குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, September 30, 2007

கிரிக்கெட் Vs மற்ற விளையாட்டுக்கள் மற்றும் ஆனந்தின் கேள்வி !!!

2வது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ள எனக்கு, 20-20 உலகக் கோப்பையை வென்று திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு கொடுத்த அதே அளவிலான வரவேற்பினை இந்தியா
கொடுக்குமா என்பதை அறிய ஆவலாக உள்ளேன் என்று 2வது முறையாக உலக செஸ் சாம்பியன்
பட்டத்தை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம்,தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்த இந்திய கிரிக்கெட் அணி, 20-20 உலகக் கோப்பைக்
கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆனதை நாடே விழுந்து விழுந்து
கொண்டாடியது.இந்தியாவில் உள்ள அனைத்து ஆங்கில தொலைக்காட்சி சானல்களும் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதையே காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்திய வீரர்களுக்கு
கோடிக்கணக்கில் பரிசுகள் குவிந்தன. குடியரசுத் தலைவர், பிரதமர் என பல தலைவர்களும் இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டினர்.இந்திய அணி வீரர்கள் மும்பைக்குத்
திரும்பியபோது, குடியரசுத் தலைவர் ஒருவருக்குக் கொடுக்கப்படும் ராஜ மரியாதை இந்திய வீரர்களுக்குத் தரப்பட்டது.மும்பை நகர் முழுவதும் வீரர்களை திறந்த பஸ்சில் ஏற்றி ஊர்வலமாக கூட்டிச் சென்று வாங்கடே விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா
நடத்தி பரிசுத் தொகையை ஸ்பாட்டிலேயே கொடுத்து கெளரவித்தனர்.இந்ததிய கிரிக்கெட் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ராஜ உபசாரமும், பரிசுகளும், கொடுக்கப்பட்ட கெளரவமும் மற்ற விளையாட்டுக்காரர்களை கடும் கோபத்திலும், அதிருப்தியிலும்
ஆழ்த்தியுள்ளன.குறிப்பாக ஹாக்கி வீரர்கள் கடும் கோபமடைந்தனர். பாரபட்ச போக்கைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக கர்நாடகத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.இதனால் பயந்து போன கர்நாடக அரசு
உடனடியாக ஆசிய கோப்பைப் போட்டியில் வென்றதற்காக கர்நாடகத்தைச் சேர்ந்த நான்கு ஹாக்கி வீரர்களுக்குப் பரிசுத் தொகையை அறிவித்தது. இதையடுத்து ஸ்டேட் வங்கி
உள்ளிட்ட சிலரும் பரிசுகளை அறிவித்தனர்.இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். முதல் முறை அவர்
சாம்பியன் பட்டம் வென்றபோதே அவருக்கு இந்தியா உரிய முறையில் கெளரவம் தரவில்லை என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் 2வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளார்
ஆனந்த்.இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தரப்பட்ட அதே அளவிலான கெளரவமும், மரியாதையும், தற்போது ஆனந்துக்குக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக
ஆனந்த்திடமே அதுகுறித்த ஆர்வம் எழுந்துள்ளது.இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து கேள்விப்பட்டேன். அக்டோபர்
மாதம் நான் இந்தியாவுக்கு வரும்போது இதேபோன்ற வரவேற்பு கிடைக்குமா என்பதை அறிய ஆர்வமாக உள்ளேன்.வரவேற்பு கிடைக்கிறதோ, இல்லையோ, செஸ் உலகைச் சேர்ந்த நண்பர்கள்
நிச்சயம் வரவேற்புக்காக காத்திருப்பார்கள். அதில் சந்தேகம் இல்லை.

ஆனால் மெக்சிகோவில் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து மக்கள் நன்கு புரிந்துவைத்துள்ளனர் என்றார் ஆனந்த்.காஸ்பரோவுக்குப் பின்னர் செஸ் உலகின் அசைக்க முடியாத மன்னராக இருக்கிறார் ஆனந்த். முன்னணி வீரரான ரஷ்யாவின் விலாடிமிர் கிராம்னிக்கால் கூட ஆனந்த் இடத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.தனது செஸ் வாழ்க்கையில் 2வது முறையாக 2800 ஈலோ பாயிண்டுகளைத் தொட்டுள்ளார் ஆனந்த். தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.7
ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக உலக சாம்பியன் ஆனார் ஆனந்த். மெக்சிகோவில் தற்போது நடந்து முடிந்துள்ள செஸ் சாம்பியன் போட்டியில், ஒரு ஆட்டத்தில் கூட ஆனந்த்
தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல சாதனைகளுடன் நாடு திரும்பவுள்ள
ஆனந்த்தை இந்தியா எப்படி வரவேற்கப் போகிறதோ?

மிகவும் நியாயமான,சிந்திக்க வேண்டிய கேள்வி என்றுதான் தோன்றுகிறது......

நன்றி-இணைய செய்திகள்,தட்ஸ் தமிழ்

Wednesday, September 26, 2007

பிரபஞ்சம்-தமிழும்,தமிழரும்

பிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது என்பது பற்றிய ஆய்வில் ஒரு சுவையான bibliography...
தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள் என்பது வெள்ளிடை மலை.
இந்தியாவும் சீனமும் எவ்வாறு உலகின் செல்வந்த நாடுகளாக விளங்கின என்ற நோக்கில் எனது மற்றொரு பதிவு இங்கே...

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000
கடைகி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது.உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண ல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, அரப்பா.
கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு - 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம்.சுமேரியாவில் புதைபொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின்முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.
மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.
கி.மு - 3100 - 3000
ஆரியர்சுள் சித்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்துசமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு - 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ்மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915
திருப்புரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. - 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்குஏற்றுமதி செய்யப்பட்டது.
கி.மு. - 1450
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. - 1316
மகாபாரத கதை வியாசரால் அமைக்கப் பட்டது.
கி. மு. 1250
மோசசு 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினர்.
கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.
கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநாணூறு, புறநாணூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நாணூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிசு) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி.

பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது)

சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)
கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 700
சொரோசுடிரேணியிசம் பெர்சியாவில் சொரோசுடரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.
கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.
கி. மு. 600
லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.
கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமசுகிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமசுகிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
கி. மு. 599 - 527
மகவீரர் காலம். செயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.
கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிசு) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.
கி. மு. 551-478
கன்பூசியசு காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.
கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.
கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீசு புகழோடு இருந்த காலம்.
கி. மு. 428 - 348
சாக்கரடீசு மாணவர் புளுட்டோவின் காலம்.
கி. மு. 400
கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.
கி. மு. 350 - 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 - 270
மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.
கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.
கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.
கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.
கி.மு. 220 - 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.
கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என ஒளவை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.
கி.மு. 4
ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

எனவேதான்
கல்தோண்றி மண்தோண்றாக் காலத்தே தோண்றிய மூத்தகுடி தமிழ்க்குடி
என்ற சொல்லடை வழக்கத்தில் வந்திருக்க வேண்டும் !

Acknowledgement : Tamizar Varalaaru

Friday, September 21, 2007

சேதுசமுத்திரமும் இராமனின் அரியர்ஸ்களும்...

சேதுசமுத்திர திட்டம்தான் இப்பொது ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் அடிபடுகிறது.திட்டதைப் பற்றி எழுந்த சர்ச்சைகளில் இராமன் எந்த கல்லூரியில் படித்தார்,வைத்திருந்த அரியர்ஸ்’ஐ நிறைவு செய்தாரா இல்லையா என்பது வரை மெத்தப் படித்த வல்லுனர்கள் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் பெருமளவு வெளிப்படுவது
(ஊடகங்களில்) அரசியல்தான் என்று தோன்றுகிறது.
காய்தல்,உவத்தல் இலாத நோக்கில் இதை எவரும் அணுகி இருக்கிறார்களா?
எனக்குத் தோன்றும் வரை இப் பிரச்சனையை பின்வரும் கோணங்களில் அணுகலாம்.
1.பொருளாதாரக் காரணங்கள்.
2.பாதுகாப்புக் காரணங்கள்.
3.சுற்றுச்சூழல் மற்றும் அரசியல்
4.கலாச்சாரம் மற்றும் உணர்வு பூர்வமானவை.

பொருளாதாரக் காரணங்களை பொறுத்தவரை-
பலன்கள்(Merits)
-கிழக்கில் இருந்து மேற்கிற்கும்,எதிர்நோக்கிலும்(vice versa) சுமாராக 340 கடல் மைல்கள் தொலைவு குறைகிறது.
-தூத்துக்குடி துறைமுகம் கடல் போக்குவரத்துப் பொருளாதாரத்தில் வளர வாய்ப்புகள் உள்ளன.
-மற்ற சிறிய தென்னக துறைமுகங்கள் வளரலாம்,தூத்துக்குடி வளர்ச்சி அடைந்து சமாளிக்க முடியாமல் போகும்போது!(Full capacity utilization)
அபலன்கள்(Demerits)
- இது எல்லாக் கலங்களும் உபயோகப் படுத்த ஏதுவான வழி அல்ல,ஏனெனில் ஓரளவிற்கு மேற்பட்ட பெரிய கலங்கள் இந்த வழியை உபயோகப் படுத்த முடியாது.
பாதுகாப்புக் காரணங்கள்-
உண்மையில் இத்திட்டம் 1999 ல் மறுபடியும் செயலாக்க நோக்கில்(feasibility) பார்க்கப்பட்டது பாதுகாப்புத் துறையின் மூலம்தான்.பல எதிரியல் அண்டை நாடுகளின் கருத்தைக் கவரக் கூடாது என்பதால் கப்பல் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப் பட்டதாக கருத்து நிலவுகிறது.ஆயினும் சீர்தூக்கிப் பார்த்தபின் பாதுகாப்புத் துறை அனுகூலங்கள் மெச்சத்தகுந்த அளவில் இல்லாததால்தான் கிடப்பில் போடப்பட்டது எனபதும் இன்னொரு கருத்து.
பலன்கள்
-இந்திய நீர்மூழ்கிக் கலங்கள் யுத்த காலங்களில் மறைந்து,புறப்பட்டுத் தாக்க சரியான இடம்.
-இந்திய போர்க்கலங்கள்(மிகப் பெரிதான விமானந்தாங்கிகளாக இல்லாதபட்சத்தில்) எளிதாக தீபகற்பத்தின் முனைகளுக்குப் பயணப்படலாம்.
அபலன்கள்
மேற்சொன்ன காரணங்களாலேயே ஏவுகணை மற்றும் அழிவுக் கணைகளில் தாக்குதலுக்கு குமரியும் தமிழ்நாடும் இலக்காகலாம்,அதுவும் எதிரி நாடு இலக்கு தேடித் தாக்கும் ஆயுதங்கள்(Target Guided Missiles) வைத்திருக்காத போது இலக்கை மீறும் தாக்குதல்களால் ஆபத்து அதிகம்.
சுற்றுச்சூழல்
பலன்கள்
-ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
அபலன்கள்
-சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்,ஏனெனில் இப்பகுதியின் கால்வாய்ப் பகுதி சுமார் 20 மீட்டர் அளவுக்கு மேல் ஆழப்படுத்தப் படும்.
-மீனவர்களில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும்

அரசியல்
பலன்கள்(அ.வாதிகளுக்கு)
-தென்னிந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய திட்டங்களில் இது ஒன்று.நல்ல காசு பார்க்கலாம்.
அபலன்கள்
-ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
கலாசாரம்/உணர்வு சார்ந்தவை.
பலன்கள்
-ஏதும் இல்லை
அபலன்கள்
-17 லட்சம் ஆயுள் கொண்ட(தாக நம்பப் படுகிற) ஒரு சின்னம் அழிக்கப்படும்.
-ஒரு பெரும்பான்மை மக்களின் மத உணர்வு சீண்டப்படும் அல்லது கிடப்பில் போடப்படும்.

ஆயினும் தமிழக முதல்வரோ,அவர் சார்ந்த கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரோ பொருளாதாரக் காரணங்களைக் கூட பட்டியலிடவில்லை.வாலாசகமான வேறுவகை விவாதங்களும் சீண்டல்களுமே அவர்களால் முன்வைக்கப் பட்டன.
முதல் கருத்தாக இராமனை இழுப்பதற்குப் பதிலாக ஏன் அரசு பொருளாதார,இதர பலன்களை/அபலன்களை நீதிமன்றங்களில் பட்டியலிடக் கூடாது?

கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

தொடர் நிகழ்வு 1 :
உடுப்பி மடாதிபதி தமிழக முதல்வருக்கு பகிரங்க விவாத அழைப்பு விடுத்திருக்கிறார்; மு.க அவர்கள் எப்போதும் போல வீசிய கயிற்றின் மறுமுணை இம்முறை பிடிக்கப்பட்டிருக்கிறது...என்ன நடக்கிறது பார்க்கலாம்.சுவாரசியமான காட்சிகள் காத்திருக்கின்றன !
தொடர் நிகழ்வு 2 :
லாலூ,கௌடா'வுடன்,விஜயகாந்தும் கோதாவில் குதித்து இது பற்றிப் பேசியிருக்கிறார்.

Monday, September 17, 2007

நீண்டுவிட்ட ஒரு இரவில்....


கிராமத்தின்
பள்ளி முடித்து
மேலும் படிக்க விரும்புகையில்
அழுத்தும் தோள்சுமையில்
புருவம் உயர்த்தாது
புத்தனாய் ஒரு புன்னகை!
தந்தை என்றொரு நண்பன்;
உறுதி உணர்வில்,
கருணை விழியினில் குருதி படர்ந்திட,
பாதாதிகேசமாய் வருடி
பதறி மருகும் பார்வையில் தாய்;
வாய் புதைத்து
வக்கரித்த உறவு முறை;
சாதிக்க சினந்து
வீறுகொண்டு வெளிக் கிளம்பிய
வாலிபச் சீற்றம்;
கல்வி,மேலும் கல்வி,பின் கடமை
எனப் பற்பல ஊர்கள்,நாடுகள்;
பற்பல முகங்கள்,மனிதர்கள்,
பஸ்களில்,பிளேன்களில்;
பற்பல நிறங்களில்
பார்த்துவிட்ட பணவகைகள்;

குறிஞ்சி மலர் பூத்துதிர்ந்து
மீண்டும் மொட்டவிழ
கடந்துவிட்ட காலம்;
உலகின் ஏதோ ஒரு நாடு,
அடைத்திருக்கும் கதவு,வெளி
தனிமையின் தெளிவில்
அறைந்து சீறும் காற்றும் பனியும்;
தொகுப்பு வீட்டின் வெளியில்
பனி படர்ந்த ஏரியின் விசாலம்;
வெளிக்கிளம்பி உள்ளமிழும் வாத்துகள்
தாய்மகனும்,தம்பியும்,தங்கையுமாய்...
தவழ்ந்து விடும் குழந்தையாகி
தாய்மடியில் முகம்புதைக்க
விழைந்து விடும் மனம்...
கண்ணழுத்தும் தூக்கமதில்
புகைபடரும் நினைவு...
விடிகாலை விமானம்,வேலைக்கு செல்ல...
வாழ்க்கை !






(குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்ட என் கவிதை)



Friday, September 14, 2007

அறிவாலயத்தின் மறுபக்கம் !


1972-73ல் சென்னையில் காஷ்மீரைச் சேர்ந்த தார் என்கிற ஜாதி அடையாளம் தெரிகிற ஒரு பிராமண முகமதியர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் பிராமணராயிருந்தவர்கள் என்று பெருமையுடன் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அவர் ஒரு டாக்டர். குவைத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவியும் டாக்டர்தான். மலையாளி. ஆனால் தங்கள் தொழிலுக்குச் சம்பந்தமில்லாமல் போல்ட்டும் நட்டும் உற்பத்தி செய்யும் சிறு தொழிலை அவர்கள் சென்னையில் தம் உறவினர் பொறுப்பில் நடத்தி வந்தனர்.
அவர்களது சிறுதொழில் கூடத்தையொட்டி வேறு சிலரும் பல்வேறு சிறு தொழில்களை
நடத்தி வந்தனர். இன்று தி முகழகத்தின் தலைமை நிலையமாக இருந்துவரும் அண்ணா அறிவாலயம் உள்ள இடத்தில்தான் அந்தச் சிறு தொழில் கூடங்கள் இருந்து வந்தன!
தி மு கழகம் அந்த இடத்தை வாங்கியதும் அங்கிருந்த சிறு தொழில் முனைவோருக்குப் போதிய அவகாசம் கொடுக்காமல், ஒரு நாள் இரவோடு இரவாக புல்டோசரைக் கொண்டு வந்து எல்லாச் சிறுதொழில் கூடங்களையும் தரை மட்டமாக்கி இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. சிறு தொழில் கூடங்களில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எல்லாம் குப்பை கூளங்களைப் போல வாரி எறியப் பட்டன!
ஆளும் கட்சியான தி மு க வின் அத்து மீறிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் முனைவோர் செய்வதறியாது திகைத்தனர். அந்தச் சமயத்தில் நான் அண்ணா தி மு க வினருடன் நெருக்கமாக இருந்தபோதிலும் முதலமைச்சர் கருணாநிதிக்கே ஆலோசனை கூறும் மதியூகியாக இருந்துவந்த முரசொலி மாறனுடனும் எனக்கு நட்பு இருந்து வந்ததை அந்த காஷ்மீரி டாக்டரும் அவர் மனைவியும் யார் மூலமாகவோ கேட்டறிந்து ஒரு பொது நண்பர் மூலமாக என்னை அணுகி நடந்த அட்டூழியத்தைத் தெரிவித்து பரிகாரம் தேட உதவுமாறு கேட்டார்கள்.
நீஙக்ள் என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது லட்சக் கனக்கான ரூபாய் நஷ்டமாகிவிட்டது; எதேனும் இழப்பீட்டுத் தொகை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்கள்.
நடந்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான போக்கிரித்தனம். நீங்கள் ஏன் இதனை எதிர்த்துப் போராடக் கூடாது என்று கேட்டேன். மற்ற சிறுதொழில் முனைவோரையும் சேர்த்துக்கொண்டு ஒரு குழுவாகச் செயல்பட முன் வந்தால் இதனை ஓர் அரசியல் பிரச்சினையாக்கிப் பெரிய கிளர்ச்சியாகவே நடத்தலாம் என்று சொன்னேன். அவர்கள் போராடும் வர்க்கமல்ல. அதிலும் அடாவடிச் செயல்களுக்குத் தயங்காத தி மு க என்கிற ஆளுங் கட்சியுடன் பொருதும் துணிவு அவர்களுக்கு இல்லை. சுமுகமாகப் பேசி அனுதாபத்தைப் பெற்று இழப்பீடாகச் சிறிது தொகையை வாங்கிக் கொண்டு நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளவே விரும்பினார்கள்.
முன்னறிவிப்பின்றிஇரவோடு இரவாக புல்டோசரை வைத்துச் சிறு தொழில் கூடங்களையெல்லாம் தி மு கவினர் தரைமட்டமாக்கிய சட்ட விரோதச் செயல்பற்றி அப்போது சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராக இருந்த ஷெனாயிடம் தொலைபேசி மூலமாகப் புகார் செய்தேன். விசாரித்துச் சொல்வதாக என்னிடம் கூறியவர் பத்து நிமிடங்கள் கழித்து அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சொல்லிவிட்டார்!
ஷெனாய் ஒரு நேற்மையான அதிகாரிதான். ஆனால் ஆளுங் கட்சியான தி மு கவால் முடக்கிப் போடப்பட்ட பல அதிகாரிகளுள் அவரும் ஒருவர். அவரால் எவ்வித ஒத்துழைப்பும் கிடைக்காது என்பது உறுதியானதும் முரசொலி மாறனிடமே பேசி அவர்களுக்கு இழப்பீடு ஏதாவது கிடைக்க முடிவு செய்தேன்.
1958-59 ல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி மவுண்ட் ரோடில் முல்லை சத்தியின் முல்லை அச்சகத்திற்குத் தினசரி மாலை வந்து அரட்டை அடிப்பார், முரசொலி மாறன். அந்த அரட்டையில் நானும் பங்கு கொள்வதுண்டு. அதன் மூலமாகவே அவர் எனக்குப் பழக்கமாகியிருந்தார். ஆனால் நான் மட்டும் போனால் போதாது என்று துணைக்கு முல்லை சத்தியையும் அழைத்
தேன்.
கருணாநிதியுடன் தனக்குச் சில மனக் கசப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் மாறனைச் சந்திக்க வருவது சரியாக இருக்காது என்றும் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி ஏதாவது செய்யுமாறு வேண்டுவதாகவும் முல்லைசத்தி கூறிவிடவே மாறனிடம் அவர்களை நான் மட்டுமாக அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.
அந்தச் சமயத்தில் நான் எம் ஜி ஆரோடு நெருக்கமாக இருந்ததால் அவருக்குத் தெரியாமல் மாறனைச் சந்திக்கச் செல்வது என் மீது தவறான அனுமானங்கள் தோன்ற இடமளித்துவிடும் என்பதால் அவரிடம் தகவல் தெரிவித்தேன். அட, இதைப் பெரிது படுத்தி தி முக வுக்கு ச் சங்கடத்தைக் கொடுக்கலாமே என்று எம் ஜி ஆர் ஆர்வமாகக் கேட்டார். ஆளுங் கட்சியை எதிர்த்துக்கொள்ள சிறுதொழில் முனைவோர் துணிய வில்லை என்று விளக்கினேன். நஷ்டப்பட்டுக் கிடக்கும் சிறுதொழில் முனைவோருக்கு தி மு க தலைமக் கழகத்திடமிருந்து ஏதாவது இழப்பீடு கிடைத்தால் நல்லதுதானே என்று நான் சொல்லவும் சரி போகட்டும் முயற்சி செய்து பாருங்கள் என்று எம் ஜி ஆர் விஷயத்தை அதோடு விட்டு விட்டார்.
காஷ்மீரி டாக்டரையும் அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு முரசொலி மாறனைச் சந்தித்தேன். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தலைமைக் கழகத்தை இதில் சம்பந்தப் படுத்த முடியாது; வேறு ஏதாவது வழியில் இழப்பீடு கிடைக்க முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். ஆனால் பலமுறை அவர்களை இழுத்தடித்துவிட்டுக் கடைசியில் கையை விரித்துவிட்டார்!
மேற்கண்ட செய்தி மலர்மன்னன் என்ற தன்னிச்சைப் பத்திரிக்கையாளரின்-Freelance Reporter-குறிப்புகளில் இருந்து படிக்கக் கிடைத்தது.
இதன் மூலம் நம்மை ஆள்வோர்களின் விழுமியங்களை நாம் ஓரளவு அறிய முடியலாம்.

Saturday, September 8, 2007

கவிஞனா,இல்லை கணக்கணா?








எனது மின்மடலில் ஒரு மின்மடல் வந்தது.


ஏதோ கொஞ்சம் சுவாரசியமாக இருப்பதாகத் தோன்றவே,இணைப்பில் போய்ப் பார்த்தேன்.


ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய ஒரு சுய மதிப்பீடு இருக்கும்.சரியான சுயமதிப்பீடு செய்து கொள்ளக்கூடிய திறன் படைத்த மனிதர்கள் பெரும்பாலும் வெற்றிகரமாக ஒரு நண்பராக இருக்க வாய்ப்பிருக்கிறது;அதோடு சமூகத்தில் தன் இருப்பையும்,தான் எந்த வளையத்தில் பொருந்துகிறோம் எனபதிலும் தெளிவாக இருக்க வாய்ப்பிருக்கிறது.


மேலும் நம்முடைய இயல்பான திறமைகள் எதில் என்பது தெரிந்தால் செய்யும் வேலையிலோ,தொழிலிலோ தனக்கேற்ற தேர்வை தெரிவு செய்ய ஏதுவானதாக இருக்கும்.


அதோடு அவ்வாறு வகைப்படுத்தும் காரணங்களும் ஒரு மதிப்புரையாக அனுப்பி வைக்கப்படுகிறது.


முயன்று பாருங்கள் நண்பர்களே...
(பி.கு:படங்கள் ச்சும்மா ஒரு பெப்ப்ப்ப்ப்ப் க்குதான்..) :-(

Tuesday, September 4, 2007

சரத்குமார விஜயகாந்தர்கள் 2

இதே தலைப்பில் நான் சென்றமுறை எழுதிய பதிவில் கடைசியில் எழும்பிய கேள்விக்கு,ஏன் நாமே ஆக்கபூர்வ சிந்தனைகளை முன்வைக்கக் கூடாது என்று தோன்றியதன் விளைவு இந்த இரண்டாம் பகுதி.

சமீப காலமாக இவர்கள் இருவரின் நடவடிக்கைகளையும்,அரசின் பதில் நடவடிக்கைகளையும் நோக்குபவர்களுக்கு,ஒன்று புலனாகலாம்.
ஆட்சியில் இருக்கும் திமுக அரசு,ஜெயலலிதா அம்மையாருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இவ்விரு நடிகர்-மாற்று-அரசியல் தலைவர்களுக்கு கொடுக்கிறது என்பது என் எண்ணம்.
விஜயகாந்த் சென்னையில் ஏற்பட்ட ‘குப்பைக்’ குழப்பத்தைப் பார்த்து பொங்கி எழுந்து,கெடு நாளுக்குள் குப்பைகள் அள்ளப்படாவிட்டால்,அவரே தொண்டர்கள் தலைமையில் இறங்கி குப்பைகளை அகற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டார்;அடுத்த நாளே,சென்னை மாநகர காவல்துறை,காவல் பணியை மிஞ்சும் செயல் வேகத்தில் பணி செய்து ‘குப்பைக்’ குழப்பத்தைப் (ஓரளவு)போக்கியது.
அதிமுக தலைமை,விஜயகாந்தை வழிமொழிந்து விட்ட அறிக்கை அரசியல் ஆட்டத்தில் யார் அவையத்து முந்தி இருக்கிறார்கள் என்பதைக் காட்டியது.
முன்னர் சரத்குமாரின் டாடா டைட்டானியம் ஆலை சம்பந்தமான அறிக்கை,மருத்துவரின் மணல் கொள்ளை படக்காட்சியை மங்கிப் போகச் செய்து,அரசின் அதிவேக நடவடிக்கையாக உயர்மட்டக் குழு உருவானதின் மூலம்,எது எரியும் பிரச்னை,எவர் முதலில் கவனிக்கப் பட வேண்டியவர் என்ற செய்திகளை சொல்லாமல் சொன்னது.
மேலும்,சரத்குமாரும்,விஜயகாந்தும் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையிலும்,நாளைய தமிழக அரசியலில்/ஆட்சியில் அவர்கள் பங்கும் இருக்கும் என அவர்கள் நம்புவதாலும்(நானும் கூட மெரும்பாலான அரசியல் பார்வையாளர்களைப் போலவே,இது நடக்க வாய்ப்புகள் இருக்கும் என்றே நம்புகிறேன்), மேலும் இவர்கள் இருவரும் அரசால் மிகவும் கவனிக்கப் படுகிறார்கள்,counter செய்யப் படுகிறார்கள் என்னும் நிலையிலும் (சோ இராமசாமி போன்றவர்கள் இதனை முழுமையாக மறுத்தாலும் !) இவர்கள் இருவரும் இந்த பதிவை படிக்கவேண்டும் என நான் விரும்பினேன்.
எனவே அவர்கள் இருவருக்கும் இந்த பதிவின் நகல்/இணைய முகவரி அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்,தமிழக அரசியலில் இவர்கள் இருவரும் ஓரளவு கவனிக்கப் படும் நிலையில்,இவர்கள் இருவருக்கும் ஒரு open letter ஆக இந்த கருத்துக்களை முன் வைக்கிறேன்.

முதலில் இவர்கள் இருவரின்,தனித்தனியான குறிக்கோள்கள் என்ன?இவர்கள் இருவரும் சினிமாவின் சீனியர் நடிகர்கள் வரிசைக்குப் போய் விட்டதாலும்,எஞ்சிய நாட்களுக்கு தங்கள் இருப்பு உணரப்படவும்,ஓரளவு ஒரு task ஆக மேற்கொள்ளவும் அரசியலைக் கருதினார்கள் என்றால்,நாம் சொல்ல ஏதுமில்லை;
ஆனால் இருவருக்கும் அரசியல் களத்தில் முழுஈடு பாட்டுடன் செயல்படும் விருப்பங்கள் இருப்பின்,தமிழக நலனுக்காக இவர்கள் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும்;ஆனால் இருவரும் ஒத்த கருத்துடன்,மாச்சரியங்கள் இல்லாமல் நடிகர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியது போல இணைய முன்வர வேண்டும். மேலும் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணியும் அமைக்கக் கூடாது.
அவ்வாறு நடந்தால் அது தமிழக அரசியலுக்கு ஒரு நல்ல திருப்பமாக இருக்கும்.
இருவரில் சரத்குமார்,தெளிவான திட்ட மேலான்மை முறைகளை கையாளுவது போலத் தோன்றுகிறது-அவரின் இணையப் பக்கம் ஓரளவிற்கு அவரின் அரசியல் சார்ந்த செயல்பாடுகளை/செய்திகளை முன்வைக்கிறது.ஆனால் விஜயகாந்த் வர வர சராசரி தமிழக அரசியல் வாதியின் பாதையில் போவது போலத் தோன்றுகிறது.எனவே இந்த குறிப்பு அவசியமாகிறது.முக்கியக் விஷயமாக இருவரும் இராமு வசந்தன்களையும்,சுதீஷ்களையும் அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவர்கள் விசுவாசம் மிக்கவர்களாக இருக்கலாம்.ஆனால் அரசு சார்ந்த அமைப்புகளுக்குத் தேவை தன்னலம் இல்லாத திறனாளர்கள் மட்டுமே.இதற்கு திறமையான,அப்பழுக்கற்ற,ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத ஓய்வு பெற்ற/பணியில் இருக்கும் ஐஏஎஸ் நண்பர்களை அமர்த்திக் கொள்ளலாம்.
அல்லது நாட்டுக்கு பணி செய்ய ஆர்வமாக இருக்கும் தன்னார்வ,சுயநலம் அற்ற பல்துறை வல்லுநர்களை உள்நாட்டிலோ,வெளிநாட்டிலோ தேடிக் கொணரலாம்.
(இந்த யோசனைகளை ஆக்கபூர்வமாக விவாதிக்கத் தயாரெனில்,என்னைப் போன்ற பலர் முன் நிற்பார்கள்)


அடுத்ததாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்த்தப்பட்டன என்று இவர்கள் இருவரும் அறிய வேண்டியது மிகவும் தேவையான ஒன்று.
அமெரிக்க பிரெசிடெண்டுகளில் ஜார்ஜ் வாஷ்ங்டன்,லிங்கன்,ரூஸ்வெல்ட்,ஹாரி ட்ருமன்,ஜான் எஃப் கென்னடி ஆகியோர் அவரவர் காலகட்டங்களில் என்னென்ன முறையில்,திட்டங்கள் தீட்டினார்கள்/அரசாங்கத்தை நடத்தினார்கள் என்பது எந்த ஒரு ஆட்சியாளரும்(அல்லது ஆட்சி செய்ய விரும்பும் நபர்கள்) அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
சிங்கப்பூரின் சீனியர் லீ’யும் இந்த பட்டியலில் தவிர்க்க முடியாதவர்.
குறைந்த பட்சம் இத்தலைவர்கள் பற்றிய புத்தகங்களையாவது இருவரும் படிக்கலாம்...ஏற்கனவே எல்லா வெளிநாடுகளுக்கும் இவர்கள் திரை படப்பிடிப்புக்காக சென்றிருப்பார்கள்,எனவே பல அந்நிய தேசங்கள் எவ்வாறு ஆளப்படுகின்றன என்ற மேம்போக்கான பார்வையாவது இவர்கள் இருவருக்கும் இருக்கும்.

இதற்கு மேல் தேவைப் படுவது ‘ஒரு மாறுபட்ட தமிழகத்தை உருவாக்குவோம்’ என்று மனதின் அடி ஆழத்தில் இருக்க வேண்டிய விழைவு !

பி.கு:முழுதும் படிக்கும் பலரும் இதை ஒரு முழுப் பிதற்றலாக எண்ணலாம்;ஆயினும் நல்ல மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கக் கூடிய எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விட்டுவிடக் கூடாது என்ற எண்ணமே இந்தப் பதிவின்/அனுப்பதலின் நோக்கம்.

சரத்குமாரின் இணைய மின்மடல் முகவரி: rsk@rskworld.com
விஜயகாந்த் இணைய மின்மடல் முகவரி,தேடிப்பார்த்தேன்,கிடைக்கவில்லை...எவருக்காவது தெரிந்தால் இந்த பதிவை ஒரு சுட்டியாக இடுங்கள்...........

கிருஷ்ண ஜெயந்தி-கண்ணன் என்னும் அழகியல் தத்துவம்


கண்ணன் என்னும் தத்துவம் அதன் அழகியலுக்கும்,குழந்தை விளையாட்டுக்கும்,அன்புக்கும் எங்கும் புகழ் பெற்றது.
அது கடவுள் கொள்கைக்குள்ளும்,அதை மீண்ட ஒன்றாகவும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
கண்ணன் என்னும் குழந்தையை அனைவரும் சீராட்டும் இந்த நேரத்தில் இங்கு என் குறை வார்த்தைகளை நிரப்புவதை விட ஒரு அற்புதக் கவிஞனின் அழகிய கவிதையுடன் க்ருஷ்ண ஜெயந்தி'யை நிறைவு செய்கிறேன்.
***********************************************************
சின்னஞ்சிறு கிளியே-கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே;
என்னைக் கலி தீர்த்தே-உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !
பிள்ளைக் கணியமுதே-கண்ணம்மா
பேசும் பொற் சித்திரமே;
அள்ளி அணைத்திடவே,என் முன்னே
ஆடி வருந் தேனே !
சொல்லு மழலையிலே-கண்ணம்மா
என் துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கம் தவிர்த்திடுவாய் !
இன்பக் கதைகள் எல்லாம்
உன்னைபோல் ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே-உனை நேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ ???
***********************************************************************
பி.கு: மேலே ஒரிஜினல் படமும், என்னுடைய 'கைங்கர்யமும்'

Monday, September 3, 2007

எவை இனிது-சிந்திக்க சிறிது இலக்கியம்

நாமெல்லாம் சிறுவயதில் பள்ளியில் முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு படிக்கும் போது நன்னெறி,நல்வழி,இன்னாநாற்பது,இனியவை நாற்பது போன்ற சிறு வெண்பா நூல்கள் பாடப்பகுதியில் இருக்கும்.
இப்போதைய சிறார்களுக்கு(பல பெரியவர்களுக்கும் கூட) இது போன்ற பாடல்களின் பரிச்சயம் இல்லாதே போயிற்று.
இவை வழக்கொழிந்து போவது நமது குழந்தைகளுக்கும்,எதிர் கால தலைமுறைக்கும் நேரக்கூடிய பெரும் விபத்து என்றே நான் நினைக்கிறேன்.
அதனால் அவ்வப்போது இந்த பாடல்களை,எனக்குத் தெரிந்த கருத்துரையுடன் கொடுக்காலாம் என உத்தேசித்திருக்கிறேன்.
பசி இருப்பவர்கள் புசிக்கலாம்.
******************************************************************
வாழ்க்கையிலே குழந்தைப்பேறு’ங்கறது முக்கியமான் ஒன்னு.பெரும்பாலான்வர்களுக்கு குழந்தைகள் இருக்கும்;அவங்க நல்லாவும் படிச்சு,கிடிச்சு ஆளாவாங்க..ஆனா எத்தனை பேருக்கு பெத்தவங்க சொல்றதைக் கேட்டு அவங்க ஆசையையும் கொஞ்சம் கணக்குல வச்சுக்குவம்னு நினைக்கிற பிள்ளைங்க அமையுறாங்க?கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தானே?
இன்னுஞ்சில பேரு இருப்பான்..பெத்தவங்க கஷ்டப்பட்டும் பிள்ளைங்களை படிக்க அனுப்புவாங்க..ஆனா பசங்க எங்கையாயானும் ஊரை சுத்திபுட்டு கரெக்டா பள்ளிக்கூடம் விட்ற நேரத்துக்கு வீட்டுக்கு போயி நிப்பாங்க...இந்த நிலமையில செய்யுற தொழிலுக்குத் தேவையான கருவி இருக்காது;உழுகப் போறவன் கலப்பை இல்லாம வயலுக்குப் போனாப்பலதான்..என்ன பிரயோஜனம் இருக்கும்கிறீங்க..வரப்புல உக்காந்து வானத்தைப் பாக்க வேண்டியதுதான்...சரி அக்கம் பக்கம் இருக்குறவங்க கிட்ட உதவி,ஒத்தாசை கேக்காலாமேன்னு நமக்கு யோசனை சொல்லத் தோணும்...ஆனா மனுசப்பய குடியிருக்குற ஊருல ஒரு பயலோடவும் இவன் சேக்காளிய இருக்குறதில்லை..கேட்டா நான் உண்டு;என் வேலை உண்டுன்னு இருக்கேன்’னு கித்தாப்பா பதில் வேற சொல்லுவான்.
வாழ்க்கை என்னமோ ஓடும்...ஆனால் மனுசப்பய சந்தோசமா இருப்பானா?

பூதஞ்சேந்தனார்’னு ஒரு ஆளு.நம்ம தோழர் தான்.அக்காலப் புலவர்ல ஒருத்தர்.
இனியவை நாற்பது அப்படின்னு ஒரு 40 பாட்டை எடுத்து விட்டிருக்கார்.
அதுல இதுவும் ஒன்று.

ஏவது மாறா இளங்கிளைமை முன் இனிதே
நாளும் நவை போகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினுது ஆங்கினிதே
தேரின் கோள் நட்பு திசைக்கு
.

ஏவது மாறா-ஏவுகின்ற அலுவலை,வேண்டுகோளை மறுக்காது இருக்கின்ற/செய்கின்ற, இளங்கிளைமை-மக்களை,குழந்தைகளை கொண்டிருப்பது முன் இனிதே-முற்பட,மிகவும் இனியது,நல்லது,
நாளும் கற்றல்- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திலும் கற்பது-கல்வியோ,அனுபவமோ எதுவாயினும்,நவை போகான் – குற்றங்களின் வழி செல்லாது ( சீர்பட,கேடு இல்லாத கல்வி),ஏருடையான் வேளாண்மை- ஏர்(கலப்பையும் உழும் சாதனங்களும்) உடையவனின் விவசாயம்,தேரின் – தெளிந்து சிந்தித்தால்,திசைக்கு- செல்லும் வழிக்கு,போகின்ற ஊருக்கு, கோள்நட்பு- தேடிக் கொள்கின்ற நட்பு
.

இனியவைகளைத் தெரிந்து,தெறிவோம்.

Saturday, September 1, 2007

மலர்களே,மலர்களே.....மலருங்கள் !

ஆயிரம் மலர்களே,மலருங்கள் ! அமுத கீதம் பாடுங்கள் !!







Purple Lotus' at KL Orchid Garden

And a Rose is a Rose is a Rose !

























சரத்குமார விஜயகாந்தர்கள்

ஒரு வழியாக சரத்குமாரும் கட்சி துவக்கி விட்டார்.
தமிழ்நாட்டில் அரங்கேறும் புதிய காட்சிகள் விரிவது திருப்பங்கள் நிறைந்த ஒரு திரைப்படம் போன்றே இந்நாட்களில் தோன்றுகிறது.
ஆயினும் 60 களில் இருந்து திரைத்துறையைச் சார்ந்தவர்கள் அரசியலில் கை வைத்துப் பார்ப்பது எந்த மனோபாவத்தில் என்பது ஒரு விவாதத்திற்குரிய கேள்வி.
சிறிது யோசித்துப் பார்த்தால் எனக்குப் பின்வரும் காரணங்கள் தோன்றுகின்றன.
1.தமிழ்த்திரையுலகில் திகட்டும் அளவுக்குக் திரை நட்சந்திரக்களுக்குக் கிடைக்கும் தனி மனிதத்துதி.இது அவர்களுக்கு,கடவுளுக்கு அடுத்தபடி நாம் என்ன நினைத்தாலும் நடத்திவிடலாம் என்ற துணிவைத் தருகிறது.
2.இந்த துதிபாடுதலால் கிடைக்கும் விளம்பர வெளிச்சமும்,பொது மக்களின் அருகாமையும்.
3.இந்த அருகாமை அளிக்கக் கூடிய கருத்தேற்புத் திறன்-receptiveness-அவர்கள் சொல்வது பெரும்பான்மையான மக்களுக்கு எளிதில் ஊடகங்களால் கடத்தப்படுகிறது.இந்த திரை வெளிச்ச மாயைப் புகழ் இதனை வெகுவாக எளிதாக்குகிறது.ஒரு அரசியல் பார்வையாளரோ,வேறு துறைகள் சார்ந்த வல்லுனர்களோ தத்தம் அரசியல்,தேசியம்,சமூகம் சார்ந்த கொள்கைகளை இவ்வளவு எளிதாக மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக கொண்டுசெல்ல முடியாது.(60 களில் திராவிட இயக்கப் பேச்சாளர்கள் இந்த receptiveness’ஐ அடைய வேறு ஒரு உத்தியை மிக வெற்றிகரமாக கையாண்டார்கள்.அது பெரும்பான்மையான மக்களின் வழக்கமாக சமூகத்தில் இருக்கும் ஒரு தத்துவத்தை கடுமையாக மறுதளிப்பது.இது மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வைக்கும் ஒரு மனோதத்துவ உத்தி)
இந்த அனுகூலங்கள் கிடைக்கும் போது திரை நட்சத்திரங்கள் அடுத்ததாக அரசியலையும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று இயல்பாக நினைக்கிறார்கள்.
இது(திரை நடிகர்கள் அரசியலில் ‘கை வைத்துப்’ பார்ப்பது) தவறு என்று கூறுவது என் நோக்கமல்ல.இன்னும் சொல்லப் போனால் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் போன்றோரின் வரவு ஒரு வகையில் நல்லதே.ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்த வரை இரு திராவிடக் கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகவே(அல்லது ஒரு குட்டையின்..) இருக்கின்றன.மற்ற அனைத்துக் குட்டிக் கட்சிகளும் ஜாதிக் காரணங்களை முன்னெடுத்துச் சென்றே அரசியல் முகமூடிகளை மாட்டிக் கொண்டன.இவை பெரும்பான்மையான மக்களால் இன்னும் வரவேற்கப்படாமல் இருக்கவேண்டியது தமிழகத்தின் நலன் சார்ந்த வகையில் முக்கியமான ஒன்றாகும்.
ஒரு அரசியல் கட்சி துவக்கப்படும் போது அதன் தேவையைப் பற்றிய கேள்விகள் எழவேண்டியது ஒரு நல்ல நிலையில் இருக்கும் சமூகத்தின் கூறுகளில் ஒன்று.அதற்கு அந்த அரசியல் கட்சியைத் துவக்குபவர்கள் ஒரு தெளிவான declaration கொடுப்பார்கள்.அது போன்ற declaration எதுவும் சரத்குமார் கொடுத்ததாக ஊடகங்கள் சொல்லவில்லை.விஜயகாந்த் கட்சி துவக்கிய போதாவது கட்சியின் நோக்கமாக பெரிதாக எதுவும் சொல்லவில்லை,ஊழலற்ற ஒரு நிர்வாகத்தைத் தர விரும்புவதாக சொன்னதைத் தவிர.
உண்மையில் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம் அதுதான்.தமிழகத்திற்கு தற்போது தேவையாக இருப்பது தெளிந்த,தொலைநோக்கு கொண்ட,ஒளிவு மறைவற்ற,ஊழல் இல்லாத ஒரு நிர்வாகம் மட்டுமே.
தமிழகத்தில் எந்த ஒரு கட்சி அரசியல் மூலமும் கிடைக்க வேண்டிய தேவையும் அதுதான்,ஏனெனில் 30,40 வருடங்களாக எந்த அரசியல் கட்சியும் அதைத் தரவில்லை.
மேலும் தமிழகமோ,இந்தியாவோ ஒரு பெரும் அழிவின் பிடியில் இருந்து மீண்ட சூழ்நிலையிலோ(ஒரு ஜப்பானைப் போல),நீண்டகால அடிமை ஆட்சியில் இருந்து விடுபட்ட நிலையோ(20’ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களின் இந்தியா,ஸ்ரீலங்கா,மலாயா,சிங்கப்பூர் போன்றோ),வேறு எந்தவிதமான வித்தியாசமான சூழலிலோ(அமெரிக்கா குடியரசு உருவானதைப் போலவோ,ஐரோப்பிய யூனியன் உருவானதைப் போலவோ) ஒரு சூழ்நிலையில் இல்லை.
50 களில் மலேயா,சிங்கப்பூர் நாடுகள் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட போது மலேயாவின் தேவை ,மலாய் இனத்தவர்களுக்கு ஏதுவான,கம்யூனிசம் இல்லாத ஒரு அரசு;அதுவே முன்வைக்கப் பட்டது.ஆனால் இன்று அது மலாய் இனவாத அரசாக மாறிவிடும் ஒரு விளிம்பு நிலையில் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.
சிங்கப்பூர் ஒரு சமத்துவமான,கம்யூனிசம் இல்லாத(independent,democratic,non-communist,socialist state) நாடாக விளங்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டு அது வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.
இந்தியாவும் இதுபோன்ற ஒரு நிலையையே(independent,democratic,socialist state) சுதந்திரம் அடைந்தபோது எடுத்தது,ஆனாலும் எவ்வளவு வெற்றி பெற்றோம் என்பது ஆய்வுக்குரிய ஒன்று.
எனவே ஒரு புதிய திசையில் பயணப்பட வேண்டிய கருத்தாக்கங்களோ,ஒரு தேச நிர்மாணத்திற்கு தேவையான கட்டமைப்பு வழிகாட்டுதலோ இப்பொதைய தேவை அல்ல.
தேவை ஒரு தெளிந்த,தொலைநோக்கு கொண்ட,ஒளிவு மறைவற்ற,ஊழல் இல்லாத ஒரு நிர்வாகம் மட்டுமே.
இதை சரத்குமார,விஜயகாந்தர்கள் கொடுப்பார்களா என்பதே கேள்வி.

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...