குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, September 14, 2008

***** 80.பாரதியின் - கண்ணம்மாவும்,செல்லம்மாவும்

பாரதி என்ற கவிஞனுக்கு அறிமுகங்கள் தேவையில்லை.
தேசியக் கவி என்றும்,மகாகவி என்றும் கொண்டாடப்பட்ட பாரதி 20 ஆம் நூற்றாண்டின் நவகவிதையின் நாயகன்.
தொட்ட எந்த பொருள் பற்றியும் துலங்கும் இனிய கவிதைகளைப் பொழிந்த கவிஞன் அவன்.கம்பனுக்குப் பிறகு சொல்லழகும்,சந்த அழகும் நிரம்பிய கவிதைகள் பாரதியினுடையவை என்றால் அது ஒத்துக்கொள்ளக் கூடியதே.

பாரதியின் காலம் சுதந்திரப் போராட்டக் கனல் கனன்று கொண்டிருந்த காலம்.பாரதியின் கவிதைகள் அந்தக் கனலை மூட்டிப் பெருநெருப்பாக்கின.

அரசின் ஒடுக்கும் பார்வை பாரதியின் மீது விழுந்தது;அவர் பிறந்த பிராமண குலத்தின் பல மௌடீகங்களை வன்மையாக எதிர்த்த பாரதி கவிஞனுக்கேயுரிய கவிதைச் செருக்குடன்தான் வாழ்ந்தார்.

எவரிடமும் சென்று கையேந்தி,சோப்படித்து வளரும் இன்றைய கவியரசுகள் போல இல்லாது தனக்காகவும்,தேசத்துக்காகவும் மட்டும் பாடியவர் பாரதி.

அவரின் கவிதைகளில் குறிப்பிடத்தக்க இனிமை நிரம்பியவை கண்ணன் பாடல்கள்.பாரதி கண்ணன் பாடல்கள் என்று தனித் தொகுதியாக எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டு எழுதவில்லை;மாறாக அவ்வப்போது கண்ணன் மீதான சிந்தனைப் பிரவாகம் எழுந்த போதெல்லாம் எழுதிய்வை பின்னர் தொகுக்கப்பட்டன.

தேசியப் பாடல்களில் தெறிக்கும் உணர்ச்சிப் பெருக்குக்கு ஈடாக அன்பும்,காதலும் பொங்கிப் பிரவகிக்கும் பாடல்கள் கண்ணன் பாடல்கள்.

கண்ணனை தன் தந்தையாக,அரசனாக,குழந்தையாக,வேலைக்காரனாக என எல்லா பாத்திரங்களிலும் வரித்தார் பாரதி.
ஆனால் அதிலும் இனிமையும் அழகும் முழுமையடைவது அவரின் நாயக,நாயகி பாவக் கவிதைகளில்தான்.

எடுத்துக்காட்டாக,தீர்த்தக் கரையினிலே,சுட்டும் விழிச் சுடர்தான்,தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி,சின்னஞ்சிறுகிளியே,தூண்டிற்புழுவினைப்போல்,கண்டுவரவேணுமடி,ஆசைமுகம் மறந்துபோச்சே,பாயுமொளி நீஎனக்கு...போன்ற பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை.

இறுதிப்பாடலான ‘கண்ணம்மா எனது குல தெய்வம்- என்ற தலைப்பிலான பாடல் ஒரு சிகரப் பாடல்.

ஒரு கவிஞனின் கவிதைகளில் இந்த அளவு உணர்ச்சிப் பெருக்கு இருக்க வேண்டுமெனில் அவனுக்கு பாடுபொருளின் மீது உள்ள அன்பும் பிரேமையும் அந்த அளவு அழுத்தமானதாக இருக்க வேண்டும்.

இதற்கான சில உறுதி செய்யப்படாத பிண்ணனித் தகவல்களும் சொல்லப் படுகின்றன.

பாரதி வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்; ஆனால் அவருடைய தந்தையாரது வற்புறுத்தல் காரணமாகவே செல்லம்மாவைக் கைப்பிடித்தார் என்பது ஒரு வதந்தி.

அந்தப் பெண்ணின் மீது பாரதிக்கு கரைகாணாக் காதல் இருந்தது;அப்பெண்ணையே பாரதி கண்ணம்மாவாக வரித்தார்;கண்ணன் பாடல்களிலும் இந்த கரைகாணாக் காதலே வெளிப்பட்டது. இதன் காரணமாகவே அவரின் கண்ணன் பாடல்களில் நாயகி நாயக பாவங்களில் மட்டும் அவ்வளவு உணர்ச்சி தெறித்திருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

இது உண்மையாக இருக்க முடியுமா? இவ்வாறான முடிவுக்கு வந்துவிட முடியுமா?


இவ்வாறு காதலில் கண்ணம்மாவிடமும்,வாழ்க்கையில் செல்லம்மாவிடமும் வாழ்ந்தாரா பாரதி????

அந்த அளவு லட்சியக் கவிஞனாக வாழ்ந்த பாரதியின் சொந்த வாழ்வு இவ்வாறு ஒரு பிறழ்ந்த வகையில் இருந்திருக்குமா???

இதற்குச் சரியான பதில் பாரதி மீண்டு வந்து சொன்னால்தான் உண்டு.

ஆனால் சூழ்நிலைகள் இதற்கு என்ன பதில் சொல்கின்றன?

செல்லம்மா இதை எவ்வாறு பார்த்தார்? அல்லது செல்லம்மாவிடம் பாரதிக்கு இப்படி ஒரு மனவுலகில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க முடியுமா?

செல்லம்மா பாரதியுடன் வாழ்ந்த காலத்தில் புற உலகின் வாழ்க்கைத் தேவைகளுக்கு மிகுந்த சிரமப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த செய்தி;ஆனால் பாரதி செல்லம்மாவின் துயரங்களை லட்சியம் செய்யாது வாழ்ந்தாரா?

பின்வரும் செய்திகள் செய்திகளில் விடை கிடைக்கலாம்.

செல்லம்மா வெளியுலகிற்கு வெளிப்பட்டது பாரதி மறைந்த பின்புதான்.பாரதியின் காலத்திற்குப் பிறகு ஒருகட்டத்தில் அவரைப்பற்றி வானொலியில் பேசிய செல்லம்மா இவ்வாறு கூறுகிறார்.

“எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!

என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.

நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்;அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக் கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம்,தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரை கடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்து கொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும் அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும், பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப்பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்து கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ,வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. இனி மிஞ்ச விடலாமோ? என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஓரு புறம் ஏற்பட்டது. ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ? என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். செல்லம்மா, இங்கே வா என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள் என்றார். 'கரும்பு தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம்.

மறுநாள் அந்தப்பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது.அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப்பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார். “

ஒரு கணவரால் சரியாக நடத்தப்படாத,அன்பு காண்பிக்கப் படாத ஒரு மனைவியின் பேச்சா நாம் மேலே படித்தது??

மேலும் பாரதியின் கவிதைகளை அவருக்குப் பின் பிரசுரிக்க பெரிதும் முயற்சிகள் எடுக்கிறார் செல்லம்மா.இதற்காக பெரிதும் சிரமப்பட்ட செல்லம்மா,பொதுமக்களுக்கு வைக்கும் கோரிக்கை இவ்வாறு போகிறது....


‘‘தமிழ்நாட்டு மக்களே,
நான் படித்தவளல்ல, இந்த நூலுக்கு முகவுரை எழுதவும் நான் முன்வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியும் இல்லை.

உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்துக்காக, முழுமனத்துடன் அர்ப்பணம் செய்தார். நமது நாடு இன்னது, நமது ஜனங்கள் யாவர், நமது சக்தியும், உணர்ச்சியும் எத்தகையது? இவைகளைப் பற்றிய விவகாரங்களும், சண்டைகளும் தீர்மானங்களும் அவர் ஜீவனுக்கு ஆதாரமாக இருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று அவருடைய புதிய எண்ணங்கள், புதிய புதிய பாட்டுக்கள், புதிய புதிய கொள்கைகள் _ என் இரு காதுகளும் மனமும் இருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இந்த பாக்கியத்தை மறுபடி பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் பெறத் தயாராக இருக்கிறேன்.

அவரது தேகத்தில் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்கு ஆதாரமாக இருந்த பாரத மாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ்நாட்டில் ஒரு மனிதனோ, குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி என்றென்றும் நிலைத்திருக்கும் என்று என் இருதயம் சொல்கிறது. இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல வந்தேன்.

நீங்கள் நீடூழி வாழ்க.

பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் உள்ளவரை நான் வகித்து பிற்பாடு தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.

வந்தேமாதரம்.’’

இதுதான் செல்லம்மா எழுதிய கடிதம்.

செல்லம்மாவைப் பற்றிக் குறிப்பிடும் பாரதியின் பேத்தி எழுதுகிறார்.

“பாரதி மறைந்த பிறகும் செல்லம்மாவின் போராட்டங்கள் தொடர்ந்தன. தம் கணவரின் எழுத்துகளை நூல்களாக வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு, என் பாட்டி யாரைச் சேர்ந்தது. முப்பத்திரண்டு வயதே நிரம்பிய இளம்பெண், புத்தகப் பிரசுரத் துறையில் சற்றும் அனுபவமோ பயிற்சியோ இல்லாத பெண், நாளைச் சோற்றுக்கு வழி தேடும் வகையறியாத பெண், திருமணம் செய்யக் காத்து நிற்கும் இளைய மகள், தோள்களில் சுமையாக அழுந்தி நிற்க, மைத்துனரையும் சகோதரரையும் நம்பி யிருக்கும் பெண், எல்லாவற்றுக்கும் மேலாகத் தான் விரும்பிய காரியங் களைச் செய்ய முடியாமல் சாதி, சமுதாயத்தின் வற்புறுத்துதலுக்கு அடங்கிப் பணியவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்ட பெண் - செல்லம்மா. .

காலம் செல்லச் செல்ல, செல்லம்மா வெளியுலகத்தைத் தன் கணவரின் நோக்கிலிருந்து பார்க்கத் தொடங்கினாள். தன் கணவர், பெண் மைக்கு வரையறுத்துக் காட்டிய சுதந்திரம், அவளது இலட்சியமாயிற்று.

அசாதாரணமாக தைரியம், நினைத் ததைச் சாதித்து முடிக்கும் திறம், தன் கணவர் அறிவுறுத்திய உயர்ந்த விஷயங் களில் நாட்டம், தெய்வ பக்தி - இவை அவளை வழிநடத்தின. வாழ்க்கையில் அவளுக்கேற்பட்ட சோதனைகள் பல. இந்தச் சோதனைகளையெல்லாம் வென்று புடமிட்ட தங்கமாக வெளி வந்தாள், செல்லம்மா. .

1957-ஆம் ஆண்டு. தம் பிறந்த ஊராகிய கடையத்தில் மரணப் படுக்கையில் தன்னினைவின்றிப் படுத் திருக்கிறார், செல்லம்மா. அந்த அறையில், பெரிய ரேழியில், அவருடைய மூத்த மகள் தங்கம்மா, இளைய மகள் சகுந்தலா, பேத்திகள், பேரன்கள், ஒன்றிரண்டு நண்பர்கள் - எல்லாரும் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்.

""திண்ணை வாயில் பெருக்க வந்தேனெனைத்
தேசம் போற்றத் தன் மந்திரி யாக்கினான்''.

என்று படுக்கையிலிருந்து மென்மையான பாட்டுச் சத்தம் வருகிறது. பாரதியின் கண்ணன் - என் அரசன் என்ற பாட்டிலிருந்து அடிகள் இந்த இரண்டு வரிகள் ஒரு தடவையல்ல, பல முறைகள் மீண்டும் மீண்டும் மீண்டும் தொடர்கின்றன. .
சிறிது நேரம் அமைதி..

""திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான்''

என்று செல்லம்மாவின் வாய் திரும்பப் திரும்பப் பாடுகிறது. .
ஆம்!

அன்னையின் நெஞ்சு நிறைய, இத்தனை காலமாகப் புகுந்து அவரை ஆட்கொண்டு வாழ வைத்தவர், பாரதி. அவர் செய்த காரியங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து, அவருக்கு அறிவுத் தெளிவும், கலங்காத உள்ளமும், எதற்கும் அஞ்சாத துணிவும் கொடுத்துக் கடைசிவரை அவரை வழிநடத்தியவர், பாரதி. .”

பாரதியின் மீது எத்தகைய ஒரு அன்பிருந்தால் செல்லம்மாவின் ஆத்மசக்தி பாரதியின் எழுத்துக்கள் வெளிவர வேண்டும் என்ற தளராத ஆசையுடன் இவ்வாறு செயல்பட்டிருக்க முடியும்!

இப்படி செயல்பட்ட செல்லம்மா,பாரதியின் எத்தகைய அன்பையும் மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும் !

அதனால்தான் பாரதி பாடினான்..

”உன்னைக் கரம் பிடித்தேன்,வாழ்வு ஒளிமயமானதடி
பொன்னை மணந்தனால் சபையில் புகழும் வளர்ந்ததடி”
என...

கண்ணம்மாவின் காதலால் அல்லது கண்ணன் ப்ரேமையால் பாரதியின் சாகா வரம் பெற்ற அமுதப்பாடல்கள் கிடைத்தன;செல்லம்மாவின் காதலால் அவை வெளியுலகிற்கு வந்து நமக்கு படிக்கக் கிடைத்தன....

கண்ணம்மாவும்,செல்லம்மாவும் பாரதியின் இரு கண்களானார்கள்!

Saturday, September 13, 2008

***** 79.நட்சத்திர வாரத்துக்கான ஒரு பருந்துப்பார்வை

நட்சத்திர வாரத்தில் ஒரு மீள்பதிவு போடலாம் என்ற அறிவிக்கப்படாத விதிக்கு ஏதுவாக இந்த ஒரு பதிவு.என்ன ஒரு மீள்பதிவாக இல்லாமல் எனது இதுவரை எழுதிய பதிவுகளில்,எனக்கு திருப்தி அளித்த,அல்லது பரவலாக பாராட்டுப் பெற்ற சில பதிவுகளை அறிமுகப் படுத்தலாம் என விழைவு.

எனவே....அனுபவியுங்கள்,யாரு விட்டா????

1.பதிவுகள் எழுதலாம் என்பது திடீரென்று எடுத்த ஒரு முடிவு.எழுத்துப் பயிற்சி இருந்தாலும்,பதிவுகளின் வசதியும்,தமிழ்மணம் மற்றும் திரட்டி வசதிகளும் ஒரே நேரத்திலேயே அறிமுகம் ஆயின.எனவே முதல் பதிவுக்கென ஏதும் புதிதாக யோசித்து ஆரம்ப அமர்க்களங்கள் செய்து எழுதவில்லை, just like that எழுத ஆரம்பித்தேன்.ஆனால் எழுதிய விதயம் கொஞ்சம் ஆழமானதுதான், 1-நாம் என்ன செய்ய முடியும் ? என்ற தலைப்பில்..

2.சுதந்திர தினத்தன்று எழுதிய ஒரு பதிவு.பதிவிம் அடக்கம் என்னவோ முதல் பதிவின் தொடர்ச்சியே என எண்ணுகிறேன்.. 60 ஆவது சுதந்திர தினம்- ஒரு மீள்பார்வை 2

3.இளமையின் நினைவுகள் எப்போதும் அழகானவை.அழகான எல்லாமே மகிழ்வானவை-A thing of Beauty is Joy forever ! எப்போதோ எழுதிய ஒரு கவிதை இந்தப் பதிவில் ! தேவதைகள் மறையும் பொழுது...

4.நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கான மன,மற்றும் சமூகக் காரணிகளை அலசிய இந்த இரு பதிவுகளும் சில நண்பர்களால் பெரிதும் பாராட்டப் பட்டன.
சரத்குமார விஜயகாந்தர்கள்,
சரத்குமார விஜயகாந்தர்கள் 2

5.பாலியல் கலிவியின் தேவை மற்றும் அல்லது பற்றி விவாதித்த இந்த பதிவு வந்த அல்லது அடுத்த வாரத்தில் விகடன் இதழிலும் இதே பொருள் தொடப்பட்டிருந்தது.இது திண்ணை இதழிலும் வந்தது.
^^^ பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை

6.என்னுடைய ஐயாவைக் குறித்து எழுதப்பட்ட இந்தப்பதிவு,எனக்கும் படித்த சிலருக்கும் பெரும் நெகிழ்வை ஏற்படுத்திய ஒன்று.என்னவோ இதை எழுத வேண்டும் எனத் தோன்றியது,இந்தப் பதிவு வெளியிட்ட சில மாதங்களில் அவர் மறைந்தார்... 27-வாழ்க்கை,குடும்பம்,மகவு ??????????

7.ஐடியாளர்களின் பார்வை குறித்த இந்தப்பதிவும் சில நல்ல விவாதங்களை ஏற்படுத்தியது,சில தூற்றல்களையும் கூட... 31- ^^^ ஐடி'யாளர்களின் பார்வை சரியா,தவறா?

8.புதுக்கவிதையையும் ரசிக்கப்பிடிக்கும் நான் ஒரு மரபு நேசன்.நன்றாக வந்திருக்கிறது என்று நான் நம்பும் ஒரு விருத்தம் இது... 37.அந்தக் கணமும் , சில பொழுதுகளும்...

9.தெகா எழுதிய ஒரு பதிவில் சில கருத்துக்கள் சொல்லப் போக,எழுந்த யோகாசனத்தைப் பற்றிய விளக்கப்பதிவு இது. 40.யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும்

10.சில சிறுவயது நினைவுகள் சுவாரசியம் கொண்டுவருபவை,அந்த வகையில் இது பரவலாக ரசிக்கப்பட்ட ஒரு பதிவு. 49.லாம்ப்ரட்டா ஸ்கூட்டரும்,ஆண்கள் வயதுக்கு வருவதும்

11.ஜப்பானின் 5S உற்பத்தி முறைகளைப் பற்றிய அலசிய இதுவும் நான் விரும்பும் பதிவுகளுல் ஒன்று. 58.^^^ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
12.பெ.நா.அப்புஸ்வாமி பற்றி எழுதிய,எனக்குத் திருப்தியளித்த,பலரின் பாராட்டுக்களைப் பெற்ற பதிவு. 59.^^^அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன்

13.தமிழுக்கும் சிவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேசும் இப்பதிவு எழுதத் தூண்டிய விதயம் ரவிசங்கரின் பதிவில் ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களே.இது எழுதுவதற்காகவே நான் நிறையப் படிக்க வேண்டியிருந்தது.இன்னும் இந்தத் தொடர் பதிவை நான் முடிக்க இயலவில்லை.ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை இத் தொடர்பதிவு தரும் என நான் நம்புகிறேன். 66.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும் !

மற்றபடி நட்சத்திர வாரம் வந்தால் எழுத வேண்டும் என்றே குறித்து வைத்திருந்த பல தலைப்புகளில் எழுத இயலாது போயிற்று...காரணம் நேர மேலாண்மையில் ஏற்பட்ட சிக்கல்கள்.நட்சத்திர வாரம் தொடங்கிய நாள் அன்று பணி நிமித்தம் நான் அயல்நாட்டில் இருந்தேன்,அன்று நடு இரவுதான் சிங்கப்பூருக்கு வந்தேன்,தொடர்ந்த அவசர அலுவல்கள் காரணமாக நட்சட்திரமாக எழுத எண்ணியிருந்த பல விதயங்கள் எழுத இயலவில்லை..எனினும் அவை குறித்து சமயம் கிடைக்கும் போது எழுதுவேன்.

அவசரமாகத் தயாரித்த இன்னும் மூன்று தலைப்புகளில் பதிவுகள் முக்கால் வாசி முடிந்து நிற்கின்றன;இயன்றால் அடுத்த நட்சத்திரம் மேடையைப் பிடிக்கும் முன் நாளை அவற்றை அரங்கேற்ற முயற்சிக்கிறேன்.

ஒரு நல்ல வாசிப்பை அளிக்க வேண்டும் என்றெண்ணிய எனது முயற்சி,என் விழைவுக்கேற்ற வகையில் நிறைவேறாதது எனக்கு வருத்தமே..மற்றபடி வாய்ப்புக்கு தமிழ்மணத்திற்கும்,வாசித்த அனைவருக்கும் நன்றி !

***** 78.மறுபாலின நட்பும்,கார்த்திக் பட கிளைமாக்ஸும்

சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகுமார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்,அது அவரின் பள்ளித் தோழர்களை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி.

அவருடன் எட்டாம் வகுப்பிலோ அதற்கும் கீழான வகுப்பிலோ படித்தவர்கள் சிலர் தொலைக்காட்சியில் தலை காட்டினார்கள்.அவர்களில் சில பெண்களும் அடக்கம்.சொல்லத்தேவையன்றி அவைவருன் அவர்களின் இறுதி 50 களின் வயதில் இருந்தார்கள்.

ஆயினும் அவர்களிடையே பெண்களுக்கு நடிகர் சிவகுமாருடன் பேசுவதற்கும்,அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் மிகவும் சங்கோஜப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

இத்தனைக்கும் சிவகுமார் ஒன்றும் இன்றைய கனவுக் கதாநாயகன் அல்ல;மேலும் அவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் பள்ளித் தோழர்கள்,எனினும் இவ்வளவு மனத்தடை அவர்களுக்கு இருக்கிறது,இந்த 2008 லும்.

இதே காட்சியை இன்றைய ஒரு கல்லூரிக்கோ அல்லது மெரீனா கடற்கரைக்கோ எடுத்துச் செல்லுங்கள்;இளைஞர்களும்,இளைஞிகளும் உல்லாசமாகப் பேசி சிரித்து விளையாடுவதைப் பார்க்கலாம்.

60 களில் இருந்த ஆண்,பெண்களுக்கிடையேயான மனத்தடைகள் இப்போது இல்லை-கல்லூரி அளவில்.

இதே மாணவர்கள் படித்துப் பட்டம் பெற்று,திருமணம் ஆனபின் வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போது இந்த் நட்பும்,அன்பும் உரிமையும் அவர்களிடையே இருக்கிறதா???

60 களை ஒப்பிடும் போது நிச்சயமாக முன்னேற்ற மாறுதல் இருக்கத்தான் செய்கிறது;மறுக்க முடியாது.ஆனால் இந்த நட்பு திருமணத்திற்கு முன்னர் இருந்தது போல இரு பாலரிடமும்,திருமணத்திற்குப் பின்னர் நிலவுகிறதா?

அவர்கள் குறைந்தபட்சம் தினமோ அல்லது வாரம் ஒருமுறையோ தொலைபேசிக் கொள்வதாவது நடக்கிறதா?

சரி,அவர்கள் குடும்ப நண்பர்களாக நீடிக்கிறார்களா?

ஆய்வுக்குரிய ஒன்று !


நிச்சயம் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்க வாய்ப்பிருக்கிறது;இரண்டாம் நிலை நகர்கள் மற்றும் கிராமங்களில் ?????

வெளிநாடுகளில் நெடுங்காலமாக பணியின் பொருட்டோ,தொழிலின் பொருட்டோ தங்கும் நம் மக்களுக்கு இந்த விதமான எண்ணப்பாடுகள் இருக்கின்றனவா என்ற சிந்தனையில் எனக்குப் போதுமான மறுமொழி கிடைக்கவில்லை.ஏனெனின் வெளிநாட்களில் நமக்கு ஒரு சமூகச் சுற்றம் ஏற்படுவதற்கு சுமார் 5 வ்ருடங்களோ அல்லது அதற்கு மேலுமோ ஆகலாம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் பருவம் பெரும்பாலும் இளமைப்பருவம் முடிந்து 30 களின் துவக்கத்தில் அல்லது 20 களின் இறுதியில் தான் அமைய வாய்ப்பிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் மறுபாலின நட்பு ஏற்படுவதை விட காதல் ஏற்படவோ அல்லது திருமண நோக்கிலான அறிமுகங்களோதான் பெரும்பாலும் சாத்தியம்.

திருமணத்திற்குப் பின்னர் இந்த மாதிரி மறுபாலின நட்பு ஏற்படுவது சாதாரணமாக காணப்படுவதில்லை என்றே நினைக்கிறேன்...

இதற்கான விதி விலக்குகள் உண்டு;சொல்லப் போனால் விதி விலக்குகள் எங்கேயும் உண்டு.(Exceptions are prevalent everywhere at any scenario) என்பது ஒரு தங்க வாக்கியம்!

ஆக,மறு பாலின நட்பு,ஆரோக்கியமாக நிலவும் சூழல் கல்லூரி மற்றும் அது முடியும் காலம் சார்ந்த பருவத்திலேயே முகிழ்ந்து,முதிர சாத்தியம்.

இந்த சிந்தனையின் நீட்சி,இரு விதப்படும்.

இந்த ஆரோக்கிய நட்பு தொடர்ந்து,குடும்ப நட்பாக,அந்தந்த நண்பர்களின் குழந்தைகளுக்கிடையே வரை நிலவும் நட்பாகக் கிளைப்பது ஒன்று.

அவரவரின் திருமணத்திற்குப் பின்னர் சிலகாலம் தேயும் கால இடைவெளிகளில் சில தொலைபேச்சுக்கள்,பின்னர் எப்போதாவது எங்காவது சந்தித்தால் மட்டும் புன்சிரித்து அளவளாவிப் பின் பிரியும் அளவில் நிற்பது ஒன்று.

மூன்றாவது மோசமான ஒன்று-முற்றாக வெட்டப்படுவது,இதற்கு அவரவரின் சோடிகளிடை நிகழும் மனஅழுத்தங்களும் உளவியல் காரணிகளும் முக்கியக் காரணங்கள்.

முதலும் மூன்றாவது நிலையும் முற்றிலும் புரிந்து கொள்ளப்படக் கூடியவை.

பல திரைப்படங்கள் கூட இந்த நிலைகளை விவரித்து வந்து விட்டன.

கார்த்திக்,ரகுவரன்,ரேவதி நடித்து வெளிவந்த ஒரு படம்,பெயர் நினைவில்லை-இரண்டாவது நிலையைத் தொட்டுச்,பின் மூன்றாம் நிலையை எட்டி, பின்னர் முதல் நிலைக்குத் திரும்புவது போல சித்தரிக்கப்பட்டது.

அத்திரைப்படன் சொல்லும் காரணங்களான பரஸ்பர சந்தேகங்கள் தான் இவ்விதமான நல்ல நட்புகளும் சிதையக் காரணமா?

ஆம் எனில்,இவ்வித பூஞ்சையான(fragile) நம்பிக்கையற்ற ஒரு அடித்தளத்தில் தான் நமது திருமண பந்தங்கள் கட்டப்படுகின்றனவா?அல்லது மனிதனின் ஆதிகால பெண்கள் பொருட்டான உடைமை உணர்ச்சி(ownership) தான் இவற்றிற்கான காரணிகளா?

ஆண்களுக்கிடையான ஆண்பாலின நட்புகளோ,நண்பர் வட்டமோ,பெண்களுக்கிடையான் பெண்பாலின நட்பு,நண்பிகள் வட்டமோ திருமணத்திற்குப் பின்னர் பெருமளவு பாதிக்கப் படுவதில்லை;ஆனால் மறுபாலின நட்பு சிறிதோ,பெரிதான அளவிலோ மாறுதல் அடைகிறது,என்பது அனுபவங்களிலேயே கிடைக்கிறது.

நட்பின் மரியாதையையோ,நண்பர்/நண்பிகளை புண்படுத்தக் கூடாது-அதாவது நட்பினால் அவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படலாம் என்ற நோக்கில்-என்ற அளவில் நட்பை முறித்துக் கொள்வதுதான் நல்லாதா?

கார்த்திக் கூட அந்தப்படத்தில் அதைத்தான் செய்வார்.

ஆனால் திரைப்படங்கள் மூன்று மணி நேர முடிவில் ஒரு சுபம் போட வேண்டும் என்பதற்காக,கணவர்கள் மனைவிக்காக அவரது ஆண் நண்பரை மதிப்பதும்,மனைவிகள் கணவருக்காக அவரது பெண் நண்பர்களை ஏற்றுக் கொள்வதும் நடக்கலாம்.(இதில் கூட இரண்டாவது சூழலைத் திரைப்படங்கள் கூட காட்டியதாக நினைவில்லை !)

உண்மை,நடைமுறை வாழ்வு எத்தகைய தீர்வுகளை,கூறுகளை முன்வைக்கிறது ??????

***** 77.கூத்தாட்டு அவைக்குழாம்

கூத்தாட்டு அவைக்குழாம் என்ற சொல் எவ்வளவு அழகான சொல்!
யார் சொன்னார்கள்?
எங்கே?
எதற்காக?

கூத்தாட்டு அவைக்குழாம் என்றால்,கூத்தாட்டு அவையில் இருக்கும் குழு என்பது பொருள்;இது கூத்துக் குழு மற்றும் கூத்துப் பார்க்க வரும் குழு என இரண்டு குழுக்களையும் குறிப்பிடுகிறது.

பார்க்கலாம்.....



நாம் வாழ உலகில் பணம்,செல்வம் எவ்வளவு தேவையானது என்பதெல்லாம் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

வள்ளுவமும் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றே கூறுகிறது.

நாம் அனைவருமே பணம்,செல்வம் தேடியே ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

எவ்வளவு பணம் இருந்தாலும் இது வாழ்வை வளமாகக் கழிக்கப் போதுமான பணமா அல்லது இன்னும் வேண்டுமா என்ற கேள்வி ஆதாரமானது;இதற்கு நம்மிடம் விடையும் இருக்க முடியாது.

இப்படிப் பணத்தின் பின்னால் ஓடும் நம் வாழ்வில் பணம்,செல்வம் நம்மிடம் எவ்வாறு வருகிறது,நம்மிடம் எவ்வளவு காலம் இருக்கும் என்ற சிந்தனை எல்லாம் நமக்கு எப்போதும் வருவதும் இல்லை.

ராமகிருஷ்ணர் சொன்ன கதையில் வரும் விலைமாதின் வீட்டில் இருந்து கொண்டு சந்நியாசியையே நினைத்துக் கொண்டிருந்தவனும்,அவன் தாசி வீட்டில் இருப்பதையே நினைத்துக் கொண்டிருந்த சந்நியாசி அடைந்த கதியும் நாம் அறிந்ததே...

அந்த தாசி வீட்டு நபரைப் போல,பணம்,செல்வத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நாம் அதனூடையே அதிலிருந்து விலகி வாழும் இயல்பை அடைய முடியமா?

அப்படி வாழும் வாழ்வே ஆனந்த மயமானது;அதைத்தான் விட்டு விலகியிருப்பாய் இந்தச் சிட்டுக் குருவி போலே” என்றான் பாரதி.

எப்படி சாத்தியம்?


பணம்,செல்வம் எப்படி வருகிறது என்ற சிந்தனைக்குள் நாம் போனோமானால் இது சாத்தியம்.

எப்படி?

நாம் சினிமாவுக்குப் போகிறோம்,எப்படிப் போகிறோம்?
சினிமாக் அரங்கத்திற்குப் போகும் போது ஒவ்வொரு நபராக அல்லது ஒன்றிரண்டு நபர்களாகப் போகிறோம்,சினிமா அரங்கம்
நிரம்புகிறது.

சினிமா ஆரம்பித்து முடிந்த பின்னர்,எப்படி வெளியேறுகிறோம்,கூட்டமாகவும்,மொத்தமாகவும்.

செல்வமும் இப்படித்தான்..

வரும் போது சிறிது சிறிதாக வரும்;போகும் போது மொத்தமாகப் போய் விடும்.

எவ்வளவு அழகான உவமை பாருங்கள்...

என்ன,சினிமா அரங்கத்திற்குப் பதில்,கூத்துமேடை !

சிந்தித்தது நானல்ல...வள்ளுவர் !

மேலும் சினிமாவுக்கோ,கூத்து மேடைக்கோ செல்ல அனுமதிக்கும் வழி ஒன்றாகத்தான் இருக்கும்;கூத்து முடிந்து வெளியேறும் வழியோ பல வழிகளிலும் இருக்கும்.

அது போலவே செல்வம் வரும்போது சிறு வழியாக சிறிது சிறிதாக வரும். போகும்போதோ,பல வழிகளிலும் மொத்த மொத்தமாகவும் செல்லும்.

கூத்தோ,நாடகமோ,சினிமாவோ பார்க்கச் செல்லும் மக்கள் மகிழ்வான உற்சாகமான மனநிலையில் செல்வார்கள்;கூத்து முடிந்து திரும்பும்போதோ அயற்சியும்,சோர்வும் நிரம்பிய மனநிலையில் ஓய்வெடுக்க விரும்பி வெளியே ஓடுவோம்.

இதே போல செல்வம் வரும்போது மனதிற்கு உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கும்.போகும்போதோ சோர்வையும் அயற்சியையும் விட்டுச் செல்லும்.

எத்தனை அழகிய உவமை !!!!!!

குறள் இதுதான்.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.


போக்கும் என்ற சொல்லில் ஒரு ‘ம்’ விகுதி போட்டிருக்கிறார் பாருங்கள், போக்கு அது விளிந்தற்று என்று சொல்லவில்லை.போக்கும்’ என்கிறார்.

அதாவது போவதும் என்று சொல்வதன் மூலம் செல்வம் வருவதும்’ இருப்பதும்’ அப்படியே கூத்தாட்டத்தில் போது நடிகர்கள்,நாடக சம்பவங்கள் நடக்கும் செயல்களுக்கொப்பானவை என்பது நாயனாரின்(பழைய கேரள முதல்வர் அல்ல !) கூற்று.

கூத்து நடக்கையில் நாம் காணும் அனைத்தும் உண்மையானவை அல்ல;பார்க்கும் கதை பொய்,நடிக்கும் பாத்திரங்கள் பொய்,நிகழும் நிகழ்ச்சிகள் பொய்,கூத்து முடிந்த பின் பார்த்தால் வெண் திரை மட்டுமே மிச்சமிருக்கும்.

செல்வமும் வந்து நீங்கிய பின் இருப்பது வெறுமை மட்டுமே....
செல்வத்தின் தோற்றமும்,இருப்பும்,அழிவும் காணல் நீர் போலப் போய்விடுகிறது.

ஆக ஒரு கூத்தைப் பார்த்த வள்ளுவரின் சிந்தனையில் இத்தனை விதயங்களும் தோன்றியிருக்கின்றன.

கூத்தின் தன்மை,நடிகர்கள்,கதை முதலியவர்றில் நிகழ்வு,கூத்து முடிந்த பின் உள்ள வெறுமை ஆகிய அனைத்தையும் செல்வத்திற்கு ஏற்றிய சிந்தனைத்திறன்தான் வியப்படைய வைக்கும் ஒன்று.


இவ்வாறு போகாமல் செல்வம் பயனாக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி வருகிறது இல்லையா?

அதற்கும் இன்னோரிடத்தில் வள்ளுவர் யோசனை சொல்கிறார்.
என்ன என்பதை யாராவது பின்னூட்டத்தில் சொல்வார்கள்-விவாதிக்கலாம் !

Friday, September 12, 2008

***** 76.ஒரு நடிகரின் பேட்டி

ஒரு பேட்டி :

''னக்கு விரோதிங்க அதிகம். துப்பாக்கியும் கத்தியும் இல்லாம நான் நாடகத்திற்குப் போகமாட் டேன். எல்லோரும் என்னைப் 'பொல்லாதவன், ரௌடி, அநாகரிகப் பயல்'னு நினைச்சுக் கிட்டிருக்காங்க. இருக்கட்டும். எனக்கு ஒரு விதத்திலே அது சௌகரியமாயிருக்கு. என்னைப் பார்க்கப் பயந்துகிட்டு ஒருத்தரும் எங்கிட்டே வர்றதில்லே. அதனால என்னைச் சுத்தி அநாவசியக் கும்பல் கிடையாது. நான் உண்டு, என் தொழில் உண்டு, என் தோட்டம் உண்டுன்னு நிம்மதியா இருக்கேன்.''


''தோட்டமா?''


''ஆமா... இங்கே திருப்போரூர் போற வழியிலே கொஞ்சம் நிலம் இருக்கு. அதுலே நெல் பயிராவுது. அப்புறம் கோடம்பாக்கத்துக்கு அந்தாண்டே, எம்.ஜி.ஆர். தோட்டத்துக்கு எதிர்லே கொஞ்சம் வாங்கியிருக்கேன். அங்கே காய்கறியெல்லாம் போடப் போறேன். மாடுங்க வேற வளர்க் கிறேன். காலையிலே, நாலரைக் கெல்லாம் எழுந்து அங்கே போயிடு வேன். கிணறு வெட்டறது, வரப்பு கட்டறது, வேலி போடறது... இந்த வேலையெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏதோ... சம் பாதிச்சாச்சு. வயசோ ஐம்பத்தாறு ஆவுது. இனிமே குடும்பம், கொழந் தைங்கன்னு நினைக்கத் தோணுது. விவசாயத்திலே புத்தி போவுது.


இதுக்கு நடுவுல யாராவது வந்து கூப்பிட்டா, போயி நடிக்கிறேன். அவ்வளவுதான்! நான் ஒருத்த ரையும் போய்ப் பார்க்கிறதில்லே; சான்ஸ் கொடுன்னு கேட்கறதும் இல்லே. மத்தவங்க மாதிரி இவ னைப் போடாதே, அவளோட நடிக்கமாட்டேன்னு கண்டிஷ னெல்லாம் போடறதும் கிடை யாது!''



''அந்தக் காலத்திலே என்னை, 'டக்ளஸ் பார்ப்பாங்ஸ்'னு சொல்லு வாங்க. அவர் நடிக்கிற படங் களையெல்லாம் ஒண்ணு விடாம பார்ப்பேன். அவர் மாதிரி 'ஸ்டண்ட் வேலை' செய்யோ ணும்னு ஆசை. ராஜசேகரன்லே நடிக்கிறபோது, பூந்தமல்லி குருடர் பள்ளிக்கூடத்தின் மாடி யிலேருந்து கீழே குதிச்சேன். கால் முறிஞ்சு போச்சு! இப்போ 'ட்யூப்' (Dupe) வெச்சு 'ஸ்டண்ட்' செய்ய றாங்களே, அதெல்லாம் அப்போ தெரியாது. டைரக்டர் 'குதிடா'ன் னாரு. குதிச்சுட்டேன்!''


''அப்புறம் படத்தை எப்படி முடிச்சாங்க?''


'' அதெல்லாம் கெட்டிக்காரங்க, க்ளோஸப்பா எடுத்து ஒரு மாதிரி கதையை முடிச்சுட்டாங்க. கால் குணமாக நாலு வருஷம் ஆச்சு. அப்புறம், மாடர்ன் தியேட்டர்ஸ்லே சேர்ந்து நாலஞ்சு படம் நடிச்சேன். டி.ஆர்.சுந்தரத்திற்கும் எனக்கும் சின்ன தகராறு ஒண்ணு வந்தது. அங்கே சுயமரியாதையோடு வாழ முடியாதுன்னு தெரிஞ்சது. இந்தச் சினிமாத் தொழிலே வாணாம்னு முழுக்குப் போட்டுட்டு மறுபடியும் நாடகத்துக்கே வந்துட்டேன். அப்புறம் நான் திரும்பி வந்தது 'இரத்தக் கண்ணீர்' சினிமாவுக்குத்தான். பாண்டிச்சேரிலே நாடகம் போட்டுக்கிட்டிருக்கிறபோது என்னை வந்து கூப்பிட்டாங்க. லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்தா நடிக்கிறேன்னு சொன் னேன். கொடுத்தாங்க. அவ்வளவு பணம் முதல்லே வாங்கின நடிகன் நான்தான்.''


''அரசியல்லே உங்களுக்கு எப்படிச் சம்பந்தம் ஏற்பட்டது?''


''நான் எந்த அரசியல் கட்சியிலும் இருந்தது கிடையாது. திராவிடக் கட்சியிலும் நான் மெம்பர் இல்லே. ஆனா, ஐயாகிட்டே ஒரு மரியாதை. அவர் பேச்சைக் கேட்டு நான் ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு காலத்திலே நான் பகவத்சிங் ஆளு. அந்தத் தியாகியின் வீரம் என் ரத்தத்திலேயும் ஓடிச்சு. அப்போ பெரியாரைக் கண்டாலே எனக்கு ஆகாது! ஒரு சமயம், நான் கொட்டகை வாடகை கொடுக்கலேனு என் சாமானையெல்லாம் ஜப்தி பண்ணிட்டாரே! அப்புறம் அவரே டிக்கெட் வாங்கிக்கிட்டு வந்து என் நாடகத்தைப் பார்த்தாரு. 'இவனும் நம்ம வேலையைத்தான் செய் யறான்'னு ஓப்பனா மேடை மேலே ஏறி ஒப்புக்கிட்டாரு.''


''தமிழ் சினிமா இந்த முப்பது வருஷத்திலே முன்னேறி இருக்கா?''


''தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு. ஆனா. 'சப்ஜெக்ட்' தான் 'அட்வான்ஸ்' ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி, படத்தை ஓட்டப் பாக்கறாங்க. என்னங்க வெட்கக் கேடு இது? இதுவா முன்னேற்றம்? ஒண்ணு சொல்றேன் கேளுங்க... நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப்-பட உலகம் உருப்படும். அப்போதான் முதலாளிங்க புது ஆசாமிங்-களா போட்டு நல்ல கதைங் களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?''


''சினிமாவாலே சமூகத்திற்குத் தீமைதான், நன்மையே கிடை யாதுன்னு சமீபத்திலே நீங்க பேசினதுக்கு, 'இந்தத் தொழில்லே சம்பாதிச்சுக்கிட்டே அப்படிப் பேசு வது முறையா?'ன்னு சில பேர் ஆத்திரப்பட்டாங்களே..?''


''ஆமா, எங்கிட்டே கூடத்தான் சொன்னாங்க. உள்ளே இருக்கிற வனுக்குத்தான் அதிலுள்ள தீமை யெல்லாம் தெரியும். அவன்தான் 'அதாரிட்டி'யோட பேச முடியும் அதுலேயே இருந்துகிட்டு அதைத் திருத்தறவன்தான் தைரியசாலி!"

இப்போது மீண்டும் நான் :

மேற்கண்ட பேட்டி திரு.எம்.ஆர்.ராதா அவர்களிடமிருந்து 60 களில் எடுக்கப்பட்ட ஒன்று.

சென்னை, சிந்தாதிரிப்பேட் டையில் பிறந்து வளர்ந்து, ஏழு வயதில் ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பிறகு பல கம்பெனிகள் மாறி, தனி கம்பெனி ஏற்படுத்திக் கொன்டவர் எம்.ஆர். ராதா.


நடிகர்கள் தங்களை கடவுளர்களுக்கு அடுத்தபடியான மக்களை உய்விக்கும் அவதாரங்களாக எண்ணிக் கொள்ளாத காலத்தைச் சேர்ந்த நடிகர்ளில் ஒருவர் அவர்.


இத்தனைக்கும் satirism என்ற விமர்சன வகை நடிப்பு மூலமே நடித்து,திரையுலகில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சமமான புகழுடன் விளங்கியவர் ராதா.


திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைகின்றன என்ற எண்ணமெல்லாம் சிறிதுமின்றி நாடகங்களில் சக்கைப்போடு போட்டவர்.


மக்களுக்கு திரைப்படங்களுக்கு இணையாக நாடகங்கள் மேலும் தீராத காதல் இருந்தது;நாடக உலகமும் பெரும் ஜாம்பவான்களால் நிறைந்திருந்தது.


ஆர்.எஸ்.மனோகர்,சோ.ராமசாமி,ராதா,பாலசந்தர் ஆகியோர்கள் நாடக உலகில் பின்னி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.


70 களின் துவக்கத்தில் நாடக உலகம் சிறிது சிறிதான சரியத்தொடங்கியது;நாடகம் நடத்த ஒவ்வொரு ஊராக நாடகக் குழுவினர் பயணம் செய்யும் பாடுகளை விட,திரைப்படப்பெட்டி ஒரு ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டு காண்பிக்கப்படும் வசதி,திரைப்படங்களின் வளர்ச்சிக்கு மேலும் உதவி செய்தது. இதற்கு திரைப்படம் எடுப்பதில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்களும் ஒரு காரணம் எனலாம்,இதனால் ஏகப்பட்ட படங்கள் 60 களின் இறுதியிலும்,70 களின் தொடக்கத்திலும் வெளிவர ஆரம்பித்தன.

இத்தகைய காலகட்டத்தில் நாடகம்,சினிமா ஆகிய இரண்டு துறைகளிலும் வெளுத்துக் கட்டியவர் எம்.ஆர்.ராதா.

இன்றைய நடிகர்கள் வீங்கிப்போன அவதார பிம்பங்களுடன் வலம் வந்து,அடுத்த முதல்வர் கனவுகளில் வலம்வரும் வேளையில்,ஒரு வெற்றிகரமான நடிகராக இருந்தும் எம்.ஆர்.ராதாவின் வெளிப்படையான் பேச்சும்,'என்னைப் போன்ற கிழடுகள் ஒதுங்க வேண்டும்' என்ற அவரின் கூற்று,மேலும் சினிமா தயாரிப்பு என்பது ஹீரோக்கள் கைக்குப் போகாமல் தயாரிப்பாளர்,இயக்குநர் கையில் இருக்க வேண்டும் என்பதிலும் அவருடைய தொழில் நேர்மை தெரிகிறது.

அவருடைய காரசாரமான இந்தவகை விமர்சனங்கள் இன்றைய சினிமா உலகுக்கும் பொருந்துவதுதான் வேடிக்கை !

Thursday, September 11, 2008

***** 75-In Lighter Vein-Some Cartoons

நியூ யார்க்கர் இதழின் கேலிப்படங்கள் புகழ்பெற்றவை.
சிறிது சிந்திக்க வைக்கும் நகைச்சுவை அடங்கியவை.
இதழுக்கு நன்றியுடன் சில இங்கே...

*************************************************************
இரு நாய்களின் உரையாடல் - தபால்காரர் வராததை எண்ணி !


***************************************************************


****************************************************************
***************************************************************
ஒரு மௌண சண்டை-பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒன்று !

***************************************************************
மாட்டிக் கொள்ளும் இரு ஏமாற்று சீட்டாட்டக் காரர் !




**********************************************************
விருந்துக்குக் கிளம்பும் மனைவியின் சந்தேகங்கள் !
(பல கணவன்மார்கள் சந்திக்கும் சூழ்நிலைகள்....:))



************************************************************
ஃப்ரான்ஸில் சில அமெரிக்க சுற்றுலாப் பயணிகள்




**************************************************************
ஒரு மீன்பிடிப்பாளரின் ‘பெரிய வேட்டை' !




*************************************************************
ஒரு கல்லூரி மாணவனின் கவலை !






***********************************************************
ஒரு செய்தித் தாள் விரும்புநர்-எந்த இடத்திலும் !!!!!







***********************************************************
நவீன காலக் கவலைகள்-இது உண்மையாகும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.








**************************************************************


Wednesday, September 10, 2008

***** 74.பகுத்தறிவும்,சில நுண்கலைகளும்

நமது தமிழ் மண் மிகப் பழமையான மனித குல நாகரிகமும்,பண்பாடும் கொண்ட ஒரு சமூகம் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மண்.

உலகின் மிகப் பழமையான,இன்னும் உயிர்ப்புடன் இருக்கக்கூடிய,பெரும்பாலும் தடைபடாத தொடர்ச்சி கொண்ட மொழியும்,சமுதாயமும் உலகில் மிகச் சிலவே.

அவற்றில் தமிழ் மொழியும்,தமிழ்ச் சமுதாயமும் குறிப்பிடத்தக்க அளவில் முதன்மையானவை.

இன்னும் சொல்லப் போனால் உலகின் முதல் முழு நாகரிக மனிதன் தமிழ்ச் சமுதாய மனிதனே,உலகில் முதல் முழு வளர்ச்சியடைந்த மொழி தமிழ் மொழியே என்பதற்கான சான்றுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன.(இது பற்றிய தனியே ஒரு பதிவில் எழுத உத்தேசம் இருக்கிறது.)

தமிழ்ச் சமுதாயம் உலகில் தோன்றிய பகுதி சொல்லத் தேவையன்றி இந்திய தீபகற்பத்தின் கீழ்க்கொண்டைப்பகுதி;அது கடல் கொள்வதற்கு முன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவை இணைத்த மிகப் பரந்த நிலப்பரப்பரப்பில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான கூறுகளும் கிடைக்கின்றன.

இந்த தமிழ்ச் சமுதாயம் மிகுந்த நாகரிகத்துடன் வாழ்ந்து மனித வாழ்வுக்குப் பயந்தரக் கூடிய பல நுண்கலைகளை வளர்த்து,அனுபவித்து வாழ்ந்திருக்கிறது.

இந்த 64 கலைகளுக்கும் பல பண்பட்ட அடிப்படைக் கட்டுமான விதி நூல்கள் தமிழில் இருந்திருக்க வேண்டும்.அவை என்னவாயின,ஏன் வடமொழி ஆதிக்கம் இந்தியா முழுதும் பரவின என்பதற்கான சமூக,அரசியல் காரணங்கள் பெரும் ஆய்வுக்குட்பட்டவை.(இவை பற்றி சிறிது எனது ‘தமிழும்,சிவமும் இன்ன பிறவும் என்ற தொடரில் சிறிது தொட்டிருக்கிறேன்,இது இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது.இந்த விண்மீண் வாரத்திலாவது அதை முடித்து விட உத்தேசித்திருக்கிறேன்.)

இப்போது தொடங்கிய விதயத்துக்கு வருவோம்.

64 கலைகள் என்ன என்று சிறிது ஆய்ந்தோமனால்,அவற்றின் பட்டியல் பின்வருமாறு:


அறுபத்து நாலு கலைகளாவன:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

இந்த கலைகளுக்கான வடமொழிச் சொற்களும் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப் பட்டுள்ளன.

இவற்றில் சில இன்னும் பெருமளவு பயன்பாட்ட்டில் இருக்கின்றன,சில அருகிவிட்டன.

பயன்பாட்டில் இருக்கும் சில கலைகளில் நான் தொடப்போவடுது கணிதம்,கணியம் சார்ந்த சோதிடம்,எண்கணிதம் மற்றும் கைரேகை பற்றிய சில விதயங்கள்.

இவற்றைப் படிப்பதோ,கற்பதோ அல்லது நம்புவதோ இன்றைய ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை,இவற்றை முற்றிலும் ஓட்ட வேண்டும்,இவை நமக்குத் தேவையானவை அல்ல என்பது பகுத்தறிவாளர்களின் வாதம்.

இது பற்றிய பெரும் ஒட்டு/வெட்டுப் பேச்சுகள் சமீபத்தில் பதிவுலகில் நடந்தது.

இந்த கலைகளில் ஒன்றைப்பற்றி எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்.சுப்பையா அவர்கள் பெருமளவு கேள்விகளை எதிர்கொண்டு,அவரின் பதிவுத் தொடரில் அவர் ஒரு வேறுபடுகூற்று (டிஸ்கியை இப்படி சொல்லலாம்தானே !) போட்டு எழுத வேண்டிய நிலைக்கு ஆளானார்.

இவை பற்றிய சில அலசல்களை நான் முன்வைக்க விரும்பினேன்,எனவே இப்பதிவு.

முதலில் பகுத்தறிவு என்றால் என்ன?

கண்ணதாசன் அவர்கள் தன்னுடை அர்த்தமுள்ள இந்துமதத்தில்,பகுத்தறிவு என்ற சொல் பரவலாகவும்,பெருமிதமாகவம் உபயோகிக்கப்பட்ட கால கட்டத்தில்,பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு ஒரு ‘புள்ளிக்குறி(Point Blank) விளக்கம் அளித்திருப்பார்,அதை அப்படியே கூறினால் சிலர் மனம் புண்படுமாதலால் அதைக் குறிப்பிட இயலவில்லை.

பகுத்தறிவு என்பது நமக்கு முன் உள்ள விதயங்களை அலசி,இவை நமக்கு நன்மை பயக்குமா அல்லது தீமை பயக்குமா,இந்தக் காரியத்தை கைக்கொள்ளலாமா அல்லது தள்ளலாமா என முடிவெடுக்க உதவும் அறிவு.அந்த பகுத்தறிவின் பால் பார்த்தால் இந்தக் கலைகளை முதலில் அலசி ஆராய வேண்டும்,பின்னர் அது கொள்ளத்தக்கதா அல்லது தள்ளத்தக்கதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அலசி ஆராய வேண்டுமெனில்,முதலில் அந்தக் கலைகளைக் கற்க வேண்டும்;பின் அதில் உள்ள குறை நிறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்;அவ்வாறு யோசித்து அந்த அறிவை,தனக்கான வாழ்வுக்கான நன்மை தீமைக்குப் பயன்படுத்துதல்தான் பகுத்தறிவே தவிர,அந்தக் கலைகளைப் படிப்பவரை அல்லது பயிற்சி கொள்பவரை நிந்திப்பது பகுத்தறிவு அல்ல.

கடலில் பயணம் செய்கிறோம்;வானிலை மிக மோசமாக இருக்கிறது,பெரும்புயல் அடிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது எனபதைச் சொல்வது ஒரு கலையில் தேர்ச்சி பெற்றவர் அளிக்கும் அறிவு;அதைப் பகுத்தறிந்து இந்தப் பயணத்தைக் கொள்ளலாமா அல்லது தள்ளலாமா என முடிவெடுப்பது,தன் சொந்த முடிவு;அது அந்த கலையாளரின் முடிவுக்குட்பட்டதல்ல.

இதை மறந்து அந்தக் கலை அல்லது கலையாளர் பகுத்தறிவுக்கப்பாற்பட்டு நடக்கிறார் என்பது,சொல்பவருக்கு உண்மையில் பகுத்து அறியும் அறிவு இருக்கிறதா அல்லது அவர் பிறர் சொல்வதைக் கேட்டு ஒப்பிக்கும் கிளிப்பிள்ளை போன்றவரா என்ற கேள்வியை எழுப்பக்கூடிய ஒன்று,உண்மையான பகுத்தறிவின் படி !

இதில் கலையாளரின் குறைபாடுகளுக்கு வாய்ப்புண்டு-உண்மையில் அதுதான் பெரிய குறை-இந்த சூழலில் இரண்டு வித வாய்ப்பு(Choice) பொதுவானவர்களுக்கு இருக்கிறது:

-ஒன்று இந்தக் கலையறிவு அளிக்கும் முடிவு வாய்ப்புகள் எனக்குத் தேவை அல்ல;நான் இவை அன்றியே முடிவெடுக்க முடியும் என்பது.

-அல்லது இக்கலையாளரின் கலைத் தேர்ச்சி குறைபாடுடையது,நல்ல தேர்ச்சியாளரை நாடுவேன்;அல்லது நானே இக்கலையை முடிந்த அளவு கற்று அதன் பயன்/அபயனை அறிய முயற்சிப்பேன் என்பது.

இவ்வகையில் இந்தியாவில் மட்டுமல்ல சில மேற்கத்திய கலையாளர்கள் கூட இக்கலைகளில் அபூர்வத் தேர்ச்சி பெற்று மனித குலத்திற்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.(கெய்ரோ-எண்கணிதம்/கைரேகை ,பி.வி.ராமன் - சோதிடம் ...)

இந்த இரண்டிலும் இல்லாத மூன்றாவதான,இந்த குறைபாடுடைய கலையாளரை உதைப்பேன் என்பது வன்முறையின் பாற்பட்டதே தவிர பகுத்தறிவின் பாற் பட்டதல்ல.

அல்லது அப்படி உதைக்க முற்பட்டால்,அந்தக் கலையாளரின் தரப்பு அதை விட மிகுந்த வன்முறை காட்டக் கூடிய வாய்ப்பிருந்தால்,தானே உதைபட வாய்ப்பிருக்கிறது என்பதை வேண்டுமானால் பகுத்தறிவின் பாற்பட்ட முடிவாக கருத முடியும்.

:))))

எனவே இந்த வகையில் பார்க்கும் போது,இந்த ‘அலசி ஆராயும் பகுதிக்கு வெளியே நின்று கொண்டே,இவை மனித சமுதாயத்திற்குத் தேவை இல்லை,என முன் முடிவுக்கு வருவதுதான் பகுத்தறிவா என்பதில் எனக்கு மிகுந்த ஐயப்பாடு இருக்கிறது.

நான் மேற்சொன்ன இரண்டாம் வித வாய்ப்பை மேற்கொள்ளும் வகை.

கண்ணை மூடிக் கொண்டு ஒன்றை ஆதரிப்பதோ,விலக்குவதோ பொதுவாக நன்மை பயப்பதில்லை,அதற்கான அறிவிக்கப் பட்ட சான்று இருக்கும்வரை ! நெருப்பில் கை வைத்தால் சுடும் என்பது அறிவிக்கப் பட்ட சான்று,ஆனால் சோதிடக் கலையைப் படித்தால் செத்துப் போவாய் அல்லது உருப்படாமல் போவாய் என்பதற்கான அறிவிக்கப் பட்ட சான்று இருந்தால் அவற்றைத் தள்ளலாம் !

இனி,இவற்றை ஆய்வதால்(கவனிக்கவும்,நம்புவதால் அல்ல !) என்ன பயன் அல்லது அபயன்கள் விளையக் கூடும் ??

பொதுவாக மனிதர்களில் சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றன.நமது ப்ண்டைய அறிவு இந்த பொதுவான குணாதிசயங்களை வரிசைப்படுத்த முயன்று கிடைத்த வ்டிகட்டப்பட்ட(Trial & Error filteration) அறிவுதான் சோதிடம் போன்ற கலைகள் என்பது என் அறிந்த முடிவு.

இது கணித நிகழ்தகவின்(Probability) விதிகளுக்கு உட்பட்டது,ஏனெனில் இது மனித சமுதாயம் தோன்றிய காலத்தில் இருந்து,பல்வகைப்பட்ட மனிதர்களை அவ்ர்களின் வாழ்வை ஆய்ந்து,அந்த முடிவுகளை அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை வகைப்படுத்தி வந்த சில முடிவுகளின் தொகுப்பு.இந்த விதிகளின் கூறுபாடுகள் அல்லது விளைவுகள் நிகழ்தகவு வாய்ப்புக்கு வெளியே இருக்கும்,சூழலும் மறுக்கப்படக் கூடியதல்ல.(The decision arrived at based on these arts can still fall outside of the probable decision domain, in which case they prove to be false) ஆனால் இதற்கான வாய்ப்புகள் எவ்வளவு என்பது,இந்தக் கோட்பாடுகள் எவ்வளவு முறை பயன்படுத்திப் பார்க்கப் பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அமையும்.

இந்தக் கோணத்தில் சிந்தித்தால்,மனித சமுதாயத்தின் காலம்,நாகரிக தமிழ்ச் சமுதாயத்தின் காலம் இரண்டும் பெருமளவு ஒத்துப் போகும் வாய்ப்புகள் இருப்பதால்,பயன்பாட்டுக் குறைபாடு (Error of Judgement ) பெருமளவு குறைந்தே இருக்கும் என்பது என் அறிந்த முடிவு.

சரி,இக்கலைகளினால் என்ன பயன்?

சில குறியீடுகள் இக்கலைகளால் கிடைக்கிறது என்பது என்னுடைய அனுபவ உண்மை.


காட்டாக, கைரேகை விதிகளின் படி மெல்லிய நீண்ட, நகங்களும் விரல்களின் கீழ்ப்பகுதியும் நேரான கோட்டில் இருக்கும் படி அமைந்த நேரான விரல்களும், தொடுதலுக்கு மென்மையான உள்ளங் கைகளும் கொண்ட நபர்கள் நுண்ணறிவும்,கலைகளின் மீதான ஈடுபாடு/தேர்ச்சி கொண்டவர்களாகவும்,எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்பினராகவும் இருப்பார்கள் என்பது ஒரு விதி.

இது அனுபவத்தில் பெரும்பாலும் சரியாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

அதே போல் 2ம் தேதி பிறந்த நபர்கள் பெரும்பாலும் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும்,எளிதில் திடமான முடிவெடுக்காத வழவழா நபர்களாகவும் இருப்பார்கள் என்பது எண்கணித விதி.

இதுவும் என் அனுபவத்தில் பெரும்பாலும் சரியாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.

இதே போல் இந்த வகையில் 2ம் தேதி பிறந்த நபர்களின் சோதிடக் கட்ட அமைப்பில் சந்திரன் வலுவான இடத்தில் இருக்கும் பட்சத்தில் இந்த குணாதிசயங்கள் சோதிட ரீதியாகவும் மறு உறுதிப்படுத்தப்(Re-confirmed)படுகின்றன.

இதே போல் தேதி 4ல் பிறந்தவர்கள் மிகவும் உறுதியான மனம் படைத்தவர்களாகவும்,எதிலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கும் திறமை பெற்றவர்களாகவும்,பல்துறை அறிவைத் தேடிப் படிக்கும் வழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது ஒரு விதி.

இவ்வகை நபர்கள் புதன் வலுவாக அமைந்த சாதக் கட்டத்தைக் கொண்டிருந்தால்,அது மறு-உறுதிப்படுத்தும் சுட்டியாக இருக்கும்.

எனவே,இந்தக் கலைகளை கண்ணை மூடிக் கொண்டு மறுப்பதுதான் பகுத்தறிவுக்கு மீறிய செயல்;இவற்றை ஆராய்ந்து அவை நமக்கு ஏதேனும் செய்திகள் சொல்கின்றனவா எனப் பார்ப்பது பகுத்தறிவின்பாற் பட்டது என்பதே நான் சொல்ல விழைவது....

Tuesday, September 9, 2008

***** 73.ஒரு இரங்கல்,ஒரு தலையங்கம்

வயலின் இசை மேதை குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் மறைவு இசையுலகின் ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு.

வயலின் இசை இன்றைய நவீன காலத்திலும் எப்படி இளையர்களின் மனதையும் கொள்ளை கொள்ள முடியும் என நிரூபித்துக் காட்டிய வயலின் மன்னர்.

வேடிக்கையாக,விமர்சனங்களில்,குன்னக்குடி அவர்கள் குளிக்கும் ஓசை,பல்துலக்கும் ஓசை போன்ற ஒலிக் குறிப்புகளை எல்லாம் கூட வயலினில் கொண்டுவருவார் எனக் குறிப்பிடும் அளவுக்கு அந்த இசைக் கருவியை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தவர்.

இன்றைய இளைஞர்களின் இசையுடன் போட்டி போட்ட இசை இளைஞர்,காலத்தின் விளைவால் மறைந்தார்.

அவரின் பல இசைக் கோர்வைகள் இணையத்திலும்,யூ ட்பிலும் கிடைக்கின்றன.

இசையாலே அவை அவருக்குக் காலத்திற்கும் அஞ்சலி செய்து கொண்டிருக்கும்.

*************************************************************************************

ஒரு முன்குறிப்பு:
இக்கட்டுரை தினமணியின் தலையங்கப் பக்கத்திலிருந்து வந்தது.

நான் ஒரு எழுத்தும் சேர்க்க அவசியமில்லாத,இன்றைய நாற்ற அரசியலின் கூறுகளை முன்வைக்கும் இது கருணாநிதி அவர்களின் ஆட்சிக்கு மட்டுமன்றி ஜெ.அவர்களில் ஆட்சிக்காலத்துக்கும் சிற்சில பெயர்களை மாற்றினால் அப்படியே பொருந்தும் என நினைக்கிறேன்.

நமது பொதுவாழ்வில் விழுமியங்களின் வீழ்ச்சி குறித்து,அச்சப்பட வேண்டிய கவலைகள் ஏற்படுவதை இக்கட்டுரை முன்னுரைக்கின்றது.



ஒரு நாள் மன்னன் பிம்பசாரன் தான் புதிதாக வடிவமைத்திருக்கும் அழகிய தோட்டத்திற்குப் புத்தனை அழைத்து விருந்து வைத்து அப் பெருமானுக்கு விரிந்து பரந்த அந்தத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டே வந்தானாம். புன்முறுவலோடு பார்த்துக் கொண்டு வந்த அந்தப் பெருமான், ஒரு குறிப்பிட்ட மிகமிகச் சிறிய இடம் மட்டும் சுற்றியுள்ள தோட்டத்தின் வனப்புக்குப் பொருத்தமில்லாமலும், ஒழுங்குபடுத்தப்படாமலும் இருப்பதைக் கண்டு வியப்புற்று மன்னனிடம் "ஏன் அதை மட்டும் அப்படியே விட்டு விட்டீர்கள்' என்று கேட்டாராம்.



அந்த இடம் புட்டு அவித்து விற்கும் ஒரு கிழவிக்குச் சொந்தமானது; அந்தச் சிறிய இடத்திற்கு ஒன்றுக்கு நூறாக விலை தருவதாகச் சொல்லியும் அவள் அதை விற்க மறுத்துவிட்டாள். அவள் மூதாதையர் சொத்தாம் அது. அதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று அந்த இடத்தை விட்டு விட்டுச் சுற்றிலும் தோட்டம் அமைத்தேன். அந்த அழகுக் குறைவு பெருமானுடைய கண்களிலும் பட்டு விட்டதே என்று பிம்பசாரன் வருந்த, புத்தர் மறுமொழி பகன்றாராம்:



""அந்தப் புட்டு விற்கும் எளிய கிழவியின் உரிமைக்குள் உன்னுடைய அதிகார வாள் செல்ல நாணப்பட்டதன் மூலம், இந்தத் தோட்டம் மட்டுமன்று; உன்னுடைய நாடே அழகுடையதாக மாறிவிட்டது'' என்று பாராட்டினாராம்.



ஏன் என்று யாரும் கேட்க முடியாத வானளாவிய அதிகாரம் பெற்ற மன்னன் கூடத் தன் அதிகாரத்தின் எல்லை தருமநெறியோடு மோதுகின்ற இடத்தில் முற்றுப்பெற்று விடுவதாகவே கருதுகிறான்.




உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல் நிர்ணயச் சட்டத்தைப் பெற்றிருக்கும் நாட்டில், ஒரு மந்திரி இருபது கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தைச் "சும்மா பெயருக்கு ஒரு விலையைக் கொடுத்து விட்டுக் கையகப்படுத்திக் கொள்ள' முயன்றிருக்கிறார்.



நிலத்தின் உடைமையாளர்கள் அந்த அக்கிரமத்திற்கு உடன்படாதபோது, அவர்கள் தூக்கிச் செல்லப்பட்டு, உயிர் குறித்து அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் நாற்றமெடுத்தபின், முதலமைச்சர் கருணாநிதி என்.கே.கே.பி. இராசாவை அமைச்சர் பொறுப்பிலிருந்து வேறு வழியில்லாமல் விடுவிக்கிறார்!



இதேபோல் இன்னொரு அமைச்சர் பூங்கோதை, தன்னுடைய இரத்த உறவினர் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டிருக்கும் சிக்கலில், உறவினரைக் காப்பாற்ற லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் தன் பதவிச் செல்வாக்கைச் செலுத்தியபோது, அவருடைய பேச்சு ஒலி நாடாவில் பதிவாகித் தப்ப முடியாத நிலை ஏற்பட்டதால், பதவி விலகுகிறார்!




பிறிதொரு வலிமை வாய்ந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலத்தில் இருபதாயிரம் சதுர அடி இடத்தை வசத்திற்குக் கொண்டு வர, எண்பது ஆண்டுகளாக அங்கே குடியிருந்து வந்த முப்பத்தியொரு குடும்பங்களை இம்சித்தும், அச்சுறுத்தியும் காலி செய்ய வைத்தார் என்று வந்த புகாரை விசாரிக்கும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் கட்டளை இட்டிருக்கிறது. ஆனால் கருணாநிதியின் போலீஸ் என்ன ஸ்காட்லாந்த் யார்டா?




வருவாய்க்கு மீறிய சொத்துச் சேர்த்த வழக்கில் இன்னொரு அமைச்சர் கீதா ஜீவனை உயர் நீதிமன்றம் விடுவிக்க மறுத்து, கீழ் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளுமாறு கட்டளையிட்டிருக்கிறது.




"இராமர் பால இடிப்புப் புகழ்' மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தன்னுடைய இரு மகன்களுக்கும் மலிவு விலையில் எரிவாயு உரிமம் வழங்குமாறு, தன்னுடைய கனபரிமாணமுள்ள கூட்டணி மந்திரி பதவியின் செல்வாக்கு அழுத்தத்தை மைய அரசின் மீது செலுத்தி இருக்கிறார்.




""உன் குடும்பத்திற்கு வழியில்லாத வழியில் அரசுரிமம் பெற்றுத் தொழில்களை உருவாக்கவா மந்திரி பதவி? உடனடியாக ராஜிநாமா செய்'' என்று நாடாளுமன்றத்தில் கூக்குரல் எழுந்தபோது, மிகவும் குளுமையாக, "அதனாலென்ன?' என்று கேட்டார். அந்த நொடியிலேயே நாடாளுமன்றத்தின் நாடி அடங்கிவிட்டது!




மேற்கூறிய அமைச்சர்களின் ஆள் கடத்தல்கள், அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள், ஊழல்கள் அனைத்தும் அண்மைக்காலத்தில் அடுத்தடுத்து நடந்தவை.


இந்தச் சில மந்திரிகள்தாம் நெறிக் குறைபாடு உடையவர்களென்றால், அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம்!


ஆனால் இங்கே மொத்த அமைச்சரவையே தறிகெட்டுப் போயிருக்கும்போது, யாரைத்தான் தள்ளுவது? யாரைத்தான் கொள்ளுவது?




கருணாநிதியேகூட ஒரு நேரத்தில் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்ளும்போது, எல்லாப் பிழைகளுக்கும் மூலத்தை அறிந்து கொள்ள மாட்டாரா? அன்று காந்தி இருந்தார். இளைஞர்களைப் பொதுவாழ்வுக்கு வாருங்கள் என்று அழைத்தார்.



நல்லவர்களெல்லாம் நம்மைத்தான் காந்தி அழைக்கிறார் என்று பொதுவாழ்வுக்கு வந்துவிட்டார்கள். கெட்டவர்களெல்லாம் இந்தக் கிழவன் அழைப்பது நம்மை அல்ல என்று ஒதுங்கிக் கொண்டார்கள்! ஆகவே நாட்டின் பொதுவாழ்வு பளிங்கு போல் தூய்மையானதாக இருந்தது.



அடுத்த காலகட்டத்தில் அதற்குப் பிறகு வந்த தலைவர்களும் வழக்கம்போல், இளைஞர்களைப் பொதுவாழ்வுக்கு அழைத்தார்கள்.


நல்லவர்களெல்லாம் இந்த அழைப்பு நமக்கில்லை என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள்.



கெட்டவர்களெல்லாம், "நம் தலைவர் நம்மைத்தான் அழைப்பார்' என்று உரிமையோடு உள்ளே வந்து விட்டார்கள்!



அழைக்கின்றவர் யார் என்பதைப் பொறுத்துப் பின்பற்றுகிறவர்கள் அமைகிறார்கள்!



அன்று நாட்டுக்குப் பணியாற்ற அறிவும், நெறி சார்ந்த வாழ்வும் உடையவர்களெல்லாம் முன் வந்தார்கள். அவர்கள் பல்வேறு ஜாதிகளில் பிறந்தவர்களாய் இருந்தார்கள். அதிகாரம் கைமாறும்போது இயற்கையாகவே பல்வேறு ஜாதிகள் பிரதிநிதித்துவம் பெற்று, சமூகம் சமநிலை எய்தியது! இது முறையான பிரதிநிதித்துவம்!




தமிழ்நாடு ஈன்றெடுத்த தவப்பெருமக்களைப் பாருங்கள்!



வ.உ.சி: நாட்டு விடுதலைக்காக இரண்டு ஆயுள்தண்டனை பெற்றுச் சிறையில் செக்கிழுத்தவர். இவரைத் தந்தது பிள்ளைமார் சமூகம்!



இராஜாஜி: இவரை மிஞ்சிய அரசியல் அறிஞன் இந்திய மண்ணில் இல்லை. அதிகார நாற்காலியில் ஒரு முனிவனைப்போல் அமர்ந்து ஆட்சி நடத்தியவர். இவர் பிறப்பால் பார்ப்பனர்!



ஈவேரா பெரியார்: தமிழர்களைச் சூத்திர நிலையிலிருந்து விடுவித்துச் சுயமரியாதை கொள்ள வைத்தவர். இணையற்ற சிந்தனையாளர். ஜாதி எதிர்ப்பாளரான இவர் பிறப்பால் கன்னட நாயக்கர்!



காமராஜ்: பத்தாண்டுகள் நாட்டு விடுதலைக்காகச் சிறையில் தவமிருந்தவர். பத்தாண்டுகள் நாட்டு மேன்மைக்காக நாடாண்டவர்; இவருடைய ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம்! இவர் பிறப்பால் நாடார் சமூகத்தினர்!



முத்துராமலிங்கத் தேவர்: காந்தியால் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைப் போரில் தன்னை உருக்கிக் கொண்டவர். பின்னாளில் நேதாஜியின் தளபதி. இவர் பிறப்பால் மறவர்!



ஓ.பி. இராமசாமி ரெட்டியார்: விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி. முதலமைச்சராகக் கோலோச்சியவர். நேர்மையின் பிறப்பிடம். பிறப்பால் ரெட்டியார் சமூகத்தினர்!



கக்கன்: விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியப் பட்டறையில் உருவாக்கப்பட்டவர். அரிசன ஆலய நுழைவுப் போரின் தளபதியான வைத்தியநாத ஐயரின் தளபதி. நேர்மை மனித உருக்கொண்டு கக்கனானது! இவர் பிறப்பால் அரிசன வகுப்பினர்!



அண்ணா: புலவர்கள் மட்டத்தில் சுருங்கிப் போயிருக்க வேண்டிய தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை மக்கள் மட்டத்திற்குக் கொண்டு சென்று, தமிழர்களை இன உணர்வு கொள்ள வைத்த தானைத் தலைவர்; ஜாதி மறுப்பாளரான இவர் பிறப்பால் முதலியார் சமூகத்தினர்.



இப்படி, இங்கே பட்டியலிட இடம்போதாத, இன்னும் எத்தனை எத்தனையோ சமூகங்களில் பிறந்து நாட்டுத் தொண்டாற்றிய தலையாய மக்கள் பலர்; அவர்கள் ஒவ்வொரு வகையில் சிறப்புக்குரியவர்கள். நிறைவான பெருமக்கள்!



அவர்களிடம் அழுத்தம் பெற்று நிற்கும் அறிவு மற்றும் பண்பு நலன்களுக்கேற்ப அவர்கள் உயரும் வகையில் நாட்டின் மதிப்பீடுகளை மாற்றி அமைத்தார் காந்தி!



நல்லது வாழவும், நயவஞ்சகம் அழியவும், உண்மை வாழவும், பொய் ஒழியவும், அறிவு வாழவும் அறியாமை தேயவுமான ஒரு புதிய சமூக மதிப்பீட்டின் அடிப்படையில் பொதுவாழ்வை உருவாக்கினார்!



ஆனால் பிந்தி வந்த தலைவர்கள் சந்தர்ப்பவாதத்தையும், ஜாதி அரசியலையும் ஆயுதமாகக் கொண்டவர்கள். ஒட்டுமொத்தக் குடும்பம்தான் இவர்களின் ஒரு பெருங் கொள்கை. இத்தகையவர்களின் ஏறுமுகம் நாட்டின் இறங்குமுகமாகி விட்டது.



இவர்கள் தங்கள் மட்டத்திற்கு மேலானவர்களை உடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தப்பித் தவறி விவரமில்லாமல் யாரும் வந்துவிட்டாலும் அவர்களைப் பிதுக்கி வெளியே தள்ளி விடுவார்கள். ஆகவே கீழே உள்ள இரண்டாவது வரிசைத் தலைவர்களைத் தகுதி அடிப்படையில் அல்லாமல், ஜாதி அடிப்படையில் மட்டுமே உருவாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.



ஜாதி என்பது ஒரு சிறு அல்லது பெருங்கூட்டம். அந்தக் கூட்டம் அதிகாரத்தில் தனக்குரிய பிரதிநிதித்துவத்தைக் கோரும். அவ்வளவுதான்! அதோடு அமைதி அடைந்துவிடும்!




முன்பிருந்த ஜாதிகள்தாம் இப்போதும் இருக்கின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லா ஜாதிகளிலும் நல்லோரும் இருக்கிறார்கள்; தீயோரும் இருக்கிறார்கள்! முத்துராமலிங்கத் தேவரையும், காமராஜையும், கக்கனையும் அதே ஜாதிகள்தாம் அளித்தன. அவர்களின் அறிவும், தொண்டும், நேர்மையும் அவர்கள் பிறந்த ஜாதிகளைத் தாண்டி எல்லா ஜாதிகளையும் தேசத்தையும் உயர்த்தின.




என்.கே.கே.பி. இராசாவையும், டி.ஆர். பாலுவையும், கீதா ஜீவனையும், பூங்கோதையையும் அதே ஜாதிகள்தாம் தந்திருக்கின்றன.




இவர்களின் நெறியற்ற நடத்தைகள் பிறந்த ஜாதி உள்ளிட்ட எல்லா ஜாதிகளையும் முடிவாகத் தேசத்தையும் கீழறுக்கின்றன.



இது ஜாதிகளின் குற்றமல்ல; தேர்வு செய்யும் தலைவனின் குற்றம்!

Monday, September 8, 2008

***** 72 - ஃபிபோனாக்கி எண் தொடரும்,மனித வாழ்வும்



ஃபிபோனாக்கி எண்களைப் பற்றி நாம் பள்ளிப் பருவப் படிப்பில் அறிந்திருப்போம்.


சில கணிதப் பட்டதாரிகள் மேலும் சிறிது அதிகமாக அறிந்திருக்கலாம்.
லியோனார்டோ டெ பிசா டெ ஃபிபோனாக்கி என்பது அந்த நண்பரின் முழுப் பெயர்.

1100 களில் இத்தாலியில் பிறந்த அவரின் தந்தை பிசா நகர வியாபாரிகளின் தெடர்பாளராக வேலை செய்ததால் பல இடங்களில் பள்ளிக் கல்வி படிக்க நேர்ந்தது.

இவ்வாறு லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல இடங்களின் பாடங்கள்,கணித முறைகளை படித்த ஃபிபோனாக்கி’க்கு எண்களுடனான கணித முறையின் எளிதான கையாள்வு முறை ஐரோப்பிய ரோமன் கணித முறையை விட மிகவும் வசீகரமாகவும் எளிதாகவும் தோன்றியது.
இது உண்மையும் கூட.



காட்டாக 187285 உடன் 134746 ஐக் கூட்ட வேண்டும் என்றால எண்கள் முறைக் கணிதத்தில் இரண்டு வரியும் ஒரு கோடும் போட்டுக் கூட்டிவிடலாம்.




ஆனால் இந்த எண்களை ரோமன் வடிவில் மட்டுமே நினைத்துப் பாருங்கள்,லேசாக தலைக்குள் ஞமஞம வெனத் தோன்றவில்லை?????

ஃபிபோனாக்கியை இந்திய முறை எண்கள் பெரிதும் கவர்ந்திழுத்தன.

0,1,2,3,4,5,6,7,8,9 இந்த 10 எண்களும் அவரின் மூளைக்குள் நர்த்தனம் ஆடின,விளைவு ஃபிபோனாக்கி தொடர் பிறந்தது.

1200 லிருந்து 1220 க்குள் ஃபிபோனாக்கி 4 புத்தகங்கள் எழுதினார்;ஆனால் நூல் பிரதிகளை சேகரிக்கும் வழமையோ,பாதுகாக்கும் அம்சங்களோ இல்லாத அக்காலத்தில் அவருடைய மேலும் சில நூல்கள் இருந்து அழிந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.

ஃபிபோனாக்கிதான் ரோமன் கணக்கியல் வல்லுனர்களுக்கு எண்களின் அறிமுகத்தைத் தந்தார்.

13’ம் நூற்றாண்டின் அக்காலத்தில் ரோமானிய எண்களை (iiii,ix,xi போன்ற எண்கள் வடிவம்) வைத்து கூட்டல்,பெருக்கல்,வகுத்தல் எல்லாம் பெரிய தலைவேதனையாக இருந்தது.இந்த தலைவலி செல்வந்தர்களின் செல்வ அளவை சரியான முறையில் நிர்ணயிப்பதில் கூட சிரமங்களைத் தந்தது.
ஃபிபோனாக்கியின் “லிபெர் அபெக்கி’(Liber Abaci) என்ற புத்தகம் வந்தபின் ரோமனிய எண்கள் முறை மாற்றப்பட்டு இந்திய எண்கள் முறை கணித்தத்துக்கு கைக்கொள்ளப் பட்டது.

ஆனால் ஃபிபோனாக்கி வரிசை என்பது வேறு.

0,1,2,3,5,8,13,21... என்பதுதான் அது;அதாவது 0,1 ல் தொடங்கும் எண் வரிசை அடுத்தடுத்த எண்களைக் கூட்டிக் கொண்டே பெறப்படும் வரிசைதான் ஃபிபோனாக்கி வரிசை.

இதில் அப்படி என்ன இருக்கிறது????

கீழிருக்கும் படங்களைப் பாருங்கள்...
பைனாப்பிள் பழத்தின் கண்ணிகளின் வரிசை ஃபிபோனாக்கி வரிசையில் இருப்பதை படம் சுட்டுகிறது.



சூரியகாந்திப் பூவின் இதழ் வரிசையின் அமைப்பு,மனித முகத்தின் அமைப்பு கோணங்கள்,மனித உடலின் தலை,இடுப்பு,காலகளுக்கிடையேயான அளவு,மலைத்தொடரின் கோண அளவு,மார்பிள் கற்களில் ரேகைகளில் காணப்படும் கோண அளவு என அனைத்தும் ஃபிபோனாக்கி எண்களில் கட்டமைவுக்குள் வருவது இயற்கையின் ஆச்சர்யங்களுள் ஒன்று.




சூரியகாந்திப் பூக்களின் இதழ்கள் வரிசை...




ஃபிபோனாக்கி எண்கள் மற்றும் வரிசை பற்றிய விக்கியின் சுட்டியில் நான் தேசலாக அளித்திருக்கும் சூரியகாந்தியிப் பூவின் அழகான வடிவையும் ஃபிபோனாக்கியின் தொடர்பையும் பாருங்கள் !


பியானோ கட்டைகளின் வரிசை....


மார்பிள் கற்களில் ரேகை....




ஆற்றின் பாதை ....




மலைகளில் சாய்வு விகிதம் .....




உடலின் வடிவ விகிதம் ......




மனித முகம்....



இன்னும் நிதித் துறை சார்ந்த விலை விவகாரங்கள்,பங்குச் சந்தை மற்றும் ஊக வணிகத்துறையின் விலையேற்ற இறக்கங்கள் ஃபிபோனாக்கி வரிசையின் மூலமே கணக்கிடப் படுகின்றன என்பது உங்களை வியப்பிலாழ்த்தக் கூடும்,ஆனால் அதுதான் உண்மை.


ஒரு கணித அறிஞனின் வித்தியாசமான ஒரு கண்டுபிடிப்பு,அதுவும் இந்திய கணிதவியலின் அற்புதங்களின் நீட்சியான ஒன்று,இன்று உலகின் இயற்கையின் அனைத்து அமைப்புகளிலும் காணக் கிடைக்கப்படுவது,இயற்கை நமக்கு வைத்திருக்கும் எண்ணற்ற ஆச்சர்யங்களுள் ஒன்று !

பி.கு:படங்கள் கைத்தொலைபேசி வழி படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து எடுத்தவை..சீர்படுத்த இயலவில்லை..மன்னிக்கவும்.

***** 71.எது அறிவு ??????

அறிவு என்பது என்ன?

அதைக் கண்ணால் காண முடியுமா?

அதை எப்படி விளக்க முடியும்?

இதை எப்போதாவது ஆராய்ந்திருக்கறோமா?நாம் அறிவைப் பெற்றிருக்கிறோம் என்று எப்படிச் சொல்வது?

பொதுவாக அறிவுடையவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்;கெட்டவர்கள் அறிவற்றவர்களாக இருப்பார்கள் என்றும் சிந்திப்பது உலக வழக்கம்.

ஆனால் உலகில் நாம் பார்ப்பது என்ன?

ஓழுங்காகச் சாப்பிட்டுவிட்டு,உறங்கி ஓய்வெடுக்கும் குழந்தைகளை விட,ஓயாது சேட்டை செய்துகொண்டு,விரைவாகத் துன்பத்தை விளைவிக்கும் பிள்ளைகளே அறிவுள்ள பிள்ளைகள் என அறியப் படுகிறார்கள்;

பணத்தை முடிந்து தோளில் போட்டுக் கொண்டு செல்பவர்களை விட,அதை திருடிச் செல்லும் முடிச்சவிழ்க்கிகள் அதிக அறிவைப் பயன்படுத்துகிறார்கள்;

உயர்ந்த பொருளை வைத்து உள்ள விலை கூறி விற்கும் வியாபாரிகளை விட,மட்டமான பொருளை வைத்து அதிக விலை கூறி பொய்யான வாக்குறுதியுடன் விற்கும் பொல்லாத வியாபாரிகள் அதிக அறிவுடையவர்களாகத் தோன்றுகிறார்கள்;

நேர்மையாக வேலை செய்யும் உத்தியோகம் செய்பவர்களை விட கையூட்டு வாங்கி உத்தியோகஸ்தர்கள் அதிக அறிவாளிகளாகத் தோன்றுகிறார்கள்;

உடல் வருத்தி உழைத்து உண்ணும் கிராமத்து மக்களை விட அவ்வளவு அதிக உழைப்பு இல்லாத நகர மக்கள் அதிக அறிவாளிகளாகத் தோன்றுகிறார்கள்;

பொதுநலம் கருதி அரசியலில் இயங்கும் அரசியல்வாதிகளை விட,தன்னையும் தன் குடும்பம்,பேரன்,பேத்திகள் வரை அனுபவிக்க முறையற்ற பணம் சேர்க்கும் அரசியல்வாதிகள்தான் சிறந்த சாணக்ய,அறிவாளி அரசியல்வாதிகளாக வலம் வருகிறார்கள்;


ஆக அனைத்துவிதங்களிலும் நியாயமாக இருப்பவர்களை விட அநியாயமாக இருப்பவர்களே அறிவாளிகள் என்ற பிம்பம் எழுகிறது.இது சரியான கருத்துதானா?

நல்ல மனிதன் என்றால்,பாவம் ஒன்றும் தெரியாதவன்,பிழைக்கத் தெரியாதவன் என்று முத்திரை குத்தப் படுவதுதான் இயல்பாக நடக்கிறது.பொல்லாத மனிதன் என்றால் எவராலும் எளிதில் ஏமாற்றப் பட முடியாதவன் என்ற கருத்தும் பொதுக் கருத்தாக இருப்பது வழமையாகி விட்டது.

இப்போது சொல்லுங்கள்,எது அறிவு?

பொல்லாத மக்களிடம் காண்பதுதான் அறிவா?நல்ல மனிதர்களிடம் அது ஒளி வீசாதா?’ போன்ற கேள்விகள் எழுவது இயற்கை.

இவற்றிற்கு என்ன பதில்?

இந்தக் கேள்வியைப் பலரிடம் கேட்டுப் பாருங்கள்,எவராவது நல்ல பதில் கூறுகிறார்களா?

சரி,இன்னோரு இதற்கு இன்னோரு பார்வைக் கோணம் இருக்கிறது,என்னவென்று பார்ப்போம்.


மேற்சொன்ன அனைவரும் செய்யும் செயல்களில் திறன் இருக்கிறது,ஆனால் திறனும் அறிவும் ஒன்றா?

திறன் வேறு;அறிவு வேறு.(என்னுடைய முந்தைய ஒரு பதிவிலும்-திறனற்ற செயலும்,செயலற்ற திறனும்- இவற்றின் வேறுபாடுகளைப் பற்றி சிறிது பேசினேன்.)

திருடனுடைய மனம் திருட எண்ணுகிறது,திருடத் துணிகிறான்,திருடுகிறான்;
ஆனால் திருடும் போது நடுங்குகிறான்,ஏன்?
அது தவறு என அவனுடைய அறிவு அறிவுறுத்துகிறது.இந்த அறிவுரையை ஏற்காமல்,தூண்டப் படும் மனத்தின் வழி சென்று திருடுகிறான்.

இது அறிவையும் மீறி மனம் செயல்படும் செயலின் விளைவு.

திருடுவது,பொய் சொல்லுவது,கையூட்டு வாங்குவது,ஏமாற்றுவது,நெறி தவறுவது ஆகியவை எந்த அளவு திறனுடன் செய்யப்பட்டாலும்,அது அறிவின் பாற் பட்ட செயலன்று;அது ஆசையின் பாற்பட்ட மனத்தின் செயல்.இதைத் தடுத்து நிறுத்தி,நல்வழியில் செல்லத் தூண்டும் செயலே அறிவின் செயல்.

அருந்தமிழ்க் குறள் அழகாகக் கூறுகிறது.....

சென்ற இடத்தாற் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின் பால் உய்ப்பதறிவு.

“மனம் சென்றவிடமெல்லாம் அதனைச் செல்ல விடாமல் தடுத்து,அதைத் தீமைகளிலிருந்து விலக்கி,நல்லவைகளிடத்துச் செலுத்துவது எதுவோ அதுவே அறிவு’ என்பது இதன் பொருள்.


மனமே அறிவு என மயங்கியிருப்பதாலும்,மனத்தின் செயல் அனைத்தும் அறிவின் செயல் என்ற மயக்கம் இருப்பதாலும் மேற்கண்ட வாறு சந்தேகங்கள் ஏற்பட்டன.

இதனால்தான் மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என கவியரசரும் கேட்டார் போலும் !

மனம் வேறு,அறிவு வேறு என்பதும்,மனத்துக்கு அப்பாற்பட்ட,மனத்தை வழி நடத்தும் திறன் படைத்த ஒன்றே அறிவு என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.

ஆயினும் மனம் அறிவை புறப்படுத்தி தான் ஆசைப்பட்ட செயலைச் செய்யும் போது நாம் சிக்கலுக்குள்ளாகிறோம்;அங்கு அறிவு,மனதை தவறின் வழி செல்லாமல் தடுத்தாலும்,திருடனின் திருடத் தூண்டும் மனம் அறிவை வெற்றி கொள்வது போல,மனதின் வழி செல்பவன் அறிவற்றவனாகிறான்.

மனம் சென்றவிடமெல்லாம் செல்லாது மனத்தை நல்வழியில் செலுத்தும் திறன் படைத்தவன் உன்னதமானவனாகிறான்;மனம் போனபடி செல்லும் ஒருவன் கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும் சாதாரண மனிதனாக வாழந்து சுவடற்று மறைகிறான்...

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...