குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, January 20, 2008

40.யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும்

தெகா யோகா பற்றிய ஒரு பதிவு போட்டு,பாரி அரசு முதலான சிலர் அதற்கு சில எதிர்வினைகள் செய்ய,நானும் எனது கருத்துக்கள் சொல்ல,ஒரு பெரிய பின்னூட்டப் போட்டியும், ‘உம் பேச்சு கா’ போன்ற வகையான எதிர்-எதிர் வினைகளும் வர,சொல்ல விரும்பியவற்றை விளக்கமாகவே சொல்லி விடலாம் என்று இந்தத் தனிப் பதிவு.

இதில் யோகம் பற்றி நான் படித்து அறிந்தவைகளும்,நான் அனுபவித்து அறிந்தவகைகளும் பெரிதளவாகவும்,அதனைப் பற்றிய எனது மேலதிக கருத்துக்கள் சிறிதளவும் உண்டு.

கருத்து 1:
யோகப் பயிற்சி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்களைப் போன்ற பலன்களை எளிதாகத் தருகிறது.

நானறிந்தது:

யோகப் பயிற்சி உடற்பயிற்சி செய்வதால் கிடைப்பது போன்ற பலன்களைத் தருவதில்லை;அதைவிட சிறந்த பலன்களைத் தருகிறது.ஏனெனில் உடற்பயிற்சி செய்வதால் உடலின் தசைநார்கள் கசக்கப்பட்டு முறுக்கேற்றப் பட்டு கெட்டித்தன்மை அடைவதோடு தேவையற்ற உபரி தசைகள்,கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் வடிவுடன் கூடிய தசைக்கட்டமைப்பைப் பெறுகிறது.
நாளாவட்டத்தில்,உடற்பயிற்சி செய்வது குறைந்தால்,அல்லது நின்றுவிட்டால் மீண்டும் அதிகப்படி எரிக்கப்படாத சக்தி கொழுப்பாக தசைகளில் சேகரிக்கப்பட்டு,எந்தெந்த உடலின் பகுதிகள் அதிக அசைவோ கசக்கப்படலோ இல்லாமல் இருக்கின்றனவோ(ஆண்களுக்கு பெரும்பாலும் அடிவயிற்றில் ஆரம்பித்து,மேல்வயிறு வரை வயிற்றின் மூன்று பாகங்கள்,மற்றும் இடுப்பு,பிருஷ்டம்,அந்த நிலையையும் தாண்ட,தொடைகள்,கழுத்து,கன்னங்களுக்குக் கீழ்ப்பகுதி மற்றும் மார்பு,பெண்களுக்கு முதலில் பிருஷ்டம்,இடுப்பு,வயிறு,தொடைகள்,மேல் கைப்பகுதி ,கழுத்து,கன்னங்களின் கீழ்ப்பகுதி என்ற வரிசையில்..)அங்கு தசைக்கூட்டம் சேர்கிறது.

உடற்பயிற்சி அதிக அளவு சக்தி/கொழுப்பை எரித்து தசைகளின் சமசீர்த் தன்மையை நிலைநிறுத்துகிறது.ஆனால் அது உடலின் உட்கருவிகளில் எந்த முன்னேற்றத்தையோ,சிறப்பான உபயோகத்தன்மையையோ தூண்டுவதில்லை;எடுத்துக்காட்டாக சிறுநீரகங்களையோ,பித்தப்பையையோ சிறப்பாக வேலை செய்ய வைத்து அவற்றின் ஆரோக்கியத்தை நிலை நிறுத்துவதோ,உச்ச பட்ச திறனிலோ-optimized utility value status- வைப்பதில்லை.

யோகப்பயிற்சியோ 25 சதம் வெளிப்புற தசைகள் மற்றும் 75 சதம் உட்புற கருவிகள்,சுரப்பிகள் முதலியவற்றில் செயல் புரிகிறது.எனவே முதலில் உடலின் உட்கருவிகளின் உச்சபட்ச செயல்பாட்டுத் திறன் காக்கப்படுகிறது;பின்னரே உடலின் தசைகளின் மேல் யோகப் பயிற்சி செயல்படுகிறது.

எனவே தொடர்ச்சியாக யோகப் பயிற்சி செய்வோரின் உடலியக்க நிலை optimized status ல் இருக்கிறது.

இதன் காரணமே உடற்பயிற்சி செய்பவர்கள் கூட சிலநேரம் நீரிழிவு போன்ற நோய்களுக்குள்ளாவது நேரிடுகிறது;ஆனால் தொடர்ச்சியாக சர்வாங்காசனம் செய்துவரும் ஒருவருக்கு சாதாரணமாக-அவர் தன்னுடலை விரும்பிக் கெடுத்துக் கொண்டாலொழிய-நீரிழிவு வர வாய்ப்பில்லை.

எனவே யோகப் பயிற்சி உடற்பயிற்சியை விட பல மடங்கு நல்லது.
ஆனால் யோகப் பயிற்சியையும் உடற்பயிற்சியையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது;காரணம் உடற்பயிற்சியின் நோக்கமும் செயல்பாடும் முழுக்க முழுக்க இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி,சக்தியை எரிக்கச் செய்து,அதிகப்படி கொழுப்பைக் கரைப்பதே;ஆனால் யோகத்தில் சில நேரம் அதிக சுவாசமும்,சில நேரம் மட்டான நிதான சுவாசமும்,செய்யும் ஆசனங்களைப் பொறுத்து பரிந்துரைக்கப் படுவதால்,இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வதால் இரத்த ஓட்டத்தில் ஒத்திசைவு பாதிக்கப்படும்.எனவேதான் அதைத் தவிர்க்கும் ஆலோசனை.

கருத்து 2:
யோகப்பயிற்சி,மூச்சுப்பயிற்சி,தியானம் இவற்றின் வரிசைக்கிரமம்:
முதலில் மூச்சுப்பயிற்சி,பின்னர் யோகப்பயிற்சி அதன்பிறகு தியானம் என்பதே சரியான வரிசை.

நானறிந்தது:
யோகப் பயிற்சிக்கு நல்ல காற்றொட்டமுள்ள,ஆனால் தூசிகள் நிலவாத,நேரடி வெயிலில் இல்லாத சூழல் ஏற்றது.
மூச்சுப்பயிற்சியும் யோகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை;ஏனெனில் இரண்டும் உடலியக்கத்தின் பாற் பட்டவை.தியானம் என்பது மனோ இயக்கத்தின்பாற் பட்டது;எனவே யோகப் பயிற்சியோடு தியானப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது தேவையற்றது.ஆனால் தொடர்ந்த யோகப்பயிற்சி மனதை,சிந்தனையை எளிதான தியான நிலைக்கு அழைத்துச்செல்ல உடலை ஏதுவாக்குகிறது.

இனி வரிசைக்கிரமத்தில் யோகப் பயிற்சி (சூர்ய நமஸ்காரம் போன்ற) எளிய ஆசனங்களுடன்ஆரம்பித்து சிரசாசனத்தில்(பொதுவாக) முடிந்து,பின்னர் மூச்சுப்பயிற்சி அல்லது பிராணாயாமம்,அதன்பின் சவாசனம்-அதாவது உடலை முழுதாக சவம் போன்ற நிலைக்கு கொண்டு செல்லல்- என்ற வரிசையே யோகத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
காரணம் எளிய ஆசனங்கள் முதல் கடின ஆசனங்கள் வரை உடலின் பல கருவிகளும்,சுரப்பிகளும் தூண்டப்படுகின்றன;கடைசியாக செய்ய வேண்டிய சிரசாசனம்-தலை கீழாக நிற்றல்- உடலின் ரத்தம் முழுமையையும், புவியீர்ப்பு விசையைத் தனக்கு உதவி செய்ய வைத்து,மூளையை நோக்கி செலுத்தி,சாதாரண நிலையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேலே செல்ல வேண்டிய ரத்தம் மூளையின் சகல நரம்பு மண்டலத்திற்கும் செல்வதில் இருக்ககூடும் ஏதேனும் சிறுசிறு குறைகளையும் தகர்த்து மூளையின் சகல நரம்புகளிலும் முழுதான ரத்த ஓட்டத்தைத் தருகிறது.

இதன்பிறகு பிராணாயாமம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்யும் போது,யோகப் பயிற்சியின் போது அந்தந்த ஆசனங்களின் காரணமாக நடந்த விரைவு ரத்த ஓட்டம்,மெதுவான ரத்தஓட்டம் ஆகியவை சமன்செய்யப் பட்டு,இரத்த ஓட்டம் சீரடைகிறது.

பின்னர் செய்யப் படும் சவாசனம் ,மூச்சு விடுதலைத் தவிர,உடலின் சகல இயக்கங்களையும் நிறுத்தி உடலை ஆசுவாசப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

சில மேலதிகக் குறிப்புகள் :

*யோகப் பயிற்சியின் மூலம் குடலை நேரடியாகச் சுத்தம் செய்யும் முறை,நன்கு மழுப்பப்பட்டு,எண்ணை தடவப்பட்ட,ஒரு மூங்கில் குழாய்(ஆசனவாய் மூலம் எனிமா கொடுப்பது போல) உதவி கொண்டு யோகத்தின் மூலம் ஆசனவாயின் மூலம் தண்ணீரை பெருங்குடல் வரை உள்ளிழுத்து,நாள்பட்ட மலச்சிக்கல்களினால் ஏற்பட்டிருக்கும் கசடுகளையும் வெளியேற்றும் வழி கூட பரிந்துரைக்கப்படுகிறது.இதைக் கேட்டு தற்காலத்தில் பலர் சிரித்து எள்ளக் கூடுமெனிலும் இது உண்மை.யோக நிபுணர்கள் இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சாதாரணமாக செய்து கொண்டிருந்தார்கள்.

*பிறவிக் குறைகளான இரத்த சோகை,பெற்றொரிடமிருந்து பெற்ற நீரிழிவு,கண்பார்வைக் கோளாறுகள்,ஈஸ்னோபீலியா என்றழைக்கப்படும் மூக்கடைப்பு சார்ந்த இளைப்பு,கண்களுக்கு மேல் நீர் கட்டுதல்,பெண்/ஆண் மலட்டுத்தன்மை (உரிய மருந்துகளின் உதவியோடு) போன்ற நோய்கள் முற்றாகக் குணமடையும் வாய்ப்புகள் உண்டு;ஆனால் பொறுமையும்,விடாமுயற்சியும் அவசியம்.

*யோகப் பயிற்சியில் ஆசனங்கள் சொல்லியிருக்கும் நிலையை-position- முற்றாக அடைந்தால்தான் பலன் உண்டு என்பதல்ல;முழு நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பதோடு,எந்த அளவில் முயற்சி செய்தாலும் யோகத்தின் பலன் உண்டு.எனவே முதல் நாளே ஹலாசனத்தில் கால்கள் செங்குத்தாக மேல்நோக்கி நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை;சிறுகச் சிறுக பழகலாம்,பழகிய அளவில் பலன் உண்டு.

ஆர்வமுடையவர்கள் திரு யோகாச்சார்யா சுந்தரம் அவர்கள் எழுதிய சுந்தர யோக சிகிச்சையை நாடலாம்;ஆசனங்கள் செய்யும் வழிமுறைகள்,உடலியக்க 'அரசியல்'(அப்பாடா,நானும் 'சூப்பர்' வலைப்பதிவர்!) ஆகியவற்றை விளக்குவதோடு,பெரும்பாலான தீர்க்க முடியாதவை எனக் கருதப்படும் நோய்களுக்கும் யோக சிகிச்சைத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ள மிக அருமையான புத்தகம்.புத்தக ஆர்வலர்களின் வாழ்நாள் சேகரிப்புக்கான பரிந்துரை.


(அப்பாஆஆஆ,,,போதுமடா சாமி,ரொம்பக் கண்ணக் கட்டுது !!!!!!!!!)

Friday, January 18, 2008

39.பெரியண்ணன் வீட்டில் சிரமதசை

அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக அடி வாங்கி வருவதும்,அதன் டாலர் மதிப்பு உலகின் பெரும்பாலான நாணயங்களுக்கெதிராக குறைந்து வருவதும் நாமெல்லோரும் அறிந்ததே.இதன் விளைவாக இந்திய ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 29 சதத்திலிருந்து 22 சதமாக குறையலாம் என்று கணிப்புகள் சொல்கின்றன.

இந்த மோசமான சூழலுக்கு,சரிந்துவிட்ட சந்தை விற்பனை முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது;விற்பனை சரிவு மக்களின் கைகளில் செலாவணி/பணம் இல்லாத நிலையால் வருகிறது.

இதன் விளைவாக அமெரிக்க குடியிருப்புக் கட்டுமானத் துறை,கடுமையான விளைவுகளைச் சந்தித்து விலைகள் சரிந்து கொண்டு இருக்கின்றன.

இன்னொரு புறம் கனிம எண்ணையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான விலையேற்றம்;ஒரு கேலன்/பேரல் அளவில் சுமார் 46 டாலராக இருந்த எண்ணை விலை இப்போது 91 டாலராக இருக்கிறது.இந்த விலையேற்றம் உற்பத்தித்துறையை கடுமையாகப் பாதித்து லாப விகிதங்களை பெருமளவு குறைப்பதோடு,சந்தை விலையையும் ஓரளவிற்கு ஏற்றுகிறது;விளைவு உபயோகிப்பாளர் கையிலும் பண இருப்பு குறைகிறது,முதலாளிகளும் குறைந்த லாபமே பார்க்க முடிகிறது;முதலாளிகள் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு விலை ஏற்றவும் முடியாது,ஏனெனில் விற்பனை ஏற்கனவே சரிந்து கிடக்கிறது.இப்படி ஏகப்பட்ட சிரமதசையில் இருக்கிறது பெரியண்ணன் வீடு !


அமெரிக்க நாட்டின் தலைமை மற்றும் அரசின் வங்கிக்கு ஃபெடரல் வங்கி என்பது பெயர்.கிரீன்ஸ்பான் என்ற மகானுபவர்,அவர் ஓய்வடைந்த(2005 என நினைக்கிறேன்) காலம் வரை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஃபெடரல் வங்கியின் தலைவராக இருந்தார்.அமெரிக்க தேசத்தின் பொருளாதார உச்சங்கள் மற்றும் வீழ்ச்சிகளைக் கடந்து வந்த அவரின் பொறுப்புக் காலம்,அவருக்கு ஒரு உச்ச பிம்பத்தைக் கொடுத்திருந்தது;வட்டி விகிதங்கள் மாறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சமயங்களில் அவர் தும்மினால் கூட பங்குலகமும்,டாலர் மதிப்பும் ஏறி,இறங்கி பில்லியன் டாலர்கள் கணக்கில் பலருக்கு லாபமோ,இழப்போ ஏற்பட்ட சூழல்கள் உண்டு.

சுமார் 2 சதவிகிதமாக இருந்த அமெரிக்க வட்டி விகிதத்தை சுமார் 6 சதம் வரை உயர அவரின் பணிக்கால கடைசி ஆண்டுகளின் நடவடிக்கைகளும் காரணம்.

அமெரிக்காவில் ஃபெடரல் வங்கியின் தலைவர் வங்கி எடுக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்காகவும்,பொருளாதார நிலை பற்றியும் குறித்த இடைவெளிகளில் அமெரிக்க காங்கிரஸ்-செனட் சபை-க்கு விளக்கம் அளிக்க வேண்டும்;அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்களின் சந்தேகங்கள்,அச்சங்கள் பற்றிய வினாக்களை எழுப்பி ஃபெடரல் தலைவரின் கருத்துக்கள்,முடிவுகளைக் கேட்பார்கள்.இந்நேரங்களில் ஃபெடரல் வங்கி தலைவர்கள் அளிக்கும் ஒவ்வோரு வார்த்தையிலும் பங்கு மற்றும் செலாவணி சந்தை பல குட்டிக்கரணங்கள் அடிக்கும்.


தற்போது ஃபெடரல் வங்கித் தலைவராக பென் பெர்னாக்கி(கே) இருக்கிறார்.முக்கால் வழுக்கைத் வெளுப்புத் தாடிக்காரரான இவர் நேற்றிரவு அமெரிக்க காங்கிரஸுக்கு அளித்த உரையில், சரிந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை சீர் செய்ய சில அவசரகால நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.மேலும் வட்டி விகிதங்கள் சுமார் 0.5 சதத்திலிருந்து 0.75 சதம் வரை ஒரே வீச்சில் குறைக்கப்படலாம் என்ற வதந்திகள் உலவுகின்றன.சாதாரணமாக வட்டி விகித மாற்றங்கள் 0.25 சத பரிமாணங்களில்தான் மாற்றப்-அதிகரிக்கவோ,குறைக்கவோ-படும்,என்பதை கருதும் போது ஃபெடரல் வங்கி எத்தகைய ஒரே வீச்சு-sweeping action- நடவடிக்கைகளை யோசித்துக் கொண்டிருக்கிறது என்பது புரியும் !!!
பொருளாதார மந்தநிலை சற்றேனும் சீராக வேண்டுமெனில் மக்களின் கைகளில் புழங்கும் பணத்தைக் கூட்டியாக வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கிறது அமெரிக்க உள்நாட்டு வர்த்தக நிலை.

சுமார் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வரிகளில் வெட்டு போன்ற நடவடிக்கைகளை, பதவியின் கடைசிக்காலத்தில் இராக்,ஆப்கன் போன்ற ஏகப்பட்ட தலைவலிகள்,திருகுவலிகளில் அகப்பட்டிருக்கும் புஷ் யோசித்துக்கொண்டிருக்கிறார்.

அமெரிக்கப் பொருளாதார நாடகத்தில் புதிய காட்சிகளின் அரங்கேற்ற வேளை இது !

Saturday, January 5, 2008

38.ரூபாய்-டாலர் கண்ணாமூச்சி நல்லதா?

இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த சில மாதங்களில் சுமார் 14 சதத்தை எட்டியிருக்கிறது.ஒரு டாலரின் விலை 45 ரூபாயிலிருந்து தற்போது சுமார் 39 ரூபாய்க்கு வந்திருக்கிறது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்த பொருளாதார விளைவால் கடும் பாதிப்படைந்துள்ளதாக புகார் செய்து அரசிடமிருந்து மானியம் வேண்டினார்கள்.
இந்திய நிதி அமைச்சகம் ஆரம்பநிலையில் சிறிது நிவாரணம் அறிவித்ததென நினைக்கிறேன்;ஆனால் பிறகு நிதி அமைச்சர் ப.சி. இத்தகைய நிவாரணங்களை அரசிடம் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல என்றும்,அவர்கள் இந்த விளைவுகளுக்கேற்ற தொழில் உத்திகளைக்(டாலருக்குப் பதிலாக யூரோ அல்லது பவுண்ட் கணக்கில் ஏற்றுமதி செய்வது அல்லது டாலரின் வீழ்ச்சியை கருத்தில் கொண்ட விலைத்தகவுகள்) கையாள வேண்டும் எனவும் அறிவித்தார்.
இது சம்பந்தமாக ரூபாய் மதிப்பு டாலருக்கெதிராக உயர்வது நல்லதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாததாகிறது.
இந்த நிலையில் குருமூர்த்தியின் பின்வரும் கருத்துக்கள் சிந்திக்க வேண்டியன.

கடந்த பல மாதங்களாகப் பத்திரிகைகளில் ரூபாய் மதிப்பு உயர்வு, டாலர் மதிப்பு சரிவு, டாலர் விலை குறைவதால் ஏற்றுமதி பாதிப்பு என்பது பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டாலர் விலை குறைவு என்பது,
நம் நாட்டைப் பொறுத்தவரையில் ரூபாய் மதிப்பு அதிகம் என்று அர்த்தம்.

கடந்த 2007 பிப்ரவரி மாதத்தில் ஒரு டாலர் விலை ரூ.45 என்று இருந்தது. இன்று
ஒரு டாலர் விலை, ரூபாய் கணக்கில் ரூ.39.50 என்று குறைந்திருக்கிறது. அதாவது கடந்த 10 மாதங்களில் டாலர் விலை, ரூபாய் கணக்கில் 12 சதவிகிதத்திற்கு மேல் குறைந்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவிலிருந்து ஒருவர் இங்கு வந்து எனக்கு ரூ.450 வேண்டும்; அதற்கு டாலர் விலை என்னவோ அதைக் கொடுத்துவிடுகிறேன்' என்று கேட்டால், அவருக்கு என்ன விடை கிடைக்கும்? ரூபாய் 450க்கு டாலர் கணக்கில் 10 டாலர் ஆகிறது. நீங்கள் 10 டாலர் கொடுத்தால் உங்களுக்கு 450 ரூபாய் கிடைக்கும். அதே அமெரிக்க நண்பர் இப்போது வந்து ரூ.450 வேண்டும்' என்று கேட்டால், அவர் 11.40 டாலர் கொடுக்க வேண்டும்.

ஆக, அதிக டாலர் கொடுத்து அதே அளவு ரூபாயைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால், இது நாட்டுக்கு நல்லதா, கெட்டதா என்கிற கேள்வி எழுகிறது. காரணம், டாலர் விலை குறைவு ஏற்றுமதியைப் பாதிக்கிறது.

பிப்ரவரி மாதம் டாலர் கணக்கில் ஏற்றுமதி ஒப்பந்தம் செய்து, மே மாதம் சரக்கை ஏற்றுமதி செய்தவர்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் டாலர் விலை குறைந்ததால், என்ன ஆயிற்று? அவர்கள் ஏற்றுமதி செய்த சரக்குக்கு ரூபாய் கணக்கில் விலை குறைவாகக் கிடைத்து, நஷ்டம் அடைந்தார்கள். இதைக் கடந்த வாரம் பார்த்தோம். இந்த சங்கடத்திற்குக் காரணம் டாலர் விலையின் மதிப்பில் திடீரென மாற்றம் ஏற்பட்டதுதான்.

டாலர் விலை ஒரே சீராக, கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து, ரூபாயின் மதிப்பு
உயர்ந்திருந்தால், இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்காது.

சந்தைக்கு வந்த அதிகப்படி டாலர்களை மத்திய அரசின் கொள்கைப்படி கொள்முதல் செய்தது ரிசர்வ் வங்கி. இதனால் டாலர் மதிப்பை செயற்கையாக உயர்த்தி, ரூபாய் மதிப்பு செயற்கையாக அமுக்கி வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், அமுக்கப்பட்ட ரூபாயின் மதிப்பு திடீரென வெடித்ததால், ஏற்றுமதியாளர்களுக்கு எதிர்பாராத பிரச்சனை உருவெடுத்தது அரசின் தவறான கொள்கையால்தான். ரூபாயின் மதிப்பு உயர்வதும் தவறு; டாலரின் மதிப்பு குறைவதும் தவறு என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

சில சமயங்களில் ரூபாய் மதிப்பு, அளவுக்கு அதிகமாக உயர்வது நாட்டின் நலனைப் பாதிக்கலாம். ஆனால் பொதுவாக ரூபாய் மதிப்பு உயர்வதும், டாலர் மதிப்பு குறைவதும் நமது நாட்டுக்கு நல்லது. இரு உதாரணங்கள் மூலம் இதை விளக்கலாம் :

உதாரணம் 1 : 2007 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் நாம் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் டாலர் மதிப்பு சரிந்து, ரூபாய் மதிப்பு
உயர்ந்ததால், நமக்கு 14,200 கோடி ரூபாய் மலிவாகக் கிட்டியது. இதன் காரணமாகத்தான் உலகளவில் டாலர் கணக்கில் பெட்ரோல் விலை கிடுகிடுவென்று உயர்ந்த பிறகும், நம் நாட்டில் அந்த மாதங்களில் பெட்ரோல் விலையை அந்த அளவுக்கு உயராமல் பார்த்துக்கொள்ள முடிந்தது.

இதன் சூத்திரம் இதுதான். பெட்ரோல் விலை டாலர் கணக்கில் 20 சதவிகிதம்
உயர்ந்தது. ஆனால் டாலர் விலை ரூபாய் 12 சதவிகிதம் சரிந்தது. அதனால் பெட்ரோலின் விலை கூட்டிக் கழித்துப் பார்த்தால் குறைவாகவே உயர்ந்தது. இல்லையென்றால், குறைந்தபட்சம் 15.20 சதவிகிதமாவது உயர்ந்திருக்கும்.
ஆனால் மார்க்ஸிஸ்ட்களோ, மற்றவர்களோ ரூபாய் மதிப்பு உயர்வினால் ஏற்பட்ட மாற்றத்தினால்தான் பெட்ரோல் விலை ஏறவில்லை என்று கூறமாட்டார்கள்.
தங்களால்தான் உயரவில்லை என்று கூறுவார்கள். ரூபாய் மதிப்பு உயர்வதால், பொதுநன்மை ஏற்படுகிறது என்பது யாருக்கும் புரிவதில்லை. ஆனால் இதுபற்றிய பெரிய வரவேற்போ, அட்டகாசமான செய்திகளோ கிடையாது.

மாறாக திடீரென்று ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் அதுவும் அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாக அது திடீரெனறு ஏற்றுமதியாளர்களைப் பாதித்ததால்
ரூபாய் மதிப்பு உயர்வு தவறு என்ற கருத்து பலமாகப் பரப்பப்படுகிறது. ரூபாய் மதிப்பு குறைவால், பெட்ரோல் விலை அதிகரிக்கும். அதன் மூலமாக பொதுவிலைவாசி உயரும். இது பின்பு ஏற்றுமதியையும் பாதிக்கும். அதற்காக செயற்கையாக ரூபாய் மதிப்பைச் சரியாமலோ, அல்லது உயர்த்தாமல் இருக்கவோ அவசியமில்லை. இப்படிச் செய்யவும் கூடாது.

உதாரணம் 2 : ரூபாயின் மதிப்பு உயரும்போது, நமது நாடு வெளிநாடுகளுக்கு டாலர் கணக்கில் கொடுக்க வேண்டிய கடன் சுமை குறைகிறது. 2007 மார்ச் 31 வரை நாம் வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை 155 பில்லியன் டாலர்கள், (அதாவது 15,500 கோடி டாலர்கள்.) ஒரு டாலருக்கு ரூ.45 என்று 2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்த நிலைப்படி இந்த கடன் ரூபாய் கணக்கில் ரூ.6,97,500 கோடி. ஆனால், அதே டாலர் கணக்கிலான கடன் இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.85,250 கோடி குறைவு. இதற்கு என்ன அர்த்தம்? நம் ரூபாய் மதிப்பு உயர்ந்தால், நாம் டாலரில் கொடுக்க வேண்டிய கடன் தொகை குறையும். இந்த நல்ல செய்தியை யார் வரவேற்கப் போகிறார்கள்! பொதுவாக நாட்டுக்குத்தானே நல்லது ஏற்பட்டுள்ளது!

எப்படி ஒரு கம்பெனியின் பங்கு விலை ஏறும்போது, அந்தக் கம்பெனிக்கு மகத்துவம் ஏற்படுகிறதோ, அதுபோலவே ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பு உயரும்போது அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பும் உயரும். இதனால் உலகரங்கில் நாட்டின் மரியாதை உயரும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வளரும்போது, அதனுடைய நாணயத்தின் மதிப்பும் உயரத்தான் செய்யும். ஒரு நாட்டில் அந்நிய நாட்டின் முதலீடு அதிரிக்கும்போது,
அந்நாட்டின் நாணய மதிப்பும் உயரும்.

பொதுவிதிகளுக்கு மாறாக, நமது அரசாங்கம் வேண்டுமென்றே டாலர் மதிப்பை செயற்கையாக உயர்த்தியும், ரூபாய் மதிப்பை செயற்கையாகக் குறைத்தும்
வந்ததால்தான், நம்முடைய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு தாற்காலிகமான நெருக்கடி ஏற்பட்டது. ரூபாய் விலை உயர்வது பொதுவாக நல்லது என்பதை அவர்களும் உணர வேண்டும். திருப்பூரிலும், கரூரிலும், சூரத்திலும், லூதியானாவிலும், கான்பூரிலும், ஆக்ராவிலும் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் திடீரென்று ஏற்படும் டாலர் விலை சரிவு ஆபத்தை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அந்த ஆபத்தை எப்படிக் கணிப்பது? அந்த அறிகுறிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1. உலக அளவில், தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருந்தால், உலக அளவில் டாலர் விலை சரிகிறது அல்லது சரியப்போகிறது என்று அனுமானம் செய்யலாம். பெட்ரோல், கச்சா எண்ணெய் விலை உலக அளவில் உயர்ந்தாலும், டாலர் மதிப்பு சரிகிறது அல்லது சரியப்போகிறது என்று அனுமானிக்கலாம். இதனால் ரூபாய் மதிப்பும் உயரும் என்றும் எதிர்பார்க்க வேண்டும்.

2. மற்ற நாணயங்கள் (யூரோ, ஸ்டெர்லிங்) கணக்கில் டாலர் விலை குறைந்தால், ரூபாய் கணக்கிலும் டாலர் விலை சரியும் என்று எதிர்பார்க்க வேண்டும்.

3. நம் நாட்டில் வெளிநாட்டு மூலதனம் அதிகமாக அதிகமாக,
அந்நியச் செலாவணி கையிருப்பு உயர உயர, ஏற்றுமதி அதிகரிக்க, அதிகரிக்க, நம்முடைய ரூபாய் மதிப்பும் அதிகமாகும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

4. அமெரிக்கப் பொருளாதாரம் சீரழிய சீரழிய டாலர் மதிப்பு குறையும். அமெரிக்கா அதிக அளவு கடன் வாங்க வாங்க, அமெரிக்க சேமிப்பு குறையக் குறைய, டாலர் விலை சரியத்தான் செய்யும்.

இந்த நான்கு வகைகளிலும் கடந்த மூன்றாண்டுகளாக நமது ரூபாய் மதிப்பு உயரும் என்பது தமுக்கம் போட்டு அறிவிக்கப்பட்டும், நம் நாட்டில் ஏற்றுமதியில் ஈடுபட்டிருப்பவர்கள் ரூபாய் மதிப்பு உயரும் / டாலர் மதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கவில்லை என்றால், அது அவர்களுடைய கவனக்குறைவே. அரசாங்கம் அவர்களை கண்ணாமூச்சி காட்டி ஏமாற்றியது உண்மை. ஆனால், அவர்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.


Acknowledgements - Gurumurthi from Thuglak.

Wednesday, January 2, 2008

Spyware Deletion-உதவி நண்பர்களே

பதிவுலக பிதாமகர்களே..
என்னுடைய மடிக்கணினியில ஒரு மின்மடலைத் திறக்கப் போய் spyware தொத்திக் கொண்டு விட்டாற்போல இருக்கிறது.
டாஸ்க் பாரில் ஒரு வைரஸ் அழிப்பானின் விளம்பரம் மினுக்கிக் கொண்டே இருக்கிறது,சிஸ்டம் அலர்ட் என்ற போர்வையில் !!!!

நானும் சுத்தப் படுத்த முயற்சி செய்து கூகிளண்ணா சொன்ன அவாஸ்ட்,ஸ்பைவேர் டெர்மினேட்டர்,விண்டோஸ் லைவ் ஒன் எல்லாம் முயற்சி செய்து விட்டேன்.
வேறு ஏதேனும் சுத்தப்படுத்தும்(ஃபார்மேட் செய்யாமல் ! ) வழி இருக்கிறதா?

கில்லிகள் வழிகாட்டுங்கள்....

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...