்புவது வழக்கம்.இந்தமுறை சற்று நீண்ட விடுமுறை இடைவெளி,பதிவுகள் பக்கம் எட்டிப்பார்க்க வகை இல்லாமல் வலைஇணைப்பு சரிவர கிடைக்காத இரண்டும் கெட்டான் ஊர் எங்கள் ஊர்.அதற்கு மேலும் ஊரில் சென்று சந்திக்க வேண்டிய உறவுகள்,இந்தியா போகும் போது செய்து கொள்ளலாம் என்றே நம்மில் பலர் சேர்த்து வைக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கதம்ப வேலைகள் அனைத்திற்கும் மத்தியில் பதிவாவது,ஒன்றாவது !!!!
எனினும் சென்று திரும்பி வந்த பின் மனக்குளத்தில் திமிறும் பந்தாக பல நினைவுகள்.

நம்மில் பலருக்கு ஆட்டோக்ராஃப் நினைவுகள் வரும்;எனக்கும் வந்தது,ஆனால் அவை கிளறிய காயங்களில் சில வாழ்வின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகின்றன.விரிவாகவே சொல்கிறேன்.

என் அம்மா அதிகம் வாசிப்பு நாட்டம் உடைய பெண்மணி;அவர் படித்த புத்தகங்களும் என்னை படிக்கத் தூண்டிய புத்தகங்களும் ஏராளம்.
சமையலறை,தொலைக்காட்சியுடன் முடங்கும் பல தமிழக பெண்களில் இருந்து வேறுபட்ட,
இந்த வயதிலும்(60 ஆரம்பம்) ஒரு நாளைக்கு குறைந்தது 50 பக்கங்கள் படிக்கவோ அல்லது 5 பக்கங்களாவது எழுதவோ மறக்காத ஒரு மனுஷி.
வீட்டு ஹாலின் நீண்ட நாற்காலியில் எப்போதும் இறைந்து கிடக்கும் (குறைந்தபட்சம்) 50 புத்தகங்களும் கையெழுத்துப் புத்தகங்களுமே அதற்குச் சாட்சி.

வீட்டு வரவேற்பறை சீராக இருக்க வேண்டும் என்று பிடிவாதமுள்ள நான் இதற்காகவே குரலெடுத்துக் கடிந்து கொள்வது வாடிக்கை.ஆயினும் இப்போதெல்லாம் அம்மாவின் அந்தப் போக்கும் நேசிப்பில் கலந்துவிட்டது,எனவே கத்துவதில்லை,மாறாக அடுக்கி வைப்போம் அல்லது கிண்டலடித்து சிரித்துவைப்போம்.

தமிழில் திருமுறைகள்,திருமந்திரம்,சைவசித்தாந்தம்,கம்பன்,பாரதிஆகியவற்றில் மாறாத ஈடுபாடும் ஈர்ப்பும் கொண்ட பெண்மணியாக எப்படி அம்மா இருக்கிறாள் என்பதற்கு விடை எங்கள் ஐயா.(அம்மாவின் தகப்பனார்).
எங்கள் ஊர்,அதாவது எங்கள் அப்பாவின் – அம்மா வாழ வந்த ஊரின் – அருகாமையில் சுமார் 10 கி.மீ தொலைவுதான் ஐயாவின்,அம்மாவின் பிறந்த ஊர்.வள்ளல் பாரி வாழ்ந்த பறம்புமலை என்றழைக்கப் படும் பிரான்மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம்.
1940 களில் கிராமங்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என சொல்லத் தேவையில்லை.

அந்த கிராமத்தில் சிறு பெட்டிக் கடையுடன்,விவசாயம் ஆகியவற்றுடன் திருமண வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.பெட்டிக் கடை துணிக்கடையாக உருமாறியதும்,கூடவே விவசாயமும் முன்னேற்றமும் திடமும் அளிக்க,கூடவே கல்வியிலும் ஆர்வம்.

பள்ளிக் மேற் கல்வியுடன் இருந்தவர் மதுரை தமிழ்ச்சங்கத்தில் சேர்ந்து புலவர்-அக்காலத்தில் வித்வான் என்றழைப்பார்களாம்- படிப்பில் பெரு விருப்புடன் சேர்ந்து படித்திருக்கிறார்,அந்நிலையில் அம்மா கருவானாள்.(ஐயா படித்து வித்வான் பட்டம் பெற்றவுடன் நான் பிறந்தேனாம்,அதனால்தான் அவரின் தமிழார்வம் என்னிடமும் தொற்றிக் கொண்டது,என அம்மா சொல்லி நானே கேட்டிருக்கிறேன்.)

ஆசையாய்ப் பிறந்த குழந்தைக்கு அவர் சூட்டிய பெயரும் தமிழ்ச்செல்வி என ஆளைப் போலவே,அழகான பெயர்.ஐயாவுக்கு அம்மாவின் மேல் எப்போதும் கூடுதல் வாஞ்சை;காதலுடன் பிறந்த குழந்தையாகவும்,முதல் குழந்தையாகவும்,எதிலும் தெளிவான பார்வையும் கருத்தும் கொண்டதாலும் இருக்கலாம்-அம்மாவைப் பற்றி விரிவாக பிறிதொருமுறை சொல்கிறேன்-ஆகையால் என்னையும்,என் தங்கையயும் சிறிது கூர்ந்து அவதானிப்பார்.
ஐயாவுக்கு நான்கு பெண்கள் கழித்து கடைசியாக ஒரே மகன்.அம்மாவின் திருமணப் புகைப்படத்தில் 6 வயது சிறுவனாக மாமா.எனக்கும் அவருக்கும் 8 வயது வித்தியாசம்தான்.

எங்கள் தாய்வழி உறவுக் குழந்தைகளில் முதல் ஆண் நானே;இரண்டு வயது குறைவாக முதல் சித்தி மகன் சொக்கன்;எங்கள் பதின்ம வயதில்-எனக்கு 12 வயதும்,சொக்கனுக்கு 10 வயதும்-பள்ளி விடுமுறை விட்டால் ஐயா வீட்டுக்கு சென்று அதகளம் பண்ணுவோம்;ஒரு சலிப்பு சலித்துக் கொள்ள மாட்டார்;மாறாக நடைமுறை வாழ்க்கயின் சிறு சிறு அற்புதங்களையும் நேர்த்திகளையும் கற்றுக் கொடுக்காமல் கற்றுக் கொடுப்பார்;நாங்கள் போனால் மாந்தோப்பில் மாங்காய் அடித்துக் கொண்டுவரச் செய்வார்;(எத்தனை என நினைக்கிறீர்கள்,சுமார் 200 லிருந்து 400 காய்கள் வந்து பழுக்க வைக்கப்படும்-பெரிய மாந்தோப்பு வைத்து சுமார் 50-100 மரங்கள் வளர்த்து வந்தார்);தேன் விற்கும் மலை கிராமத்தார்களிடம் சொல்லி தேன் கொண்டு வரச் செய்வார்;அதனை அளந்து வாங்கும் போது கூடவே இருத்திக் கொண்டு சிறு சிறு வேலைகள் சொல்வார்-போய் லிட்டர் உழக்கு அம்மணியிடம் வாங்கி வா,புனலை எடுத்துக் கொண்டு வா,கழுவித் துடைத்து வைத்திருக்கும் கண்ணாடிப் போத்தலை(பாட்டில்) எடுத்துக் கொண்டு வா,புனலைப் பிடித்துக் கொள் என்றெல்லாம் அவர் சொன்ன வேலைகள் வாழ்க்கையின் தேர்ந்த ரசனைகளை சொல்லித் தந்தன;தேன் அளந்து வாங்கியபின் தேன் ராட்டில் இருக்கும் சொற்பத் தேனையும்,பாட்டிலில் ஊற்றியது போக உழக்கில் இருக்கும் மீதத் தேனையும்,காகிதத்தில் கூம்பு செய்யச் சொல்லி,அதில்-கையில் விளையாட்டு அழுக்கிருக்கும்- ஊற்றி சாப்பிடச் சொல்லுவார்.பாட்டிலில் இருக்கும் தேன் சாப்பாடு சமயத்தில் பந்திக்கு வரும்!.

காலை வயலுக்கு அழைத்துச் சென்று,வேப்பங்குச்சியாலோ அல்லது கரிசாலை இலையாலோ பல் துலக்க வைத்து,காலைக் கடன் கழிக்க வைத்து பிறகு,பெரிய வயல் கேணியில் நீந்திக் குளிக்க வைத்து- என் இடுப்பில் அவரின் நீண்ட துண்டைக் கட்டி வயல் கேணியின் உள் வரந்தையில் சுற்றிச் சுற்றி நடந்து வந்து,என்னை நீந்த வைத்து- எனக்கு மட்டும் அவரே நீந்தக்கற்றுக் கொடுத்தார்-ஈர உடையுடன் வீட்டுக்கு வருவோம்,வரும்போதே பசி காதை அடைக்கும்...

ஐயாவுக்கு-தூய சைவ உணவாளியெனினும்-ஆறடிக்கும் மேற்பட்ட ஆஜானுகுபாகுவான முறுக்கேறிய உடல்,அந்நாட்களில் கர்லாக் கட்டை சுழற்றுவாராம்,வீட்டின் பின்னால் கிடந்து நானே பார்த்திருக்கிறேன்.
வீட்டுக்கு வந்தவுடன் உடை மாற்றி கோயில் வீட்டுக்கு சென்று(பூசனை செய்யும் அறைக்கு அப்பெயர்) தொழுது,நெற்றி,உடல்,கை,கால்களில் திருநீறு அணிந்து சாப்பிட வருவார்.

சாப்பிடும் வேளை இன்னொரு ரசவாத வேளை!

வாழை இலையில்(வயலில் இருந்து வரும்போதே அரிந்து கொண்டு வருவோம்)தான் சாப்பிடுவார்;உணவுகள் பரிமாறப்படும் போதே ‘உப்பை இடது மூலையில் தான் வைக்க வேண்டும்;ஊறுகாய் அதற்கடுத்து வை’ என்றெல்லாம் குறிப்புகள் வரும்; ‘பண்டிதம்(ன்)புள்ளை,பேசாமச் சாப்பிடுய்யா’ என்ற அம்மணியின் எள்ளல் கேலியைப் புறந்தள்ளி எங்களுக்கு ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்;ரசம் சாதம் உள்பட உணவு சாப்பிடும் போது கை விரல்கள் வாய்க்குள் நுழைக்காமல் சாப்பிடுவார்.
மதிய உணவெனில் பல ஆச்சரியங்கள் நிகழும்.சாதத்திற்கு நெய் அம்மணி ஊற்றுவது,சாம்பார் கரண்டியில்! இலையில் குறைந்தது 50 ml ஆவது நெய் விழும்;அதுவும் வீட்டிலேயே கடைந்த மோரின் நெய்!சாப்பிட்டபின் கடைந்த மோர் குடிக்க சொல்லுவார்.

கடையில் அவர் தரையில் பாயில்தான் உட்காருவார்.துணிகள் அடுக்கியிருக்கும் ராக்கையின் கீழ்ப்பகுதியில் தொடை உயரத்தில் இருக்கும் பகுதி கீழிருந்து மேலாக மூடும் மரக் கதவுகளால் தடுக்கப்பட்டு புத்தக அலமாரியாயிருக்கும்;அதில் திருமுறைகள்,சித்த,ஆயுர்வேத வைத்தியக் குறிப்பு புத்தகங்கள்,மாசிலாமணி முதலியார் எழுதிய வைத்தியக் குறிப்புப் புத்தகம் எனக் கலந்து கட்டிய புத்தகங்கள் இருக்கும்;அவற்றை எடுத்துப் படித்துக் கொண்டிருப்பார். கிராமத்தில் பலர் வந்து உடல் நலமின்மைக்கு சித்த,கடைச்சரக்கு மருந்துகள் வாங்கிப் போவார்கள்.

செந்தமிழ்ச்செல்வி என்னும் மாத இதழ் தபாலில் வருத்துவார்;அதனை எங்களைப் படிக்கச் சொல்லுவார். இரவில் சாப்பிட்டுப் படுக்கும் முன் உச்சந்தலையில் வில்வாதி தைலம்(அவரே தைலம் காய்ச்சுவார்!) சிறிது எடுத்து கரகரவெனெ தேய்த்துக் கொண்டு நமக்கும் தேய்த்துவிடுவார்;பின் சிறிது நேரம் சன்னமான குரலில்,ராகத்தில் திருமுறைப் பாடல்கள்...கேட்டுக் கொண்டே தூங்கி விடுவோம்!

இப்போது எண்ணிப் பார்த்தால் வாழ்வின் இளம்பருவத்து நுண்ணிய ரசனைகளில் பல-குளிப்பதில் இருந்து,சாப்பிடுவது வரை-அவரைப் பார்த்து வந்திருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது.
அப்படியான ஐயா கடந்த 15 வருடங்களாக எங்கள்(தன் மூத்த மகள்) வீட்டுக்கு வராமல் மகனால் தடுக்கப்பட்டார்- அப்பச்சி ,உனக்கு நான் வேணுமா,மக வேணுமா,என்ற மகனின் உறுமலுக்கு அடங்கி-பல அற்பச் சண்டைக் காரணங்களுக்காக!

இந்த இடைப்பட்ட காலத்தில் மாமா தன் குடும்ப வாழ்வில் பல இடியாப்பச் சிக்கல்களை தானே உருவாக்கிக் கொள்ள-அவருக்கு ஒரு சித்தியின் பெண்,எனது ஒன்று விட்ட சகோதரிதான்,மனைவி- அவருக்கு எழுதினால் ஏறாது என எண்ணி என் சகோதரிக்கு,அதாவது மாமிக்கு,பாரதியின் ‘வீணையடி நீ எனக்கு’ஐ மேற்காண்பித்து எழுதிய கடிதத்தைப் படித்தவர்,'தமிழ் மகனா இப்படியெல்லாம் எழுதினா(ன்)'என மிகவும் பெருமிதத்தில்,மகிழ்ச்சியில் சிலாகித்தார் எனக் கேட்டபோது எனக்கு மனது கனத்தது!

இப்பருவத்தில் நாங்களும் கல்வி மேற்படிப்பு,வேலை என சிறகுகள் விரிக்க அவரைப் பார்க்கும் தருணங்களும் வெகுவாகக் குறைந்தன.ஆயினும் அவர் தன் மகளையோ,எங்களையோ சந்திக்கும் தருணங்கள் நெகிழ்வாகவே இருக்கும்.
கடைசியாக 5 வருடங்களுக்கு முன் என் திருமண அழைப்பைக் கொண்டு அவரை பார்க்கச் சென்றேன். ‘அப்பச்சி,தமிழ் வந்திருக்கேன்,மகனுக்கு(எனக்கு) கல்யாணம் வச்சிருக்கோம்’(பார்வை அவருக்கு போக்கடிக்கப் பட்டிருந்தது,கவனக் குறைவால்) எனக் கேட்டதும் பசுவைக் கண்ட கன்றாய் பரபரத்தார்.’உக்காரும்மா,உக்காரும்மா,பயலுக்கு கல்யாணமா,நல்லா,இருக்கானா,எங்க சிங்கப்பூர்லயா இருக்கா(ன்),நல்லாருக்கட்டும்,நல்லாருக்கட்டும்’ என்று நெகிழ்ந்த மனிதரின் உருவத்தில் ஏற்பட்டிருந்த பிம்ப மாறுதல்கள் அப்பொழுதே என் மனதைக் கிழித்தன.

தந்தைக்கும்,தன் பிம்பம் போன்றதேயான மகளுக்குமான அந்த சந்திப்பு,பிரிந்திருக்க வேண்டிய விதியின் துயரும்,மனதில் பொங்கும் அன்பின் நெகிழ்வும் நிறைந்து என்னையும் அழ வைத்தது.
இம்முறை போனபோது அம்மா,’ அவன்(மாமா) என்ன பண்ணாலும் சரி,வாடா,போய் பார்த்துட்டு வரலாம், நீ அடுத்தமுறை வரும் போது இருக்காரோ,இல்லையோ சொல்ல முடியாது..’ என்று சொல்ல,உறுதியாக மறுத்தேன்,சிங்கம் போன்ற அவரின் என் மனபிம்பம் துவண்டு மருகி,சிதையும்  நேரடிக் கணங்களை என்னால் சீரணிக்க இயலுவதில்லை என்பதால் !

பெட்டிக் கடையில் வாழ்க்கையை ஆரம்பித்து,நான்கு பெண்களை சீராகக் கரையேற்றி,நிலமும்,வயலும்,தோப்பும்,கடையுமாக செழித்த தன் அத்தனை உழைப்பையும் தாரைவார்த்துக் கொடுத்த தன் ஒரே அன்பு மகன் அவரின் கடைசிக் கால நிம்மதியான,நிறைவான வாழ்க்கைக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளாத நிலையில்,குடும்பம்,மக்கட்பேறு,வாழ்வு இவைகளின் நோக்கம்தான் என்ன??????????!!!!!!!!!

Sunday, October 21, 2007

^^^ பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை

குறிப்பு : இப் பதிவு திண்ணை இதழிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.


உலக ஊடகங்களில் வந்த சமீபத்திய செய்திகளில் ஒன்றான இதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.பள்ளிகளில் பாலியல்ரீதியான தொந்தரவுகள்,செயல்கள்,சிறார்களை பாலியல்கையாள்கை செய்வது,அதற்குத் தூண்டுவது,சிறார்களைத் தூண்டுவிட்டு உடலுறவுக்குக் கொண்டு செல்வது போன்ற குற்றங்களைச் செய்த லிண்ட்சே என்ற ஆசிரியர் மீது 40 ஆண்டுகளுக்குப் பின்பு-ஆச்சரியப்படாதீர்கள்-அவரது 40 ஆண்டு வேலைக்காலத்தில்தான் அவரது மாணவிகளில் ஒரு பெண்ணான பிராமோவ் தொடர்ந்த வழக்கில் மூலம் ஆசிரியரின் அனுமதிச் சீட்டு(licence) பறிக்கப் பட்டிருக்கிறது.
இதில் இன்னொரு செய்தி அவர் மேல் கடந்த 40 ஆண்டுகளில் 20 க்கும் மேற்பட்ட குற்றங்கள் அவர் பணிபுரிந்த பள்ளிகளில்,கல்லூரிகளில் சுமத்தப்பட்டும் அவை கடுமையான விசாரணையோ,தண்டனையோ இல்லாமல் கிடப்பில் போடப் பட்டிருக்கின்றன.நிர்வாகச் சுழலின் பல மட்டங்களில் செய்த புகார்கள் பயனற்றுப் போகவே,ப்ராமோவ் அரசை எதிர்த்தே வழக்குத் தொடர்ந்த பின் அரசு தண்டணையாக ஆசிரியரின் பணி அனுமதியைப் பறிக்க பரிந்துரைக்கையில்,அவர் சுகமாக விருப்ப ஓய்வும்,பணி அனுமதியை சுய-ரத்தும்(surrender) செய்து விட்டார்.
மேலும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கடந்த 10 ஆண்டுகளில் நாடெங்கிலும் இதுபோன்ற சுமார் 2500 குற்றங்கள் நடந்து அவை அடிகார மட்டத்தால் பதிவு செய்யப் படாமலேயே ஆங்காங்கே சமாளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இவையெல்லாம் பாலியல் கல்வியும்,சுதந்திரமான கலவியல் சிந்தனைகளும் அனுமதிக்கவும்,வாழ்க்கை முறையாகவும் கருதப்படுகின்ற அமெரிக்காவில் நடந்திருப்பவை !
இந்தியா போன்ற நாடுகளில்,அமெரிக்கா அளவிற்கு மோசமில்லையெனினும்,பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் சமீபத்திய 20 ஆண்டுகளில் அதிகரித்து வந்திருப்பதும் கண்கூடு.
இவை பாலியல் கல்வி,சுதந்திரக் கலவி மனப்பான்மை ஆகியவை பற்றிய கருத்துக்களில் மிகு-மீள் ஆய்வு(revised thoughts/analysis) செய்யப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன்.
இந்தியாவைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பாலியல் பற்றிய பேச்சுக்கள் பள்ளி,கல்லூரி அளவில் இல்லை;பள்ளி கல்லூரிகள் அளவில் இப்போதிருக்கின்ற அளவு பாலியல் குற்றங்களும் இல்லை.ஆயினும் அதே சமயத்தில் உலகிற்கே கலவி இன்பம் பற்றிய பெரும் கருத்துக் கருவூலங்களாகக் கருதப்படுகிற வாத்சாயனரின் காமசாத்திரம்,தாந்ரிக் மற்றும் கோக்கோகம் முதலிய ஆய்வுகளின் ஊற்றாகவே இந்தியா விளங்கி இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல நாடுகளில் எடுக்கப் பட்ட புள்ளி விவரங்களின் படி குடும்ப ரீதியான கலவியல் வாழ்விலும்,மிக திருப்தியான வாழ்க்கை வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்த செய்தியும் படிக்கக் கிடைத்தது.

ஆக இந்தியாவைப் பொறுத்தவரை சிறார்கள் கல்விகற்கும் வயதில் இது போன்ற விடயங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட அதே சமயம்,உரிய பருவத்தினர் கைக்கொள்ள,தேவைப்படும் காலத்தில் தேவைப்பட்ட அறிவு இத்துறையில் கிடைத்தே வந்துள்ளது எனக் கருத வேண்டியிருக்கிறது.
அமெரிக்கா போன்ற சுதந்திர சிந்தனை நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதும்,காட்டுமிராண்டித்தனமாக தண்டனைகள் இருப்பதாகக் கருதப்படும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பொதுவாகவே பாலியல் குற்றங்கள் குறைவாக இருப்பதும்,வேலை போன்ற காரணங்களுக்காக வளர்ந்துவிட்ட வெளி தேசங்கள் செல்பவர்கள்(first world countries) தங்கள் குழந்தைகளில் பதின்ம வயதுகளில் எல்லாவற்றையும் மூட்டைகட்டிக்கொண்டு இந்தியாவுக்கு ஓடி வருவதும்,நடைமுறை வாழ்க்கையின் கண்கூடு !
சிறார்களுக்கு பாலியல் கல்வி கொடுப்பதாலேயே,அவர்களுக்கு இயல்பான மானுடத்தின் தன்மையான செயல்படுத்திப் பார்க்கும் ஆர்வம்(Experimental attitude) முளைக்கிறது என்பதும்,இதை மேலும் தூண்டிவிடுவதன் மூலமே சிறார்களுகெதிரான பாலியல் குற்றங்களில் அவர்களும் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் எனக் கருதவும் இடம் இருக்கிறது.
இப்போதைய தகவல் வெள்ளக் காலங்களில் சிறார்களுக்கான பாலியல் கல்வி பள்ளிகளில் இருந்துதான் கிடைக்க வேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தல்ல.
பாலியல் கல்வி முதிர்ந்த,சுதந்திர சிந்தனையுள்ள நாடுகளில் சிறார்களுக்கெதிரேயான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதும்,அதே சமயம் சிறார்களுக்கு பாலியல் கல்வி அவசியம்,அது அவர்களை எச்சரித்து வேண்டாத விதயங்களில் இருந்து பாதுகாக்கும் என்ற சிந்தனையும்,ஒருங்கே நிலவும் கருத்துக்களாக இருப்பது விந்தை.
அனைத்தையும் ஒட்டுமொத்த நோக்கில் பார்க்கும் போது,சிறார்களின் மீதான பாலியல் தாக்குதலை எப்படி சமாளிப்பது,வருங்கால சமுதாயம் எப்படி அமைவது என்ற இரு கூறுகளில் சிந்தித்தாலேயே இவற்றிற்கான தெளிவு கிடைக்க முடியும்.
சிறார்களுக்கு பாலியல் கல்வி தேவை என்பதை விட உடலியல் கல்வி தேவை என்பதே முக்கியமானது.
அவர்களுக்கு பள்ளிகளில் உடலியல் ரீதியான கல்வியைக் கொடுக்கும் அதே நேரத்தில்,தகுந்த வயது வரை பாலியல் ரீதியான தகவல்கள்,செய்திகளைக் கல்வி முறைகளில் இருந்து விலக்கி வைப்பதே ஆரோக்கிய சமுதாயம் உருவாக வழி வகுக்கும்.
சிங்கப்பூர் போன்ற உலகின் ஒரு சில நாடுகளே இவற்றை சரியாகக் கையாளுகின்றன என்பது என் கருத்து.இங்கு பாலியல் குற்றங்கள்-பொதுவாக அனைத்து வகை குற்றச் செயல்களும்-கடுமையாக அணுகப்படுகின்றன;அவற்றிற்கான தண்டனைகள் வேறெவரும் குற்றச் செயல்களில் ஈடுபட பலமுறை யோசிக்கும் வண்ணமே நிகழ்த்தப்படுகின்றன.
கொடும் குற்றங்களுக்கு கடும் தண்டனைகளும்,அவற்றை செயல்படுத்துவதில் ஒளிவுமறைவோ,பாரபட்சமோ இல்லாதிருப்பதும் ஒரு நல்ல நாட்டின் நாடாண்மைக்கு(governance) முக்கியத் தேவைகள் !!!!!

Saturday, October 13, 2007

25-கிரெய்க் வெண்டர்-உயிர்த்துளி

ஆ.வி. யில் வந்த ஒரு செய்தியை எவ்வளவு பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை;வலைப்பக்கங்களில் எந்த ஒரு குறிப்பிடலோ எதிர்வினையோ இல்லை.எனவேதான் இந்தப் பதிவு.
அமெரிக்காவைச் சேர்ந்த கி.வெ என்ற மேற்குறிப்பிட்ட ஒரு மருத்துவர் ஒரு புதிய கண்டுபிடிப்பைப் பற்றி விரைவில் அறிவிக்கப் போகிறார் என்கிறது செய்தி.
அது முழுக்க,முழுக்க ஆய்வகத்திலேயே உருவாக்கப் பட்ட ஒரு செயற்கை க்ரோமோசோம் பற்றிய செய்தி.
உயிரின் உருவாக்கத்தில் க்ரொமோசோம்களில் பங்கு நாம் அறிந்த செய்தி;ஆனால் கிரெய்க் செயற்கையாக க்ரோமோசோமை உருவாக்கி இருக்கிறார்.
இந்த க்ரோமோசோமை ஒரு செல்லில் செலுத்தி உயிர்ப் பெருக்க நடவடிக்கைகளைத் தூண்டி விட்டு எந்த உயிரையும் உருவாக்கலாம் என்பது அவர் அளிக்கும் சித்தாந்தம்.
க்ளோனிங் இதற்கு எந்த வகையில் மாறுபடுகிறது என்பது அறிவியல் ரீதியாக எனக்கு இன்னும் விளங்கவில்லை;என் புரிதலில் க்ளோனிங்'கிற்கு உருவாக்கப் பட வேண்டிய உயிரியின் ஒரு உடல் செல் தேவை என்றே படித்ததாக நினைவு.ஒரு உயிரியை உருவாக்க இந்த க்ரோமோசோமும் ஒரு செல்லில் செலுத்தப்பட வேண்டும் என்கிறார் க்ரெய்க்.
ஆயினும் க்ரோமோசோமை முற்றிலும் செயற்கையாக பரிசோதனைச் சாலையில் உருவாக்க முடிந்திருப்பது ஒரு புரட்சியான சாதனை என்றே தோன்றுகிறது.
க்ரெய்க் குளோபல் வார்மிங்'கை சமாளிக்க கார்பன் - டை - ஆக்சைடை உட்கொள்ளும் பாக்டீரியாக்களை உருவாக்குவதுதான் முதல் லட்சியம் என்கிறார்.
ஆயினும் அவர் சொல்லுகிற வகையில் இந்த கண்டுபிடிப்பு வேலை செய்தால் படைப்புத் தத்துவம் ஒரு மிகப் பெரிய ஆட்டம் காணும் வாய்ப்பிருக்கிறது.
உலகெங்கிலும் பலத்த எதிர்ப்பும் இக் கண்டுபிடிப்பிற்குத் தோன்றியிருக்கிறது.
க்ரெய்க்'கிடம் எதிர்ப்பைப் பற்றிக் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பதில் ஒரு அழகிய முரண் நகை, "கடவுளையே எதிர்க்கும் ஆட்கள் இவ்வுலகில் இருக்கும் போது என் கண்டுபிடிப்பை எதிர்ப்பது எம்மாத்திரம்?"
இவ்வேளையில் சுஜாதா எழுதிய ஒரு விஞ்ஞானச் சிறுகதையில், முழுக்க சோதனைச் சாலையில் உருவாக்கி,ஒரு விஞ்ஞானியால் (ரகசியமாக)வளர்க்கப்படும் ஒரு கொழகொழத்த வடிவற்ற உயிரியும்,அந்தக் கதையின் சுவாரசிய சுஜாதா ப்ராண்ட் முடிவும் எண்ணத்தில் மீள்வதை தவிர்க்க இயலவில்லை.

Wednesday, October 10, 2007

அங்கும்,இங்கும்,எங்கும்.....

இந்தியாவில் பல சமயத்தவர் வாழ்கின்றோம்.பல சமயத்தவருள் பற்பல சடங்குகள்,சம்பிரதாயங்கள் செய்கிறார்கள்.


இவை எல்லாவற்றிலும் மனித குலத்தின் பிறப்பு,இறப்பு தழுவிய சடங்குகள் பலராலும் தவறாது செய்யப்படுபவை கண்கூடு.


இன்னும் சொல்லப்போனால் இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட தத்தம் முன்னோர்களை நினைவுகூரும் விதமான சடங்குகளை ,குடும்ப மூத்தவர்கள் சொல்ல சிரத்தையுடன் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.



நான் இவற்றையெல்லாம் பற்றி சிந்திக்கும் போது மற்ற நாடுகளில் இது போன்ற பழக்கவழக்கங்கள் என்ன என்பதெல்லாம் பற்றி கூர்ந்து ஆராய்ந்ததில்லை.



சிங்கப்பூரில் சிலகாலம் இருந்தும் சீனர்கள்,மலாய் இனத்தவர்கள் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்தும் போதும் உன்னிப்பாகக் கவனித்ததில்லை;நான் மட்டுமல்ல,பொதுவாக இந்திய மென்பொருள் வேலையர்கள் இங்கு பல காலம் தங்க நேரும் போது கூட சீனர்கள்,மலாய்க் காரர்களின் சமூக,சமய சடங்குகள்,கொண்டாட்டங்களில் முனைப்புடன் இணைவதோ,கலந்து கொள்வதோ இல்லை என்றுதான் நினைக்கிறேன்.


பொதுவாக சீனர்களுக்கு பிப்ரவரியும்,ஆகஸ்ட்-செப்டெம்பரும் சமூகம் சார்ந்த கொண்டாட்ட,சடங்கு நிகழ்வுகள் நடக்கும் முக்கிய காலங்கள்.


முன்னது சீனப் புத்தாண்டு;பின்னது Ghost Month Celeberation என அவர்கள் அழைக்கும் நீத்தார் நினைவுக் கொண்டாட்ட காலம்.



சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் இந்த ஆண்டு ஒரு சீன நண்பர் அழைப்பில் அவர் வீட்டுக்கு சென்று வாழ்த்திவிட்டு வந்தேன்.


ஆகஸ்ட்-செப்டெம்பரில் எனது குடியிருப்புக்கு கீழேயே இவ்வாண்டு மிகப் பெரும் கொண்டாட்ட முஸ்தீபுகள் களை கட்டின.மூக்கு வேர்த்ததால்,இம்முறை இவற்றின் தாத்பரியம் என்ன என்று அறிந்து கொண்டே ஆகவேண்டும் என தீர்மானித்தேன்.அதில் கலந்து கொண்ட சீன நண்பர்களிடம் கட்டை போட்டதில் அறிந்தவைதான் இங்கே !


இரண்டு நாட்கள் பகலிரவாக அலங்காரங்கள் நடைபெற்றன.பின்னர் கிட்டத்திட்ட மூன்று நாட்கள் பலர் கூடி வழிபாடும் விருந்தும்.

வழிபாடு பெரும்பாலும் புத்தருக்கு;வழிபாட்டு சமயத்தில் எவரெவரின் நீத்த மூத்தோர்களை நினைவு கூர வேண்டுமோ அவர்கள் இந்த சடங்குகளை நடத்தி வைக்கும் பிக்குகளுக்கு முன் பணம் கொடுத்து விட வேண்டுமாம்.


இப் பிக்குகள் பெரும்பாலும் தனியர்களாய்,குடும்பம் இல்லாமல்,சீனக் கோவில்களிலேயே தங்குபவர்களாக இருக்கிறார்கள்.


இம்மாதிரியான பிரதிமைகள் அமைத்து வழிபாடுகள் செய்து பின்னர் பலவகை உணவுகள் படைத்து வழிபடுகிறார்கள்.


மேலும் அழகழகான கண்ணாடியாலான(அழகான கடைசல் வேலைபாடுடன் கூடிய கண்ணாடி சிமிழ் மேலே,கீழ்ப்புறம் LPG அடைக்கப் பட்டு திரி மட்டும் மேல்தெரியும் பகுதி;எரியும் போது மிக அழகு!) விளக்குகள்,படத்தில் போல,பெருமளவில் ஏற்றி வைக்கிறார்கள்;கட்டுக் கட்டாக டாலர் வடிவம் அச்சடித்த,டாலர் அளவில் அமைந்த பேப்பர்களை நெருப்பில் எரிக்கிறார்கள்;சாதம்,ஆரஞ்சு,அறுகோண வடிவில் பல நிறத்தில் அமைந்த பஞ்சு போன்று மெத்தென இருக்கும் ஒரு தின்பொருள்-எல்லாம் தரையில் பரப்பி ஒரு கட்டு ஊது பத்திகளை ஏற்றி வைப்பார்கள்...எல்லாம் குடியிருப்பின் நடை பாதையோரத்தில்...
இவை அனைத்தும் நீத்தாருக்காக,விளக்குகள் அவர்களுக்கு பாதைகளில் ஒளி கொடுக்கவும்,எரிக்கப் படும் டாலர் வடிவ காகிதங்கள் அவர்கள் மறு உலகில் செலவு செய்யப் பணமாகவும்,படைக்கப்படும் உணவுகள் அவர்களுக்கு உணவாகவும் பயன்படும் என்றும் நம்புகிறார்கள்.

சீனர்களின் வாழ்விலும் நெருப்பு,வான்வெளி ஆகியவை(பொதுவில் பஞ்சபூதக் கூறுகள்) முக்கிய சமூக,சடங்குகள் சார்ந்த அடையாளங்களாக விளங்குவதை அறிய முடிகிறது.


ஆழ்ந்து நோக்கும் போது உலகின் மிகப் பெரும் இரு நாகரிகங்களில்(இந்திய,சீன)பழக்க வழக்கங்கள்,சடங்குகள் பெரும்பாலும் ஒத்த அளவிலேதான் இருந்திருக்கின்றன.






அக்கினிக் குஞ்சொன்று....

இந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது
என்று காந்தியடிகள் சொன்னதாகச் சொல்வார்கள்.இதனை மெய்ப்படுத்துவது போன்றது அந்த செய்தி.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாலுகோட்டை கிராம ஊராட்சியின் நிலை மெச்சத்தகுந்தது.
  • ஷவருடன் கூடிய பொதுக்குளியலறை ஆங்காங்கே,
  • தெருமுனைகளில் குடிநீர்க் குழாய்,
  • ஊராட்சி அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுக் காரிய உபயோகத்துக்கென கணிபொறி-வலை உலாவும் வசதியுடன்,
  • ஒவ்வொரு வீட்டிலும் குளியலறை-கழிப்பறை,
  • மழைநீர் சேகரிப்பு,
  • மனிதக் கழிவிலிருந்து பெறப்படும் மின்சாரம் ஒளியூட்டும் பொது விளக்குகள்,
  • மிச்சப்படும் அந்த மின்சாரக் கட்டணம் மூலமும் ஊராட்சிக்கு அரசு ஒதுக்கும் பணத்தை ஒழுங்காக செலவு,முதலீடு செய்ய ஊராட்சி நிலங்களில் பழத் தோட்டங்கள்,
  • ஊர்முழுவதும் சிமெண்ட் ரோடு,
  • மூலைக்கு மூலை குப்பைத் தொட்டி,
  • பெண்களின் மாதாந்திர உபயோக சாமக்கிரியைகளை எரிக்க நவீன கழிவெரிக்கும் அடுப்புகள்,
  • எல்லாக் குழந்தைகளும் எட்டாவது வகுப்பு வரை படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாய சட்டம்,
  • அதை மகிழ்வாக பின்பற்றும் ஊர்மக்கள்.....
அட,இது தமிழக கிராமம் தானா என்ற திகைப்பு ஏற்படலாம்.
இவையெல்லாம் எப்படி சாத்தியம்?
காரணங்கள் எளிதானவையும்,ஆத்ம சுத்தியுடன் நமது ஆட்சியாளர்களால் அலசப் பட வேண்டியவையும் !!!
1965 ல் இந்த ஊரின் ஊராட்சி பொறுப்பேற்றிக் கொண்டபோதெ,இப்பதவியில் இருந்து விலகும் போது ஊருக்கு ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என நினைத்தேன் என்கிறார் ஊரின் ஊராட்சித்தலைவர் ராமநாதன்.இவரின் ஆதாரக் குறிக்கோள்கள் சிக்கலற்றவையும்,எளிதானவையும்.
-ஊருக்கு அரசு ஒதுக்கும் பணத்தை பய(ல)னளிக்கும் வகையில் செலவு செய்வது.
-எதற்கு எவ்விதம் திட்டங்கள் தீட்டுவது என்பதை ஊர்க் கூட்டத்தில் முடிவு செய்வது.
-பொதுப் பணத்தை,சொந்தப் பணத்தை சொந்தக் காரியங்களுக்கு செலவிடுவது போன்ற அக்கறையுடன் - கவனிக்கவும் அக்கறையுடன் மட்டும் - பொதுக் காரியங்களுக்கு செலவு செய்வது !
ஜூவி இதனை சாதனை என்று வர்ணித்திருக்கிறது;நல்ல ஊராட்சி முறை இருந்தால் எந்தக் கிராமமும் இருக்க வேண்டிய நிலைதான் இது.ஆயினும் நம்மை ஆள்பவர்கள் மற்ற ஊர்கள்,மாவட்டங்களில் செய்யும் அவலக் காரியங்கள் நாலுகோட்டையின் இந்த நிலையை சாதனை என்ற அளவில் பார்க்க வைப்பதை மறுக்கவியலாது.
எல்லாவற்றிலும் முக்கியமான ஒரு விதயம் இருக்கிறது,இந்த ஊரின் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் சுயேச்சைகள் !
Strictly No to கட்சி அரசியல்.
கழகக் குஞ்சுகள் 40 ஆண்டு காலத்தில் எங்கும் செய்யவியலாத ஒரு விதயம் தனி நபர்களால்-அரசியல்,திராவிட ஆரிய புண்ணாக்குகள்,வெங்காயங்கள் இல்லாமல்-சாதிக்கப் பட்டிருக்கிறது.
ஒரு வித்தியாசமான நாலுகோட்டையை என் வாழ்நாளில் காண்பேன் என்று 1965 களில் வரிந்து கட்டிய ராமநாதனும்,ஒரு வித்தியாசமான சிங்கப்பூரை நான் உருவாக்குவேன் என்று 1960 களில் வரிந்து கட்டிய லீ senior'ம் உண்மையில் ஒத்த படிமங்கள்.
The Singapore Story'ல் முந்தாய்ப்பு வரிகளாக லீ சீனியர் சொல்கிறார்.
They(Malaysia) thought afther they hived off us,we would not work out as an idea of separate singapore and would struggle for each and every resource starting from water and would beg on their feet again,to be associated with them again,on terms they fix.
Not really,till i have different idea(s).I didn't realise that I would spend my entire remaining life to not only make that idea work,but also to make singapore flourish and excel to became a first world country from third world....
இவர்களிலிருந்து பாடம் கற்கத்தான் நமது உளுத்த அரசியல் வாதிகள் தயாராக இல்லை.
அதுதான் நம்மை பீடித்திருக்கும் மிகக் கொடிய பிணியும்,சோகமும் !!!!!

Sunday, September 30, 2007

கிரிக்கெட் Vs மற்ற விளையாட்டுக்கள் மற்றும் ஆனந்தின் கேள்வி !!!

2வது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ள எனக்கு, 20-20 உலகக் கோப்பையை வென்று திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு கொடுத்த அதே அளவிலான வரவேற்பினை இந்தியா
கொடுக்குமா என்பதை அறிய ஆவலாக உள்ளேன் என்று 2வது முறையாக உலக செஸ் சாம்பியன்
பட்டத்தை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம்,தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்த இந்திய கிரிக்கெட் அணி, 20-20 உலகக் கோப்பைக்
கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆனதை நாடே விழுந்து விழுந்து
கொண்டாடியது.இந்தியாவில் உள்ள அனைத்து ஆங்கில தொலைக்காட்சி சானல்களும் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதையே காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்திய வீரர்களுக்கு
கோடிக்கணக்கில் பரிசுகள் குவிந்தன. குடியரசுத் தலைவர், பிரதமர் என பல தலைவர்களும் இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டினர்.இந்திய அணி வீரர்கள் மும்பைக்குத்
திரும்பியபோது, குடியரசுத் தலைவர் ஒருவருக்குக் கொடுக்கப்படும் ராஜ மரியாதை இந்திய வீரர்களுக்குத் தரப்பட்டது.மும்பை நகர் முழுவதும் வீரர்களை திறந்த பஸ்சில் ஏற்றி ஊர்வலமாக கூட்டிச் சென்று வாங்கடே விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா
நடத்தி பரிசுத் தொகையை ஸ்பாட்டிலேயே கொடுத்து கெளரவித்தனர்.இந்ததிய கிரிக்கெட் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ராஜ உபசாரமும், பரிசுகளும், கொடுக்கப்பட்ட கெளரவமும் மற்ற விளையாட்டுக்காரர்களை கடும் கோபத்திலும், அதிருப்தியிலும்
ஆழ்த்தியுள்ளன.குறிப்பாக ஹாக்கி வீரர்கள் கடும் கோபமடைந்தனர். பாரபட்ச போக்கைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக கர்நாடகத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.இதனால் பயந்து போன கர்நாடக அரசு
உடனடியாக ஆசிய கோப்பைப் போட்டியில் வென்றதற்காக கர்நாடகத்தைச் சேர்ந்த நான்கு ஹாக்கி வீரர்களுக்குப் பரிசுத் தொகையை அறிவித்தது. இதையடுத்து ஸ்டேட் வங்கி
உள்ளிட்ட சிலரும் பரிசுகளை அறிவித்தனர்.இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். முதல் முறை அவர்
சாம்பியன் பட்டம் வென்றபோதே அவருக்கு இந்தியா உரிய முறையில் கெளரவம் தரவில்லை என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் 2வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளார்
ஆனந்த்.இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தரப்பட்ட அதே அளவிலான கெளரவமும், மரியாதையும், தற்போது ஆனந்துக்குக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக
ஆனந்த்திடமே அதுகுறித்த ஆர்வம் எழுந்துள்ளது.இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து கேள்விப்பட்டேன். அக்டோபர்
மாதம் நான் இந்தியாவுக்கு வரும்போது இதேபோன்ற வரவேற்பு கிடைக்குமா என்பதை அறிய ஆர்வமாக உள்ளேன்.வரவேற்பு கிடைக்கிறதோ, இல்லையோ, செஸ் உலகைச் சேர்ந்த நண்பர்கள்
நிச்சயம் வரவேற்புக்காக காத்திருப்பார்கள். அதில் சந்தேகம் இல்லை.

ஆனால் மெக்சிகோவில் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து மக்கள் நன்கு புரிந்துவைத்துள்ளனர் என்றார் ஆனந்த்.காஸ்பரோவுக்குப் பின்னர் செஸ் உலகின் அசைக்க முடியாத மன்னராக இருக்கிறார் ஆனந்த். முன்னணி வீரரான ரஷ்யாவின் விலாடிமிர் கிராம்னிக்கால் கூட ஆனந்த் இடத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.தனது செஸ் வாழ்க்கையில் 2வது முறையாக 2800 ஈலோ பாயிண்டுகளைத் தொட்டுள்ளார் ஆனந்த். தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.7
ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக உலக சாம்பியன் ஆனார் ஆனந்த். மெக்சிகோவில் தற்போது நடந்து முடிந்துள்ள செஸ் சாம்பியன் போட்டியில், ஒரு ஆட்டத்தில் கூட ஆனந்த்
தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல சாதனைகளுடன் நாடு திரும்பவுள்ள
ஆனந்த்தை இந்தியா எப்படி வரவேற்கப் போகிறதோ?

மிகவும் நியாயமான,சிந்திக்க வேண்டிய கேள்வி என்றுதான் தோன்றுகிறது......

நன்றி-இணைய செய்திகள்,தட்ஸ் தமிழ்

Wednesday, September 26, 2007

பிரபஞ்சம்-தமிழும்,தமிழரும்

பிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது என்பது பற்றிய ஆய்வில் ஒரு சுவையான bibliography...
தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள் என்பது வெள்ளிடை மலை.
இந்தியாவும் சீனமும் எவ்வாறு உலகின் செல்வந்த நாடுகளாக விளங்கின என்ற நோக்கில் எனது மற்றொரு பதிவு இங்கே...

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000
கடைகி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது.உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண ல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, அரப்பா.
கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு - 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம்.சுமேரியாவில் புதைபொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின்முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.
மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.
கி.மு - 3100 - 3000
ஆரியர்சுள் சித்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்துசமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு - 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ்மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915
திருப்புரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. - 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்குஏற்றுமதி செய்யப்பட்டது.
கி.மு. - 1450
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. - 1316
மகாபாரத கதை வியாசரால் அமைக்கப் பட்டது.
கி. மு. 1250
மோசசு 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினர்.
கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.
கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநாணூறு, புறநாணூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நாணூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிசு) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி.

பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது)

சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)
கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 700
சொரோசுடிரேணியிசம் பெர்சியாவில் சொரோசுடரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.
கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.
கி. மு. 600
லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.
கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமசுகிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமசுகிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
கி. மு. 599 - 527
மகவீரர் காலம். செயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.
கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிசு) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.
கி. மு. 551-478
கன்பூசியசு காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.
கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.
கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீசு புகழோடு இருந்த காலம்.
கி. மு. 428 - 348
சாக்கரடீசு மாணவர் புளுட்டோவின் காலம்.
கி. மு. 400
கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.
கி. மு. 350 - 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 - 270
மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.
கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.
கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.
கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.
கி.மு. 220 - 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.
கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என ஒளவை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.
கி.மு. 4
ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

எனவேதான்
கல்தோண்றி மண்தோண்றாக் காலத்தே தோண்றிய மூத்தகுடி தமிழ்க்குடி
என்ற சொல்லடை வழக்கத்தில் வந்திருக்க வேண்டும் !

Acknowledgement : Tamizar Varalaaru

Friday, September 21, 2007

சேதுசமுத்திரமும் இராமனின் அரியர்ஸ்களும்...

சேதுசமுத்திர திட்டம்தான் இப்பொது ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் அடிபடுகிறது.திட்டதைப் பற்றி எழுந்த சர்ச்சைகளில் இராமன் எந்த கல்லூரியில் படித்தார்,வைத்திருந்த அரியர்ஸ்’ஐ நிறைவு செய்தாரா இல்லையா என்பது வரை மெத்தப் படித்த வல்லுனர்கள் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் பெருமளவு வெளிப்படுவது
(ஊடகங்களில்) அரசியல்தான் என்று தோன்றுகிறது.
காய்தல்,உவத்தல் இலாத நோக்கில் இதை எவரும் அணுகி இருக்கிறார்களா?
எனக்குத் தோன்றும் வரை இப் பிரச்சனையை பின்வரும் கோணங்களில் அணுகலாம்.
1.பொருளாதாரக் காரணங்கள்.
2.பாதுகாப்புக் காரணங்கள்.
3.சுற்றுச்சூழல் மற்றும் அரசியல்
4.கலாச்சாரம் மற்றும் உணர்வு பூர்வமானவை.

பொருளாதாரக் காரணங்களை பொறுத்தவரை-
பலன்கள்(Merits)
-கிழக்கில் இருந்து மேற்கிற்கும்,எதிர்நோக்கிலும்(vice versa) சுமாராக 340 கடல் மைல்கள் தொலைவு குறைகிறது.
-தூத்துக்குடி துறைமுகம் கடல் போக்குவரத்துப் பொருளாதாரத்தில் வளர வாய்ப்புகள் உள்ளன.
-மற்ற சிறிய தென்னக துறைமுகங்கள் வளரலாம்,தூத்துக்குடி வளர்ச்சி அடைந்து சமாளிக்க முடியாமல் போகும்போது!(Full capacity utilization)
அபலன்கள்(Demerits)
- இது எல்லாக் கலங்களும் உபயோகப் படுத்த ஏதுவான வழி அல்ல,ஏனெனில் ஓரளவிற்கு மேற்பட்ட பெரிய கலங்கள் இந்த வழியை உபயோகப் படுத்த முடியாது.
பாதுகாப்புக் காரணங்கள்-
உண்மையில் இத்திட்டம் 1999 ல் மறுபடியும் செயலாக்க நோக்கில்(feasibility) பார்க்கப்பட்டது பாதுகாப்புத் துறையின் மூலம்தான்.பல எதிரியல் அண்டை நாடுகளின் கருத்தைக் கவரக் கூடாது என்பதால் கப்பல் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப் பட்டதாக கருத்து நிலவுகிறது.ஆயினும் சீர்தூக்கிப் பார்த்தபின் பாதுகாப்புத் துறை அனுகூலங்கள் மெச்சத்தகுந்த அளவில் இல்லாததால்தான் கிடப்பில் போடப்பட்டது எனபதும் இன்னொரு கருத்து.
பலன்கள்
-இந்திய நீர்மூழ்கிக் கலங்கள் யுத்த காலங்களில் மறைந்து,புறப்பட்டுத் தாக்க சரியான இடம்.
-இந்திய போர்க்கலங்கள்(மிகப் பெரிதான விமானந்தாங்கிகளாக இல்லாதபட்சத்தில்) எளிதாக தீபகற்பத்தின் முனைகளுக்குப் பயணப்படலாம்.
அபலன்கள்
மேற்சொன்ன காரணங்களாலேயே ஏவுகணை மற்றும் அழிவுக் கணைகளில் தாக்குதலுக்கு குமரியும் தமிழ்நாடும் இலக்காகலாம்,அதுவும் எதிரி நாடு இலக்கு தேடித் தாக்கும் ஆயுதங்கள்(Target Guided Missiles) வைத்திருக்காத போது இலக்கை மீறும் தாக்குதல்களால் ஆபத்து அதிகம்.
சுற்றுச்சூழல்
பலன்கள்
-ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
அபலன்கள்
-சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்,ஏனெனில் இப்பகுதியின் கால்வாய்ப் பகுதி சுமார் 20 மீட்டர் அளவுக்கு மேல் ஆழப்படுத்தப் படும்.
-மீனவர்களில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும்

அரசியல்
பலன்கள்(அ.வாதிகளுக்கு)
-தென்னிந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய திட்டங்களில் இது ஒன்று.நல்ல காசு பார்க்கலாம்.
அபலன்கள்
-ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
கலாசாரம்/உணர்வு சார்ந்தவை.
பலன்கள்
-ஏதும் இல்லை
அபலன்கள்
-17 லட்சம் ஆயுள் கொண்ட(தாக நம்பப் படுகிற) ஒரு சின்னம் அழிக்கப்படும்.
-ஒரு பெரும்பான்மை மக்களின் மத உணர்வு சீண்டப்படும் அல்லது கிடப்பில் போடப்படும்.

ஆயினும் தமிழக முதல்வரோ,அவர் சார்ந்த கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரோ பொருளாதாரக் காரணங்களைக் கூட பட்டியலிடவில்லை.வாலாசகமான வேறுவகை விவாதங்களும் சீண்டல்களுமே அவர்களால் முன்வைக்கப் பட்டன.
முதல் கருத்தாக இராமனை இழுப்பதற்குப் பதிலாக ஏன் அரசு பொருளாதார,இதர பலன்களை/அபலன்களை நீதிமன்றங்களில் பட்டியலிடக் கூடாது?

கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

தொடர் நிகழ்வு 1 :
உடுப்பி மடாதிபதி தமிழக முதல்வருக்கு பகிரங்க விவாத அழைப்பு விடுத்திருக்கிறார்; மு.க அவர்கள் எப்போதும் போல வீசிய கயிற்றின் மறுமுணை இம்முறை பிடிக்கப்பட்டிருக்கிறது...என்ன நடக்கிறது பார்க்கலாம்.சுவாரசியமான காட்சிகள் காத்திருக்கின்றன !
தொடர் நிகழ்வு 2 :
லாலூ,கௌடா'வுடன்,விஜயகாந்தும் கோதாவில் குதித்து இது பற்றிப் பேசியிருக்கிறார்.

Monday, September 17, 2007

நீண்டுவிட்ட ஒரு இரவில்....


கிராமத்தின்
பள்ளி முடித்து
மேலும் படிக்க விரும்புகையில்
அழுத்தும் தோள்சுமையில்
புருவம் உயர்த்தாது
புத்தனாய் ஒரு புன்னகை!
தந்தை என்றொரு நண்பன்;
உறுதி உணர்வில்,
கருணை விழியினில் குருதி படர்ந்திட,
பாதாதிகேசமாய் வருடி
பதறி மருகும் பார்வையில் தாய்;
வாய் புதைத்து
வக்கரித்த உறவு முறை;
சாதிக்க சினந்து
வீறுகொண்டு வெளிக் கிளம்பிய
வாலிபச் சீற்றம்;
கல்வி,மேலும் கல்வி,பின் கடமை
எனப் பற்பல ஊர்கள்,நாடுகள்;
பற்பல முகங்கள்,மனிதர்கள்,
பஸ்களில்,பிளேன்களில்;
பற்பல நிறங்களில்
பார்த்துவிட்ட பணவகைகள்;

குறிஞ்சி மலர் பூத்துதிர்ந்து
மீண்டும் மொட்டவிழ
கடந்துவிட்ட காலம்;
உலகின் ஏதோ ஒரு நாடு,
அடைத்திருக்கும் கதவு,வெளி
தனிமையின் தெளிவில்
அறைந்து சீறும் காற்றும் பனியும்;
தொகுப்பு வீட்டின் வெளியில்
பனி படர்ந்த ஏரியின் விசாலம்;
வெளிக்கிளம்பி உள்ளமிழும் வாத்துகள்
தாய்மகனும்,தம்பியும்,தங்கையுமாய்...
தவழ்ந்து விடும் குழந்தையாகி
தாய்மடியில் முகம்புதைக்க
விழைந்து விடும் மனம்...
கண்ணழுத்தும் தூக்கமதில்
புகைபடரும் நினைவு...
விடிகாலை விமானம்,வேலைக்கு செல்ல...
வாழ்க்கை !






(குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்ட என் கவிதை)



Friday, September 14, 2007

அறிவாலயத்தின் மறுபக்கம் !


1972-73ல் சென்னையில் காஷ்மீரைச் சேர்ந்த தார் என்கிற ஜாதி அடையாளம் தெரிகிற ஒரு பிராமண முகமதியர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் பிராமணராயிருந்தவர்கள் என்று பெருமையுடன் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அவர் ஒரு டாக்டர். குவைத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவியும் டாக்டர்தான். மலையாளி. ஆனால் தங்கள் தொழிலுக்குச் சம்பந்தமில்லாமல் போல்ட்டும் நட்டும் உற்பத்தி செய்யும் சிறு தொழிலை அவர்கள் சென்னையில் தம் உறவினர் பொறுப்பில் நடத்தி வந்தனர்.
அவர்களது சிறுதொழில் கூடத்தையொட்டி வேறு சிலரும் பல்வேறு சிறு தொழில்களை
நடத்தி வந்தனர். இன்று தி முகழகத்தின் தலைமை நிலையமாக இருந்துவரும் அண்ணா அறிவாலயம் உள்ள இடத்தில்தான் அந்தச் சிறு தொழில் கூடங்கள் இருந்து வந்தன!
தி மு கழகம் அந்த இடத்தை வாங்கியதும் அங்கிருந்த சிறு தொழில் முனைவோருக்குப் போதிய அவகாசம் கொடுக்காமல், ஒரு நாள் இரவோடு இரவாக புல்டோசரைக் கொண்டு வந்து எல்லாச் சிறுதொழில் கூடங்களையும் தரை மட்டமாக்கி இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. சிறு தொழில் கூடங்களில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எல்லாம் குப்பை கூளங்களைப் போல வாரி எறியப் பட்டன!
ஆளும் கட்சியான தி மு க வின் அத்து மீறிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் முனைவோர் செய்வதறியாது திகைத்தனர். அந்தச் சமயத்தில் நான் அண்ணா தி மு க வினருடன் நெருக்கமாக இருந்தபோதிலும் முதலமைச்சர் கருணாநிதிக்கே ஆலோசனை கூறும் மதியூகியாக இருந்துவந்த முரசொலி மாறனுடனும் எனக்கு நட்பு இருந்து வந்ததை அந்த காஷ்மீரி டாக்டரும் அவர் மனைவியும் யார் மூலமாகவோ கேட்டறிந்து ஒரு பொது நண்பர் மூலமாக என்னை அணுகி நடந்த அட்டூழியத்தைத் தெரிவித்து பரிகாரம் தேட உதவுமாறு கேட்டார்கள்.
நீஙக்ள் என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது லட்சக் கனக்கான ரூபாய் நஷ்டமாகிவிட்டது; எதேனும் இழப்பீட்டுத் தொகை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்கள்.
நடந்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான போக்கிரித்தனம். நீங்கள் ஏன் இதனை எதிர்த்துப் போராடக் கூடாது என்று கேட்டேன். மற்ற சிறுதொழில் முனைவோரையும் சேர்த்துக்கொண்டு ஒரு குழுவாகச் செயல்பட முன் வந்தால் இதனை ஓர் அரசியல் பிரச்சினையாக்கிப் பெரிய கிளர்ச்சியாகவே நடத்தலாம் என்று சொன்னேன். அவர்கள் போராடும் வர்க்கமல்ல. அதிலும் அடாவடிச் செயல்களுக்குத் தயங்காத தி மு க என்கிற ஆளுங் கட்சியுடன் பொருதும் துணிவு அவர்களுக்கு இல்லை. சுமுகமாகப் பேசி அனுதாபத்தைப் பெற்று இழப்பீடாகச் சிறிது தொகையை வாங்கிக் கொண்டு நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளவே விரும்பினார்கள்.
முன்னறிவிப்பின்றிஇரவோடு இரவாக புல்டோசரை வைத்துச் சிறு தொழில் கூடங்களையெல்லாம் தி மு கவினர் தரைமட்டமாக்கிய சட்ட விரோதச் செயல்பற்றி அப்போது சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராக இருந்த ஷெனாயிடம் தொலைபேசி மூலமாகப் புகார் செய்தேன். விசாரித்துச் சொல்வதாக என்னிடம் கூறியவர் பத்து நிமிடங்கள் கழித்து அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சொல்லிவிட்டார்!
ஷெனாய் ஒரு நேற்மையான அதிகாரிதான். ஆனால் ஆளுங் கட்சியான தி மு கவால் முடக்கிப் போடப்பட்ட பல அதிகாரிகளுள் அவரும் ஒருவர். அவரால் எவ்வித ஒத்துழைப்பும் கிடைக்காது என்பது உறுதியானதும் முரசொலி மாறனிடமே பேசி அவர்களுக்கு இழப்பீடு ஏதாவது கிடைக்க முடிவு செய்தேன்.
1958-59 ல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி மவுண்ட் ரோடில் முல்லை சத்தியின் முல்லை அச்சகத்திற்குத் தினசரி மாலை வந்து அரட்டை அடிப்பார், முரசொலி மாறன். அந்த அரட்டையில் நானும் பங்கு கொள்வதுண்டு. அதன் மூலமாகவே அவர் எனக்குப் பழக்கமாகியிருந்தார். ஆனால் நான் மட்டும் போனால் போதாது என்று துணைக்கு முல்லை சத்தியையும் அழைத்
தேன்.
கருணாநிதியுடன் தனக்குச் சில மனக் கசப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் மாறனைச் சந்திக்க வருவது சரியாக இருக்காது என்றும் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி ஏதாவது செய்யுமாறு வேண்டுவதாகவும் முல்லைசத்தி கூறிவிடவே மாறனிடம் அவர்களை நான் மட்டுமாக அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.
அந்தச் சமயத்தில் நான் எம் ஜி ஆரோடு நெருக்கமாக இருந்ததால் அவருக்குத் தெரியாமல் மாறனைச் சந்திக்கச் செல்வது என் மீது தவறான அனுமானங்கள் தோன்ற இடமளித்துவிடும் என்பதால் அவரிடம் தகவல் தெரிவித்தேன். அட, இதைப் பெரிது படுத்தி தி முக வுக்கு ச் சங்கடத்தைக் கொடுக்கலாமே என்று எம் ஜி ஆர் ஆர்வமாகக் கேட்டார். ஆளுங் கட்சியை எதிர்த்துக்கொள்ள சிறுதொழில் முனைவோர் துணிய வில்லை என்று விளக்கினேன். நஷ்டப்பட்டுக் கிடக்கும் சிறுதொழில் முனைவோருக்கு தி மு க தலைமக் கழகத்திடமிருந்து ஏதாவது இழப்பீடு கிடைத்தால் நல்லதுதானே என்று நான் சொல்லவும் சரி போகட்டும் முயற்சி செய்து பாருங்கள் என்று எம் ஜி ஆர் விஷயத்தை அதோடு விட்டு விட்டார்.
காஷ்மீரி டாக்டரையும் அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு முரசொலி மாறனைச் சந்தித்தேன். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தலைமைக் கழகத்தை இதில் சம்பந்தப் படுத்த முடியாது; வேறு ஏதாவது வழியில் இழப்பீடு கிடைக்க முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். ஆனால் பலமுறை அவர்களை இழுத்தடித்துவிட்டுக் கடைசியில் கையை விரித்துவிட்டார்!
மேற்கண்ட செய்தி மலர்மன்னன் என்ற தன்னிச்சைப் பத்திரிக்கையாளரின்-Freelance Reporter-குறிப்புகளில் இருந்து படிக்கக் கிடைத்தது.
இதன் மூலம் நம்மை ஆள்வோர்களின் விழுமியங்களை நாம் ஓரளவு அறிய முடியலாம்.

Saturday, September 8, 2007

கவிஞனா,இல்லை கணக்கணா?








எனது மின்மடலில் ஒரு மின்மடல் வந்தது.


ஏதோ கொஞ்சம் சுவாரசியமாக இருப்பதாகத் தோன்றவே,இணைப்பில் போய்ப் பார்த்தேன்.


ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய ஒரு சுய மதிப்பீடு இருக்கும்.சரியான சுயமதிப்பீடு செய்து கொள்ளக்கூடிய திறன் படைத்த மனிதர்கள் பெரும்பாலும் வெற்றிகரமாக ஒரு நண்பராக இருக்க வாய்ப்பிருக்கிறது;அதோடு சமூகத்தில் தன் இருப்பையும்,தான் எந்த வளையத்தில் பொருந்துகிறோம் எனபதிலும் தெளிவாக இருக்க வாய்ப்பிருக்கிறது.


மேலும் நம்முடைய இயல்பான திறமைகள் எதில் என்பது தெரிந்தால் செய்யும் வேலையிலோ,தொழிலிலோ தனக்கேற்ற தேர்வை தெரிவு செய்ய ஏதுவானதாக இருக்கும்.


அதோடு அவ்வாறு வகைப்படுத்தும் காரணங்களும் ஒரு மதிப்புரையாக அனுப்பி வைக்கப்படுகிறது.


முயன்று பாருங்கள் நண்பர்களே...
(பி.கு:படங்கள் ச்சும்மா ஒரு பெப்ப்ப்ப்ப்ப் க்குதான்..) :-(

Tuesday, September 4, 2007

சரத்குமார விஜயகாந்தர்கள் 2

இதே தலைப்பில் நான் சென்றமுறை எழுதிய பதிவில் கடைசியில் எழும்பிய கேள்விக்கு,ஏன் நாமே ஆக்கபூர்வ சிந்தனைகளை முன்வைக்கக் கூடாது என்று தோன்றியதன் விளைவு இந்த இரண்டாம் பகுதி.

சமீப காலமாக இவர்கள் இருவரின் நடவடிக்கைகளையும்,அரசின் பதில் நடவடிக்கைகளையும் நோக்குபவர்களுக்கு,ஒன்று புலனாகலாம்.
ஆட்சியில் இருக்கும் திமுக அரசு,ஜெயலலிதா அம்மையாருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இவ்விரு நடிகர்-மாற்று-அரசியல் தலைவர்களுக்கு கொடுக்கிறது என்பது என் எண்ணம்.
விஜயகாந்த் சென்னையில் ஏற்பட்ட ‘குப்பைக்’ குழப்பத்தைப் பார்த்து பொங்கி எழுந்து,கெடு நாளுக்குள் குப்பைகள் அள்ளப்படாவிட்டால்,அவரே தொண்டர்கள் தலைமையில் இறங்கி குப்பைகளை அகற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டார்;அடுத்த நாளே,சென்னை மாநகர காவல்துறை,காவல் பணியை மிஞ்சும் செயல் வேகத்தில் பணி செய்து ‘குப்பைக்’ குழப்பத்தைப் (ஓரளவு)போக்கியது.
அதிமுக தலைமை,விஜயகாந்தை வழிமொழிந்து விட்ட அறிக்கை அரசியல் ஆட்டத்தில் யார் அவையத்து முந்தி இருக்கிறார்கள் என்பதைக் காட்டியது.
முன்னர் சரத்குமாரின் டாடா டைட்டானியம் ஆலை சம்பந்தமான அறிக்கை,மருத்துவரின் மணல் கொள்ளை படக்காட்சியை மங்கிப் போகச் செய்து,அரசின் அதிவேக நடவடிக்கையாக உயர்மட்டக் குழு உருவானதின் மூலம்,எது எரியும் பிரச்னை,எவர் முதலில் கவனிக்கப் பட வேண்டியவர் என்ற செய்திகளை சொல்லாமல் சொன்னது.
மேலும்,சரத்குமாரும்,விஜயகாந்தும் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையிலும்,நாளைய தமிழக அரசியலில்/ஆட்சியில் அவர்கள் பங்கும் இருக்கும் என அவர்கள் நம்புவதாலும்(நானும் கூட மெரும்பாலான அரசியல் பார்வையாளர்களைப் போலவே,இது நடக்க வாய்ப்புகள் இருக்கும் என்றே நம்புகிறேன்), மேலும் இவர்கள் இருவரும் அரசால் மிகவும் கவனிக்கப் படுகிறார்கள்,counter செய்யப் படுகிறார்கள் என்னும் நிலையிலும் (சோ இராமசாமி போன்றவர்கள் இதனை முழுமையாக மறுத்தாலும் !) இவர்கள் இருவரும் இந்த பதிவை படிக்கவேண்டும் என நான் விரும்பினேன்.
எனவே அவர்கள் இருவருக்கும் இந்த பதிவின் நகல்/இணைய முகவரி அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்,தமிழக அரசியலில் இவர்கள் இருவரும் ஓரளவு கவனிக்கப் படும் நிலையில்,இவர்கள் இருவருக்கும் ஒரு open letter ஆக இந்த கருத்துக்களை முன் வைக்கிறேன்.

முதலில் இவர்கள் இருவரின்,தனித்தனியான குறிக்கோள்கள் என்ன?இவர்கள் இருவரும் சினிமாவின் சீனியர் நடிகர்கள் வரிசைக்குப் போய் விட்டதாலும்,எஞ்சிய நாட்களுக்கு தங்கள் இருப்பு உணரப்படவும்,ஓரளவு ஒரு task ஆக மேற்கொள்ளவும் அரசியலைக் கருதினார்கள் என்றால்,நாம் சொல்ல ஏதுமில்லை;
ஆனால் இருவருக்கும் அரசியல் களத்தில் முழுஈடு பாட்டுடன் செயல்படும் விருப்பங்கள் இருப்பின்,தமிழக நலனுக்காக இவர்கள் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும்;ஆனால் இருவரும் ஒத்த கருத்துடன்,மாச்சரியங்கள் இல்லாமல் நடிகர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியது போல இணைய முன்வர வேண்டும். மேலும் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணியும் அமைக்கக் கூடாது.
அவ்வாறு நடந்தால் அது தமிழக அரசியலுக்கு ஒரு நல்ல திருப்பமாக இருக்கும்.
இருவரில் சரத்குமார்,தெளிவான திட்ட மேலான்மை முறைகளை கையாளுவது போலத் தோன்றுகிறது-அவரின் இணையப் பக்கம் ஓரளவிற்கு அவரின் அரசியல் சார்ந்த செயல்பாடுகளை/செய்திகளை முன்வைக்கிறது.ஆனால் விஜயகாந்த் வர வர சராசரி தமிழக அரசியல் வாதியின் பாதையில் போவது போலத் தோன்றுகிறது.எனவே இந்த குறிப்பு அவசியமாகிறது.முக்கியக் விஷயமாக இருவரும் இராமு வசந்தன்களையும்,சுதீஷ்களையும் அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவர்கள் விசுவாசம் மிக்கவர்களாக இருக்கலாம்.ஆனால் அரசு சார்ந்த அமைப்புகளுக்குத் தேவை தன்னலம் இல்லாத திறனாளர்கள் மட்டுமே.இதற்கு திறமையான,அப்பழுக்கற்ற,ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத ஓய்வு பெற்ற/பணியில் இருக்கும் ஐஏஎஸ் நண்பர்களை அமர்த்திக் கொள்ளலாம்.
அல்லது நாட்டுக்கு பணி செய்ய ஆர்வமாக இருக்கும் தன்னார்வ,சுயநலம் அற்ற பல்துறை வல்லுநர்களை உள்நாட்டிலோ,வெளிநாட்டிலோ தேடிக் கொணரலாம்.
(இந்த யோசனைகளை ஆக்கபூர்வமாக விவாதிக்கத் தயாரெனில்,என்னைப் போன்ற பலர் முன் நிற்பார்கள்)


அடுத்ததாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்த்தப்பட்டன என்று இவர்கள் இருவரும் அறிய வேண்டியது மிகவும் தேவையான ஒன்று.
அமெரிக்க பிரெசிடெண்டுகளில் ஜார்ஜ் வாஷ்ங்டன்,லிங்கன்,ரூஸ்வெல்ட்,ஹாரி ட்ருமன்,ஜான் எஃப் கென்னடி ஆகியோர் அவரவர் காலகட்டங்களில் என்னென்ன முறையில்,திட்டங்கள் தீட்டினார்கள்/அரசாங்கத்தை நடத்தினார்கள் என்பது எந்த ஒரு ஆட்சியாளரும்(அல்லது ஆட்சி செய்ய விரும்பும் நபர்கள்) அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
சிங்கப்பூரின் சீனியர் லீ’யும் இந்த பட்டியலில் தவிர்க்க முடியாதவர்.
குறைந்த பட்சம் இத்தலைவர்கள் பற்றிய புத்தகங்களையாவது இருவரும் படிக்கலாம்...ஏற்கனவே எல்லா வெளிநாடுகளுக்கும் இவர்கள் திரை படப்பிடிப்புக்காக சென்றிருப்பார்கள்,எனவே பல அந்நிய தேசங்கள் எவ்வாறு ஆளப்படுகின்றன என்ற மேம்போக்கான பார்வையாவது இவர்கள் இருவருக்கும் இருக்கும்.

இதற்கு மேல் தேவைப் படுவது ‘ஒரு மாறுபட்ட தமிழகத்தை உருவாக்குவோம்’ என்று மனதின் அடி ஆழத்தில் இருக்க வேண்டிய விழைவு !

பி.கு:முழுதும் படிக்கும் பலரும் இதை ஒரு முழுப் பிதற்றலாக எண்ணலாம்;ஆயினும் நல்ல மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கக் கூடிய எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விட்டுவிடக் கூடாது என்ற எண்ணமே இந்தப் பதிவின்/அனுப்பதலின் நோக்கம்.

சரத்குமாரின் இணைய மின்மடல் முகவரி: rsk@rskworld.com
விஜயகாந்த் இணைய மின்மடல் முகவரி,தேடிப்பார்த்தேன்,கிடைக்கவில்லை...எவருக்காவது தெரிந்தால் இந்த பதிவை ஒரு சுட்டியாக இடுங்கள்...........

கிருஷ்ண ஜெயந்தி-கண்ணன் என்னும் அழகியல் தத்துவம்


கண்ணன் என்னும் தத்துவம் அதன் அழகியலுக்கும்,குழந்தை விளையாட்டுக்கும்,அன்புக்கும் எங்கும் புகழ் பெற்றது.
அது கடவுள் கொள்கைக்குள்ளும்,அதை மீண்ட ஒன்றாகவும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
கண்ணன் என்னும் குழந்தையை அனைவரும் சீராட்டும் இந்த நேரத்தில் இங்கு என் குறை வார்த்தைகளை நிரப்புவதை விட ஒரு அற்புதக் கவிஞனின் அழகிய கவிதையுடன் க்ருஷ்ண ஜெயந்தி'யை நிறைவு செய்கிறேன்.
***********************************************************
சின்னஞ்சிறு கிளியே-கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே;
என்னைக் கலி தீர்த்தே-உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !
பிள்ளைக் கணியமுதே-கண்ணம்மா
பேசும் பொற் சித்திரமே;
அள்ளி அணைத்திடவே,என் முன்னே
ஆடி வருந் தேனே !
சொல்லு மழலையிலே-கண்ணம்மா
என் துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கம் தவிர்த்திடுவாய் !
இன்பக் கதைகள் எல்லாம்
உன்னைபோல் ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே-உனை நேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ ???
***********************************************************************
பி.கு: மேலே ஒரிஜினல் படமும், என்னுடைய 'கைங்கர்யமும்'

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...