குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, December 25, 2008

87.பச்சை(சிறு) மா மலை போல் மேனி-ப்ரகோலி

கார் வண்ணக் கண்ணனைப் பற்றிய பதிவு அல்ல இது.செவிக்கும் சிந்தைக்கும் உணவாகும் மாலவனைப் பற்றிய சிந்தையும் செய்திகளும் அல்ல !ஆனால் இது வயிற்றுக்கு உணவாகும் பண்டம் பற்றிய ஒரு பதிவு.(சும்மா ஒரு மாறுதலுக்கு !)

ப்ரகோலி என்ற ஒரு காய்-தவறு,காய் அல்ல பூ,இருக்கிறது.இந்தியாவில் பரவலாகத் தெனபடும் ஒரு பூ அல்ல இது.ஆனால் தற்போது ரிலையன்ஸ் ஃபரஷ் போன்ற கடைகளில் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்...


ப்ரகோலி-பார்க்க இப்படித்தான் இருக்கும்...

வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர் இதைப் பார்த்திருக்கலாம்,ஆனால் எத்தனை பேர் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குரிய ஒன்று.

நானே சிங்கைக்கு வந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் இதை சுவைக்கத் தொடங்கினேன்.

இந்தக் பூ,பொரியலுக்கான காயாகப் பயன்படுத்த சிறந்த ஒன்று.

பார்ப்பதற்கு அடர் பச்சை நிறக் காலி ஃபளவர் போல் தோற்றமளிக்கும் இது,ஃபோலிக் அமிலம் மிக அதிகம் கொண்டள்ள மிகச் சில காய் வகைகளில் இதுவும் ஒன்று.ஆகையால் கருவுற்ற பெண்களுக்கு இந்தக் காய் அதிகம் பரிந்துரைக்கப் படும்.

இதைப் பயன்படுத்தி பல ரெசிபிகளை நான் முயற்சித்திருக்கிறேன்.சுவையான,எளிதான ஒன்று இங்கே..

ப்ரகோலி பொரியல்

தேவையான பொருள்கள்:

ப்ரகோலி(அஃப் கோர்ஸ்,அதில்தான் கறியே செய்கிறோம்!)-இரண்டு பூக்கள்,பெரிதெனில் ஒன்று
கடுகு,உ.பருப்பு-தாளிக்க
எண்ணெய்
மசாலாத் தூள் அல்லது சாம்பார்ப் பொடி
சிறிது மிளகுத் தூள்

செய்முறை:ப்ரகோலிப் பூவை சிறிது சிறிதாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்,காலி ஃபளவரை பகுப்பது போல் செய்தால் போதும்.பூ நல்லதாக இல்லையெனில் நிறையப் புழுக்கள் இருக்கும்,வெள்ளை நிறத்தில்,எனவே கவனம்.பரவாயில்லை இருந்தால் அது நான்வெஜ் ஐடமாக இருக்கும் என்பவர்களுக்கு வேலை எளிது !

பகுத்தவற்றை ஒரு பீங்கான் அல்லது அவனில்-ovan-உபயோகிக்கத் தகுந்த ஒரு கிண்ணத்தில் வைத்து அவனில் சுமார் 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

பின்னர் வாணலியில்-வானொலி அல்ல-இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகு,உ.பருப்பு போட்டு வெடித்த பிறகு வேகவைத்த காயைப் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கிய பின் ஒரு தேக்கரண்டி சாம்பார்பொடி,சுமார் 15 மிளகைப் பொடித்த பொடி இரண்டையும் தூவி தொடர்ந்து வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.


அவ்வளவுதான் ! எளிதான சமையலில் சுவையான,சத்துக்கள் நிரம்பிய ப்ரகோலி பொரியல் தயார்!

சில முக்கிய குறிப்புகள்:1.ப்ரகோலி அதிக ஃபோலிக் அமிலம் மற்றும் சத்துக்கள் நிரம்பியதாக இருப்பினும் மேலிருக்கும் ஆயிரக் கணக்கான சிறு மொட்டுக்கள் போன்ற பகுதியில் அதிக வாயுவைத் தரக்கூடிய பொருள்களும் இருக்கும்;எனவே நுண்ணிய துண்டுகளாக்கப் பட்ட இஞ்சி அல்லது மிளகுத்தூள் கண்டிப்பாக இதனுடன் சேர்க்க வேண்டும்.
2.பூவை வாங்கும் போது அடர் பச்சை நிறத்திலும் எடை குறைவாக காற்றுப் போல இருப்பதையும் பார்த்து எடுக்கவும்;அவைதான் நல்ல பூக்கள் !

Wednesday, December 24, 2008

86.சூடான இடுகைகள்-எனது இரண்டு பைசாக்கள்

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் பற்றி பதிவர்களிடையே நடக்கும் அமளிதுமளிகள் அனைவரும் அறிந்ததே.இதில் நான் நல்லவன் அவன் கெட்டவன் மற்றும் நான் ரொம்ப நல்லவன் அவன் ரொம்பக் கெட்டவன் வகையான பதிவுகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சில பதிவர்கள் அதனால் என்ன,எங்களுக்கு ஒன்னும் ஃபீலிங்ஸ் இல்லை...த்ஸொ...த்ஸொ என்ற வகையிலும் சில பதிவுகள் எழுதினார்கள்.

ஒரு பொது விதியாக சூடான இடுகையில் இடம் பெற வேண்டுமெனில் சில குறிச்சொற்கள் இருந்தால் போதும் என்ற வகையில்தான் சில நாட்களாக நிலைமை இருந்தது.

இது சரி செய்யப் படவேண்டும் எனவும் உண்மையில் சிறந்த வகையில் எழுதப் படும் பதிவுகள் பலரின் பார்வைப் புலம் செல்ல வேண்டும் எனத் தமிழ்மணம் நினைக்கிறது என சில தகவல்களால் அறிகிறேன்.எனவே நடப்பவை நல்லதற்கே எனவும் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வாறு குறிப்பிட்ட குறிச்சொற்கள் போட்டு எழுதி சூடான இடுகைக்கு இடம் பிடிக்கும் உத்தி மறுதலிக்கப் படுவது வருத்தப் பட வேண்டிய ஒரு விதயம்.எனவே சூடான இடுகை எழுத வேறு விதமான வழிகள் சீக்கிரமாக் கண்டறியப்பட வேண்டும்.

இந்த நிலையில் எளிதாக சூடான இடுகைப் பகுதியில் உங்கள் பதிவுகள் செல்ல என்னாலான ஒரு நல்ல ஆலோசனை சொல்லி விலகுகிறேன்.

உங்கள் பதிவை ஒரு குறிப்பிட்ட முறையில் எழுதினால் அது உண்மையில் எந்த ஐயமுமின்றி சூடான இடுகையாக இருக்கும்.

எப்படி எழுத வேண்டும் என்று உண்மையில் அறிய விரும்புபவர்கள் மட்டும் பின்வரும் எழுதும் வழிமுறையை அறிந்து பயன்பெறுங்கள்..

கவனிக்கவும்!இது சூடான இடுகைகள் எழுத விரும்புவோர் மட்டும் பார்க்க வேண்டிய குறிப்பு,அனைவருக்கும் பொதுவானதல்ல !!!!

சூடான இடுகையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கான குறிப்பு....

Tuesday, December 2, 2008

85.மும்பை தாக்குதல்-பாக்'கின் விஷ(ம)ப் பிரச்சாரம் !

மும்பையில் நடந்த கோரத் தாக்குதல் பற்றய பல பதிவுகள் வந்த விட்டன.அது பற்றிய சில செய்திகளை என்னுடைய சென்ற பதிவில் சொன்னேன்.

இந்த தாக்குதலுக்குப் பின் ஒரு செய்தியாளர் ஒபாமாவிடம் வினவிய கேள்வி:

இந்தியா இந்தத்தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா இரட்டைக் கோபரத் தாக்குதலின் போது செயல்பட்டதைப் போல பாக்கின் மீது குண்டுவீச்சு நடத்தினால் அதை அமெரிக்கா எவ்விதம் எதிர்கொள்ளும் ?

ஒபாமாவின் பதில்:

ஒவ்வொரு நாடும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட உரிமையுள்ளது.


ஏற்கனவே அமெரிக்க ஊடகங்களில் இந்தியா பாக்’கின் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகங்கள் எழுதப் படுகின்றன.

இது போன்ற சூழலில் பாக் ஊடகங்கள் இவ்வித செய்திகளை எப்படி பாக் மக்களுக்குக் கொண்டு செல்கின்றன என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.

மாதிரிக்கு இந்த 4 யூ ட்யூப் ஒளிக் காட்சிகளைப் பாருங்கள்.

இவை பாக்'கின் முக்கிய டிவி சானலில் ஒளிபரப்பப் பட்டவை;பங்கு பெற்று பதில் சொல்பவர் பாக் ராணுவ ஆய்வாளர்-defence analyst.

பாகம் 1:





பாகம் 2 :




பாகம் 3 :




பாகம் 4 :





பாகம் 5 :




கல்வி அறிவற்ற பாக் மக்கள் பலர் இந்த ஊடகச் செய்திகளைப் பார்த்துவிட்டு மும்பை தாக்குதல் பற்றி எந்த விதமான முடிவுகளுக்க வருவார்கள் என்பது கவலைப்படவைப்பதுப் ஆய்வுக்குரிய ஒன்றுமாகும்.



ஏன் பாகிஸ்தான் இப்படி ஒரு நாடாக இருக்கிறது என்பதும் எப்படி மும்பைக்குத் தாக்க வந்த இளைஞர்கள் போன்ற இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப் படுகிறார்கள் என்பதும் விளங்கும்.



இது போன்ற பரப்புரைகளை செய்யும் பாக் மீடியாவை இந்தியா எவ்விதம் எதிர்கொள்ளப் போகிறது?

Monday, December 1, 2008

84,மும்பை பயங்கரவாதமும் அது பற்றிய சில செய்திகளும் எண்ணங்களும்



தீவிரவாதிகள் கடல்மார்க்கமாகத்தான் வந்தருக்கிறார்கள் என்பதும் கராச்சியிலிருந்துதான் வந்திருக்க முடியும் என்ற புலனாயவு உண்மையும் வெளிவந்திருக்கின்றன.

செப்டம்பர் இறுதியில் அமெரிக்க சிஐஏ நிறுவன இந்திய கிளை ரா’வுடன் ஒரு அவசர சந்தப்புக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் அந்த சந்திப்பில் லக்ஷர் இ தொய்பா மும்பையின் மீது ஒரு தாக்குதல் நடத்தலாம் என்ற ஊகம் இருப்பதாகவும் செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த தாக்குதல் கடலிலிருந்து நடக்கக் கூடும் என்ற ஊகமும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உளவுத் தகவல்கள் வேறுசில ஏஜென்ஸிகளில் இருந்தும் உறுதிப் படுத்தப் பட்டிருக்கின்றன.

செப்டம்பர் 24 வாக்கில் இந்திய உளவுத்துறை சில உறுதிப் படுத்த முடியாத தகவல்களைப் பெற்றிருக்கின்றன.அவை:

-ல இ தொ.கராச்சியில் மும்பையை கடல் மார்க்கமாகத் தாக்கும் வழிகளுக்கான பயிற்சிகளை சுமார் மூன்று மாதமாக அளித்துக் கொண்டிருக்கிறது.
-ல இ தொ.வின் செயல் நிர்வாகத் தலைவன் பங்களாதேஷ் நிர்வாகப் பிரிவிடம் பன்னாட்டு உபயோக சிம்கார்டுகளை தயார் செய்யப் பணித்திருக்கிறான்.
-இந்தப் பணி(!)க்கான பயிற்சி சாச்சா என்றழைக்கப் படும் ல இ தொ’வின் ஆஸ்தானப் பயிற்சியாளனிம் மேற்பார்வையில் நடந்திருக்கிறது.

()

இந்திய உளவுத்துறை கடலிலிருந்து தாக்குதல் வரலாம் என்ற நிலையில் அது தாஜ் ஒட்டலின் மீது இருக்கலாம் என்றும் எதிர்பார்த்ததாகச் சொல்லப் படுகிறது.நவம்பர் 18 அன்று கோஸ்ட் கார்ட் என்றழைக்கப்படும் கடலோரக்காவல் படைக்கு குறிப்பான தகவலாக கராச்சியிலிருந்து வர வாய்ப்பிருக்கக் கூடிய பாகிஸ்தான் கலங்களின் மீதான கண் வைக்கும்படி செய்தி அளிக்கப் பட்டிருக்கிறது.


ஆனால் புத்திசாலித்தனமாக செயல்பட்ட பயங்கரவாதிகள் ஆழ்கடலில் மீன்பிடிக்குச் சென்ற குபெர் என்ற படகைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்;அதில் இருந்த அறுவரில் ஐந்து பேரைக் தலையை வெட்டி கடலில் எறிந்த அவர்கள் அமர்சிங் சோலங்கி என்ற ஒருவனை மட்டும் மும்பைக்கு வழிகாட்டி அழைத்துச் செல்ல ஏதுவாக விட்டு வைத்திருக்கின்றனர்;மும்பை கடல் எல்லைக்குள் நுழைந்து கரையை நெருங்கும் சமயம் அவனுக்கும் பரலோகப் பிராப்தி அளித்துக் கடலில் வீசி விட்டனர்.

கரையோரக் காவல்படை சினிமா போலீஸ் மாதிரி பாக் படகுகளுக்காகக் காத்திருக்க திவிர வாதிகள் எப்போதோ இந்திய மீன்பிடி படகு மூலம் வந்து கரையேறி தாஜிலும் மற்ற இடங்களிலும் சென்று அளித்த பணியை துவக்கி விட்டனர் !


()

கடல் காவல் படையினர் அந்த மீன்பிடி படகில் இருந்து ஒரு ஜிபிஎஸ் சாதனத்தைக் கைப்பற்றி இருக்கின்றனர்.அதில் கராச்சியிலிருந்து மும்பைக்கும் பின்னர் மும்பையிலிருந்து கராச்சிக்கு செல்லவும் இரு கடல் வழிப் பாதைகள் நிறுவப் பட்டிருக்கின்றன(செட்).இது தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு திரும்பிச்சென்று விடும் நோக்கத்தில் இருந்திருக்கலாம் என்ற நோக்கில் புலனாய்வாளர்களை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கின்றது.

ஆனால் தீவிரவாதிகளுக்கு திரும்பி விடலாம் என்ற ஒரு பொய்யான நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகக் கூட இது செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பவும் இடம் இருக்கிறது.

அல்லது உண்மையிலேயே அவர்கள் தாக்கிவிட்டு திரும்பிவிடும் திட்டத்தில் இருந்திருந்தால் அதில் தாவூத்தின் பங்கு இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தையும் இது கிளப்பி இருப்பதாகத் தெரிகிறது.


()


கரையை நெருங்கிய தீவிரவாதிகள் இரண்டிரண்டு பேராக பிரிந்து ஜோராக வேலையை ஆரம்பித்ததை உளவுத்துறை பல்குத்திக்கொண்டு வேடிக்கை பார்த்ததை நாம் அறிவோம்!


()

தாக்குதல் ஆரம்பமான சில மணித்துளிகளேயே,அதாவது களத்தில் நுழைந்த 10 நிமிடங்களுக்குள்ளேயே தீவிரவாத எதிர்ப்புக்குழுத் தலைவரும் மற்றும் எண்கவுன்டர் திறனாளரும் கொல்லப் பட்டு விட்டதாகத் தெரிகிறது.

இது உண்மையில் எவ்வாறு நடந்தது என்பதில் தெளிவில்லை.அவ்வளவு தீவிரமான தாக்குதல் தளத்துக்குள் நுழைந்த அவர்கள் எப்படி அவ்வளவு அலட்சியமாக இருந்திருக்க முடியும் என்பது வியப்பான ஒரு விதயம்;அல்லது அவர்கள் குற்றவாளிகளை மிகவும் குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும்.

அவர்களின் உயிர்த்தியாகம் தவிர்த்திருக்கப் படக்கூடியது,அவர்கள் மேலும் சிறிது எச்சரிக்கையாக இருந்திருந்தால் !


அவர்கள் குறிவைத்துக் கொல்லப் பட்டிருப்பது,தீவிரவாதிகள் தெளிவான செயல் திட்டத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

()


நாரிமன் கட்டடத்தில் மீட்கப் பட்ட பிணையாளர்களின் உடல்கள் விவரிக்க இயலா சித்ரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

விவரங்களை சொல்ல மறுக்கும் அவர்கள் மும்பையின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்த அளவுக்கு சிதைத்துக் கொல்லப் பட்ட உடல்களை இப்போதுதான் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

()


தீவிரவாதிகள் எதிர்பார்க்காத ஒரு விதயம் உயிரோடு ஒருவன் மாட்டியிருப்பது.சிறிது புத்திசாலித்தனம் காட்டிய காவலர்களால் இது சாத்தியமானது.மேலும் விவரங்கள் வரும்போது பல முடிச்சுகள் அவிழலாம்.


இந்த சூழலில் பல 'தியரிகளை' அவிழ்த்து விடும் சில முஸ்லிம் நண்பர்களின் பதிவுகள் அவர்களின் உத்தேசங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன்.

()


சிதம்பரம் உள்துறைக்கு மாற்றப்பட்டிருப்பதும்,பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உயர் அதிகாரியை அனுப்புவதிலிருந்து பின்வாங்கியதும்,பாக் படைகள் எல்லையில் குவிக்கப் படலாம் என்பதும் மேலதிக செய்திகள்.


இந்த மயான சூழலில் அப்பாவி மும்பைக்கர்களும் மும்பைக்குச் அடிக்கடி செல்லும் தேவையிருப்பவர்களும்தான் தாங்க முடியாத உள்ளக் கொதிப்பில் இருக்கிறார்கள்.

ஒரு ட்வின் டவர் தாக்கப் பட்டவுடன் உலகம் முழுக்க சந்தேகப் பட்ட இடங்களில் எல்லாம் குண்டு மழை பொழிந்தார் அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு ஜோக்கர் பிரசிடெண்ட் என்று கருதப் படும் புஷ்;ஒரு பேருந்து நிலைய,ரயில் நிலையக் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தீவிரவாதிகளுக்கெல்லாம் ஆப்படித்து வைத்திருக்கிறது இங்கிலாந்து; 12 முறை மும்பையும் நாட்டின் பல பகுதிகளும் தாக்கப் பட்டபோதும் மமோசிங் மட்டும் தாடியைத் தடவிக் கொண்டு டிவியில் அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார்.

வெட்கத்தில் நாம் நாமே தூக்கு மாட்டிக் கொள்ளலாம் !


குண்டடி படாமலாவது சாவோம் !!!!



-அவுட்லுக் மற்றும் ரீடிஃப் தளங்களுக்கு நன்றியுடன்

Tuesday, November 25, 2008

83.மறந்த பெயரும் மறக்காத சாதியும்

அண்மையில் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் பற்றிய புன்னகை வரவழைக்கும் ஒரு நிகழ்ச்சி உண்டு.

அவர் செய்தி வாசிப்பில் முத்திரை பதித்தவர் என்பதும் இந்திய சுதந்திரச் செய்தியைத் தமிழில் சொன்னது அவருடைய குரல் என்பதும் பலருக்குத் தெரிந்த செய்தியே.

ஆனால் அவர் முதலில் செய்தி வாசிக்க ஆரம்பித்தது ஒரு எதேச்சையான நிகழ்ச்சியால் என்பதும் அதில் நடந்த குளறுபடியுகளும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன நடந்தது என்பதை அவரின் வார்த்தைகளிலேயே கேட்போம்:


ஆகாசவாணியின் தமிழ்ச் செய்தி அறை.
நேரம் - காலை ஏழு மணிக்கு மேல் எத்தனை
நிமிடமோ!
செய்தி அறிவிப்பு நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. தலைப்புச்
செய்திகள் மொழி பெயர்ப்பாகிக்கொண்டு இருந்தன. மற்ற செய்திகளையெல்லாம் உரிய
வரிசையில் அடுக்கியும் வைத்து விட்டோம். ஆனால், செய்தி அறிவிக்க வேண்டியவரைத்தான்
காணவில்லை. என்ன கோளாறோ? ஒருவேளை தூங்கிப்போய்விட்டாரோ, என்னவோ!
கடைசி நிமிடம்
வரை காத்திருந்து பார்ப்பது என்று ஒன்று உண்டே... அந்த அற்புத சித்தாந்தத்தின்படி,
நண்பருக்காகக் காத்திருந்தோம். ஆனால், கடைசி நிமிடம் வரை என்றால், எந்தக் கடைசி
நிமிடம் வரை? ஏழே காலுக்கு, 'ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...' என்று
ஆரம்பித்தாகவேண்டுமே! மணி ஏழு பத்தாகிவிட்டது. 'இனிமேல் காத்திருப்பதில் பலன்
இல்லை' என்ற கட்டாய முடிவுக்கு நாங்கள் அதிக தாமதமின்றி வந்துவிட்டோம் என்பது
மகிழ்ச்சியுடன் அறிவிக்கவேண்டிய செய்தி!
நாங்கள் என்றால், யார் யார்? நான்,
என்னைப் போலவே மொழி பெயர்க்கவும், ஒலிபரப்பவும் லைசென்ஸ் பெற்ற இன்னொரு நண்பர்,
மொழி பெயர்க்க மட்டுமே ஒப்பந்தமாகியிருந்த 'குரலற்ற' நண்பர் ஒருவர் - ஆக மூன்று
பேர்!
கடைசியில் நான்தான் செய்தி வாசிப்பது என்று தீர்மானமாகி விட்டது. இனி,
ஒரு கணம் கூட 'வேஸ்ட்' பண்ணமுடியாது. மேஜையில் அநாதையாய்க் கிடந்த செய்தி அறிக்கையை
அள்ளிக்கொண்டு ஸ்டூடியோவுக்கு ஓடினேன். அப்போது மணி ஏழு பதினாலு. நல்லவேளை, ஏழு
பதினைந்தைத் தாண்டிவிடவில்லை.
படிப்பதற்காக 'மைக்'கின் ஃபேடரைத் திறந்து படிக்க
ஆரம்பித்தேன்.
''ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...''
அட பாவி! செய்தி
படிப்பது யார் என்பது கடைசி வரையில் நிச்சயமாகாமல் இருந்ததால், தலைப்புச் செய்திகளை
எழுதிக் கொடுத்த 'அனுகூலச் சத்ரு', வாசிப்பவரின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில்
வெறும் புள்ளிகள் போட்டிருந்தார். நான் அந்தப் புள்ளிகளைப் பார்த்தவுடன் சரக்கென்று
பிரேக் போட்டேன். ''வாசிப்பது...'' என்று சொல்லியாகிவிட்டது; அடுத்தாற் போல் என்
பெயரைச் சொல்ல வேண்டியதுதானே? எதற்காக பிரேக்? ஆனால், பாழாய்ப்போன என் பெயர் ஞாபகம்
வந்து தொலைத்தால்தானே சொல்வதற்கு?
நம்பமுடியாதுதான்! சொந்தப் பெயர் எப்படி
மறக்கும்? ஆனால், மறந்துவிட்டதே! அதுவும் எப்படிப்பட்ட சமயத்தில்..!
நான் யார்?
காலம் தோன்றியது முதல், யோகியரும் ஞானியரும் அறிய முயன்று தோற்றுப்போன விஷயம்;
கல்ப கோடி காலம் தவம் செய்தும் அறியமுடியாத உண்மை... இப்போது ஆகாசவாணியின்
மைக்குக்கு எதிரே தலையைப் பிய்த்துக்கொண்டால் புலனாகிவிடுமா என்ன?
எதிரே
கடிகாரம் 'டிக்... டிக்...' என்று நேரத்தை விநாடி விநாடியாக என் கண்ணில் காட்டிக்
காட்டிப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.
நான் யார்..? நான் யார்..?
தவியாய்த் தவித்தேன். நினைவுக்கு வரவில்லை. ''நான் யார்?'' என வாய்விட்டே
கத்திவிடுவேனோ என்ற பயத்தில் ஃபேடரை' மூடி, மைக்கின் வாயை அடைத்தேன். மூளையைத்
துருவித் துருவி ஆராய்ந்தேன். என் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை என்ற கொடுமையோடு
அணி அணியாக வேறு எத்தனையோ பெயர்கள் போட்டி போட்டுக்கொண்டு என் நினைவில் வந்து
மோதின.
செய்தி அறிவிப்பில் என் உற்ற தோழர்களாயிருந்த நாகரத்தினம், பஞ்சாபகேசன்,
(அன்று வராமற்போன) நாராயணன், வேங்கடராமன், சாம்பசிவன், இசக்கி... இவர்கள் தவிர,
எங்கெங்கோ எப்போதோ சந்தித்த கணக்கற்ற நண்பர்களின் பெயர்களும்-தென்காசி ஆமல்
ராவுத்தர், அம்பாசமுத்திரம் சாமு வாத்தியார், பத்தமடை சுப்பய்யா இப்படிக்
கணக்கில்லாத நபர்களின் பெயர்களும் என் நினைவுக்கு வந்து குழப்பியடித்தன. இந்த
மாபெரும் பெயர்க் கூட்டத்துக்கு நடுவே, நான் என்னையே தேடித் தேடிக்
களைத்துப்போனேன்.
எதிரே கடிகாரம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்தக் கடும் குளிர்
நாளில், என் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்துக் கொட்டியது.
நான் அழ
ஆரம்பிப்பதற்குள் ஸ்டுடியோ கதவு திறந்தது. எஞ்சினீயர் பாலு பரபரப்புடன் உள்ளே
வந்தார். என்னைப் பெயர் சொல்லி அழைத்து, ''அரை நிமிஷ மாகக் குரலே வரலையே! மைக் கைத்
தவறுதலாக மூடிவிட்டீர் கள் போலிருக்கிறது. முதலிலிருந்தே படியுங்கள்'' என்று
சொல்லி, 'ஃபேடர்' பக்கம் கையைக் காட்டிவிட்டு, வந்த வேகத்திலேயே மறைந்தார்.
அரை
நிமிடம்தானா? எனக்கு அரையுகமாகப் பட்டதே! அது இருக்கட்டும்... பாலு என் பெயரைச்
சொன்னாரல்லவா? அப்பாடா! நான் யார் என்பதை எனக்குப் புரிய வைத்த பாலுவை மானசிகமாக
வாழ்த்திக்கொண்டு மறுபடியும் ''ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது பூர்ணம்
விசுவநாதன்'' என்று ஆரம்பித்தேன்.

சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த அவரது சக வானொலியாளர் சரோஜ் நாராயணஸ்வாமி,சிறந்த நகைச்சுவை எழுத்தாளரான விஸ்வநாதனையே இந்த நிகழ்ச்சியை விவரித்து எழுத வேண்ட,அவர் ஆ.வி.யில் 1969 ல் எழுதிய பகுதிதான் மேலே நீங்கள் படித்த கட்டுரை.

()

சமீபத்தில் சட்டக் கல்லூரி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை பற்றியும் அதனுடைய நியாய,அநியாயங்கள் பற்றியும் பலரும் எழுதி விட்டார்கள்.மத்தியில் பல உண்மை அறியும்’ அறிக்கைகளும் வந்தன.


கல்வியறிவு இல்லாத சிந்திக்க இயலாத கிராம மக்கள் சாதீயத்தின் கூறுகளை விடாமல் பிடித்துக் கொண்டு சமுதாயத்தில் பல வேண்டத்தகாத நிகழ்வுகளை நடத்திக் கொண்டிடிருப்பது நாம் புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால் படித்த சிந்திக்க முடிந்த சட்டம் பயிலும் மாணவர்களும் சாதீயக் கூறுகளை முன்னெடுப்பதும் அதிகார,ஆட்சி,அரசியல் வர்க்கங்களின் கூறுகள் அவர்களைப் பின்னாலிருந்து இயக்கி சாதீயக் கூறுகள் முனை மழுங்கி விடாமல் கவனித்துக் கொள்வதும்,அரசியலில் பார்த்து,முதலில் பயந்து,பின்னர் சலித்து,இப்போது அரசியலின் கூறுதான் அது’என்ற சுரனை கெட்டத் தனத்துடன் நாம் ஏற்றுக் கொண்ட வன்முறை வன்மம் மாணவர்கள் அளவில் செயல்படுத்திக் காட்டப்படுவதும் எதிர்கால சமூகத்தைப் பற்றிய பயங்களை மனதில் விதைக்கின்றன.

இந்த சமுதாய சூழலில்தான் நமது குழந்தைகள் வளரப் போகின்றன என்பது திகில் தரக் கூடிய ஒரு நிதர்சனம் !

Wednesday, October 15, 2008

81.கடிபடுவது நகமா,விரலா ?

சமீபத்தில்,சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னிருந்து (ச்சே,பதிவுலகில் இது ஒரு வியாதியாகவே ஆகிவிட்டதோ?) இரண்டு மூன்று வாரங்களாக நிதிச் சந்தைகளில் நடந்துவரும் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஏதோ வாணவேடிக்கை நடந்துகொண்டு இருப்பதாக உணர்வார்கள்.

பங்குச் சந்தையிலும் ஊக வணிகத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலர் நகத்தைக் கடித்துக் கொண்டோ அல்லது விரலைத் தின்று கொண்டோ இருக்க வாய்ப்பிருக்கிறது;இரண்டாவது என்றால் பெரும் பணம் காற்றில் போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலைக்கு என்ன காரணம் அல்லது இது எப்படி நிகழந்தது என்பது பற்றி பல செய்தி பத்திரிகைகள் அல்லது ஊடகங்கள் அலசிவிட்டன.

கடந்த வாரத்தில் அமெரிக்க அரசு சுமார் 700 பில்லியன் டாலர்கள் (அல்லது சுமார் 3,20,000 கோடி ரூபாய்கள்) நிதியை புழக்கத்திற்கு விட அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பெர்னக்கி யோசனை வழங்கி,அதிபர் முன்மொழிந்த போது அமெரிக்க காங்கிரஸ் சபை அதை நிராகரித்து அரசுக்குப் பெரிய அதிர்ச்சியை வழங்கியது;பின்னர் புஷ் புஸ்ஸென்று கிளம்பி,அமெரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழுவிற்கு விளக்கம் அளிக்க பெர்னக்கியைப் பனித்தார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர் குழுவினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார்.

காணக் கிடைக்காத காட்சி அது !!!!

நம்மில் பலர் அமெரிக்கர்களைத் திட்டுகிறோமே,அவர்களுடைய சொந்தக் காரியங்களை அவர்கள் பார்த்துக் கொள்வது போல் நம்முடைய காரியங்களைப் பார்த்துக் கொண்டால் நாம் அவர்களைத் திட்டுவதில் அர்த்தமிருக்கிறது.

தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான அந்த கேள்வி நேரத்தில்’ ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுளுக்கெடுக்கும் கேள்விகளைக் கேட்டு பெர்னக்கியின் பதிலைப் பெற்றார்கள்.இது போன்ற காட்சிகள் இந்தியாவிலோ ஏன் ஆசிய நாடுகளிலோ நடக்கிறதா?

சிதம்பரமோ அல்லது ரிசர்வ் வங்கியின் தலைவரோ அவர்கள் எடுக்கும் கொள்கை முடிவுகள் பற்றிய திறந்த விவாதத்திற்குத தயாராக இருக்கிறார்களா?

அறிந்த பத்திரிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்குக் கூட அவர்கள் பதிலளிப்பதில்லை !

ஒருவழியாக பணத்தை சந்தையில் பாய்ச்சும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் இந்த முடிவு ஆக்கம் பெற்ற போது,ஐரோப்பிய ஒன்றியங்களும் ஜோதியில் இணைந்து வாடிக்கையாளர்களின் பணத்திற்கும்,வங்கிகளின் நிதி சுழற்சிக்கும் உறுதி அளித்த பின்னர் அதளபாதாளம் நோக்கிப் போய்க்கொண்டிருந்த பங்குச் சந்தை கொஞ்சம் சரிவிலிருந்து மீளும் அறிகுறிகளைக் காண்பித்தது.

ஆனால் இது சரியான தீர்வுதானா என்ற கேள்விகள் இப்போது நிதிச் சந்தை அறிஞர்களிடம் எழுந்திருக்கிறது.

இந்த மொத்தக் குழப்பமும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த இயலாதவர்களுக்கு கடன்களை அள்ளி வழங்கிய காரணத்தால் நிகழ்ந்தது;இதைப் பற்றி ஒரு பதிவு தெளிவாக எழுதப் பட்டிருந்தது.

இவை திவாலான காரணம் கொடுத்த கடனில் சுமார் 80 சதத்திற்கு மேல் வராக் கடனாக மாறியதுதான்.கடனுக்கான அடமான சொத்துகளை வங்கிகளும்,நிதி நிறுவனங்களும் கையகப் படுத்தினதான்;ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்ய?அவற்றை மறுவிலை கொடுத்து வாங்க ஆளில்லை.

ஒரு கட்டடம் அல்லது ஒரு வீடு என்றால் வங்கி மேலாளர் தங்கவோ அல்லது விற்கவோ முனையலாம்.ஆனால் கொடுத்த கடனெல்லாம் இப்படி செத்த சொத்துக்களாக(Non Perporming assets) மாறவும் வங்கிகளின் கையிருப்பில் பணவரவு அறவே நின்று முதலீட்டாளர்கள் வரைவோலையோ அல்லது காசோலையோ கொடுத்தால் அவர்களுக்கு திருப்பிச் செலுத்த பணமில்லா நிலையை அடைந்தன.

இதற்குத்தான் மேற்சொன்ன நிதிச் சந்தையை மீட்கும் பணியை அரசு செய்ய முன்வந்தது.
இப்போது நிதிச் சந்தை சிறிது பெருமூச்சு விட்டாலும் நீண்ட கால நோக்கில் என்ன நடக்கும்?
மேற்சொன்ன மீட்பு முயற்சி(Bailout Plan) முன்வைக்கப்பட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சொத்துக்களை அல்லது பங்குகளை அரசு வாங்கிக் கொண்டு சுமார் 250 மில்லியன் டாலர்களை அவற்றில் இன்று முதலீடு செய்திருக்கிறது.

வங்கிகள்,நிதி நிறுவணங்களின் “கையாலாகாத் தனத்திற்கு” இது போல் அரசு அந்த வங்கிகளில் முதலீடு செய்தால் சுற்றிவளைத்து அரசு அந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை நாட்டுடமையாக்குகிறது;தனியார் வசம் இருக்கும் போதே இவ்வளவு ‘தான்தோன்றித்தனமாக’ செயல்பட்ட வங்கிகள் அரசின் வசம் போகும் போது எவ்வளவு திறனுடன் செயல்படும் என்ற கேள்வி சந்தையில் எழுந்திருக்கிறது.

இது நீண்ட கால நோக்கில் மேலும் கீழ்நோக்கிய வீழ்ச்சிக்கு சந்தையை செலுத்தும் முயற்சி என்பது சில தேர்-நிதியாளர்களின்(Financial Experts) எச்சரிக்கை.

பார்க்கலாம்,எத்தனை பேரின் விரல் முழுதும் கடிபடப் போகிறதென்று !!!!!!!

Monday, October 6, 2008

கில்லிகளின் ஆலோசனை வேண்டி !

நண்பர்களே,

நவீன மாடல் கைத்தொலைபேசிகள் எதிலாவது எம்.எஸ் ஆபீஸ் மென் பொருளில் தமிழை உள்ளிட முடியுமா?

கைத்தொலைபேசிகளில் தமிழை உள்ளிட உதவும் செயலி எதுவும் வழக்கத்தில் இருக்கிறதா?

எனில் செயலி தரவிறக்க இணைப்பு இருந்தால் அறியத்தரவும்.

இது சாத்தியம் எனில் எந்த மாடல்களில் சாத்தியம்?

விண்டோஸ் அல்லது சிம்பியான் மென் பொருள் செயலிகளிடையே ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

நன்றி.

Sunday, September 14, 2008

***** 80.பாரதியின் - கண்ணம்மாவும்,செல்லம்மாவும்

பாரதி என்ற கவிஞனுக்கு அறிமுகங்கள் தேவையில்லை.
தேசியக் கவி என்றும்,மகாகவி என்றும் கொண்டாடப்பட்ட பாரதி 20 ஆம் நூற்றாண்டின் நவகவிதையின் நாயகன்.
தொட்ட எந்த பொருள் பற்றியும் துலங்கும் இனிய கவிதைகளைப் பொழிந்த கவிஞன் அவன்.கம்பனுக்குப் பிறகு சொல்லழகும்,சந்த அழகும் நிரம்பிய கவிதைகள் பாரதியினுடையவை என்றால் அது ஒத்துக்கொள்ளக் கூடியதே.

பாரதியின் காலம் சுதந்திரப் போராட்டக் கனல் கனன்று கொண்டிருந்த காலம்.பாரதியின் கவிதைகள் அந்தக் கனலை மூட்டிப் பெருநெருப்பாக்கின.

அரசின் ஒடுக்கும் பார்வை பாரதியின் மீது விழுந்தது;அவர் பிறந்த பிராமண குலத்தின் பல மௌடீகங்களை வன்மையாக எதிர்த்த பாரதி கவிஞனுக்கேயுரிய கவிதைச் செருக்குடன்தான் வாழ்ந்தார்.

எவரிடமும் சென்று கையேந்தி,சோப்படித்து வளரும் இன்றைய கவியரசுகள் போல இல்லாது தனக்காகவும்,தேசத்துக்காகவும் மட்டும் பாடியவர் பாரதி.

அவரின் கவிதைகளில் குறிப்பிடத்தக்க இனிமை நிரம்பியவை கண்ணன் பாடல்கள்.பாரதி கண்ணன் பாடல்கள் என்று தனித் தொகுதியாக எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டு எழுதவில்லை;மாறாக அவ்வப்போது கண்ணன் மீதான சிந்தனைப் பிரவாகம் எழுந்த போதெல்லாம் எழுதிய்வை பின்னர் தொகுக்கப்பட்டன.

தேசியப் பாடல்களில் தெறிக்கும் உணர்ச்சிப் பெருக்குக்கு ஈடாக அன்பும்,காதலும் பொங்கிப் பிரவகிக்கும் பாடல்கள் கண்ணன் பாடல்கள்.

கண்ணனை தன் தந்தையாக,அரசனாக,குழந்தையாக,வேலைக்காரனாக என எல்லா பாத்திரங்களிலும் வரித்தார் பாரதி.
ஆனால் அதிலும் இனிமையும் அழகும் முழுமையடைவது அவரின் நாயக,நாயகி பாவக் கவிதைகளில்தான்.

எடுத்துக்காட்டாக,தீர்த்தக் கரையினிலே,சுட்டும் விழிச் சுடர்தான்,தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி,சின்னஞ்சிறுகிளியே,தூண்டிற்புழுவினைப்போல்,கண்டுவரவேணுமடி,ஆசைமுகம் மறந்துபோச்சே,பாயுமொளி நீஎனக்கு...போன்ற பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை.

இறுதிப்பாடலான ‘கண்ணம்மா எனது குல தெய்வம்- என்ற தலைப்பிலான பாடல் ஒரு சிகரப் பாடல்.

ஒரு கவிஞனின் கவிதைகளில் இந்த அளவு உணர்ச்சிப் பெருக்கு இருக்க வேண்டுமெனில் அவனுக்கு பாடுபொருளின் மீது உள்ள அன்பும் பிரேமையும் அந்த அளவு அழுத்தமானதாக இருக்க வேண்டும்.

இதற்கான சில உறுதி செய்யப்படாத பிண்ணனித் தகவல்களும் சொல்லப் படுகின்றன.

பாரதி வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்; ஆனால் அவருடைய தந்தையாரது வற்புறுத்தல் காரணமாகவே செல்லம்மாவைக் கைப்பிடித்தார் என்பது ஒரு வதந்தி.

அந்தப் பெண்ணின் மீது பாரதிக்கு கரைகாணாக் காதல் இருந்தது;அப்பெண்ணையே பாரதி கண்ணம்மாவாக வரித்தார்;கண்ணன் பாடல்களிலும் இந்த கரைகாணாக் காதலே வெளிப்பட்டது. இதன் காரணமாகவே அவரின் கண்ணன் பாடல்களில் நாயகி நாயக பாவங்களில் மட்டும் அவ்வளவு உணர்ச்சி தெறித்திருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

இது உண்மையாக இருக்க முடியுமா? இவ்வாறான முடிவுக்கு வந்துவிட முடியுமா?


இவ்வாறு காதலில் கண்ணம்மாவிடமும்,வாழ்க்கையில் செல்லம்மாவிடமும் வாழ்ந்தாரா பாரதி????

அந்த அளவு லட்சியக் கவிஞனாக வாழ்ந்த பாரதியின் சொந்த வாழ்வு இவ்வாறு ஒரு பிறழ்ந்த வகையில் இருந்திருக்குமா???

இதற்குச் சரியான பதில் பாரதி மீண்டு வந்து சொன்னால்தான் உண்டு.

ஆனால் சூழ்நிலைகள் இதற்கு என்ன பதில் சொல்கின்றன?

செல்லம்மா இதை எவ்வாறு பார்த்தார்? அல்லது செல்லம்மாவிடம் பாரதிக்கு இப்படி ஒரு மனவுலகில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க முடியுமா?

செல்லம்மா பாரதியுடன் வாழ்ந்த காலத்தில் புற உலகின் வாழ்க்கைத் தேவைகளுக்கு மிகுந்த சிரமப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த செய்தி;ஆனால் பாரதி செல்லம்மாவின் துயரங்களை லட்சியம் செய்யாது வாழ்ந்தாரா?

பின்வரும் செய்திகள் செய்திகளில் விடை கிடைக்கலாம்.

செல்லம்மா வெளியுலகிற்கு வெளிப்பட்டது பாரதி மறைந்த பின்புதான்.பாரதியின் காலத்திற்குப் பிறகு ஒருகட்டத்தில் அவரைப்பற்றி வானொலியில் பேசிய செல்லம்மா இவ்வாறு கூறுகிறார்.

“எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!

என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.

நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்;அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக் கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம்,தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரை கடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்து கொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும் அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும், பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப்பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்து கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ,வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. இனி மிஞ்ச விடலாமோ? என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஓரு புறம் ஏற்பட்டது. ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ? என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். செல்லம்மா, இங்கே வா என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள் என்றார். 'கரும்பு தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம்.

மறுநாள் அந்தப்பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது.அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப்பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார். “

ஒரு கணவரால் சரியாக நடத்தப்படாத,அன்பு காண்பிக்கப் படாத ஒரு மனைவியின் பேச்சா நாம் மேலே படித்தது??

மேலும் பாரதியின் கவிதைகளை அவருக்குப் பின் பிரசுரிக்க பெரிதும் முயற்சிகள் எடுக்கிறார் செல்லம்மா.இதற்காக பெரிதும் சிரமப்பட்ட செல்லம்மா,பொதுமக்களுக்கு வைக்கும் கோரிக்கை இவ்வாறு போகிறது....


‘‘தமிழ்நாட்டு மக்களே,
நான் படித்தவளல்ல, இந்த நூலுக்கு முகவுரை எழுதவும் நான் முன்வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியும் இல்லை.

உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்துக்காக, முழுமனத்துடன் அர்ப்பணம் செய்தார். நமது நாடு இன்னது, நமது ஜனங்கள் யாவர், நமது சக்தியும், உணர்ச்சியும் எத்தகையது? இவைகளைப் பற்றிய விவகாரங்களும், சண்டைகளும் தீர்மானங்களும் அவர் ஜீவனுக்கு ஆதாரமாக இருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று அவருடைய புதிய எண்ணங்கள், புதிய புதிய பாட்டுக்கள், புதிய புதிய கொள்கைகள் _ என் இரு காதுகளும் மனமும் இருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இந்த பாக்கியத்தை மறுபடி பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் பெறத் தயாராக இருக்கிறேன்.

அவரது தேகத்தில் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்கு ஆதாரமாக இருந்த பாரத மாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ்நாட்டில் ஒரு மனிதனோ, குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி என்றென்றும் நிலைத்திருக்கும் என்று என் இருதயம் சொல்கிறது. இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல வந்தேன்.

நீங்கள் நீடூழி வாழ்க.

பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் உள்ளவரை நான் வகித்து பிற்பாடு தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.

வந்தேமாதரம்.’’

இதுதான் செல்லம்மா எழுதிய கடிதம்.

செல்லம்மாவைப் பற்றிக் குறிப்பிடும் பாரதியின் பேத்தி எழுதுகிறார்.

“பாரதி மறைந்த பிறகும் செல்லம்மாவின் போராட்டங்கள் தொடர்ந்தன. தம் கணவரின் எழுத்துகளை நூல்களாக வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு, என் பாட்டி யாரைச் சேர்ந்தது. முப்பத்திரண்டு வயதே நிரம்பிய இளம்பெண், புத்தகப் பிரசுரத் துறையில் சற்றும் அனுபவமோ பயிற்சியோ இல்லாத பெண், நாளைச் சோற்றுக்கு வழி தேடும் வகையறியாத பெண், திருமணம் செய்யக் காத்து நிற்கும் இளைய மகள், தோள்களில் சுமையாக அழுந்தி நிற்க, மைத்துனரையும் சகோதரரையும் நம்பி யிருக்கும் பெண், எல்லாவற்றுக்கும் மேலாகத் தான் விரும்பிய காரியங் களைச் செய்ய முடியாமல் சாதி, சமுதாயத்தின் வற்புறுத்துதலுக்கு அடங்கிப் பணியவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்ட பெண் - செல்லம்மா. .

காலம் செல்லச் செல்ல, செல்லம்மா வெளியுலகத்தைத் தன் கணவரின் நோக்கிலிருந்து பார்க்கத் தொடங்கினாள். தன் கணவர், பெண் மைக்கு வரையறுத்துக் காட்டிய சுதந்திரம், அவளது இலட்சியமாயிற்று.

அசாதாரணமாக தைரியம், நினைத் ததைச் சாதித்து முடிக்கும் திறம், தன் கணவர் அறிவுறுத்திய உயர்ந்த விஷயங் களில் நாட்டம், தெய்வ பக்தி - இவை அவளை வழிநடத்தின. வாழ்க்கையில் அவளுக்கேற்பட்ட சோதனைகள் பல. இந்தச் சோதனைகளையெல்லாம் வென்று புடமிட்ட தங்கமாக வெளி வந்தாள், செல்லம்மா. .

1957-ஆம் ஆண்டு. தம் பிறந்த ஊராகிய கடையத்தில் மரணப் படுக்கையில் தன்னினைவின்றிப் படுத் திருக்கிறார், செல்லம்மா. அந்த அறையில், பெரிய ரேழியில், அவருடைய மூத்த மகள் தங்கம்மா, இளைய மகள் சகுந்தலா, பேத்திகள், பேரன்கள், ஒன்றிரண்டு நண்பர்கள் - எல்லாரும் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்.

""திண்ணை வாயில் பெருக்க வந்தேனெனைத்
தேசம் போற்றத் தன் மந்திரி யாக்கினான்''.

என்று படுக்கையிலிருந்து மென்மையான பாட்டுச் சத்தம் வருகிறது. பாரதியின் கண்ணன் - என் அரசன் என்ற பாட்டிலிருந்து அடிகள் இந்த இரண்டு வரிகள் ஒரு தடவையல்ல, பல முறைகள் மீண்டும் மீண்டும் மீண்டும் தொடர்கின்றன. .
சிறிது நேரம் அமைதி..

""திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான்''

என்று செல்லம்மாவின் வாய் திரும்பப் திரும்பப் பாடுகிறது. .
ஆம்!

அன்னையின் நெஞ்சு நிறைய, இத்தனை காலமாகப் புகுந்து அவரை ஆட்கொண்டு வாழ வைத்தவர், பாரதி. அவர் செய்த காரியங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து, அவருக்கு அறிவுத் தெளிவும், கலங்காத உள்ளமும், எதற்கும் அஞ்சாத துணிவும் கொடுத்துக் கடைசிவரை அவரை வழிநடத்தியவர், பாரதி. .”

பாரதியின் மீது எத்தகைய ஒரு அன்பிருந்தால் செல்லம்மாவின் ஆத்மசக்தி பாரதியின் எழுத்துக்கள் வெளிவர வேண்டும் என்ற தளராத ஆசையுடன் இவ்வாறு செயல்பட்டிருக்க முடியும்!

இப்படி செயல்பட்ட செல்லம்மா,பாரதியின் எத்தகைய அன்பையும் மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும் !

அதனால்தான் பாரதி பாடினான்..

”உன்னைக் கரம் பிடித்தேன்,வாழ்வு ஒளிமயமானதடி
பொன்னை மணந்தனால் சபையில் புகழும் வளர்ந்ததடி”
என...

கண்ணம்மாவின் காதலால் அல்லது கண்ணன் ப்ரேமையால் பாரதியின் சாகா வரம் பெற்ற அமுதப்பாடல்கள் கிடைத்தன;செல்லம்மாவின் காதலால் அவை வெளியுலகிற்கு வந்து நமக்கு படிக்கக் கிடைத்தன....

கண்ணம்மாவும்,செல்லம்மாவும் பாரதியின் இரு கண்களானார்கள்!

Saturday, September 13, 2008

***** 79.நட்சத்திர வாரத்துக்கான ஒரு பருந்துப்பார்வை

நட்சத்திர வாரத்தில் ஒரு மீள்பதிவு போடலாம் என்ற அறிவிக்கப்படாத விதிக்கு ஏதுவாக இந்த ஒரு பதிவு.என்ன ஒரு மீள்பதிவாக இல்லாமல் எனது இதுவரை எழுதிய பதிவுகளில்,எனக்கு திருப்தி அளித்த,அல்லது பரவலாக பாராட்டுப் பெற்ற சில பதிவுகளை அறிமுகப் படுத்தலாம் என விழைவு.

எனவே....அனுபவியுங்கள்,யாரு விட்டா????

1.பதிவுகள் எழுதலாம் என்பது திடீரென்று எடுத்த ஒரு முடிவு.எழுத்துப் பயிற்சி இருந்தாலும்,பதிவுகளின் வசதியும்,தமிழ்மணம் மற்றும் திரட்டி வசதிகளும் ஒரே நேரத்திலேயே அறிமுகம் ஆயின.எனவே முதல் பதிவுக்கென ஏதும் புதிதாக யோசித்து ஆரம்ப அமர்க்களங்கள் செய்து எழுதவில்லை, just like that எழுத ஆரம்பித்தேன்.ஆனால் எழுதிய விதயம் கொஞ்சம் ஆழமானதுதான், 1-நாம் என்ன செய்ய முடியும் ? என்ற தலைப்பில்..

2.சுதந்திர தினத்தன்று எழுதிய ஒரு பதிவு.பதிவிம் அடக்கம் என்னவோ முதல் பதிவின் தொடர்ச்சியே என எண்ணுகிறேன்.. 60 ஆவது சுதந்திர தினம்- ஒரு மீள்பார்வை 2

3.இளமையின் நினைவுகள் எப்போதும் அழகானவை.அழகான எல்லாமே மகிழ்வானவை-A thing of Beauty is Joy forever ! எப்போதோ எழுதிய ஒரு கவிதை இந்தப் பதிவில் ! தேவதைகள் மறையும் பொழுது...

4.நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கான மன,மற்றும் சமூகக் காரணிகளை அலசிய இந்த இரு பதிவுகளும் சில நண்பர்களால் பெரிதும் பாராட்டப் பட்டன.
சரத்குமார விஜயகாந்தர்கள்,
சரத்குமார விஜயகாந்தர்கள் 2

5.பாலியல் கலிவியின் தேவை மற்றும் அல்லது பற்றி விவாதித்த இந்த பதிவு வந்த அல்லது அடுத்த வாரத்தில் விகடன் இதழிலும் இதே பொருள் தொடப்பட்டிருந்தது.இது திண்ணை இதழிலும் வந்தது.
^^^ பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை

6.என்னுடைய ஐயாவைக் குறித்து எழுதப்பட்ட இந்தப்பதிவு,எனக்கும் படித்த சிலருக்கும் பெரும் நெகிழ்வை ஏற்படுத்திய ஒன்று.என்னவோ இதை எழுத வேண்டும் எனத் தோன்றியது,இந்தப் பதிவு வெளியிட்ட சில மாதங்களில் அவர் மறைந்தார்... 27-வாழ்க்கை,குடும்பம்,மகவு ??????????

7.ஐடியாளர்களின் பார்வை குறித்த இந்தப்பதிவும் சில நல்ல விவாதங்களை ஏற்படுத்தியது,சில தூற்றல்களையும் கூட... 31- ^^^ ஐடி'யாளர்களின் பார்வை சரியா,தவறா?

8.புதுக்கவிதையையும் ரசிக்கப்பிடிக்கும் நான் ஒரு மரபு நேசன்.நன்றாக வந்திருக்கிறது என்று நான் நம்பும் ஒரு விருத்தம் இது... 37.அந்தக் கணமும் , சில பொழுதுகளும்...

9.தெகா எழுதிய ஒரு பதிவில் சில கருத்துக்கள் சொல்லப் போக,எழுந்த யோகாசனத்தைப் பற்றிய விளக்கப்பதிவு இது. 40.யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும்

10.சில சிறுவயது நினைவுகள் சுவாரசியம் கொண்டுவருபவை,அந்த வகையில் இது பரவலாக ரசிக்கப்பட்ட ஒரு பதிவு. 49.லாம்ப்ரட்டா ஸ்கூட்டரும்,ஆண்கள் வயதுக்கு வருவதும்

11.ஜப்பானின் 5S உற்பத்தி முறைகளைப் பற்றிய அலசிய இதுவும் நான் விரும்பும் பதிவுகளுல் ஒன்று. 58.^^^ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
12.பெ.நா.அப்புஸ்வாமி பற்றி எழுதிய,எனக்குத் திருப்தியளித்த,பலரின் பாராட்டுக்களைப் பெற்ற பதிவு. 59.^^^அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன்

13.தமிழுக்கும் சிவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேசும் இப்பதிவு எழுதத் தூண்டிய விதயம் ரவிசங்கரின் பதிவில் ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களே.இது எழுதுவதற்காகவே நான் நிறையப் படிக்க வேண்டியிருந்தது.இன்னும் இந்தத் தொடர் பதிவை நான் முடிக்க இயலவில்லை.ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை இத் தொடர்பதிவு தரும் என நான் நம்புகிறேன். 66.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும் !

மற்றபடி நட்சத்திர வாரம் வந்தால் எழுத வேண்டும் என்றே குறித்து வைத்திருந்த பல தலைப்புகளில் எழுத இயலாது போயிற்று...காரணம் நேர மேலாண்மையில் ஏற்பட்ட சிக்கல்கள்.நட்சத்திர வாரம் தொடங்கிய நாள் அன்று பணி நிமித்தம் நான் அயல்நாட்டில் இருந்தேன்,அன்று நடு இரவுதான் சிங்கப்பூருக்கு வந்தேன்,தொடர்ந்த அவசர அலுவல்கள் காரணமாக நட்சட்திரமாக எழுத எண்ணியிருந்த பல விதயங்கள் எழுத இயலவில்லை..எனினும் அவை குறித்து சமயம் கிடைக்கும் போது எழுதுவேன்.

அவசரமாகத் தயாரித்த இன்னும் மூன்று தலைப்புகளில் பதிவுகள் முக்கால் வாசி முடிந்து நிற்கின்றன;இயன்றால் அடுத்த நட்சத்திரம் மேடையைப் பிடிக்கும் முன் நாளை அவற்றை அரங்கேற்ற முயற்சிக்கிறேன்.

ஒரு நல்ல வாசிப்பை அளிக்க வேண்டும் என்றெண்ணிய எனது முயற்சி,என் விழைவுக்கேற்ற வகையில் நிறைவேறாதது எனக்கு வருத்தமே..மற்றபடி வாய்ப்புக்கு தமிழ்மணத்திற்கும்,வாசித்த அனைவருக்கும் நன்றி !

***** 78.மறுபாலின நட்பும்,கார்த்திக் பட கிளைமாக்ஸும்

சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகுமார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்,அது அவரின் பள்ளித் தோழர்களை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி.

அவருடன் எட்டாம் வகுப்பிலோ அதற்கும் கீழான வகுப்பிலோ படித்தவர்கள் சிலர் தொலைக்காட்சியில் தலை காட்டினார்கள்.அவர்களில் சில பெண்களும் அடக்கம்.சொல்லத்தேவையன்றி அவைவருன் அவர்களின் இறுதி 50 களின் வயதில் இருந்தார்கள்.

ஆயினும் அவர்களிடையே பெண்களுக்கு நடிகர் சிவகுமாருடன் பேசுவதற்கும்,அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் மிகவும் சங்கோஜப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

இத்தனைக்கும் சிவகுமார் ஒன்றும் இன்றைய கனவுக் கதாநாயகன் அல்ல;மேலும் அவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் பள்ளித் தோழர்கள்,எனினும் இவ்வளவு மனத்தடை அவர்களுக்கு இருக்கிறது,இந்த 2008 லும்.

இதே காட்சியை இன்றைய ஒரு கல்லூரிக்கோ அல்லது மெரீனா கடற்கரைக்கோ எடுத்துச் செல்லுங்கள்;இளைஞர்களும்,இளைஞிகளும் உல்லாசமாகப் பேசி சிரித்து விளையாடுவதைப் பார்க்கலாம்.

60 களில் இருந்த ஆண்,பெண்களுக்கிடையேயான மனத்தடைகள் இப்போது இல்லை-கல்லூரி அளவில்.

இதே மாணவர்கள் படித்துப் பட்டம் பெற்று,திருமணம் ஆனபின் வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போது இந்த் நட்பும்,அன்பும் உரிமையும் அவர்களிடையே இருக்கிறதா???

60 களை ஒப்பிடும் போது நிச்சயமாக முன்னேற்ற மாறுதல் இருக்கத்தான் செய்கிறது;மறுக்க முடியாது.ஆனால் இந்த நட்பு திருமணத்திற்கு முன்னர் இருந்தது போல இரு பாலரிடமும்,திருமணத்திற்குப் பின்னர் நிலவுகிறதா?

அவர்கள் குறைந்தபட்சம் தினமோ அல்லது வாரம் ஒருமுறையோ தொலைபேசிக் கொள்வதாவது நடக்கிறதா?

சரி,அவர்கள் குடும்ப நண்பர்களாக நீடிக்கிறார்களா?

ஆய்வுக்குரிய ஒன்று !


நிச்சயம் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்க வாய்ப்பிருக்கிறது;இரண்டாம் நிலை நகர்கள் மற்றும் கிராமங்களில் ?????

வெளிநாடுகளில் நெடுங்காலமாக பணியின் பொருட்டோ,தொழிலின் பொருட்டோ தங்கும் நம் மக்களுக்கு இந்த விதமான எண்ணப்பாடுகள் இருக்கின்றனவா என்ற சிந்தனையில் எனக்குப் போதுமான மறுமொழி கிடைக்கவில்லை.ஏனெனின் வெளிநாட்களில் நமக்கு ஒரு சமூகச் சுற்றம் ஏற்படுவதற்கு சுமார் 5 வ்ருடங்களோ அல்லது அதற்கு மேலுமோ ஆகலாம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் பருவம் பெரும்பாலும் இளமைப்பருவம் முடிந்து 30 களின் துவக்கத்தில் அல்லது 20 களின் இறுதியில் தான் அமைய வாய்ப்பிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் மறுபாலின நட்பு ஏற்படுவதை விட காதல் ஏற்படவோ அல்லது திருமண நோக்கிலான அறிமுகங்களோதான் பெரும்பாலும் சாத்தியம்.

திருமணத்திற்குப் பின்னர் இந்த மாதிரி மறுபாலின நட்பு ஏற்படுவது சாதாரணமாக காணப்படுவதில்லை என்றே நினைக்கிறேன்...

இதற்கான விதி விலக்குகள் உண்டு;சொல்லப் போனால் விதி விலக்குகள் எங்கேயும் உண்டு.(Exceptions are prevalent everywhere at any scenario) என்பது ஒரு தங்க வாக்கியம்!

ஆக,மறு பாலின நட்பு,ஆரோக்கியமாக நிலவும் சூழல் கல்லூரி மற்றும் அது முடியும் காலம் சார்ந்த பருவத்திலேயே முகிழ்ந்து,முதிர சாத்தியம்.

இந்த சிந்தனையின் நீட்சி,இரு விதப்படும்.

இந்த ஆரோக்கிய நட்பு தொடர்ந்து,குடும்ப நட்பாக,அந்தந்த நண்பர்களின் குழந்தைகளுக்கிடையே வரை நிலவும் நட்பாகக் கிளைப்பது ஒன்று.

அவரவரின் திருமணத்திற்குப் பின்னர் சிலகாலம் தேயும் கால இடைவெளிகளில் சில தொலைபேச்சுக்கள்,பின்னர் எப்போதாவது எங்காவது சந்தித்தால் மட்டும் புன்சிரித்து அளவளாவிப் பின் பிரியும் அளவில் நிற்பது ஒன்று.

மூன்றாவது மோசமான ஒன்று-முற்றாக வெட்டப்படுவது,இதற்கு அவரவரின் சோடிகளிடை நிகழும் மனஅழுத்தங்களும் உளவியல் காரணிகளும் முக்கியக் காரணங்கள்.

முதலும் மூன்றாவது நிலையும் முற்றிலும் புரிந்து கொள்ளப்படக் கூடியவை.

பல திரைப்படங்கள் கூட இந்த நிலைகளை விவரித்து வந்து விட்டன.

கார்த்திக்,ரகுவரன்,ரேவதி நடித்து வெளிவந்த ஒரு படம்,பெயர் நினைவில்லை-இரண்டாவது நிலையைத் தொட்டுச்,பின் மூன்றாம் நிலையை எட்டி, பின்னர் முதல் நிலைக்குத் திரும்புவது போல சித்தரிக்கப்பட்டது.

அத்திரைப்படன் சொல்லும் காரணங்களான பரஸ்பர சந்தேகங்கள் தான் இவ்விதமான நல்ல நட்புகளும் சிதையக் காரணமா?

ஆம் எனில்,இவ்வித பூஞ்சையான(fragile) நம்பிக்கையற்ற ஒரு அடித்தளத்தில் தான் நமது திருமண பந்தங்கள் கட்டப்படுகின்றனவா?அல்லது மனிதனின் ஆதிகால பெண்கள் பொருட்டான உடைமை உணர்ச்சி(ownership) தான் இவற்றிற்கான காரணிகளா?

ஆண்களுக்கிடையான ஆண்பாலின நட்புகளோ,நண்பர் வட்டமோ,பெண்களுக்கிடையான் பெண்பாலின நட்பு,நண்பிகள் வட்டமோ திருமணத்திற்குப் பின்னர் பெருமளவு பாதிக்கப் படுவதில்லை;ஆனால் மறுபாலின நட்பு சிறிதோ,பெரிதான அளவிலோ மாறுதல் அடைகிறது,என்பது அனுபவங்களிலேயே கிடைக்கிறது.

நட்பின் மரியாதையையோ,நண்பர்/நண்பிகளை புண்படுத்தக் கூடாது-அதாவது நட்பினால் அவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படலாம் என்ற நோக்கில்-என்ற அளவில் நட்பை முறித்துக் கொள்வதுதான் நல்லாதா?

கார்த்திக் கூட அந்தப்படத்தில் அதைத்தான் செய்வார்.

ஆனால் திரைப்படங்கள் மூன்று மணி நேர முடிவில் ஒரு சுபம் போட வேண்டும் என்பதற்காக,கணவர்கள் மனைவிக்காக அவரது ஆண் நண்பரை மதிப்பதும்,மனைவிகள் கணவருக்காக அவரது பெண் நண்பர்களை ஏற்றுக் கொள்வதும் நடக்கலாம்.(இதில் கூட இரண்டாவது சூழலைத் திரைப்படங்கள் கூட காட்டியதாக நினைவில்லை !)

உண்மை,நடைமுறை வாழ்வு எத்தகைய தீர்வுகளை,கூறுகளை முன்வைக்கிறது ??????

***** 77.கூத்தாட்டு அவைக்குழாம்

கூத்தாட்டு அவைக்குழாம் என்ற சொல் எவ்வளவு அழகான சொல்!
யார் சொன்னார்கள்?
எங்கே?
எதற்காக?

கூத்தாட்டு அவைக்குழாம் என்றால்,கூத்தாட்டு அவையில் இருக்கும் குழு என்பது பொருள்;இது கூத்துக் குழு மற்றும் கூத்துப் பார்க்க வரும் குழு என இரண்டு குழுக்களையும் குறிப்பிடுகிறது.

பார்க்கலாம்.....



நாம் வாழ உலகில் பணம்,செல்வம் எவ்வளவு தேவையானது என்பதெல்லாம் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

வள்ளுவமும் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றே கூறுகிறது.

நாம் அனைவருமே பணம்,செல்வம் தேடியே ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

எவ்வளவு பணம் இருந்தாலும் இது வாழ்வை வளமாகக் கழிக்கப் போதுமான பணமா அல்லது இன்னும் வேண்டுமா என்ற கேள்வி ஆதாரமானது;இதற்கு நம்மிடம் விடையும் இருக்க முடியாது.

இப்படிப் பணத்தின் பின்னால் ஓடும் நம் வாழ்வில் பணம்,செல்வம் நம்மிடம் எவ்வாறு வருகிறது,நம்மிடம் எவ்வளவு காலம் இருக்கும் என்ற சிந்தனை எல்லாம் நமக்கு எப்போதும் வருவதும் இல்லை.

ராமகிருஷ்ணர் சொன்ன கதையில் வரும் விலைமாதின் வீட்டில் இருந்து கொண்டு சந்நியாசியையே நினைத்துக் கொண்டிருந்தவனும்,அவன் தாசி வீட்டில் இருப்பதையே நினைத்துக் கொண்டிருந்த சந்நியாசி அடைந்த கதியும் நாம் அறிந்ததே...

அந்த தாசி வீட்டு நபரைப் போல,பணம்,செல்வத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நாம் அதனூடையே அதிலிருந்து விலகி வாழும் இயல்பை அடைய முடியமா?

அப்படி வாழும் வாழ்வே ஆனந்த மயமானது;அதைத்தான் விட்டு விலகியிருப்பாய் இந்தச் சிட்டுக் குருவி போலே” என்றான் பாரதி.

எப்படி சாத்தியம்?


பணம்,செல்வம் எப்படி வருகிறது என்ற சிந்தனைக்குள் நாம் போனோமானால் இது சாத்தியம்.

எப்படி?

நாம் சினிமாவுக்குப் போகிறோம்,எப்படிப் போகிறோம்?
சினிமாக் அரங்கத்திற்குப் போகும் போது ஒவ்வொரு நபராக அல்லது ஒன்றிரண்டு நபர்களாகப் போகிறோம்,சினிமா அரங்கம்
நிரம்புகிறது.

சினிமா ஆரம்பித்து முடிந்த பின்னர்,எப்படி வெளியேறுகிறோம்,கூட்டமாகவும்,மொத்தமாகவும்.

செல்வமும் இப்படித்தான்..

வரும் போது சிறிது சிறிதாக வரும்;போகும் போது மொத்தமாகப் போய் விடும்.

எவ்வளவு அழகான உவமை பாருங்கள்...

என்ன,சினிமா அரங்கத்திற்குப் பதில்,கூத்துமேடை !

சிந்தித்தது நானல்ல...வள்ளுவர் !

மேலும் சினிமாவுக்கோ,கூத்து மேடைக்கோ செல்ல அனுமதிக்கும் வழி ஒன்றாகத்தான் இருக்கும்;கூத்து முடிந்து வெளியேறும் வழியோ பல வழிகளிலும் இருக்கும்.

அது போலவே செல்வம் வரும்போது சிறு வழியாக சிறிது சிறிதாக வரும். போகும்போதோ,பல வழிகளிலும் மொத்த மொத்தமாகவும் செல்லும்.

கூத்தோ,நாடகமோ,சினிமாவோ பார்க்கச் செல்லும் மக்கள் மகிழ்வான உற்சாகமான மனநிலையில் செல்வார்கள்;கூத்து முடிந்து திரும்பும்போதோ அயற்சியும்,சோர்வும் நிரம்பிய மனநிலையில் ஓய்வெடுக்க விரும்பி வெளியே ஓடுவோம்.

இதே போல செல்வம் வரும்போது மனதிற்கு உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கும்.போகும்போதோ சோர்வையும் அயற்சியையும் விட்டுச் செல்லும்.

எத்தனை அழகிய உவமை !!!!!!

குறள் இதுதான்.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.


போக்கும் என்ற சொல்லில் ஒரு ‘ம்’ விகுதி போட்டிருக்கிறார் பாருங்கள், போக்கு அது விளிந்தற்று என்று சொல்லவில்லை.போக்கும்’ என்கிறார்.

அதாவது போவதும் என்று சொல்வதன் மூலம் செல்வம் வருவதும்’ இருப்பதும்’ அப்படியே கூத்தாட்டத்தில் போது நடிகர்கள்,நாடக சம்பவங்கள் நடக்கும் செயல்களுக்கொப்பானவை என்பது நாயனாரின்(பழைய கேரள முதல்வர் அல்ல !) கூற்று.

கூத்து நடக்கையில் நாம் காணும் அனைத்தும் உண்மையானவை அல்ல;பார்க்கும் கதை பொய்,நடிக்கும் பாத்திரங்கள் பொய்,நிகழும் நிகழ்ச்சிகள் பொய்,கூத்து முடிந்த பின் பார்த்தால் வெண் திரை மட்டுமே மிச்சமிருக்கும்.

செல்வமும் வந்து நீங்கிய பின் இருப்பது வெறுமை மட்டுமே....
செல்வத்தின் தோற்றமும்,இருப்பும்,அழிவும் காணல் நீர் போலப் போய்விடுகிறது.

ஆக ஒரு கூத்தைப் பார்த்த வள்ளுவரின் சிந்தனையில் இத்தனை விதயங்களும் தோன்றியிருக்கின்றன.

கூத்தின் தன்மை,நடிகர்கள்,கதை முதலியவர்றில் நிகழ்வு,கூத்து முடிந்த பின் உள்ள வெறுமை ஆகிய அனைத்தையும் செல்வத்திற்கு ஏற்றிய சிந்தனைத்திறன்தான் வியப்படைய வைக்கும் ஒன்று.


இவ்வாறு போகாமல் செல்வம் பயனாக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி வருகிறது இல்லையா?

அதற்கும் இன்னோரிடத்தில் வள்ளுவர் யோசனை சொல்கிறார்.
என்ன என்பதை யாராவது பின்னூட்டத்தில் சொல்வார்கள்-விவாதிக்கலாம் !

Friday, September 12, 2008

***** 76.ஒரு நடிகரின் பேட்டி

ஒரு பேட்டி :

''னக்கு விரோதிங்க அதிகம். துப்பாக்கியும் கத்தியும் இல்லாம நான் நாடகத்திற்குப் போகமாட் டேன். எல்லோரும் என்னைப் 'பொல்லாதவன், ரௌடி, அநாகரிகப் பயல்'னு நினைச்சுக் கிட்டிருக்காங்க. இருக்கட்டும். எனக்கு ஒரு விதத்திலே அது சௌகரியமாயிருக்கு. என்னைப் பார்க்கப் பயந்துகிட்டு ஒருத்தரும் எங்கிட்டே வர்றதில்லே. அதனால என்னைச் சுத்தி அநாவசியக் கும்பல் கிடையாது. நான் உண்டு, என் தொழில் உண்டு, என் தோட்டம் உண்டுன்னு நிம்மதியா இருக்கேன்.''


''தோட்டமா?''


''ஆமா... இங்கே திருப்போரூர் போற வழியிலே கொஞ்சம் நிலம் இருக்கு. அதுலே நெல் பயிராவுது. அப்புறம் கோடம்பாக்கத்துக்கு அந்தாண்டே, எம்.ஜி.ஆர். தோட்டத்துக்கு எதிர்லே கொஞ்சம் வாங்கியிருக்கேன். அங்கே காய்கறியெல்லாம் போடப் போறேன். மாடுங்க வேற வளர்க் கிறேன். காலையிலே, நாலரைக் கெல்லாம் எழுந்து அங்கே போயிடு வேன். கிணறு வெட்டறது, வரப்பு கட்டறது, வேலி போடறது... இந்த வேலையெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏதோ... சம் பாதிச்சாச்சு. வயசோ ஐம்பத்தாறு ஆவுது. இனிமே குடும்பம், கொழந் தைங்கன்னு நினைக்கத் தோணுது. விவசாயத்திலே புத்தி போவுது.


இதுக்கு நடுவுல யாராவது வந்து கூப்பிட்டா, போயி நடிக்கிறேன். அவ்வளவுதான்! நான் ஒருத்த ரையும் போய்ப் பார்க்கிறதில்லே; சான்ஸ் கொடுன்னு கேட்கறதும் இல்லே. மத்தவங்க மாதிரி இவ னைப் போடாதே, அவளோட நடிக்கமாட்டேன்னு கண்டிஷ னெல்லாம் போடறதும் கிடை யாது!''



''அந்தக் காலத்திலே என்னை, 'டக்ளஸ் பார்ப்பாங்ஸ்'னு சொல்லு வாங்க. அவர் நடிக்கிற படங் களையெல்லாம் ஒண்ணு விடாம பார்ப்பேன். அவர் மாதிரி 'ஸ்டண்ட் வேலை' செய்யோ ணும்னு ஆசை. ராஜசேகரன்லே நடிக்கிறபோது, பூந்தமல்லி குருடர் பள்ளிக்கூடத்தின் மாடி யிலேருந்து கீழே குதிச்சேன். கால் முறிஞ்சு போச்சு! இப்போ 'ட்யூப்' (Dupe) வெச்சு 'ஸ்டண்ட்' செய்ய றாங்களே, அதெல்லாம் அப்போ தெரியாது. டைரக்டர் 'குதிடா'ன் னாரு. குதிச்சுட்டேன்!''


''அப்புறம் படத்தை எப்படி முடிச்சாங்க?''


'' அதெல்லாம் கெட்டிக்காரங்க, க்ளோஸப்பா எடுத்து ஒரு மாதிரி கதையை முடிச்சுட்டாங்க. கால் குணமாக நாலு வருஷம் ஆச்சு. அப்புறம், மாடர்ன் தியேட்டர்ஸ்லே சேர்ந்து நாலஞ்சு படம் நடிச்சேன். டி.ஆர்.சுந்தரத்திற்கும் எனக்கும் சின்ன தகராறு ஒண்ணு வந்தது. அங்கே சுயமரியாதையோடு வாழ முடியாதுன்னு தெரிஞ்சது. இந்தச் சினிமாத் தொழிலே வாணாம்னு முழுக்குப் போட்டுட்டு மறுபடியும் நாடகத்துக்கே வந்துட்டேன். அப்புறம் நான் திரும்பி வந்தது 'இரத்தக் கண்ணீர்' சினிமாவுக்குத்தான். பாண்டிச்சேரிலே நாடகம் போட்டுக்கிட்டிருக்கிறபோது என்னை வந்து கூப்பிட்டாங்க. லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்தா நடிக்கிறேன்னு சொன் னேன். கொடுத்தாங்க. அவ்வளவு பணம் முதல்லே வாங்கின நடிகன் நான்தான்.''


''அரசியல்லே உங்களுக்கு எப்படிச் சம்பந்தம் ஏற்பட்டது?''


''நான் எந்த அரசியல் கட்சியிலும் இருந்தது கிடையாது. திராவிடக் கட்சியிலும் நான் மெம்பர் இல்லே. ஆனா, ஐயாகிட்டே ஒரு மரியாதை. அவர் பேச்சைக் கேட்டு நான் ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு காலத்திலே நான் பகவத்சிங் ஆளு. அந்தத் தியாகியின் வீரம் என் ரத்தத்திலேயும் ஓடிச்சு. அப்போ பெரியாரைக் கண்டாலே எனக்கு ஆகாது! ஒரு சமயம், நான் கொட்டகை வாடகை கொடுக்கலேனு என் சாமானையெல்லாம் ஜப்தி பண்ணிட்டாரே! அப்புறம் அவரே டிக்கெட் வாங்கிக்கிட்டு வந்து என் நாடகத்தைப் பார்த்தாரு. 'இவனும் நம்ம வேலையைத்தான் செய் யறான்'னு ஓப்பனா மேடை மேலே ஏறி ஒப்புக்கிட்டாரு.''


''தமிழ் சினிமா இந்த முப்பது வருஷத்திலே முன்னேறி இருக்கா?''


''தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு. ஆனா. 'சப்ஜெக்ட்' தான் 'அட்வான்ஸ்' ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி, படத்தை ஓட்டப் பாக்கறாங்க. என்னங்க வெட்கக் கேடு இது? இதுவா முன்னேற்றம்? ஒண்ணு சொல்றேன் கேளுங்க... நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப்-பட உலகம் உருப்படும். அப்போதான் முதலாளிங்க புது ஆசாமிங்-களா போட்டு நல்ல கதைங் களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?''


''சினிமாவாலே சமூகத்திற்குத் தீமைதான், நன்மையே கிடை யாதுன்னு சமீபத்திலே நீங்க பேசினதுக்கு, 'இந்தத் தொழில்லே சம்பாதிச்சுக்கிட்டே அப்படிப் பேசு வது முறையா?'ன்னு சில பேர் ஆத்திரப்பட்டாங்களே..?''


''ஆமா, எங்கிட்டே கூடத்தான் சொன்னாங்க. உள்ளே இருக்கிற வனுக்குத்தான் அதிலுள்ள தீமை யெல்லாம் தெரியும். அவன்தான் 'அதாரிட்டி'யோட பேச முடியும் அதுலேயே இருந்துகிட்டு அதைத் திருத்தறவன்தான் தைரியசாலி!"

இப்போது மீண்டும் நான் :

மேற்கண்ட பேட்டி திரு.எம்.ஆர்.ராதா அவர்களிடமிருந்து 60 களில் எடுக்கப்பட்ட ஒன்று.

சென்னை, சிந்தாதிரிப்பேட் டையில் பிறந்து வளர்ந்து, ஏழு வயதில் ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பிறகு பல கம்பெனிகள் மாறி, தனி கம்பெனி ஏற்படுத்திக் கொன்டவர் எம்.ஆர். ராதா.


நடிகர்கள் தங்களை கடவுளர்களுக்கு அடுத்தபடியான மக்களை உய்விக்கும் அவதாரங்களாக எண்ணிக் கொள்ளாத காலத்தைச் சேர்ந்த நடிகர்ளில் ஒருவர் அவர்.


இத்தனைக்கும் satirism என்ற விமர்சன வகை நடிப்பு மூலமே நடித்து,திரையுலகில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சமமான புகழுடன் விளங்கியவர் ராதா.


திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைகின்றன என்ற எண்ணமெல்லாம் சிறிதுமின்றி நாடகங்களில் சக்கைப்போடு போட்டவர்.


மக்களுக்கு திரைப்படங்களுக்கு இணையாக நாடகங்கள் மேலும் தீராத காதல் இருந்தது;நாடக உலகமும் பெரும் ஜாம்பவான்களால் நிறைந்திருந்தது.


ஆர்.எஸ்.மனோகர்,சோ.ராமசாமி,ராதா,பாலசந்தர் ஆகியோர்கள் நாடக உலகில் பின்னி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.


70 களின் துவக்கத்தில் நாடக உலகம் சிறிது சிறிதான சரியத்தொடங்கியது;நாடகம் நடத்த ஒவ்வொரு ஊராக நாடகக் குழுவினர் பயணம் செய்யும் பாடுகளை விட,திரைப்படப்பெட்டி ஒரு ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டு காண்பிக்கப்படும் வசதி,திரைப்படங்களின் வளர்ச்சிக்கு மேலும் உதவி செய்தது. இதற்கு திரைப்படம் எடுப்பதில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்களும் ஒரு காரணம் எனலாம்,இதனால் ஏகப்பட்ட படங்கள் 60 களின் இறுதியிலும்,70 களின் தொடக்கத்திலும் வெளிவர ஆரம்பித்தன.

இத்தகைய காலகட்டத்தில் நாடகம்,சினிமா ஆகிய இரண்டு துறைகளிலும் வெளுத்துக் கட்டியவர் எம்.ஆர்.ராதா.

இன்றைய நடிகர்கள் வீங்கிப்போன அவதார பிம்பங்களுடன் வலம் வந்து,அடுத்த முதல்வர் கனவுகளில் வலம்வரும் வேளையில்,ஒரு வெற்றிகரமான நடிகராக இருந்தும் எம்.ஆர்.ராதாவின் வெளிப்படையான் பேச்சும்,'என்னைப் போன்ற கிழடுகள் ஒதுங்க வேண்டும்' என்ற அவரின் கூற்று,மேலும் சினிமா தயாரிப்பு என்பது ஹீரோக்கள் கைக்குப் போகாமல் தயாரிப்பாளர்,இயக்குநர் கையில் இருக்க வேண்டும் என்பதிலும் அவருடைய தொழில் நேர்மை தெரிகிறது.

அவருடைய காரசாரமான இந்தவகை விமர்சனங்கள் இன்றைய சினிமா உலகுக்கும் பொருந்துவதுதான் வேடிக்கை !

Thursday, September 11, 2008

***** 75-In Lighter Vein-Some Cartoons

நியூ யார்க்கர் இதழின் கேலிப்படங்கள் புகழ்பெற்றவை.
சிறிது சிந்திக்க வைக்கும் நகைச்சுவை அடங்கியவை.
இதழுக்கு நன்றியுடன் சில இங்கே...

*************************************************************
இரு நாய்களின் உரையாடல் - தபால்காரர் வராததை எண்ணி !


***************************************************************


****************************************************************
***************************************************************
ஒரு மௌண சண்டை-பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒன்று !

***************************************************************
மாட்டிக் கொள்ளும் இரு ஏமாற்று சீட்டாட்டக் காரர் !




**********************************************************
விருந்துக்குக் கிளம்பும் மனைவியின் சந்தேகங்கள் !
(பல கணவன்மார்கள் சந்திக்கும் சூழ்நிலைகள்....:))



************************************************************
ஃப்ரான்ஸில் சில அமெரிக்க சுற்றுலாப் பயணிகள்




**************************************************************
ஒரு மீன்பிடிப்பாளரின் ‘பெரிய வேட்டை' !




*************************************************************
ஒரு கல்லூரி மாணவனின் கவலை !






***********************************************************
ஒரு செய்தித் தாள் விரும்புநர்-எந்த இடத்திலும் !!!!!







***********************************************************
நவீன காலக் கவலைகள்-இது உண்மையாகும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.








**************************************************************


Wednesday, September 10, 2008

***** 74.பகுத்தறிவும்,சில நுண்கலைகளும்

நமது தமிழ் மண் மிகப் பழமையான மனித குல நாகரிகமும்,பண்பாடும் கொண்ட ஒரு சமூகம் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மண்.

உலகின் மிகப் பழமையான,இன்னும் உயிர்ப்புடன் இருக்கக்கூடிய,பெரும்பாலும் தடைபடாத தொடர்ச்சி கொண்ட மொழியும்,சமுதாயமும் உலகில் மிகச் சிலவே.

அவற்றில் தமிழ் மொழியும்,தமிழ்ச் சமுதாயமும் குறிப்பிடத்தக்க அளவில் முதன்மையானவை.

இன்னும் சொல்லப் போனால் உலகின் முதல் முழு நாகரிக மனிதன் தமிழ்ச் சமுதாய மனிதனே,உலகில் முதல் முழு வளர்ச்சியடைந்த மொழி தமிழ் மொழியே என்பதற்கான சான்றுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன.(இது பற்றிய தனியே ஒரு பதிவில் எழுத உத்தேசம் இருக்கிறது.)

தமிழ்ச் சமுதாயம் உலகில் தோன்றிய பகுதி சொல்லத் தேவையன்றி இந்திய தீபகற்பத்தின் கீழ்க்கொண்டைப்பகுதி;அது கடல் கொள்வதற்கு முன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவை இணைத்த மிகப் பரந்த நிலப்பரப்பரப்பில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான கூறுகளும் கிடைக்கின்றன.

இந்த தமிழ்ச் சமுதாயம் மிகுந்த நாகரிகத்துடன் வாழ்ந்து மனித வாழ்வுக்குப் பயந்தரக் கூடிய பல நுண்கலைகளை வளர்த்து,அனுபவித்து வாழ்ந்திருக்கிறது.

இந்த 64 கலைகளுக்கும் பல பண்பட்ட அடிப்படைக் கட்டுமான விதி நூல்கள் தமிழில் இருந்திருக்க வேண்டும்.அவை என்னவாயின,ஏன் வடமொழி ஆதிக்கம் இந்தியா முழுதும் பரவின என்பதற்கான சமூக,அரசியல் காரணங்கள் பெரும் ஆய்வுக்குட்பட்டவை.(இவை பற்றி சிறிது எனது ‘தமிழும்,சிவமும் இன்ன பிறவும் என்ற தொடரில் சிறிது தொட்டிருக்கிறேன்,இது இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது.இந்த விண்மீண் வாரத்திலாவது அதை முடித்து விட உத்தேசித்திருக்கிறேன்.)

இப்போது தொடங்கிய விதயத்துக்கு வருவோம்.

64 கலைகள் என்ன என்று சிறிது ஆய்ந்தோமனால்,அவற்றின் பட்டியல் பின்வருமாறு:


அறுபத்து நாலு கலைகளாவன:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

இந்த கலைகளுக்கான வடமொழிச் சொற்களும் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப் பட்டுள்ளன.

இவற்றில் சில இன்னும் பெருமளவு பயன்பாட்ட்டில் இருக்கின்றன,சில அருகிவிட்டன.

பயன்பாட்டில் இருக்கும் சில கலைகளில் நான் தொடப்போவடுது கணிதம்,கணியம் சார்ந்த சோதிடம்,எண்கணிதம் மற்றும் கைரேகை பற்றிய சில விதயங்கள்.

இவற்றைப் படிப்பதோ,கற்பதோ அல்லது நம்புவதோ இன்றைய ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை,இவற்றை முற்றிலும் ஓட்ட வேண்டும்,இவை நமக்குத் தேவையானவை அல்ல என்பது பகுத்தறிவாளர்களின் வாதம்.

இது பற்றிய பெரும் ஒட்டு/வெட்டுப் பேச்சுகள் சமீபத்தில் பதிவுலகில் நடந்தது.

இந்த கலைகளில் ஒன்றைப்பற்றி எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்.சுப்பையா அவர்கள் பெருமளவு கேள்விகளை எதிர்கொண்டு,அவரின் பதிவுத் தொடரில் அவர் ஒரு வேறுபடுகூற்று (டிஸ்கியை இப்படி சொல்லலாம்தானே !) போட்டு எழுத வேண்டிய நிலைக்கு ஆளானார்.

இவை பற்றிய சில அலசல்களை நான் முன்வைக்க விரும்பினேன்,எனவே இப்பதிவு.

முதலில் பகுத்தறிவு என்றால் என்ன?

கண்ணதாசன் அவர்கள் தன்னுடை அர்த்தமுள்ள இந்துமதத்தில்,பகுத்தறிவு என்ற சொல் பரவலாகவும்,பெருமிதமாகவம் உபயோகிக்கப்பட்ட கால கட்டத்தில்,பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு ஒரு ‘புள்ளிக்குறி(Point Blank) விளக்கம் அளித்திருப்பார்,அதை அப்படியே கூறினால் சிலர் மனம் புண்படுமாதலால் அதைக் குறிப்பிட இயலவில்லை.

பகுத்தறிவு என்பது நமக்கு முன் உள்ள விதயங்களை அலசி,இவை நமக்கு நன்மை பயக்குமா அல்லது தீமை பயக்குமா,இந்தக் காரியத்தை கைக்கொள்ளலாமா அல்லது தள்ளலாமா என முடிவெடுக்க உதவும் அறிவு.அந்த பகுத்தறிவின் பால் பார்த்தால் இந்தக் கலைகளை முதலில் அலசி ஆராய வேண்டும்,பின்னர் அது கொள்ளத்தக்கதா அல்லது தள்ளத்தக்கதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அலசி ஆராய வேண்டுமெனில்,முதலில் அந்தக் கலைகளைக் கற்க வேண்டும்;பின் அதில் உள்ள குறை நிறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்;அவ்வாறு யோசித்து அந்த அறிவை,தனக்கான வாழ்வுக்கான நன்மை தீமைக்குப் பயன்படுத்துதல்தான் பகுத்தறிவே தவிர,அந்தக் கலைகளைப் படிப்பவரை அல்லது பயிற்சி கொள்பவரை நிந்திப்பது பகுத்தறிவு அல்ல.

கடலில் பயணம் செய்கிறோம்;வானிலை மிக மோசமாக இருக்கிறது,பெரும்புயல் அடிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது எனபதைச் சொல்வது ஒரு கலையில் தேர்ச்சி பெற்றவர் அளிக்கும் அறிவு;அதைப் பகுத்தறிந்து இந்தப் பயணத்தைக் கொள்ளலாமா அல்லது தள்ளலாமா என முடிவெடுப்பது,தன் சொந்த முடிவு;அது அந்த கலையாளரின் முடிவுக்குட்பட்டதல்ல.

இதை மறந்து அந்தக் கலை அல்லது கலையாளர் பகுத்தறிவுக்கப்பாற்பட்டு நடக்கிறார் என்பது,சொல்பவருக்கு உண்மையில் பகுத்து அறியும் அறிவு இருக்கிறதா அல்லது அவர் பிறர் சொல்வதைக் கேட்டு ஒப்பிக்கும் கிளிப்பிள்ளை போன்றவரா என்ற கேள்வியை எழுப்பக்கூடிய ஒன்று,உண்மையான பகுத்தறிவின் படி !

இதில் கலையாளரின் குறைபாடுகளுக்கு வாய்ப்புண்டு-உண்மையில் அதுதான் பெரிய குறை-இந்த சூழலில் இரண்டு வித வாய்ப்பு(Choice) பொதுவானவர்களுக்கு இருக்கிறது:

-ஒன்று இந்தக் கலையறிவு அளிக்கும் முடிவு வாய்ப்புகள் எனக்குத் தேவை அல்ல;நான் இவை அன்றியே முடிவெடுக்க முடியும் என்பது.

-அல்லது இக்கலையாளரின் கலைத் தேர்ச்சி குறைபாடுடையது,நல்ல தேர்ச்சியாளரை நாடுவேன்;அல்லது நானே இக்கலையை முடிந்த அளவு கற்று அதன் பயன்/அபயனை அறிய முயற்சிப்பேன் என்பது.

இவ்வகையில் இந்தியாவில் மட்டுமல்ல சில மேற்கத்திய கலையாளர்கள் கூட இக்கலைகளில் அபூர்வத் தேர்ச்சி பெற்று மனித குலத்திற்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.(கெய்ரோ-எண்கணிதம்/கைரேகை ,பி.வி.ராமன் - சோதிடம் ...)

இந்த இரண்டிலும் இல்லாத மூன்றாவதான,இந்த குறைபாடுடைய கலையாளரை உதைப்பேன் என்பது வன்முறையின் பாற்பட்டதே தவிர பகுத்தறிவின் பாற் பட்டதல்ல.

அல்லது அப்படி உதைக்க முற்பட்டால்,அந்தக் கலையாளரின் தரப்பு அதை விட மிகுந்த வன்முறை காட்டக் கூடிய வாய்ப்பிருந்தால்,தானே உதைபட வாய்ப்பிருக்கிறது என்பதை வேண்டுமானால் பகுத்தறிவின் பாற்பட்ட முடிவாக கருத முடியும்.

:))))

எனவே இந்த வகையில் பார்க்கும் போது,இந்த ‘அலசி ஆராயும் பகுதிக்கு வெளியே நின்று கொண்டே,இவை மனித சமுதாயத்திற்குத் தேவை இல்லை,என முன் முடிவுக்கு வருவதுதான் பகுத்தறிவா என்பதில் எனக்கு மிகுந்த ஐயப்பாடு இருக்கிறது.

நான் மேற்சொன்ன இரண்டாம் வித வாய்ப்பை மேற்கொள்ளும் வகை.

கண்ணை மூடிக் கொண்டு ஒன்றை ஆதரிப்பதோ,விலக்குவதோ பொதுவாக நன்மை பயப்பதில்லை,அதற்கான அறிவிக்கப் பட்ட சான்று இருக்கும்வரை ! நெருப்பில் கை வைத்தால் சுடும் என்பது அறிவிக்கப் பட்ட சான்று,ஆனால் சோதிடக் கலையைப் படித்தால் செத்துப் போவாய் அல்லது உருப்படாமல் போவாய் என்பதற்கான அறிவிக்கப் பட்ட சான்று இருந்தால் அவற்றைத் தள்ளலாம் !

இனி,இவற்றை ஆய்வதால்(கவனிக்கவும்,நம்புவதால் அல்ல !) என்ன பயன் அல்லது அபயன்கள் விளையக் கூடும் ??

பொதுவாக மனிதர்களில் சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றன.நமது ப்ண்டைய அறிவு இந்த பொதுவான குணாதிசயங்களை வரிசைப்படுத்த முயன்று கிடைத்த வ்டிகட்டப்பட்ட(Trial & Error filteration) அறிவுதான் சோதிடம் போன்ற கலைகள் என்பது என் அறிந்த முடிவு.

இது கணித நிகழ்தகவின்(Probability) விதிகளுக்கு உட்பட்டது,ஏனெனில் இது மனித சமுதாயம் தோன்றிய காலத்தில் இருந்து,பல்வகைப்பட்ட மனிதர்களை அவ்ர்களின் வாழ்வை ஆய்ந்து,அந்த முடிவுகளை அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை வகைப்படுத்தி வந்த சில முடிவுகளின் தொகுப்பு.இந்த விதிகளின் கூறுபாடுகள் அல்லது விளைவுகள் நிகழ்தகவு வாய்ப்புக்கு வெளியே இருக்கும்,சூழலும் மறுக்கப்படக் கூடியதல்ல.(The decision arrived at based on these arts can still fall outside of the probable decision domain, in which case they prove to be false) ஆனால் இதற்கான வாய்ப்புகள் எவ்வளவு என்பது,இந்தக் கோட்பாடுகள் எவ்வளவு முறை பயன்படுத்திப் பார்க்கப் பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அமையும்.

இந்தக் கோணத்தில் சிந்தித்தால்,மனித சமுதாயத்தின் காலம்,நாகரிக தமிழ்ச் சமுதாயத்தின் காலம் இரண்டும் பெருமளவு ஒத்துப் போகும் வாய்ப்புகள் இருப்பதால்,பயன்பாட்டுக் குறைபாடு (Error of Judgement ) பெருமளவு குறைந்தே இருக்கும் என்பது என் அறிந்த முடிவு.

சரி,இக்கலைகளினால் என்ன பயன்?

சில குறியீடுகள் இக்கலைகளால் கிடைக்கிறது என்பது என்னுடைய அனுபவ உண்மை.


காட்டாக, கைரேகை விதிகளின் படி மெல்லிய நீண்ட, நகங்களும் விரல்களின் கீழ்ப்பகுதியும் நேரான கோட்டில் இருக்கும் படி அமைந்த நேரான விரல்களும், தொடுதலுக்கு மென்மையான உள்ளங் கைகளும் கொண்ட நபர்கள் நுண்ணறிவும்,கலைகளின் மீதான ஈடுபாடு/தேர்ச்சி கொண்டவர்களாகவும்,எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்பினராகவும் இருப்பார்கள் என்பது ஒரு விதி.

இது அனுபவத்தில் பெரும்பாலும் சரியாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

அதே போல் 2ம் தேதி பிறந்த நபர்கள் பெரும்பாலும் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும்,எளிதில் திடமான முடிவெடுக்காத வழவழா நபர்களாகவும் இருப்பார்கள் என்பது எண்கணித விதி.

இதுவும் என் அனுபவத்தில் பெரும்பாலும் சரியாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.

இதே போல் இந்த வகையில் 2ம் தேதி பிறந்த நபர்களின் சோதிடக் கட்ட அமைப்பில் சந்திரன் வலுவான இடத்தில் இருக்கும் பட்சத்தில் இந்த குணாதிசயங்கள் சோதிட ரீதியாகவும் மறு உறுதிப்படுத்தப்(Re-confirmed)படுகின்றன.

இதே போல் தேதி 4ல் பிறந்தவர்கள் மிகவும் உறுதியான மனம் படைத்தவர்களாகவும்,எதிலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கும் திறமை பெற்றவர்களாகவும்,பல்துறை அறிவைத் தேடிப் படிக்கும் வழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது ஒரு விதி.

இவ்வகை நபர்கள் புதன் வலுவாக அமைந்த சாதக் கட்டத்தைக் கொண்டிருந்தால்,அது மறு-உறுதிப்படுத்தும் சுட்டியாக இருக்கும்.

எனவே,இந்தக் கலைகளை கண்ணை மூடிக் கொண்டு மறுப்பதுதான் பகுத்தறிவுக்கு மீறிய செயல்;இவற்றை ஆராய்ந்து அவை நமக்கு ஏதேனும் செய்திகள் சொல்கின்றனவா எனப் பார்ப்பது பகுத்தறிவின்பாற் பட்டது என்பதே நான் சொல்ல விழைவது....

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...