குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, December 18, 2009

***Aspire-டெம்பளேட்டில் தொழில் நுட்ப உதவி***

வலைப்பதிவுக்கு சுண்ணமடிக்கலாம் என்று முடிவு செய்து blogger கம்பெனி வழங்கிய aspire பெயிண்டை அடித்திருக்கிறேன்.

சில பிரச்னைகள் தெரிகின்றன
1.பதிவின் தலைப்பை க்ளிக்கினால் பதிவுக்குப் போகும் வசதி இல்லை.ஆச்சரியமாக இது பக்கத்தின் முதல் பதிவுக்கு மட்டும் நிகழ்கிறது.பக்கத்தில் 5 பதிவுகளைத் திறந்தால் 2,3,4,5 ஆவது பதிவுகளுக்கு இந்தத் தொல்லை இல்லை,லிங்க் சுட்டியிலேயே தெரிகிறது.ஆனால் தலைப்பக்கத்து முதல் பதிவுக்கு லிங்க் தெரிவதில்லை !

2.அர்க்கைவ்ஸ்'ல் நாட்காட்டியை இணைத்திருக்கிறேன்-தீபா கொடுத்த வழிமுறைகளின் படி.ஆனால் நாட்காட்டியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பதிவைத் தெரிவு செய்தால் கமெண்ட் புக்மார்க் சேமிப்பு ஆப்ஷனுக்கு செல்கிறது.அதே சமயத்தில் நாட்காட்டியின் உள் தேதி எண்ணில் க்ளிக்கினால் அ ந்த தேதிக்குரிய பதிவு ஒழுங்காகத் திறக்கிறது !

3.அப்புறம் இந்த விட்ஜெட்டுகளின் அகலத்தை சிறிது அதிகப்படுத்தவும் விரும்புகிறேன்,any possibility?

ஜாம்பவான்கள் உதவி ப்ளீஸ் !!!!

Wednesday, December 16, 2009

111.சீனர்களின் காவடித் திருவிழா

சிங்கையில் பொதுவாக கரடுமுரடான ஆன்மிகம் இருக்காது;(என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!)எனது அனுபவத்தில் கடந்த 7 வருடங்களில் மனதைப் பதைக்க வைக்கும் ஆன்மிக நிகழ்வுகளை சிங்கையில் பார்த்ததில்லை.

மனதைப் பதைக்க வைக்கும் ஆன்மிக நிகழ்வு ! அது ஆன்மிகத்தில் இருக்க முடியுமா என்ன என்று தோன்றுகிறது இல்லையா ? தமிழகத்தில் மாரியம்மன் கோவில்களில் அளிக்கப்படும் பலிகளைப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது பக்ரீத்துக்கு வெட்டப்படும் ஒட்டகங்களின் காட்சி ??இவை போன்ற காட்சிகளுக்கான மூலகாரணமான ஆன்மிக நிகழ்வுகளை விட இவ்வித சமூக பயங்கரங்களை மனதைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளாக நினைவில் தங்கும்.

இவற்றிற்கு சற்றும் குறையாது என்னை கிறுகிறுக்க வைக்கும் ஒரு காட்சி அலகு குத்துதல்.இறைவனுக்காக அல்லது இறைக்காரணத்திற்காக தன் உடலை எவ்வித ரணத்திற்குட்படுத்தவும் தயாராக இருக்கும் ஒரு மேன்மையான நிலைதான் அது என்றாலும் அவற்றைப் பார்க்க மனம் ஒப்புவதில்லை;அதுவும் சிறுதேர் போல,சுமார் 4 அல்லது 5 அடி இருக்கும் இறை பிம்பங்கள் இருக்கும் வாகனத்தைப் பிணைத்த கயிறுகளில் மறுமுனைகளில் மாட்டப்பட்டிருக்கும் கூரிய உலோக வளைவூசிகள் முதுகு பற்றும் தோள் புறங்களின் மேல் தோலை வளைத்துக் குத்தி இழுத்துக் கொண்டுவர அந்த தேர் அல்லது வாகனத்தை இழுத்துக் கொண்டு ஊர்வலமாகச் செல்லும் பக்தர்கள்...எனக்கு காணப் பொறுக்காத காட்சி அது !

பெரும்பாலும் கார்த்திகை மாதங்களில் நடைபெறும் விழாக்களில்தான் இவ்வித பிரார்த்தனைகள் அரங்கேறும்,அதுவும் தமிழ்க்கடவுள் என்று கொண்டாடும் முருகப் பெருமான் பெயரில்தான் இவ்வளவும் நடக்கும்.

ஒரு காட்சி சிறுவயது முதலே என்னை வெலவெலக்க வைப்பது;எங்கள் ஊரில் சூரபதுமன் வதை ஒரு விழாவாகவே நடக்கும்.அச்சமயத்தில் மாலை நடக்க இருக்கும் சூரன் வதைக்கும் முன்னால் முருகப் பெருமான் வீதியுலா இருக்கும்;அந்த ஊர்வலத்தில் சிலர் அலகு குத்திக் கொண்டு வருவார்கள்,சிலர் சுமார் 2 அடி நீளத்தில் இருக்கும மெல்லிய கம்பியால் அமைந்த அம்பை இடுப்பில் இடது வலது விலாப் புறங்களில் குத்திக் கொண்டு வருவார்கள்;அதிலும் ஒருமுறை வந்த ஒரு அன்பர் சும்மா வராமல் அந்த அம்பை ஆர்மோனியம் வாசிப்பது போல் முன்னும் பின்னும் இழுத்துக் கொண்டு வந்தார்;அம்போ விலாப் புறத்தில் சதையில் கிடைமட்ட வாக்கில் குத்தியிருக்கிறது;அணிந்திருக்கும் உடையில் அங்கங்கே ரத்தக் கறைகள்...அப்பா,அந்தக் காட்சி போதுமாடா சாமி என்று நினைக்க வைத்து விட்டது.அன்று முதல் அலகு குத்தியவர்களின் ஊர்வலம் வந்தாலே நான் ஒதுங்கி விடுவது வழக்கம்,அதைக் காணப் பொறுப்பதில்லை என்பதால்!

பக்தியை இவ்வளவு குரூரமாக-ஆம்,எனக்கு குரூரமாகத்தான் தோன்றுகிறது-வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களுக்கான விதை எங்கு விதைக்கப்பட்டிருக்கும்?


தன் கையை கல்லில் உறைத்து சந்தனம் இல்லாக் குறையைத் தீர்த்த மூர்த்தி நாயனார் அல்லது பிள்ளையைக் கொன்று கறி சமைத்த சிறுத்தொண்டர் இவர்களின் கதைகள் உதாரணமாக இருக்குமோ?அல்லது அவர்கள் விளக்க வந்த தத்துவங்களை விட்டு சம்பவங்களை மட்டும் நாம் முன்னெடுக்கிறோமா? அப்படி என்றால் இவை நம் அறியாமையின் அவல விளைவுகளா? எனக்குப் புரியவில்லை!

இப்போது இவற்றின் நினைவு வந்தது சமீபத்தில் சிங்கையில் நான் பார்த்த ஆச்சரியப்படுத்திய நிகழ்ச்சி.இங்கு தைப்பூசத் திருவிழாவின் போது மிகுந்த அளவில் பக்தர் கூட்டம் கூடும் எனவும் அலகு குத்தும் நிகழ்ச்சிகள் அவற்றின் எல்லா பரிமாணங்களிலும் நிகழும் என்று கேள்வியுற்றிருந்ததால் அச்சமயங்களில் அந்த ஏரியாவையே தவிர்த்து விடுவது என் வழக்கம்.ஆனால் ஆச்சரியமாக நான் இருக்கும் பகுதியில் சீனர்களும் கலந்து கொண்ட இந்தியக் கார்த்திகை மாதக் பக்திக் கொண்டாட்டத்தை கண்ணுற நேர்ந்தது.



சிறு தேர்களில் புத்தர் வீற்றிருந்தார்-அல்லது அவரைப் போல எனக்குத் தோன்றியதா தெரியவில்லை.பெரிய படங்கள் திருப்பதி வெங்கடாசலத்திற்கும்,காசி அன்னபூரணி அம்மைக்கும்.ஹோர்டிங்குகளே இருந்தன.


சுமார் 500 லிருந்து 800 பேர்கள் கலந்து கொண்ட இந்த விழா 10 நாட்களுக்கும் மேலாக நடந்தது.கடைசி நாள் ஊர்வலமும் வைத்தார்கள்.



அப்போதுதான் இந்தியர்களுடன் சீனர்களும் கூட அலகு குத்திக் கொண்டு சிறுதேர் இழுத்தார்கள்..இடுப்பிலும் நாக்கிலும் அம்புகள் குத்திக் கொண்டு வலம் வந்தார்கள்.சீனர்களும் இவ்வகை தன்-வருத்தும் செயல்களில் பக்தியின் பெயர் கொண்டு ஈடுபட்டது ஒரு புதிய நிகழ்ச்சியாக இருந்தது !

Saturday, December 12, 2009

ஒரு தீர்க்கதரிசியின் நினைவு !!!!!

உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக் கொண்டு வருகிறதென்பதை தமிழ்நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனதைப் பதியவைத்துக்கொண்டு வெளிஉலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல் அற்ப விஷயங்களிலும்,அற்பச்செய்கைகளிலும் நாளையெல்லம் கழியவிட்டு கிணற்றுத்தவளைகளைப் போல் வாழ்வதிலே பயனில்லை.
வர்த்தஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப்புழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேட வேண்டும்.படிப்பவர் அபாரமான சாஸ்திரங்களையும் பல தேசத்துக் கல்விகளையும் கற்றுத் தேர வேண்டும்.ராஜ்ய விவகாரங்களில் புத்தி செலுத்துவோர் உலக சரித்திரத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு,மற்ற ராஜதந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய யோசனைகள் செய்து நிறைவேற்றிப் புகழ் பெற வேண்டும்.கைத்தொழில்கள் விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடந் தருகின்றன.
திருஷ்டாந்தமாக,நேர்த்தியான சித்திரங்களும் வர்ணங்களுல் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும் அழகான் ஆடைகள் செய்யவல்ல தொழிலாளிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள்.இவர்களுக்குப் படிப்பில்லை;வெளிஉலகின் நிலை தெரியாது;கையிற் முதற் பணமுமில்லை.நமக்குள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக் கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து அவற்றை நமது தொழிலாளிகளைக் கொண்டு செய்வித்தால் மிகுந்த லாபமுண்டாகும்.
இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமும் கொடுப்பது.எல்லாவிதமான கைத்தொழில்களும் தற்காலத்தில் இரும்பு எந்திரங்களினாலே செய்யப்படுகின்றன.ஆதலால் நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பல விதங்களிலே அறிவு விருத்தியும் ஜீவன ஸௌகர்யங்களும் ஏற்பாடு செய்து கொடுத்து இடத்துக்கிடம் இயன்றவரை இரும்புத்தொழில் வளர்க்க வேண்டும்.
இனி வர்ணப் படம்,தையல் வேலை,மைத்தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களில் அறிவு மிகவும் சிறந்தது.கொஞ்சம் சிரமப்பட்டால்,இத்தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிடலாம்.சிறிது காலத்துக்கு முன்பு சீனத்திலிருந்தும் ஜப்பானிலிருந்தும் பல சித்திர வேலைகளைக் கொண்டு போய் அமெரிக்காவில் காட்டியபோது,அங்கே அவற்றிற்கு மிகுந்த புகழ்ச்சியும் பிரியமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதை நாமேன் செய்யக்கூடாது?
வெளிநாட்டுக்கு கப்பலேறிப் போங்கள்.புறபடுங்கள்.தொழிலாளிகளே,வியாபாரிகளே,வித்வான்களே,புத்திமான்களே,எப்படியேனும் யாத்திரைச் செலவுக்கு பணம் தயார் செய்து கொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள்.நமது தொழில்களுக்கும்,கலைகளுக்கும்,யோசனைகளுக்கும் வெளிநாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும்.சந்தேகப்பட வேண்டாம்.
பரோடாவிலிருந்து இநாயக்கான் என்ற சங்கீதவித்வான் சில வருஷங்களுக்கு முன்பு தென் ஜில்லாக்காளில் யாத்திரை செய்து வந்தது நம்மிலே சிலருக்கு ஞாபகமிருக்கலாம்.அங்கே அவர் சாதாரணமாக இருந்தார்.பின்னிட்டு அவர் பல தேசங்களில் சஞ்சாரம் செய்து பிரான்ஸ் தேசத்திலே போய் நல்ல கீர்த்தியடைந்திருக்கிறார்.அங்கே பல பெரிய வித்வான்களும் பிரபுக்களும் அவருடைய தொழிலை அற்புத்திலும் அற்புதம் என்று கொண்டாடுகிறார்கள்.சங்கீத ஞானமுடைய தமிழ்ப்பிள்ளைகள் முதலாவது கொஞ்சம் இங்கிலீஷ் கற்றுக் கொண்டு பிறகு ஐரோப்பிய சங்கீதத்தின் மூலாதாரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.இது மிகவும் சுலபமான காரியம்.தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம்.இந்தத் தேர்ச்சி கொஞ்சமிருந்தால் பிறகு நமது சங்கீதத்தை ஐரோப்பியர் அனுபவிக்கும்படி செய்தல் எளிதாகும்.அப்பால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய் நமது சங்கீதத்தின் உயர்வை அவர்களுக்குக் காட்டினால் மிகுந்த கீர்த்தியும்,செல்வமும் பெறலாம்.
எவ்விதமான யோசனை,எவ்விதமான தொழில்,எவ்விதமான ஆசை,எதையும் கொண்டு பிற தேசங்களுக்குப் போக வேண்டும்.ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவியமில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம்.வெளிஉலகம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.நமது வரவுக்குக் காத்திருக்கிறது.நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிருக்கிறது.வெளியுலகத்தில் நாம் மேம்பாடு பெற்றாலொழிய,இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை.ஆதலால்,தமிழ்ப் பிள்ளைகளே,வெளிநாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும்,மன வுறுதியினாலும்,பல விதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும்,செல்வத்துடனும்,வீர்யத்துடனும் திரும்பி வாருங்கள்.
உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க !

-மகாகவி பாரதி கட்டுரைகள்(சமூகம்-எதிர்காலம்)
தீர்க்கதரிசியான அந்த மீசைக் கவிஞனை நினைவு கூரும் நாள் இது !!!
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்;கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
பிகு:படம் எனது கைங்கர்யம்...


Posted by Picasa

Monday, November 16, 2009

110.குறுந்' தொகைகள்-161109

இலங்கையில் இந்த வருட மத்தியில் நடந்த கோர மனித இன அழிப்பு இந்த நூற்றாண்டின் மிகப் கொடூரமான மனித அழிவுகளில் -human genocide-முக்கியமானது என்று சொல்லலாம்.இதன் கதாநாயகர்கள் இலங்கையில் மூவர் என்றால் அதற்கு கதை வசனம் எழுதிய தமிழக வசனகர்த்தாவும் தில்லி இயக்குனர்களும் மலையாள டெக்னீஷியன்களும் பேருதவி புரிந்தார்கள்.

திரை விழுந்து பலகாலம் ஆன இப்போது கதாநாயகர்களுக்குள் லாப நட்டக் கணக்கு பற்றிய சண்டை துவங்கியிருக்கிறது;தமிழர்களுக்கான போரு(அழிப்பு)க்குப் பின்னான நிவாரணங்கள் கிடைக்க வேண்டும் என்று அப்பவே சொன்னேன்'வகையான கதைகள் வெளிவருகின்றன.ஆடு நனைகிறது என்று அழுத ஒநாய்க் கதைகள் நினைவுக்கு வருகிறது.

இன்னும் சிறிது காலத்தில் நடைபெற்ற அவலங்கள் பற்றிய மேலும் பல பகீர்த் தகவல்கள் வரலாம்.

எல்லாவற்றிற்கிடையிலும் நவம்பர் 27 ஏதாவது அற்புதம் கொண்டுவருமா என்று ஏக்கங்கள் பல திசைகளில் நிலவுகின்றன;பல விமர்சனங்கள் இருந்த போதிலும் ஒரு மனிதனின் இருப்பும்-காணப்படா தன்மையும் இலங்கைத் தமிழர்களில் தோற்றுவித்திருக்கும் பெரும் மாறுதல்கள் அவலத்திற்கும் வியப்பிற்கும் உரியன.

பாரா எழுதிய ஒரு கட்டுரையில் போல புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மனிதர் என்ற நிலையிலிருந்து ஒரு தத்துவம் என்ற நிலைக்கு மாறி வெகுகாலம் ஆகிவிட்டது'என்பது முற்றிலும் உண்மை.

**********

டெண்டுல்கரின் கிரிக்கெட் உலகின் 20 ஆண்டுகள் எங்கும் கொண்டாடப்படுகின்றன.டெண்டுல்கரின் சாதனைகளை வேறு எவரும் தொடமுடியாதவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் ஆஸ்த்ரேலியத் தொடர் அவர் நினைத்திருந்தால் வெல்லப்பட்டிருக்கலாம் என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
5ஆவது ஆட்டத்தின் 175 ரன்கள் நிச்சயம் ஒரு ஜெம்'மான ஆட்டம்தான்;சொல்லப்போனால் சச்சினின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அது எளிதில் வரும்.ஆனால் அவரால் அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தர முடியவில்லை.

ஒரு 19 ரன்கள்!!!


போட்டி ஆரம்பத்தில் 17000 ஐத் தொட 7 ரன்கள் எடுக்க அவர் செலுத்திய கவனத்தில் பாதியைப் கடைசி 19 ரன்கள் எடுக்கவும் செலுத்தி இருக்கலாம் !

இது உண்மை,பலர் என்னை விமர்சிக்கத் தயாராக இருந்தாலும் !(எங்கேப்பா புரூனோ?)

**********

ஒரு பயிற்சி சோதிடக் கலையின் பல புத்தகங்களுடன் உருட்டிக் கொண்டிருந்த 8 மாத காலம் முடிவுக்கு வந்திருக்கிறது;இனி அவற்றை விசாரத்துக்கு எடுத்துக் கொள்ள உத்தேசம்.

இதற்காகவே ஒரு வலைமனை எப்போதோ தயாராகி விட்டது;ஆனாலும் அதில் ஆரம்பத்தில் போட்ட ஒன்றிரண்டு பதிவுகளைத் தவிர அதைத் தொடவேயில்லை.இனி அதிலும் பதிவுகள் வரும்.

என்னுடைய இந்த 8 மாத காலத் தேடலில் எனக்கு சோதிடக் கலை புரிந்ததோ இல்லையோ,பளிச்சென்று புரிந்த இன்னொரு விதயம்-தமிழில் சோதிடம் பற்றி முழுதாக அறிய நல்ல,படிப்புச் சுவையுடன் கூடிய அதே சமயம் உள்ளுறையில் சொதப்பாத புத்தகம்,இல்லை என்பது.அல்லது அது என் கண்ணில் படவில்லை!

8 மாதம் சோதிடம் படித்து நீ என்ன கண்டாய் என்ற கேள்விக்குப் பதில்:மனிதர்களைப் பற்றிய என்னுடைய புரிதல்களை அது இன்னும் மேம்படுத்தியிருக்கிறது.தவிர்க்க இயலாத சில நிகழ்வுகளை முன்னுணரலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.என்னுடைய முந்தைய பகுத்தறிவும் சில நுண்கலைகளும் பதிவின் சாரத்தில் நம்பிக்கை கூடியிருக்கிறது-thanks to jolly Jumber & Muthuswami.

:-)

*********

மரபணு மாற்றப்பட்ட தாவர விதைகள் பற்றிய ஒரு பதிவு யாரோ எழுதி இருந்தார்கள்.தமிழகத்தில் குறிப்பாக கிராமப் புறங்களில் இதன் தாக்கம் பெரிதாக உணரப்படுகிறது.

காய்கறி பயிரிடும் கிராமப் பெரியவர்கள் பலருடன் அளவளாவும் போது அவர்கள் சொல்வதைக் கேட்டால் பகீரென்கிறது;சாதாரண வகை விதைகள் அதாவது நாட்டுக்காய்கறிகளின் விதைகள்,இப்போது கிடைப்பதில்லையாம்.விதை சேமிப்பாளர்களும் நாட்டுப் புறங்களில் இல்லை.காரணங்கள் பொருளியல் சார்ந்தவை.

கிராமப் புறங்களில் கிடைக்கும் புது வகை தக்காளி கல் குண்டு போல 20 நாட்களுக்குக் கெடாமல் கிடக்கிறது;அதை சமையலில் பயன்படுத்தும் போது 20 நிமிடம் வதக்கினாலும் தக்காளி வதங்குவதில்லை,தோல்தான் சுருங்குகிறது.உணவின் ருசியிலும் தக்காளியின் சுவை தெரிவதில்லை.ரப்பர் துண்டைக் கடித்தது போலத்தான் இருக்கிறது.

கத்திரியிலோ சமைத்த குழம்பில் உரவாடை மூக்கை அடைக்கிறது.பயிரிடும் பெரியவர்கள் சொல்வது:நாட்டுத் தக்காளி தை,மாசி,பங்குணி,சித்திரை போன்ற நான்கு மாதங்களில்தான் நல்ல மகசூல் தரும்;வருடத்தன் மற்ற நேரங்களில் பயிரிட்டால் 4 காய் காய்க்கும் செடியில் 1 காய்தான் காய்க்கும்.ஆனால் நன்றாக விளையும் அந்த 4 மாதங்களில் தக்காளியின்(கொள்முதல்) விலை கிலோ 2 ரூபாய்தான்;பயிரிட்டும் நஷ்டமடைவதை விட வருட முழுதும் நன்றாக விளைச்சல் தரக் கூடிய ரப்பர் தக்காளி-ஆம்,அப்படித்தான் அழைக்கிறார்கள்-மேல்,பயிரிடுவோர் கண்ணீர் வடிக்காமல் இருப்பார்கள்...

விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகளும் அரசும் விதைகளை மேம்படுத்தும் ஆய்வு மற்றும் விவசாயப் பொருள் சேமிப்பு\பாதுகாப்பில் மேம்பாடு போன்ற நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தாவிட்டால் தக்காளியின் சுவை நம் குழந்தைகளுக்கு மறந்து போகலாம் !

********

உன்னைப் போல் ஒருவன் பார்த்தேன்.முன்னரே வெட்னஸ்டே பார்த்திருக்கிறேன்.

தோன்றிய எண்ணம்:கமலின் அடுத்த சொதப்பல்.கூடவே அவரின் தொலைக்காட்சி நேரலையில் நஸ்ருதீனை எள்ளாமல் எள்ளிப் பேசிய பேச்சு வேறு நினைவில் வந்து எரிச்சல்படுத்தியது.

கமல்,do some thing viewable next time!

Thursday, November 12, 2009

109.கடவுள் இருக்கிறாரா ???!!!!


கடவுள் இருக்கிறாரா?

இந்தக் கேள்விக்கு ஆத்திகர்கள் ஏழையின் சிரிப்பு,குழந்தையின் புன்னகை,காலை மலர்கள்,ஆட்டுக் குட்டி என்றெல்லாம் தேடச் சொல்கிறார்கள்;ஆயினும் இவையெல்லாம் கடவுள் என்று ஒருவர் இருந்து அவரால் விளையும் விளைவுகள் என்றால் இந்த விளைவுகளை ஏற்படுத்தும் காரணகர்த்தாவையும் பார்க்க,ஸ்பரிசிக்க,உணர முடிய வேண்டும்.


அவர் இருக்கிறார் என்று நம்பும்படி வியக்த ரூபமாகத் தோன்றாத வரை அவரை எப்படி , எப்போது நம்புவது?


அறிவியலுக்கு-இயற்கையின்,பிரபஞ்சத்தின் செயல்பாட்டை விளக்குவதற்கு-ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு கடவுள் தேவைப்பட்டால் அந்தக் கடவுளை நம்பலாம்.


அறிவியலுக்கு கடவுள் தேவைதானா?


அறிவியல்,குறிப்பாக இயற்பியல் என்ன சொல்கிறது?இந்தப் பிரபஞ்சம் திடப்பொருள்,சக்தி என இருவகையானது.


திடப்பொருள் என்பது நீங்கள்,நான்,மூக்குக் கண்ணாடி,நாய்க்குட்டி,சூரியன்,சந்திரன்,லல்லு,அப்போலோ விண்கலம்,பான்பராக்,மரக்கட்டை,நாமக்கட்டி இதெல்லாம்தான்.இவைகளை ஆதாரமாகப் பார்த்தால் கார்பன்,பாஸ்பரஸ்,இரும்பு,துத்தநாகம் போன்ற தனிமங்கள்;இன்னும பதம் பிரித்துப் பார்த்தால் ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள்;இந்த ட்ரான்களை இன்னும் நுட்பமாகப் பார்த்தால் க்வார்க்குகளால் அமைந்த ஹேட்ரான்கள்,லெப்டான்கள் என்று வகுத்திருக்கிறார்கள்.


இது திடப்பொருள்.


சக்தி என்பது ஒளிக்கதிர்கள்,எக்ஸ்ரே,உஷ்ணம்,ரேடியோ அலைகள் போன்றவை.இவை நான்கு விதமான ஆதார ஈர்ப்பு விசைகளால் வருவது எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.அணுக்கருவுக்குள் உள்ள வலுவான விசை,அணுக்கருவுக்கு வெளியே உள்ள லேசான ஈர்ப்பு விசை,மின்காந்த விளைவு,புவிஈர்ப்பு என மொத்த சமாச்சாரம் நான்குதான்.


இது சக்தி.


இவை இரண்டையும் ஒருமைப்படுத்தி விளக்கும் முயற்சிகள் ஐன்ஸ்டீனிலிருந்து அனைவராலும் முயற்சிக்கப்பட்டு அண்மையில் சிலர் வெற்றிபெற்று நோபல் பரிசு பெற்றனர்.திடப்பொருள்,சக்தி இரண்டுமே ஒன்றுதான் என்று அறிவியலால் நிரூபிக்க முடிகிறது.அறிவியல் சக்தி,திடப்பொருள் இரண்டையும் ஒருமையாகப் பார்க்கிறது.


இறுதியாக,அறுதியாக அறிவியல் 'பிரபஞ்சத்தின் உண்மை' என்று சொல்வது கீழ்வரும் இரண்டு விஷயங்களைத்தான்.


1.பௌதிக இயற்பியல் விதிகள்.ஆதாரமாக இந்த விதிகளின் படிதான் பிரபஞ்சத்தின் அத்தனை திடப்பொருள்களும் சக்தி வடிவங்களும் இயங்குகின்றன்.இந்த விதிகளை அவர்கள் சில கணித சமன்பாடுகளாக விவரிக்கிறாரகள்.


2.இந்த விதிகள் செயல்படத் துவங்கிய போது இருந்த நிலை ஆரம்ப நிலை-இனிஷியல் கண்டிஷன் என்கிறார்கள்.அதை வர்ணித்து விட்டால் அதற்கு அடுத்த நிலை,அதறகு அடுத்த நிலை,இப்படி இன்றைய தினம் வரை எல்லாவற்றையும் விளக்கி விடலாம்.


இந்த ஆரம்ப நிலையையும் விதிகளையும் உன்னிப்பாகப் பார்க்கும் போது அவைகளில ஒரு தேர்ந்தெடுப்பும் ஒழுங்கும் இருப்பதை குறிப்பிடுகிறார்கள்.எத்தனையோ விதத்தில் பிரபஞ்சம் ஆரம்பிக்கலாம்;எத்தனையோ விதமான உயிர்கள் தோன்றியிருக்கலாம்;ஆனால் குறிப்பட்ட விதத்தில் பிரபஞ்சம் தோன்றி குறிப்பிட்ட விதமான பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றியது வரை தீர்மானித்தது யார் அல்லது எது?


*********


We live in the most propable of all possible worlds என்பது வால்டேரின் வாசகம்.பிரபஞ்சம் ஏன் 'அப்படி' இல்லாமல் 'இப்படி' இருக்கிறது என்பதற்கு இந்த வாசகம் பதில் தருகிறது.இப்படி இல்லையென்றால் இந்தக் கேள்வியே வராது என்பதுதான் பதில்.இது வசீகரமான வாதமாக இருந்தாலும் தப்பானது.


கடவுள் யார் என்பதற்கு முன் நாம் யார் என்று பார்க்கலாம்.நாம் ஒரு சிக்கலான மாலிக்யுலார் கூட்டணி அமைப்பு.நம் இருப்பிடம?சூரியக் குடும்பத்தில் ஒரு அற்பமான கிரகம்.சூரியனே ஒரு சராசரி நட்சத்திரம்தான்.ஸ்பைரல் காலக்ஸியின ஓர ஓரத்தில இருக்கிறது.இவ்வளவு அற்பமான் மனிதனுக்காகத்தான பிரபஞ்சமே உண்டாயிற்று என்ற வாதம் சரியல்ல.நாம உருவாவதற்கு சூரியக் குடும்பமும அருகாமையில் சில நட்சந்திரங்களும் அவைகளின் ஈரப்பும் தேவையாக இருந்திருக்கலாம்.ஆனால் கோடானு கோடி காலக்ஸிகள்,கோடானுகோடி நடசந்திரங்கள நம்மைச் சுற்றிலும் சமச்சீராகப் பரவியிருப்பதை நம்மால் நுட்பமாக அறிவியல் கருவிகளைக் கொண்டு பாரக்க முடிகிறது.அவையெல்லாம் இந்த ஆறடி மனிதன் உண்டாவதற்குத்தான் என்று சொல்வது 'டூ மச்!'


**********


நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் பிரமிப்பூட்டும் ஒரு பாடல்...

ஒன்றும் தேவும உலகும
அன்று நானமுகன தன்னொடு
தேவருலகோடு உயிர் படைத்தான்.


பைபிள் In the beginning was the world என்கிறது.இவைகள் எல்லாம் பிரபஞ்சத்தின் ஆரம்பக் கணத்தை அல்லது சிருஷ்டிக கணத்தைச் சொல்கின்றன.


காலம் என்பது சாசுவதமானதல்ல:பிரபஞ்சம் உண்டான் போதுதான் காலமும் ஜனித்திருக்கிறது என்பதுதான் அறிவியலின் முடிவும்.காலம பிரபஞ்சத்துடன் பதினைந்தாயிரம் கோடி வருடங்களுக்கு முன்னர் பிறந்தது என்று காஸ்மாலஜி என்னும பிரபஞ்சவியல் சொல்கிறது.அப்படி காலத்துக்கு ஒரு ஆரம்பம் இருந்தால் பிரபஞ்சத்திறகு ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும்,யாராவது படைக்க வேண்டும்.அப்படி இருப்பதற்கு அவர் நிலை கொள்வதற்கு காலம் தேவை!அதாவது 'காலம்' இல்லாமல் 'காலத்தைப்' படைக்க முடியாது.


இதுதான் அறிவியலாளர்கள் கடவுளை நம்புவதில் உணரும் சிக்கல் !


*************


பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரவாரமான ஆரம்பம் இருந்திருக்கிறது.ஒரு தீர்மானமில்லாத முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிவியல தெளிவாக நிரூபித்து விட்டது.மனித இனத்தின பல புராதன நமபிக்கைகளில் முக்கியமானவை பிரபஞ்சம் அழிவில்லாத்து,சாசுவதமானது;அதற்குப் பிறப்பும இல்லை,இறப்பும் இல்லை என்பது.இரண்டுமே அறிவியலால் பொய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன.


நம் கணக்கு சமன்பாடுகள்,விணவெளியில் இப்போது மிஞ்சியிருக்கும் அந்த லேசான உஷ்ணம் இவைகளையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது பிரபஞ்சத்தின் அதிர்ச்சிகரமான பிறந்த தேதியின் அத்தாட்சிகள தெரிகின்றன.அந்தக் கணத்தை ஏறபடுத்தியவர் கடவுள் என்றால்,அவர் ஏன் பிரபஞ்சத்தை ஓர் வாணவேடிக்கை போல் பற்ற வைத்து விட்டு அது பாட்டுக்கு இயங்கட்டும் என்று மேட்டினி பார்க்கப் போய் விட்டாரா?


பிரிட்டிஷ் இயற்பியலாளர் ரஸ்ஸல் ஸ்டானார்டு கடவுளை ஒரு புத்தகத்தின் ஆசிரியருடன் ஒப்பிடுகிறார்;புத்தகம் எழுதப்பட்டு விட்டது.காலம் அதன் பக்கங்கள்.நாம் ஒன்றன் பின் ஒன்றாக படித்துக் கொண்டிருக்கிறோம்.படிக்கப் படிக்கத்தான் முழுப்புத்தகமும் தெளிவாகும்-இது ஒரு கருத்து.



***********


இயற்கையின் எல்லா விதிகளையும் கணிதச் சமன்பாடுகளாக நாம் தெரிவிக்க முடிகிறது.e=mc^2 என்பது ஒரு சமன்பாடு.இது ஒரு இயற்பியல் உண்மையின் வடிவம்.கணிதம் துல்லியமான ஒரு இயல்.எந்தவிதமான படிமங்களையும் உண்மை வடிவங்களையும் சாராமல் கணித இயல் தனித்து இயங்க முடியும்.நடைமுறை வாழ்க்கையுடன் எந்தவித தொடரபுமற்ற நூற்றுக் கணக்கான தேற்றங்களும் நிரூபணங்களும் அதில் அமைக்க முடியும்.


கிரேக்கர்கள் மற்றும் புராதண இந்திய வானியலாளர்கள் காலத்திலிருந்து எண்கணிதம் மனிதனை வசீகரித்து வந்திருக்கிறது.எண்களுக்கும் கடவுள் தன்மைக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக எல்லா மத நம்பிக்கைகளும் இருக்கின்றன்.பிதகோரஸ்,அரிஸ்டாட்டில் போன்றவர்கள எண்களில்தான் கடவுளே இருப்பதாக நம்பினார்கள்.


எண்களுக்கு சில விநோத குணங்கள் இருக்கின்றன.உதாரணமாக 28 என்கிற எண் அதை வகுக்கும் எண்களான 14,7,4,2,1 இவைகளின் கூட்டுத்தொகை.அது போல 6.இவ்வகை எண்கள் ஆதர்ச எண்கள்-Perfect numbers- என்றழைக்கப்படுகின்றன;இவ்வகை எண்களுக்குக் கடவுள்தன்மை இருப்பதாக எண்ணினார்கள்.கெப்ளர் கடவுளை ஒரு ஜியோமெட்ரி நிபுணர் என்று கூறினார்.புராதன நம்பிக்கைகள் பலவற்றில் 1 என்ற எண்ணுக்குத் தனியான முக்கியத்துவம் இருந்தது.புனித அகஸ்டைன் பைபிளில் எண்களின் பங்கை விரிவாக அலசியிருக்கிறார்.எண்களுக்கு மனித மனத்திற்கு அப்பாற்பட்ட குணங்கள் ஏற்கனவே இருக்கிறதா என்று யோசித்தார்கள்.


காட்டாக 1,8,27 என்பவை முறையே 1,2,3 ன் கணப் பெருக்ங்கள்.இவைகளைக் கூட்டினால்(1+8+27=36) வரும் 36 ன் வர்க்கமூலம் 6.அது 1+2+3 எண்களின் கூட்டுத்தொகை!


இந்த எண்களின் விநோத குணம் நாம் இதை கண்டுபிடிப்பதற்கு முன்னரும் இருந்ததா?இருந்தால் எங்கே,எந்த மனத்தில் இருந்தது போன்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன.மார்ட்டின் கார்ட்னரும் இதை ஆமோதிக்கிறார்."கணித உண்மைகள் முன்பே இருந்தன, எவரெஸ்ட் மலை போல.நாம் அவைகளை மெல்ல அறிந்து கொண்டு இருக்கிறோம்".


இவைகள் ஒருவேளை கடவுளின் செயல்களோ அல்லது இவைகள்தான் கடவுளோ என்று தோன்றுகிறது அவர்களுக்கு.ரூடி ரக்கர் என்பவர் "மனவெளி(Mindscape) என்று ஒன்று இருக்கிறது.அங்கே கணித உண்மைகள் வசிக்கின்றன.அவைகளை நாம் ஒவ்வொன்றாக கண்டறிகிறோம்"என்கிறார்.


சிலசமயம் இம்மாதிரியான உண்மைகளின் தரிசனங்கள் சற்றும் எதிர்பாராமல் நிகழ்கின்றன.இதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.ஸ்ரீனிவாச ராமானுஜன் சில கணக்குகளுக்கு விடைகள் கனவில் கிடைத்ததாகச் சொல்கிறார்.ஒரு உன்னத உதாரணமான அவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து கணிதவியலை சம்பிரதாயமாக கற்றுக் கொள்ளாமல் சுயமாகப் படித்துத் தெரிந்து கொண்டு மேற்கத்திய அணுகலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் கணிதத்தை அணுகி பல தேற்றங்களை நிரூபணம இல்லாமலேயே குறிப்பெழுதி வைத்தார்.அவைகளை தற்செயலாக அறியவந்த ஹார்டி "என் வாழ்நாளில் இது மாதிரியான தேற்றங்களை இதுவரை பார்த்ததில்லை.ஒருமுறை பார்த்தாலே அவை கணிதமேதையால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது" என்றார்.


ராமானுஜன் 33 வயதில் இறந்து விட்டார்.இதுவரை ராமானுஜனுக்கு எப்படி அந்த சக்தி வந்தது என்பதற்கு விளக்கமில்லை.அவருடைய மூளையிலிருந்து அவை ஒரு நதிப்பிரவாகம் போல வெளிப்பட்டிருக்கின்றன.ராமானுஜனுக்கு மனவெளியுடன் தொடர்பு இருந்ததா?இதுபோல பெங்களூர் சகுந்தலா தேவி.இவர்கள் எல்லாம் மனவெளியுடன் நேரடித் தொடர்பு கொள்கிறார்களா?இந்த மனவெளிதான் கடவுளா?


***********



ஒரு அற்புதமான தமிழ் எழுத்தாளர் இப்போது இல்லை என்பதே வருத்தத்துடன் நினைத்துப் பார்க்க வைத்தது அந்தப் புத்தகம்.அவரின் பெரும்பாலான-கிட்டத்திட்ட அனைத்து- கட்டுரைகள்,புத்தகங்களைப் படித்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இந்தப் புத்தகம் ஒரு ஆச்சரியம்.


கடவுள் இருக்கிறாரா என்ற தலைப்பிலேயே அமைந்த இந்தப் புத்தகம் நல்ல வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு தவிர்க்க இயலாத பரிந்துரை.



புத்தகம் : கடவுள் இருக்கிறாரா ?
ஆசிரியர் : அமரர் சுஜாதா

Monday, November 2, 2009

108.குறுந்'தொகைகள்-1109

ஆண்கள் வெளியே சென்று விட்டு வந்தால் சுகமாகச் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறார்கள்;பெண்கள் அவர்களைக் கவனித்து,பருக ஏதாவது கொடுத்து ஆசுவாசப்படுத்திய பின்னர்தான் சகஜமாகப் பேச ஆரம்பிப்பார்கள்.


வீட்டில் இருக்கும் பெண்களோ கணவர் வந்தவுடன் சொல்ல ஆயிரம் விதயம் வைத்திருப்பார்கள்;வந்து நுழைந்த மாத்திரத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாயிருப்பார்கள்.ஆனால் ஆண்கள் காது கொடுத்தால்தானே? மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது முட்டாள் பெட்டியைத் தட்டி விட்டு அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்;இன்னும் சில வீடுகளில் இவற்றைப் பொருட்படுத்தாமல் கணவனிடம் பேச\பகிர்ந்து கொள்ளது துவங்கும்போது செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.


இந்த ஆண்\பெண்களுக்கிடையான இடைவெளியை அதிகப் படுத்தும் முக்கியக் காரணமாகக் கூட பார்க்கப் படுகிறது.சில பெண்கள் என்ன மனுசன் இவன்? என்று சலித்துக் கொள்வதும் நடக்கும்.ஆண்களின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக் காட்டி ஆண்களே பகிரத் தெரியாதவர்கள் என்ற பொதுமைப் படுத்திய நிந்தனையும் இதனால் எழுகிறது.

இதில் எது சரி? ஆண்களின் மேல் எழும் நிந்தனையா அல்லது ஆண்களின் குணமா?

குணாதிசயங்கள் சார்ந்த-behavioral science ஆய்வின் பின்னணி ஒரு சுவையான கோண்த்தை முன்வைக்கிறது.


ஆணின் இந்த குணம் மனித இனத்தின் ஜீன்களில் பொதிந்திருக்கும் செய்தித் தன்மையினால் வருகிறது என்கிறது அப்பார்வை.கற்காலத்தில் குடும்பத்திற்கான வேட்டை உணவைத் தேடி வெளியேறும் ஆண் உயிரி காடு மேடுகளில்,மழை வெயிலில் நனைந்து காய்ந்துதான் தன் உணவைப் பெற வேண்டியிருந்தது;போதுமான உணவு கிடைக்க வில்லையெனில் ஒவர்டைம் செய்தாவது வேட்டையை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.


அடுத்தது வேட்டையைச் சுமந்து தன் இருப்பிடத்திற்கு,பெரும்பாலும் குகைக்குத் திரும்பும் கடமை.இந்த குகைக்குத் திரும்பும் நேரம் பெரும்பாலும் அடர் குளிர் சூழலாயிருக்கும்-கற்காலத்தின் தட்ப வெப்ப நிலையைக் கருதும் போது!


திரும்பும் ஆண் இனம் முதலில் செய்வது நெருப்பை மூட்டி களைப்பும் குளிரும் போக சிறிது நேரம் நெருப்பின் அருகில் உட்கார்ந்து குளிர் காய்வதுதான்.அதற்குப் பிறகுதான் எல்லாமே.

மனிதனின் இந்தக் கற்கால குணம் ஜீன்களில் பதிந்து போயிருப்பதால் தான் இன்றளவிலும் ஏதாவதொன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்காரும் குணம் ஆண்களிடம் இருக்கிறது என்கிறது அந்த ஆய்வுப் பார்வை.


என்ன,நெருப்புக்குப் பதில் முட்டாள் பெட்டி,அவ்வளவுதான் வேறுபாடு.

பெண்களும் தானே வேலைக்குப் போகிறார்கள்?அவர்கள் ஏன் அப்படி வீட்டுக்குள் வந்தவுடன் உட்கார்வதில்லை என்ற கேள்வி எழுகிறதுதானே?

யாராவது பின்னூட்டுவார்கள்,பார்க்கலாம்!


()


பழனி,சபரிமலை போன்ற திருத்தலங்களுக்கு நடந்து போகின்ற பக்தர்கள் பலர்.அதுவும் தை மாத காலத்தில் பழனியை நோக்கிச் செல்லும் எல்லாச் சாலைகளிலும் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது உண்டு;அந்த அளவிற்குப் பலர் நடைப் பயணம் போவார்கள்.

எனக்குத் தெரிந்த மலேசிய நண்பர் ஒருவர் இந்த நடைப் பயணம் போவதற்காகவே விடுப்பு எடுத்துக் கொண்டு இந்தியா செல்வார்.


எனக்கு இந்த வகையான கடின சித்த பக்தி வழிகளில் உடன்பாடு இல்லையாயினும் அவ்வாறு செல்பவர்களின் உணர்வை மதிக்க வேண்டும் என்று தோன்றுவதுண்டு;தேர்ந்த வாசிப்பும் சிந்தனையும் கொண்ட சிலர் கூட இவ்வாறு நடைப் பயணம் போவார்கள்;அவர்களைக் கேட்டார் அதற்கு ஆரோக்கியப் பார்வையில் பதிலளிப்பார்கள்.


இதில் இன்னொரு விதயத்தையும் நான் அவதானித்து நான் வியந்திருக்கிறேன்.இந்துக்கள் மட்டுமின்றி முகமதியர்களும் கூட உடலை வருத்தி உபவாசம் இருக்கும் காலம் இந்த மார்கழி,தை மாத காலமே.ஆண்டின் இந்த காலகட்டத்தில் ஆன்மிகத்தில் கூட எல்லா மதத்தினரும் தேர்ந்து உடலை வருத்திப் பண்படுத்த விழைவதற்கும் ஏதாவது ஜெனிட்டிகல் காரணங்கள் இருக்கக் கூடும் !


யாராவது ஆய்வு நண்பர்கள் இதை விளக்கலாம்!


()


மேற்கண்ட நடையர்களில் பலர் சோர்வை உணராமல் இருக்க பாடிக் கொண்டே செல்வதுண்டு;இதற்காகவே பாதயாத்திரை சிறப்பு ஒலித்தட்டுகள் சென்ற பத்தாண்டுகளில் ஏராளமாக வந்திருக்கின்றன.


இதற்கான வித்து சமீப நூற்றாண்டில் காவடிச் சிந்து வடிவப் பாடல்களால் ஊன்றப்பட்டது.அதிலும் பாடல்களின் எளிமை,பொருண்மை,சந்த நயம் பொருந்திய ஏராளமான பாடல்களை தமிழுக்கு அளித்தவர்களில் சமீப காலத்திய அண்ணாமலை ரெட்டியார் குறிப்பிடத்தக்கவர்.


இவரது பாடல்களை சந்தத்தில் பாடக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்;அம்மாவின் குரலில் பல சிந்துப் பாடல்களை அனுபவித்துக் கேட்ட நினைவு இப்போதும் நிழ்லாடுகிறது;அப்போதெல்லாம் அதை மின்வடிவத்தில் சேகரிக்கும் எண்ணம் தோன்றியதில்லை,இப்போது மிகவும் தோன்றுகிறது...ஆனால் வருடத்தில் அம்மாவைச் சந்திக்கும் நாட்கள் அருகிக் கொண்டிருக்கும் காலம் இது..

எனக்குக் கிடைத்த ரெட்டியாரின் பாடல்களில் ஒன்றின் இசைவடிவம் பின்வரும் ஒலிக் கீற்றில்..கேட்டுப் பாருங்கள்..


நானே ஒரு ஒலிக்கீற்றை பதிவு செய்து வலையேற்றலாம் என்று நினைத்திருந்தேன்...பிழைத்தீர்கள் !



Friday, October 23, 2009

107-அடிவயிற்றை முறுக்கவில்லையா?

தினமணியில் இரண்டு நாட்களுக்கு முன் வெளியான பழ.கருப்பையாவின் தலையங்கப் பக்கக் கட்டுரை.

பொதுவாகவே பழ.கருப்பையா நறுக்குத் தெறித்தாற் போல எழுதும் வழக்கமுள்ளவர்;தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை சுட்டுபவர்;சொல்லும் கருத்தில் சமரசம் செய்து கொள்ளாது எழுதுபவர்..

அவரது இந்தக் கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.



ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே! தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா?

கட்சிகளெல்லாம் கிடக்கட்டும்! எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது?

""ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு'' என்று தாய் மகளிடம் சினந்து கேட்டாளாம். ""போனவன் போயிட்டான்; நான் இருக்கேனே'' என்று மகள் புன்முறுவலோடு விடை இறுத்தாளாம்!

""கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்!
நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் ஏதோ வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போல ராஜபட்சவுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறது. பஜ்ஜி மாவுக்குத் தனித்து எந்த மதிப்புமில்லை! அது வெங்காயத்தோடோ, வாழைக்காயோடோ சேரும்போதுதான் அதற்குப் பெயரும் கிடைக்கிறது; வடிவமும் கிடைக்கிறது!

இந்தப் பஜ்ஜி மாவுக்கெல்லாம் வடிவம் கொடுப்பவர் கருணாநிதி என்பது ராஜபட்சவின் எண்ணமாக இருக்கலாம்! அப்படிப்பட்ட கருணாநிதியின் உயிர்நாடியோ, சென்னைக் கோட்டையில் இருக்கிறது. சென்னைக் கோட்டையில் கருணாநிதி நீடிப்பதோ, சோனியாவின் தயவில் இருக்கிறது. சோனியாவோ சிங்களவர்களின் உற்ற நண்பர். ஆகவே, சோனியாவின் தோழமை இருக்கும்வரை இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கத் தேவையில்லை என்பது ராஜபட்சவின் எண்ணம்!

ஆனாலும் விடுதலைப் புலிகளைப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்ட திருமாவளவன், ராஜபட்ச "உன் கதையையும் முடித்திருப்பேன்' என்று சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய்த் திரும்பி வந்திருக்கலாமா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?

""ராஜபட்ச! உன் கதையை முடிப்பதற்குப் பதிலாகப் புத்திகெட்டுப்போய் இந்தியா ஈழத்தின் கதையை முடித்துவிட்ட காரணத்தால், உன்னால் இவ்வளவு எக்காளமாகப் பேச முடிகிறது. எந்த விடுதலை இயக்கத்துக்கும் பின்னடைவுகள் வருவது இயற்கை; ஆனால், ஒரு விடுதலை இயக்கம் என்றாவது ஒரு நாள் தன்னுடைய இலக்கை அடையாமல் முடிந்ததாக வரலாறு இல்லை''-என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருந்தால் திருமாவளவன் உலகத் தமிழினத்துக்கே தலைவராகி இருப்பாரே!

ராஜபட்சவின் நாட்டுக்கே போயும் ராஜபட்சவை நேருக்குநேர் நின்று உலுக்குகிற வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரே! அதுவும் ராஜபட்ச, "ஈழத்துக்கு நீ வந்திருந்தால் உன்னையும் சுட்டிருப்பேன்' என்று சொல்லி அசிங்கப்படுத்திய பிறகும், அங்கு வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இங்கே நம்முடைய மூலக்கடை முச்சந்தியில் நின்று கொண்டு, "இரத்தம் கொதிக்கிறது' என்று திருமாவளவன் முழங்குவதை, இனி யார் நம்புவார்கள்?
அப்படி நேருக்குநேர் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார் ராஜபட்ச? கொழும்புச் சிறைக் கொட்டடியில் அடைத்திருப்பாரா? அடைத்திருந்தால் திருமாவளவனை விடுவிப்பது ஆறு கோடித் தமிழர்களின் கடமையாகி இருந்திருக்குமே!

இப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தலையைக் கவிழ்ந்து கொண்டு, ராஜபட்ச அசிங்கப்படுத்தியதற்கு என்னென்னவோ அமைவுகளைத் திருமாவளவன் சொன்னாலும், யார் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்?
போன இடத்தில் அப்படியெல்லாம் பேசினால், "நன்றாக இருக்குமா?' என்று திருமாவளவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! தன்னுடைய நாட்டுக்கு வந்த விருந்தாளியிடம் அப்படிப் பேசியிருக்கலாமா என்று ராஜபட்ச கவலைப்படவில்லையே!

இகழ்பவனின் பின்னால் போய்ப் பெறப் போவதென்ன என்று நம்முடைய அப்பன் வள்ளுவன் கேட்பான்! ""என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை'' (966).
முன்பொருமுறை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உச்சத்திலிருந்தபோது மாநிலங்களின் அமைச்சர்களெல்லாம் பங்கேற்ற கூட்டத்தில், செல்வாக்குமிக்க மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய், "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை' என்று பேச, "இந்தி இருக்குமானால், இந்தியாவே இருக்காது' என்று அன்றைய தமிழக அமைச்சர் செ. மாதவன் பேசிவிட்டார் என்பதற்காக, ஊர்ஊராக நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செ. மாதவனை உட்காரவைத்து ஊர்வலம் விட்டு, ஐந்து ஆண்டு அரசியலை இதைச் சொல்லியே ஓட்டினார்களே தி.மு.க.வினர்!

அன்று மாமன்னன் அசோகன் இலங்கைக்குத் தன் மகள் சங்கமித்திரையை அனுப்பிப் பௌத்தத்தை வளர்த்ததுபோல, இன்று தன் மகள் கனிமொழியை அனுப்பிச் சிங்களவர்களோடு நேசத்தை வளர்க்கும் கருணாநிதி, ராஜபட்சவை எதிர்த்துத் திருமாவளவன் பேசுவதை ரசிக்க மாட்டார் என்றாலும், கருணாநிதி ரசிக்காததை எல்லாம் செய்யாமலிருப்பதற்குத் திருமாவளவன் என்ன தி.மு.க.வின் ஆயிரம் விளக்குப் பகுதிச் செயலாளரா?

தமிழுக்கும், தமிழனுக்கும் கேடு என்றால் சீறிவரும் சிறுத்தையாக இருந்தவரை, நாடாளுமன்றப் பதவியைக் கொடுத்து அடங்கிப் போகும் நிலைக்கு ஆளாக்கிவிட்டாரே கருணாநிதி!

முள்வேலி முகாம்களைப் பார்வையிட, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமைப் பாதுகாப்புக் கழகத்தினரையும், செய்தியாளர்களையும் அனுமதிக்காத ராஜபட்ச, காங்கிரûஸயும் தி.மு.க.வையும் மட்டும் அழைத்தாராம்! ஈழத்தைச் சுடுகாடாக்கிய ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி தங்களின் சிதைந்துபோன முகங்களைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சிதானே இது? பொத்துக்கிழிந்துபோன பெயரை இழுத்துவைத்துத் தைத்துக் கொள்ளும் முயற்சி அல்லாமல் வேறென்ன?
முள்வேலி முகாம்களில் ஈழத் தமிழர்களை ஆடுமாடுகளைப் போல் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துவதை ஓர் அமெரிக்கப் பெண்மணி சத்தம்போட்டு உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைத் தமிழ்நாட்டுக்கும் வந்து சொல்ல விரும்பியபோது, அவருக்கு "விசா' வழங்கவிடாமல் தடுத்து நிறுத்தியவர்தானே இந்தக் கருணாநிதி! அந்தப் பெண்மணியின் வருகை தன்னுடைய சாயத்தை வெளுக்கச் செய்துவிடும் என்னும் அச்சம்தானே காரணம்!
இந்தப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் "உல்லாசப் பயணத்தில்' இங்கிருந்தே இலங்கை அதிகாரிகள் உடன்வந்தார்களாம். கொழும்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாம்; ஹெலிகாப்டர்களில் பறந்தார்களாம்; ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கினார்களாம்; முப்பொழுதும் முப்பழங்களோடும் விருந்துகளாம்; வேதமே பாராட்டிய சோமபானங்களுக்கும் குறைவில்லையாம்! அரசியல் நெறியற்ற டக்ளஸ் தேவானந்தா கூட்டிவைத்த கூட்டத்தில் கலந்துரையாடினார்களாம்! இதற்குச் சிங்களவர்களோடேயே உரையாடியிருக்கலாமே!

ஈழத்துக்கான போர் சிங்களக்காடையர்களோடு மூன்றுமுறை நடந்தது; முப்பதாண்டுக் காலம் நடந்தது; அப்போதெல்லாம் இடையிடையே போர் நடக்கும்; சிங்களக்காடையர்கள் முண்டிப் பார்ப்பார்கள்; பின்பு பின்வாங்கி ஓடிப்போவார்கள்.
ஈழத்தில் வரிவசூல் நடந்தது; காவல் நிலையங்கள் இருந்தன; நீதிமன்றம் நடந்தது; பராமரிப்புப் பணிகளும், நிர்வாகப் பணிகளும் செவ்வனே நடந்தன. அந்தக் காலகட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத சுதந்திர நாடாகவே ஈழம் இயங்கியது!
நான்காம் ஈழப் போர் ஈழத்தைச் சுடுகாடாக்கியது. சிங்களக்காடையர்கள் ஒன்றும் ஓரிரவில் வீரர்களாய் மாறிவிடவில்லை. இந்தியப் பெருநாடு சிங்களவர்களை முன்னிறுத்தி அந்தப் போரை நடத்தி இந்தக் கொடுமையை அரங்கேற்றியது!

பாரதி சொன்னதுபோல எல்லாமே "பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே!'
நேற்றுவரை சிங்களத்துக்கு நிகராகத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை வேண்டும்; அரசு வேலைகளில் உரிய பங்கு வேண்டும்; இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழத்துக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றெல்லாம் போராடியவர்கள், இன்று முள்வேலிச் சிறைகளில் இருந்துகொண்டு குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் வேண்டும் என்று கண்ணீர்விடும் நிலைக்கு ஆளாகி விட்டார்களே! பிள்ளைக்குப் பாலில்லை; முதியோருக்கு மருந்தில்லை; கர்ப்பிணிப் பெண்கள் பிள்ளை பெற வசதியில்லை.
ஈழத்துக்கு முற்றாக விடுதலை கேட்டவர்கள் இன்று முள்வேலிச் சிறை முகாம்களிலிருந்து வீட்டுக்குப் போக மட்டும் விடுதலை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார்கள்; இந்த நிலைக்கு இவர்களை ஆளாக்கிய சோனியா காந்தி, கருணாநிதி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபட்சவைச் சந்தித்து,""நாட்டுக்கு விடுதலை கேட்கவில்லையே; வீட்டுக்குப் போகத்தானே விடுதலை கேட்கிறார்கள்; கொடுத்துவிட்டுப் போங்களேன்'' என்று எடுத்துச் சொல்லப் போய் இருக்கிறார்கள்! தமிழனின் தலைவிதியைப் பார்த்தீர்களா?
இவர்கள் போனதன் விளைவாக 50,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து மறுநாளே விடுவிக்கப்படுவார்கள் என்னும் அறிவிப்பு இலங்கையில் வெளியாகவில்லை; கோபாலபுரத்தில் வெளியாகிறது; ராஜபட்சவும் கருணாநிதியும் வேறுவேறல்லவே; யார் வெளியிட்டால் என்ன? ஆனால், வெளிவிடப்பட்டவர்கள் ஐம்பதாயிரம் பேரா? ஐயாயிரம் பேரா? அல்லது வெறும் அறிவிப்போடு முடிந்துவிட்டதா என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? யார் இதை அந்த அரக்கர் நாட்டில் சரிபார்க்க முடியும்?

இப்படிக் கருணாநிதி அறிவித்த மறுநாளே சிங்காரச் சென்னையில் சுவரொட்டிகள் மின்னின. ""நான்கே நாளில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கலைஞரை வணங்குகிறோம்.''

அண்ணா விடுதலை இயக்கமாகத் தோற்றுவித்த ஒரு கட்சியில் விடுதலை என்பதை எவ்வளவு கொச்சையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள அவலம்; அதையும் ரசிக்கிறார் கருணாநிதி என்பதுதான் அதைவிடப் பேரவலம்!
உலகத் தமிழ் மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. ஈழப் பேரழிவுகளுக்குப் பிறகு உலகத் தமிழர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதி நடத்துவதை ஏற்கவில்லை! சில மாதங்களுக்கு இந்த மாநாட்டைத் தள்ளிவைத்து அவர்களை அமைதிப்படுத்தலாம் என்னும் கருணாநிதியின் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயரை மாற்றி நடத்தப் போகிறார்கள். உலகத் தமிழர்களின் சினம் நியாயமானதுதானே!

உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார்; எம்ஜிஆர் நடத்தினார்; ஜெயலலிதா நடத்தினார்; ஆனால், கருணாநிதியால் நடத்தவே முடியால் போய்விட்டதே!
தமிழைத் தாயாக உருவகிப்பது தமிழர்களின் வழக்கம். தாய் ஒருத்தி; பிள்ளைகள் இருவர்! இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மார்பிலும் தமிழ்ப்பால் சுரந்தாள் அவள்! அவர்கள் இனத்தால், நிறத்தால், ரத்தத்தால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் அனைத்தாலும் ஒன்று; நிலத்தால் மட்டுமே வேறு, வேறு!

அண்மையில் அவளுடைய சிறிய பிள்ளைக்கு ஊறு நேர்ந்துவிட்டது; பொறுப்பாளா அவள்? அந்தப் பிள்ளைக்கு ஊறு விளைவித்த அரக்கன் அழிந்து, அந்தப் பிள்ளை தன்னுடைய மண்ணில் காலூன்றும் வரை உறக்கம் வருமா அவளுக்கு?

அந்தச் சிறிய பிள்ளையின் மண்ணைப்பிடுங்கிக் கொள்ள ஓர் அரக்கன் முயன்றான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அரக்கனுக்குத் துணைபுரிய தில்லிவாசிகள் விரும்பியதையும் புரிந்துகொள்ள முடிகிறது! ஆனால், மூத்த பிள்ளையின் மண்ணிலிருந்தே சிலர் தில்லியின் விருப்பத்தின்பேரில் அரக்கனுக்கு உதவியாக இருந்ததைத்தான் தாயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! கண்ணகி அழுததைப் போல் அரற்றி அழுகிறாள் தாய்! தன் இளைய மகனின் வம்சத்தில் எண்பதாயிரம் பேர் மண்ணைச் சிவப்பாக்கி விட்டு மாண்டுமடிந்ததை எண்ணி அழுகிறாள். இளைஞர்களெல்லாம் செத்து, இளம்பெண்களே விஞ்சி நிற்கும் கொடுமையை எண்ணி அழுகிறாள். அறத்தை "மடவோய்' என்று வாயாற வைகிறாள். நான் உயிர் பிழைத்திருப்பேனோ என்று அரற்றுகிறாள்!

மறனோடு திரியும் கோல் ""மன்மோகன்'' தவறு இழைப்ப
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ?''
(-சிலம்பு, துன்பமாலை 40).
இளைய பிள்ளையின் வம்சத்தை அழிக்க மூத்தபிள்ளையின் வழியினரில் சிலரே மாற்றானுக்கு உதவிவிட்டு, தன்னுடைய வெக்கை தணியத் தனக்கே விழா எடுக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் விழாவினைப் புறந்தள்ளி விட்டாள் தாய்! உலகத் தமிழ் மாநாட்டை அவள் ஏற்கவில்லை! தாயல்லளோ அவள்!
அது மட்டுமன்று; தமிழ் மாநாட்டில் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் காஞ்சிபுரத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார் கருணாநிதி!

சென்ற மத்திய ஆட்சிக் காலகட்டத்தில் சோனியாவோடு சேர்ந்துகொண்டு ஈழத்தைச் சுடுகாடாக்கியதை இது போன்ற தீர்மானங்களால் ஈடுகட்டிவிட முடியும் என்று கருதுகிறார் கருணாநிதி!

""ஈழத் தமிழர்களுக்கு எந்தச் சலுகைகள், உரிமைகள் அளித்தாலும் எனக்கு உடன்பாடே! ஆனால், இங்கே ஈழத் தமிழர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை. திபெத்தியர்கள், பர்மியர்கள், வங்கதேசத்தினர் என்று ஏராளமானோர் அகதிகளாய் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை மட்டும் மத்திய அரசு தனித்துப் பிரித்துப் பார்க்குமாறு கருணாநிதியால் செய்ய முடியுமா?
ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை என்றால் அவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்புப் போன்ற எல்லாம் உண்டா? அப்போது தானே அது முற்றான குடியுரிமையாய் இருக்க முடியும்!'' என்றெல்லாம் அடுக்கி அடுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கேட்டாரே! ஒன்றுக்காவது விடை சொன்னாரா முதலமைச்சர் கருணாநிதி?

கருணாநிதி தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசை ஏற்கும்படி செய்ய வேண்டும்; அல்லது அரசை விட்டு வெளியே வந்து அதற்காகப் போராட வேண்டும்! அப்படியெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு பேச்சுக்குப் போட்டு வைப்போம் என்று, தான் நம்பாததையே தீர்மானமாக்குவது முழு மோசடி இல்லையா?

ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசிலிருந்து என்ன உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் அனைவருக்கும் இசைவே!

கருணாநிதியும், சோனியாவும் அந்த இனத்துக்குச் செய்த கொடுமைகளுக்கு ஈடுகட்டவும், பாவங்களுக்குக் கழுவாய் தேடவும், எந்தச் சலுகை வேண்டுமானாலும் அளிக்கட்டும்; அளிக்க வேண்டும்! வெறும் 500 கோடி ரூபாயை அளித்துக் கைகழுவி விடும் ஏமாற்று வேலை வேண்டாம்!

ஆனால் அவர்கள் பிறப்பால் ஈழத் தமிழர்கள்; ஈழம் அவர்களின் தாயகம்! அங்கே அவர்களுக்கு வீடு வாசல், நிலம் கரை அனைத்தும் உண்டு. அவர்களுக்குச் சொத்துகளும் அங்கேதான்; சொந்தங்களும் அங்கேதான்!

ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி அரசியலில் ஆக்கம் இழந்த பிறகு.... அது நடக்காதா என்ன? முன்பு தெருவிலிருந்தவர்கள் இப்போது திருவை அடைந்திருக்கிறார்கள்; மீண்டும் திருவை இழந்து தெருவுக்குப் போக எவ்வளவு நேரமாகும்?
அப்போது தாங்கள் விரும்பும்வண்ணம் தங்கள் தாயகத்தை ஈழத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்!

தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் உண்டு. ஒன்று தமிழ்நாடு; இன்னொன்று ஈழம்!
போர்த் தோல்வி காரணமாகச் சோர்வுற்றிருக்கும் தமிழர்களை விரட்டிவிட்டால், இலங்கை முற்றாகச் சிங்களவர்களின் நாடாகிவிடும் என்பது ராஜபட்சவின் எண்ணம்! கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, தமிழ்நாடு என்று போனபோன இடங்களில் ஏதாவதொரு உரிமை பெற்று அவர்கள் ஆங்காங்கே இருந்துவிட வேண்டும் என்பதுதான் ராஜபட்சவின் விருப்பம்! அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிவிடும் எண்ணத்தைக் கைவிடச் செய்வதற்காகத்தான் கொடுமைகள் மிகுந்த முள்வேலிச் சிறை முகாம்களின் காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறார் ராஜபட்ச!

இறைமகன் ஏசுவை சிலுவையில் அறையக் காரணமான யூத மத போதகர்கள் யாரையாவது ஏசுவின் உண்மைச் சீடர்கள் பதினோரு பேரில் எவனாவது கட்டிப்பிடித்ததுண்டா?
யூத இனத்தையே கருவறுத்த மன நோயாளி ஹிட்லருக்கு எந்த யூதனாவது பட்டாடை போர்த்திப் பாராட்டியதுண்டா?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில், முன் தோன்றிய மூத்த தமிழினத்தைக் கருவறுத்த ராஜபட்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும் சிரித்து மகிழ்வதையும் சிலர் கட்டித் தழுவிக் கொள்வதையும் நிழற்படங்களில் பாருங்கள்!

அடிவயிற்றை முறுக்கவில்லையா?


-தினமணிக்கு நன்றியுடன்

Monday, October 12, 2009

106-கமலஹாசனின் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி.


கிடைத்த சிறு விடுமுறையில் இந்தியாவுக்குச் சென்று வந்தேன்.


முட்டாள் பெட்டியின் எந்த சானல் என்பது நினைவில் இல்லை,கமல் கலந்து கொண்ட உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சியைப் பெரும் விளம்பரத்துடன் வெளியிட்டார்கள்..


அது ஒரு போன்-இன் நிகழ்ச்சி.ரசிகர்கள் அழைத்துக் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.


கமல் மய்யம் நடத்திய நாட்களில் அவரின் எழுத்துக்கள் அவ்வப்போது கவரும்;மேலும் சுஜாதா போன்ற நபர்களின் நீடித்த நட்பு ஏற்படுத்திய பரந்த வாசிப்பனுபவம் அவருக்கு இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுத்திய ஆர்வத்தாலும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.


பார்த்தால் அனைத்து திரைப் பிரபலங்களும் ஒருவர் பின் ஒருவராக அவரை அழைத்துக் கொண்டிருந்தார்கள்;ரவிக்குமார்,எஸ்.பி.பி,கவிஞர் புவியரசு,நாசர் என்று நீண்டது பட்டியல்..நடிகர் சிவக்குமார் கூட வந்தார்..வராதது பாலசந்தரும்,ரஜினியும் மட்டும் தான் என்று நினைக்கிறேன்..


இரண்டு மூன்று அழைப்பாளர்களின் பெயரைப் பார்த்த வுடன் எனக்கே ஒரு சந்தேகம் ஏற்பட,இது போன்ற அபத்தக் காரியங்களில் எல்லாம் சாதாரணமாக ஈடுபடாத நான் கொடுக்கப்பட்ட எண்ணை முயற்சித்தேன்..


சுமார் அரைமணி நேரம் முயற்சித்தும் அந்த எண்ணை அழைக்க முடியாது என்ற பதிலே கிடைத்த போது,திரையில் பலர் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்..


ஒரு அப்பட்டமான செட்-அப் நிகழ்ச்சியாகவே அது தோன்றியது;அதிலும் ஓயாத புகழ்பாடல்..


தன்னைப் பற்றிய புகழுரைகளை அரங்கேற்றி விட்டு தானே அதை முன்னின்று ரசிப்பது ஒரு வெட்கப் படும் செயல் என்றே எனக்குத் தோன்றுகிறது.நமது அரசியல் பிரபலங்கள் இந்த அசிங்கத்தை அடிக்கடி அரங்கேற்றுவார்கள்.கமல் போன்ற ஒரு படிப்பாளியும் இந்த நோய்க்குழிக்குள் அடக்கம் என்று அறிந்த கணத்தில் வெறுப்பாக இருந்தது.


இந்த லட்சணத்தில் பாசாங்கான வியப்பை கமலகாசன் அடிக்கடி வெளிப்படுத்தினார்; ஓ,நீங்களா? என்ன சொல்லி வச்ச மாதிரி நண்பர்கள் எல்லாம் ஒரே நாளில் அழைக்கிறீர்கள்..வியப்பாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது..etc..etc..’ என்ற ரேஞ்சில் அளந்து கொண்டிருந்தார்..


ஒரே வார்த்தையில் சொல்வதானால் கன்றாவி..


கமல் போன்ற பிரபலங்களுக்கு,சமூகத்தில் ஏற்கனவே நல்ல மதிப்பையும் அங்கீகாரத்தையும் அடைந்தவர்களுக்கு எதற்கான இந்த விளம்பர மோகம் என்று தெரியவில்லை.


இடையில் ஒன்றோ,இரண்டோ பெயர் தெரியாத நபர்களுக்கும் வாய்ப்பு அளித்தார்கள்.


ஒரு பெண்மணி கேட்டார.. உன்னைப் போல் ஒருவனில் நீங்கள் நஸ்ருதீனை விட நன்றாக நடித்ததாக நினைக்கிறீர்களா என்ற கேள்வி கேட்டார்..


பணிவு வேஷம் காட்டிக் கொண்டிருந்த கமலகாசனின் ஆணவமுகம் அப்போது சட்டென்று தலைதூக்கியதைப் பார்க்க முடிந்தது.


ஒரு வினாடி கடினப்பட்ட அவர் முகத்தை சகஜ பாவத்திற்கு கொண்டுவர மிகவும் முயன்றார்..


அவர் அளித்த பதில்: நீங்கள்,நான் அவரை விட நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொல்வேன் என்று எதிர்பார்க்கிறீர்கள்(இத பார்றா..)நான் அப்படி சொல்ல மாட்டேன்.அவர் பாணியில் அவர் நடித்திருக்கிறார்,என் பாணியில் நான் நடித்திருக்கிறேன்..இதை எல்லாம் ஒப்பிட முடியாது..


ஏன் ஒப்பிட முடியாது என்று தோன்றவில்லை.


உபோஒ. ஒரு மொழிமாற்றுப் படம்.அதன் ஒரிஜினல் வெர்ஷன் வெட்னஸ்டே படம்.


அது ஒரு நல்ல விறுவிறுப்பான படமாக மாறியதற்குக் காரணம்,ஷாவின் டௌன் டு எர்த் பொது ஜனத்தைப் பிரதிபலித்த விதமும்,கெர்ரின் இயல்பான காவல்துறை கமிஷனர் பாத்திர பிரதிபலிப்பும்.


தமிழ் வெர்ஷனில் லால் கூட ஒரளவு நன்றாகச் செய்திருந்தார் என்று தோன்றுகிறது; சாதாரணமாக சென்னை பல்லவன் பேருந்தில் காணப்படும் ஒரு மனிதர்தான் உபோஒ நாயகர்;

ஆனால் கமல் செய்தது ஒரு மேட்டுக்குடி கனவானின் பிரதிபலிப்பான பாத்திரம்.


அந்தப் பாத்திரம் முழுதாக சொதப்பி விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.


இதெல்லாம் ஒரு பக்கம் போக அந்த நிகழ்ச்சி நடந்த விதத்தில் என் மதிப்பில் கமல் பலபடி சறுக்கினார்..


உங்களைப் போன்ற புகழ்பெற்ற ஒரு நடிகருக்கு,படிப்பாளிக்கு,திறனாளர் என்று பரவலாக நம்பப் படும் ஒருவருக்கு இந்த வகை செட்-அப் நிகழ்ச்சி தேவைதானா நண்பரே????


நானும் கூட வழமைக்கு மாறாக அழைக்க முயன்றேன் என்று சொன்னேன் இல்லையா?

நானும் இரண்டு கேள்விகள் கேட்க எண்ணியிருந்தேன்..

அவை என்ன தெரியுமா?

முதல் கேள்வியை அந்தப் பெண்மணி கேட்டு விட்டார்..


இரண்டாம் கேள்வி நடிகர்களின் தமிழகத்தின் இந்தியாவின் சகல பிரச்னைகளுக்கும் தீர்வளிப்பவர்களாக,மீட்பர்களாக,தலைமைத்துவத்துக்குத் தேவையான முதல்நிலை நபர்களாகப் பார்க்கப்படும் 2000ங்களின் நிலை பற்றிய அவர் கருத்து என்ன?


ஒரு வேளை இணைப்பு கிடைத்து,ஒரு வேளை இந்தக் கேள்வி அனுமதிக்கப்பட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார் ?????

Friday, October 9, 2009

மீண்டும் வந்தேன் !!!

பல தவிர்க்க இயலாத காரணங்களால் கடந்த 6 மாதங்களாக வலைப் பக்கங்களின் பக்கமே வர இயன்றதில்லை.

எனினும் எப்போதாவது சில நண்பர்களின் பதிவுகளைப் பார்வையிட மட்டுமே முடிந்தது.

தற்காலிகமான இந்த வனவாசம் முடிந்து மீண்டும் இப்போது...

இதுவே எல்லோருக்குமான எச்சரிக்கை !!!!

Sunday, June 21, 2009

105-அடையாளங்களின் நாடு இந்தியா ! -(மீள்பிரசுரம்)

ஒரு வார்த்தை கூட மாற்றத் தேவையற்ற தினமணியின் இந்தத் தலையங்கம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

தினமணிக்கு நன்றியுடன்..


Wednesday, May 13, 2009

104.குட் டச்-பேட் டச்:சில அவதானிப்புகள்

சில சென்னை நண்பர்களின் முயற்சியால் மருத்தவர்கள் ஷாலினி மற்றும் ருத்ரன் அவர்களின் உதவியுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி பற்றிய செய்திகள் நண்பர் நர்சிம்,டோண்டு ஆகியோர்கள் பதிவுகளில் வந்திருக்கின்றன.

இந்த முயற்சியைப் பெரிதும் பாராட்டும் அதே நேரத்தில் இவ்வகை கல்ந்துரையாடல் நிகழ்ச்சிகள் பற்றிய தேவைகள் எழுந்திருக்கும் சமூகசூழல் பற்றிய பார்வையில் இதை அணுக விழைகிறேன்.எனக்குத் தோன்றும் கேள்விகள்:

- இந்த வகையான கருத்தரங்கிற்கான தேவைகள் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்கின்றனவா?இன்னும் இக் கேள்வியைத் தெளிவாக்கும் போது,இவ்வகை கருத்தரங்கிற்கான தேவைகள் மெட்ரோ,சிறுநகரங்கள்,கிராமம் சார்ந்த நகரங்கள்,மற்றும் முழு கிராமப் புறங்கள் எல்லாவற்றிலும் ஒரே வகையில் இருக்கின்றனவா?

- மேற்கண்ட கேள்விக்கு வெவ்வேறு வித பதில்கள் வருமெனில் அதற்கான மூல காரணிகள் என்ன?

- 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைக்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் வேறுபாடு இருக்கிறதா?ஆம் எனில் காரணம் என்ன?

- இவை பற்றிய தேவைகள் ஏற்படும் போது,கூடுதலாக குழந்தைகளுக்கான பாலியல் கல்வி தேவையா என்ற உடன்-கேள்வி கருதப்பட வேண்டுமா?அல்லது இல்லையா?

-குழந்தைகளுக்கான பாலியல் கல்வியே அவர்களுக்கு தேவையில்லாத ஆர்வத்தை உண்டு செய்துவடும் வாய்ப்பிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.இதை எப்படி எதிர் கொள்வது?

இவற்றை அலசும் போது என் பார்வையில் மெட்ரோ நகரங்களில் இவ்வகையான எச்சரிக்கை கருத்தரங்கங்களுக்கும்,குழந்தைகளுக்கான அறிவுறுத்தல்களுக்குமான தேவைகள் மெட்ரோ நகரங்களில் தேவைப்படும் அளவுக்கு கிராமப்புறம் சார்ந்த இடங்களில் தேவைப்படாது என்று நினைக்கிறேன்.இதற்கான புள்ளி விவரங்கள் என்னிடம் இல்லையெனினும் எனது அவதானிப்பைக் கொண்டு பார்க்கும் போது கிராமப்புறத்தின் குழந்தைகள் பெற்றோர் அல்லது குடும்ப கவனிப்பாளர்களின் பார்வையில்தான் இருக்கிறார்கள்.ஆனால் பெருநகரங்களின் வாழ்க்கை முறை குழந்தைகள் நெருங்கிய குடும்ப நபர்கள் அல்லாத பலரின் அருகாமையில் எளிதான தின வாழ்க்கையில் இருக்கிறார்கள்.சற்று சிந்தித்துப் பாருங்கள்,பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ அல்லது ரிக்ஷாக் காரர் முதல் பள்ளியின் பியூன் அல்லது அட்டெண்டர்கள்,டியூசன் செண்டர்கள் அவற்றில் உலவும் எண்ணற்ற வெளியாளர்கள் ஆகியோருடன் பெருநகரக் குழந்தைகள் தங்களின் தின வாழ்வில் சில மணித்துளிகளைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

கிராமங்களில் இவ்வகை அயலார்களின் அருகாமை குறைவு.

சரி,இது சரியென்று எடுத்துக் கொண்டால்,பெருநகர வாழ்க்கையை முற்றாக நாம் ஒதுக்க வேண்டுமா?ஒதுக்க முடியுமா?வாழ்வெனும் ஓட்டத்தில் பலசாலியாக பெருநகரங்களின் வாழ்வு தரும் வாய்ப்புகள் மிகவும் தேவையாக இருக்கின்றன.பெருநகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவருக்கு நான் சொல்லும் இந்தக் காரணிகள் வித்தியாசமாகவும் ஒத்துக் கொள்ள இயலாததாகவும் இருக்கலாம்.ஆனால் கிராமத்தில் பிறந்து வளர்ந்து,பெருநகரில் அனுபவப்பட்ட என்னைப் போன்ற சிலர் இந்த வேறுபாட்டை அறிய-அல்ல-உணர முடியும்.

இந்த சூழலில் குழந்தைகளூக்கு சொல்லித் தருகிறேன் பேர்வழி என்று அவர்கள் திசை திரும்பும் வாய்ப்புகளும் இருக்கின்றன.இதைப் பற்றிய கேள்விக்கு விரிவான பதிலை மருத்துவர் ஷாலினி கூட அளிக்க வில்லை என்று டோண்டு குறிப்பிட்டார்.ஏனெனில் இதற்கான அறுதியிட்ட பதில் இருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலவரம்.

இவற்றை எதிர் கொள்வதற்கான சரியான வழிமுறை குழந்தைகளுக்கு பெற்றோர் மிகவும் அணுக்கமாக தோழமையுடன் இருப்பதும் அவர்களின் உலகத்தில் தவிர்க்க இயலாத நபர்களாக பெற்றோர் விளங்குவதும் முக்கியம்.இந்த சூழலில் குழந்தைகளின் செயல்களிலிருந்து நண்பர்கள் வரை அனைவரது விவரமும் நமக்குத் தெரியவரும்.

நெருங்கிய குடும்ப நபர்களே குழந்தைகளுக்கு வினையாக அமைந்தால் என்ன செய்வது என்பது துர்பலமான ஒரு சூழல்.சொல்லத் தேவையன்றி மிகக் கவனமுடன் கையாள வேண்டிய விதயமே.அப்படிப்பட்ட நெருங்கிய நபர்கள் குடும்பத்தில் இருக்க வேண்டியது அவசியமா எனபதே இதில் என் கேள்வி !


இதைப்பற்றிய கருத்துக்களை யோசிக்கும் போதே அதனுடன் கூடுதலாக இணைக்க வேண்டிய ஒரு கலந்துரையாடல் தலைப்பு குழந்தைகளுக்கு பாலியல் கல்வி தேவையா என்பதும்.

இதுவும் மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வியே..என்னுடைய கணிப்பில் சிறுவர்களுக்கு 12 வயது வரை அவர்கள் சிறுவர்களாக இருக்க அனுமதிப்பதுதான் சரியான செயலாகத் தோன்றுகிறது.13\14 வயதளவில் பாலியல் விதயங்களைப் பக்குவமாகக் கற்றுத் தரும் அதை நேரத்தில் அவர்களுக்கு பரிசோதிக்கும் ஆவல் உண்டாகாதவாறு பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

இந்த விதயம் பற்றிய டோண்டுவின் பதிவில் எழுப்பிருக்கும் கேள்விகள் அர்த்தம் பொருந்தியவை என்றே நினைக்கிறேன்..அவற்றிற்கு ஷாலினி பதில் சொன்னால் இன்னும் மகிழ்வேன்...

Tuesday, May 12, 2009

103- நெகிழ்ந்து மலர்ந்த ஒரு "பூ"

இந்த வாரத்தில் சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் பார்வதி(தானே?)நடித்த பூ திரைப்பபடம் பார்க்க முடிந்தது.

நல்ல படங்களை நாங்கள் வெற்றி பெற விடுவதில்லை என்ற தமிழக ரசிக மனோபாவத்துக்கேற்ப வந்த சுவடு தெரியாமல் போன ஒரு படம்.


படம் பார்த்து முடித்த இரவு தூங்க நெடுநேரம் ஆனது;மனம் நெகிழந்த ஒரு உணர்வுடனேயே தூங்கப் போனேன்.சிறுவயதில் நான் பார்த்த நிறம் மாறாத பூக்கள்  உதிரிப் பூக்கள் படத்தின் -விஜயன் நீருக்குள் போகும்-இறுதிக் காட்சி நெடுநாட்களாக நினைவில் இருந்த ஒன்று.அதற்குப் பிறகு இந்தப் படத்தின் இறுதிக் காட்சி மிகவும் பாதித்ததும் நினைவில் நெடுநாட்கள் இருக்கும் என்றும் தோன்றியது.
கதை என்னவோ சாதாரண காதல் கதைதான் என்று கருதினாலும் நாயகியின் அன்பு எப்படிப்பட்டது என்ற அவளின் பார்வையும் அதை வெளிப்படுத்தும் காட்சிகளும் அன்பு-காதல் ஆகிய உணர்வுகளின் நோக்கம்-objective and attainment-மாறுபட்டு என்னவாக இருக்கமுடியும் என்ற சிந்தனைதான் இந்தக் கதையின் முடிச்சு.

காதலித்தவர்கள் எப்படியும் இணைவதுதான் காதலின் வெற்றி என்ற பொதுப்பட்ட சிந்தனையிலிருந்த வேறுபடும் படம் ஒருவர் மீதான காதலின் உன்னதம் அவள் அல்லது அவனுடன் இணைவதைக் கூட விலையாகத் தரத் தயாராக இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நச்சென்று சொல்லிச் செல்கிறது படம்.

அத்தை மகனை சிறுவயதில் இருந்து பிரவாகமாய் விரும்பும் ஒரு எளிய கிராமத்துப் பெண் அவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்று தெரிய வரும் பொழுது எப்படி ரியாக்ட் செய்வாள் என்பது பல படங்களில் எடுத்துத் தள்ளியிருக்கும் கருமாந்திரக் காட்சி,இரண்டு வகைப்படும்;ஒன்று அவள் இறந்து போவாள்,பெரும்பாலும் தற்கொலை அல்லது விபத்து ஏதாவது ஒன்றில்;அல்லது சாமியாரிணி ஆவாள்...இவை தவிர்த்த தீர்வுகளை முன் வைத்த படங்கள் மிகக் குறைவு.

பூ நாயகி அதை எளிதாக எதிர் கொள்வதோடு,நாயகனான அத்தை மகன் மீது எந்த வருத்தங்களுமின்றி இருக்கிறாள்;தோழி உனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையா என்று கேட்கும் போது,எதுக்கு வருத்தப்படனும்,அது நல்லா இருந்தா பத்தாதா?நான் அது கிடைக்கலைன்னு வருத்தப்பட்டா அது எப்படி நல்லா இருக்கும்?எனக்கு அது சந்தோஷமா இருக்கணும் அதுதான் வேணும்.நான் வருத்தப்படாம இருந்தாத்தான் அது சந்தோஷமா இருக்கும் என்று இதழ் நெளியும் புன்னகையுடன் சொல்லும் போது நாம் நெகிழ்ந்து போவது நிச்சயம்.

அவனை எவ்வளவு விரும்புகிறாள் என்பதை,ஒரு 40 பக்க நோட்டு வாங்கி அதில் முழுதும் எழுதி அவனிடம் கொடு;அதைப் பார்த்தால் உன் அன்பின் வலிமை தெரிந்து உன்னையே திருமணம் செய்து கொள்வான் என்று தோழியின் யோசனைப்படி முயற்சிக்கும் நாயகி,கடைசியில் எதுவும் எழுதத் தோன்றாமல்,நீ நல்லா இருக்கணும் மாமா..என்று இரு வரிகளுடன் கடிதத்தை முடிப்பது..

மளிகைக் கடைக்கு சாமான் வாங்கச் சென்று விட்டு,என்ன வேணும் என்ற கடைக்காரரின் கேள்விக்கு தன் மாமாவின் பெயரை விளித்து வேண்டும் என்று சொல்லும் தன்னை மறந்த கணம்..

போன்ற சிறு சிறு ரசமான இடங்கள் படம் முழுதும் ஆங்காங்கே.

அவனது திருமணத்திற்கு தனது வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்து,பகைத்து தூற்றி அவனை சாபமிடும் போது,அவனது நலமான வாழ்வுக்காக அவனுடைய திருமணத்திற்கு கட்டாயம் தன்னுடைய வீட்டிலிருந்து யாராவது கட்டாயம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் நாயகி அதை வலியுறுத்த தற்கொலை வரைக்கும் போகிறாள்..இது மிக வித்தியாசமான ஒரு சிந்தனை.

எங்கள் ஊர்ப் பக்கங்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் நடைபெறும் போது ஒரு வழக்கம் வைத்திருக்கிறார்கள்;அதாவது மணமக்கள் திருமணத்தன்று வருகை தந்திருக்கும் மூத்தவர்கள் அனைவரது கால்களிலும் விழுந்து ஆசி பெறுவது.பொதுவாக எல்லா இனத்திலும் மணமக்கள் நெருங்கிய சொந்தபந்தத்தில் மூத்தவர்களிடம் ஆசி பெறுவார்கள்.ஆனால் நகரத்தார் என்று சொல்லப்டும் நாட்டுக் கோட்டை நகரத்தார் திருமணம் ஒன்றில் நான் பார்த்து வியந்தது வந்திருந்த அனைத்து மூத்தவர்கள் காலிலும் விழுந்து ஆசி பெற்றது..எனது தந்தையுடன் அத்திருமண விழாவில் கலந்து கொண்ட நாங்கள் நட்பு முறையில்தான் அழைக்கப்பட்டிருந்தோம்.எனது தந்தையும் பெண்ணின் தந்தையும் நண்பர்கள்..நண்பர்கள் என்று சொல்வது கூட அதீதம்;ஒருவருக்கொருவர் மதிக்கும் தெரிந்தவர்கள்,அவ்வளவே.

ஆனால் நாங்கள் நுழைந்த உடன் எங்களை வரவேற்ற பெண்ணின் தகப்பானார் தனது குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார்;பின்னர் மணமக்களை அறிமுகப் படுத்தினார்.பின்னர் மணமக்கள் எனது தந்தையாரிடம் ஆசி பெற்றார்கள்.

திருமணத்தில் இருந்து திரும்பிய பிறகும் கூட இதன் உளவியல் காரணங்களை எண்ணிக் கொண்டிருந்தேன்;எனது தாயாரிடம் தெரிவித்த போது,மிக எளிதாக அதற்கு ஒரு விளக்கம் கிடைத்தது.திருமணத்தில் அனைவரும் கலந்து கொள்வார்கள்;வருபவர்களில் எவருக்கேனும் விழாக் குடும்பத்தாரிடம் ஏதேனும் மன்த்தாங்கல்கள் சிறிதளவு இருந்தாலும் கூட தம் காலில் விழுந்து தங்களின் உளமார ஆசியை வேண்டும் மணமக்களை முழுமனத்துடன் வாழ்த்துவார்கள்.அவர்களிடம் ஏதும் மனக்குறைவான சிந்தனை இருந்தாலும் கூட தமது குழந்தைகளைப் போல எண்ணி தங்களிடன் ஆசிர்வாதம் ஆசி வேண்டும் மணமக்களின் செயல் அவர்கள் அறியாமல் வைத்திருந்த ஒன்றிரண்டு மனப் பிணக்குகளைக் கூட சரி செய்து முழுமனத்துடன் அவர்களை வாழ்த்திச் செல்வார்கள்.அதனால்தான் அப்படிப்பட்ட ஒரு சம்பிரதாயம் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்.
அது முழுக்க எனக்கு உடன்பாடானதாகத் தோன்றியது.

கிட்டத்திட்ட அந்த ஒரு செய்தியையே பூ படம் தந்தது.தன்னை நிராகரித்தாலும் தான் விரும்பிய ஒருவன் நன்றாக வாழ வேண்டும் என்று உளமார நினைக்கும் நாயகி தனது மனத்தையே வருத்தங்களற்று மாற்றிக் கொள்வதோடு,அவன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்,அதற்கு தன் குடும்பத்தினரும் சென்று அவனது திருமணத்தில் கலந்து கொண்டு அவனை வாழ்த்திவிட்டு வரவேண்டும் என்று நிபந்தனை விதித்து,அதற்கு பதில் நிபந்தனையாக,'அவனது திருமணத்திற்கு முன்னர் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்;அதற்கு சம்மதித்தால் நாங்கள் அவன் திருமணத்திற்குச் செல்கிறோம்' என்று சொல்ல,உடன் சம்மதித்து அவனது திருமணம் நடக்கும் முன்னரே தான் திருமணம் செய்து கொள்கிறாள்.

இவ்வளவு மன நெகிழ்ச்சியுடன் தான் விரும்பியவனின் வாழ்க்கையின் மகிழ்ச்சியை விரும்பும் அவளின் முயற்சிகள் வியர்த்தமாகி விட்டதை தெரிந்து கொள்ளும் கணத்தில் அவளது வெடித்து அழும் உணர்வுகளுடன் முடிகிற படம் மிகுந்த நெகிழ்ச்சியான சிந்தனைகளை விட்டுச் செல்கிறது..

பார்த்து நெகிழ வேண்டிய ஒரு படம் !

Thursday, April 23, 2009

102-குறுந்'தொகைகள்-26-04-2009




இலங்கைத்தமிழர்களின் இன்னல்கள் உச்சத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கப்போகும் தேர்தல்கள் கிளர்த்தும் நாடகங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறுகின்றன.

மக்கள் அனைவரும் முட்டாக்**கள் என்று நினைத்துக் கொண்டு அரசியல் வாதிகள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.தமிழர் தலைவருக்கு மக்களுக்கு எப்படியாவது பல நாடகக் காட்சிகளை நடத்திக் காட்டி தன் 'மக்களை' உயர்த்தும் சாத்தியங்கள் இருக்கிறதா என்று முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்;இன்னும் கழைக்கூட்டாடி மாதிரி குட்டிக் கரணம் அடித்துக் காட்டுவது மட்டும்தான் மிச்சம்,கூடிய விரைவில் அதையும் எதிர் பார்க்கலாம்.

அம்மா ஆயுசு முழுதும் இலங்கையில் கண்ணுக்குத் தெரிந்தார்கள்;இப்போது இலங்கைத் தமிழர்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள்;'புலிகள்' எல்லாம் காற்றில் மறைந்து விட்டார்கள் போலிருக்கிறது....ம்ம்ம்ம்...தேர்தல் எல்லாம் செய்யும் வேலை!

நேற்றுவரை தமிழர் பாதுகாப்புப் புண்ணாக்கு வியாபாரம் செய்தவர்களுக்கு இன்று இரண்டோ அல்லது ஏழோ இடங்கள் எல்லாவற்றையும் மறந்து ஐயாவும் அம்மாவும் தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள்;இனி தேர்தல் முடிந்து சிலகாலம் வரை இலங்கைத் தமிழர்களை பற்றிய எந்த விவரமும் இவர்கள் வாயில் இருந்து வராது.

பல காரணங்களால் தேசிய அளவில் காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக மாறிப் போய் விடும் என்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு மூன்று தேர்தல்களில் கை கொடுக்கும் தமிழகம் கவிழ்த்து விடுமோ என்று பயந்து மீண்டும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு வெளிப்படையாக இலங்கையில் என்ன நடந்தாலும்,எவ்வளவு தமிழர்கள் அழிந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை எனபதை வெளிப்படையாக அறிவித்து விட்டால் நல்லது..ஏதாவது செய்வார்களா என்ற பொய் எதிர்பார்ப்பாவது இல்லாமல் போகும்.

அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் போர்நிறுத்த வேண்டு கோளும் அதற்கான இலங்கையின் எதிர்வினையும் மேலும் கலக்கமளிக்கும் இந்தச் சூழல் அவலத்துடன்,அச்சமூட்டுகிறது.

0 0 0

கோவை செண்ட்ரல் எக்ஸைசில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கே.ராஜேந்திரன் எழுதிய ஒரு கவிதை,மீண்டும் சுஜாதாவின் கட்டுரைகளில் இருந்து...

மங்கிய வெளிச்சத்தில்
பளபளக்கும் இமைக்காத கண்கள்
வைக்கோல் திணித்த
கன்றுக்குட்டியின் ஒட்டுத்தோல் பார்த்து
மனம் மறுகும்
முரட்டு விரங்களின்
இயந்திர உரசலுக்கு
மெல்லிய நாவின்
ஈர ஸ்பரிசங்களும்
பிஞ்சுப் பற்கடிப்பும்
நினைவில் தேங்கும்
சாட்டைக் கம்பு
நினைவுக்கு வர
அடைத்த துவாரம்
அரை மனதாய்த் திறக்கும்
மார்வலி மரத்து
வெள்ளை ரத்தம் வடிக்கும்

பசு என்னும் தலைப்பில் வந்த இந்தப் புதுக்கவிதை நவீன கவிதையின் பரிமாணங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.பல கவிதைகப் பரிச்சயங்களில் எனக்கு எப்பொழுதும் தோன்றும் 'இன்னும் சிறிது செப்பனிட்டிருக்கலாமோ'என்ற எண்ணம் இக்கவிதைக்கும் ஏற்பட்டது.


(எனக்குத் தோன்றிய)tinkered version

மங்கிய ஒளியில்
வைக்கோல் போர்த்து
அசையா நின்ற ஒட்டுத் தோல் குட்டி;
மெல்லிய நாவின் ஈர ஸ்பரிசமும்
பிஞ்சுப் பற்கடிப்பும்
தேங்கும் நினைவில் மறுகும் மனம்;
சாட்டைக் கம்பு சுழல
முரட்டு விரல்களின்
எந்திர உரசலில்
அடைத்த மடியின் துவாரம்
மார்வலி மரத்துத் திறக்க
வடிகிறது..
வெள்ளை ரத்தம் !

இந்த செப்பம் பல சமயங்களில் நல்ல கவிதையை உன்னதமானதாக மாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன.
நண்பர் ராஜேந்திரன் இப்போது பதிவெழுதிக் கொண்டிருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது;சினப்பட்டால் மன்னிப்பாராக !


0 0 0

மதுரைக் காரரும் சென்னை(நிதி)க் காரரும் (தேர்தலுக்காக)வெளியிட்ட சொத்து விவரம் ஒரு பதிவில் பார்க்க நேர்ந்தது.அதுவே 30,40 கோடிகளில் இருக்கிறது.
எந்த ஒரு கல்வித் தகுதியோ,தனிப்பட்ட வணிக நிறுவனமோ இல்லாத அன்ப நண்பர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு சொத்து என்று சுதந்திர இந்தியாவில் எவரும் கேட்க மாட்டார்கள் போலிருக்கிறது.
மாதம் முழுதும் நாயாய் உழைத்தும் நம்மால் ஆயுளில் ஒரு கோடி சேர்க்க முடியுமா என்று மலைப்பாயிருக்கிறது...

ம்ஹ்ம்...

வாழ்க இந்தியா,வாழ்க அரசியல்!

0 0 0

விருட்சம் கவிதைகளி'ல் யுவன் எழுதிய பிரவாகத்தில் ஒரு துளி

எனக்குப் பிடிக்கும்
என்றறியாமலே
ஒலியெழுப்புகின்றன
பறவைகள்.
நான் விழித்து
எழாத போதும்
விடிந்து விடுகிறது பொழுது.
கவிதையின் கணமொன்றை
கண்கள் துழாவ
காலடியில் பாய்ந்து மறைகிறது
கணங்கள் பிரவாகம்

நல்ல கவிதை என்பது ஒரு சொந்த உன்னதம்;அதற்கு இது ஒரு உரைகல்.இந்தக் கவிதை நிச்சயமான ஒரு கவிதை அனுபவத்தை சட்டென்று தருகிறது;கடைசி வரியை கணங்களின் பிரவாகம் என்று மாற்றினால் இக்கவிதை இன்னும் கூர்ப்படுவதாக உணர்கிறேன்!

0 0 0

Tuesday, April 21, 2009

101-சுஜாதா,சூப்பர் சிங்கர் மற்றும் சில மறைபொருள்கள் !

தமிழில் புதுக்கவிதை சென்ற சில பத்தாண்டுகளில் புயல் போலக் கிளம்பி,நல்ல-அல்ல கவிதைகளைத் தரம் பிரிப்பது வைக்கோல்
போரில் ஊசி தேடுவதை விடக் கடினமானதாக ஆகிவிட்டது.ஏதேனும் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதலில் தோன்றுவது
கவிதை வடிவம்தான்..அதை ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் பின்னர் மற்ற வற்றில் பார்வையைத் திருப்புவார்கள்..

எங்களுடைய சமூகத்தின் கூட்டமைப்பின் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாள் அன்று கொண்டாட்டங்களும் சில போட்டிகளும்
வைப்பார்கள்;90 களில் ஒரு முறை ஒரு மகானுபவர் யோசைனையில் கவிதைப்போட்டி வைத்து விட்டார்கள்.அதில் படிப்பாளி(?!) என்று என்னை
நடுவர்களில் ஒருவராக்கி என்னை எல்லாக் கவிதைகளையும் கேட்க வைத்தார்கள்.(அந்த வதை அனுபவம் பல நாட்களுக்கு நினைவில் இருந்தது வேறு விதயம்!).சொல்லத் தேவையன்றி,அந்த அசம்(பவ)பாவிதத்திற்குப் பின் நான் ஒரு மோசமான
நடுவராக அறியப்பட்டேன்.

முதல் பரிசுக் கவிதை என்ன தெரியுமா?

அலைகள்,
கடல் கன்னி
கரைக்கு அனுப்பும்அன்பு முத்தங்கள் !

போகட்டும்....நல்ல கவிதைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன..கீழே சில நல்ல அல்லது கவரும்
கவிதைகளும்,அவற்றிற்கான சில ரசிப்புகளும்..

* * * * * * * * * * * * * * * * * * * * *

தமிழ்க் கவிதைகளின் தற்காலப் போக்கைக் காட்டும் நான்கு கவிதைகளை இங்கே தருகிறேன்.முதலில் குமுதம் வாசகர்களுக்கு எளிதில்
புரியக் கூடிய கவிதை.என் நண்பர் பாவண்ணன் எழுதியது.

'இடித்துச் சிதைத்தார்கள் ஒருநாள்
எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனை
காரணங்கள் சொல்வதா கஷ்டம்...
பஸ்ங்க வந்து ரயில் அழிச்சாச்சு வருமானமே இல்ல
ஊர்க்கு நடுவுல பஸ் ஏறுவானா
ஊர்க்கோடிக்கு வந்து ரயில் புடிப்பானா?
என் இளமையின் ஞாபகம் வேற விதம்
ஒவ்வொரு மணிக்கும் ஓடும் ரயில்களுக்கு
வரிசையாய் நின்று சல்யூட் அடிப்போம்
குதிரை வண்டியில் வந்திறங்கி
கூட்டமாய் காத்திருப்பவர்களை
ஆலவிழுதில் ஊஞ்சல் கட்டி
ஆடியபடி பார்த்ததிருப்போம்
அரையனாவுக்கு நாவல்பழம் வாங்கி
ஆளாளுக்குத் தின்றபடி
மரங்கள் நடுவே பாதைபோட்டு
ரயில்கள் போல நாங்களே ஓடுவோம்
தேடிவரும் அம்மா
எங்களைக் காண்பது ரயிலடியில்தான்
காலம் மாறிவிட்டது இன்று
என் பிள்ளை பார்க்க
ரயில் இல்லை இப்போது
அகால நள்ளிரவில் ஊளையிட்டுச் செல்லும்
சரக்கு ரயிலைக் காட்ட முடியாது
தண்டவாளம் மட்டும் இருக்கிறது
பழகின ஏதோ ஒன்றின் மிச்சம் போல

இந்தக் கவிதை வெளிவந்தது 'காலக்கிரமம்' என்னும் சிற்றிதழ்,ஆசிரியர் ஆத்மாஜி.மொத்தம் 18 பக்கம்.முழுவதும்
கவிதைகள்.மேற்சொன்ன கவிதை மிக எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய,சிறுவயதில் நாம் பார்த்துப் பரவசப்பட்ட ரயில்களை ஞாபகப்
படுத்தும் evocative கவிதை.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இழந்தது ரயில் மட்டும் இல்லை என்பது புரியாவித்தாலும்
பரவாயில்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * *

தமிழின் நவீன கவிதைகள் எல்லாமே அத்தனை எளிமையானவை அல்ல;முன்பு மேற்சொன்ன பாவண்ணனின் கவிதையை விடச் சற்று
அதிகமாகச் சிந்திக்க வைக்கும் கவிதை ஒன்றை அடுத்துத் தருகிறேன்,அதை எழுதியவர் விக்கிரமாதித்யன்.

போன வருஷச் சாரலுக்கு குற்றாலம் போய்
கை(ப்) பேனா மறந்து
கால்(ச்) செருப்பு தொலைத்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல் வெள்ளிக் கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியலையே இன்னும்.

'ஆகாசம் நீல நிறம்' என்னும் தொகுப்பில் இருபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்(ஆம்,22 ஆண்டுகளுக்கு முன்தான் !!!!!)இந்த
அபாரமான கவிதை ஏன் இதுவரை கண்ணில் படவில்லை என்று கேட்டு விக்ரமாதித்யன் 'மேலும்' என்னும் பத்திரிகையில் மே 1993
இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.'எனக்கொண்ணும் நஷ்டமில்லை,22 வருஷ இருட்டில் ஒரு தீக்குச்சி பொருத்தி வைத்துப்
பார்க்கிறேன்.எளிமையை ஏற்காத இவர்கள் மனசை லேசாக குத்திக் காட்டுவேன்,அவ்வளவுதான்' என்கிறார்.

இந்த அபாரமான கவிதை கவனிக்கப்படாத்து ஆச்சரியம்தான்.இதற்குப் பரிகாரமாக லட்சக்கணக்கான வாசகர்கள் இதைக் கவனிக்கட்டும்
என்று தீக்குச்சி என்ன,தீப்பந்தமே ஏற்றிக் காண்பிப்பதில் பெருமை அடைகிறேன்.

இந்தக் கவிதையும் புரிவதில் உங்களுக்குச் சிரமம் இருக்காது என்று தோன்றுகிறது.கை(ப்) பேனா,கால்(ச்) செருப்பு ப்பன்னா
ச்சன்னாவை எதற்கு கவிஞர் அடைப்புக் குறிக்குள் போட்டார் என்று கேட்டு உங்களை சங்கடப் படுத்த விரும்பவில்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * *

பதிலாக அதே காலக்கிரமம் இதழில் வெளியான் இரு கவிதைகளைக் கொடுத்து கவிதைகளின் புரிதல் நிலைகளைச் சற்றே கஷ்டப்படுத்த
விரும்புகிறேன்.

பத்தாமடை
சித்ராங்கியே
மூணாம் படை
மூப்பாயியைப்
போய்ப் பார்
முதுகில் கூடையும்
இடுப்பில் குழந்தையும்
கக்கத்தில் ரைஃபிளுமாகக்
காத்திருக்கிறாள்
மணல் தடுப்புகளுக்கு
பின்னால்

குருநாத் கணேசனின் இந்தக் கவிதை புரிந்தும் புரியாமலும் கோடி காட்டுகிறதல்லவா?இதில் சித்ராங்கி யார்,மூப்பாயி யார் என்று
வியப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு வித்ததில் இலைமறை காய் மறைவாகப் புரிவதுடன் சற்று சங்கடப் படுத்துகிறதல்லவா...அது
போதும்.

இப்போது பிரம்மராஜன் கவிதைகளுக்கு நீங்கள் தயாராகலாம்.

திணைப் புறம்பின் விழுப்
புண்கள் தாமே
தேடியதுன்னை
வியர்க்கும் மணல் மேடுகள்
ஊடே ஞானிகப்படுத்தும் தோள்
வலியில் மொக்கு உட்குழிய
மின்சாரம் அலற
நான் முகத்திலொன்று வாட
நீரின் நினைவு நினைக்கும்
நின்பனை நிலம்
சாவில் முளைக்கும்
வாழ்வின் வைரஸ் பூவே
போற்றி!

பாவண்ணனிலிருந்து பிரம்மராஜன் வரை கவிதை வடிவங்கள் எத்தனை விதமானவை என்று மாதிரி காட்டுகிறது.பிரம்மராஜன் கவிதை
புரிகிறது,புரியவில்லை என்ற தளத்தில் இயங்குவதல்ல.இது ஒரு surreal சித்திரம் போல பார்ப்பவனின் மன விகற்பங்களுக்கு ஏற்ப
அதன் புரிதல் ஆளுக்கு ஆள் மாறுபடும்.புரிகிறதா?

* * * * * * * * * * * * * * * * * * * * *

அண்மையில் கோவையில் ஒரு சிறுகதைப் பட்டரையின் போது,'நிகழ்' பத்திரிகையில் மனுஷ்ய புத்திரன் எழுதிய 'கால்களின்
ஆல்பம்' என்கிற கவிதையை வாசித்துக் காட்டிய போது,அது எவ்வளவு தூரம் கேட்டவர்களின் மனசைப் பாதித்தது என்பதை படித்து
முடித்தபின் உணர்ந்தேன்.பலபேர் என்னிடம் வந்து கை குலுக்கினார்கள்.ஒரு பெண்மணி மனுஷ்ய புத்திரனின் விலாசம் கேட்டு
அவருக்குப் பணம் அனுப்ப வேண்டும்,ஏதாவது செய்ய வேண்டும் என்றார்,கண்களில் கண்ணீருடன்.

* * * * * * * * * * * * * * * * * * * * *

மேற் குறிப்பிட்ட ஐந்து பத்திகளும் எழுத்தாளர் அமரர் சுஜாதாவின் கட்டுரைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.இவை 90 களின்
மத்தியில் எழுதப்பட்டவை.ஒரு புகழ் பெற்ற,தின எழுத்துலகின் பெரும் வாசகர் வட்டத்தைப் பெற்ற சூப்பர் ஸ்டார் எழுத்தாளரான
அவர்,நல்ல கவிதைகளையும் கவனிக்கப்பட வேண்டிய திறமையான கவிஞர்களையும்,அவர்கள் அப்போது எந்த வித அடையாளங்களற்று
இருந்தும்,அவர்களை அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தார்.இதை ஒரு கடமையாகவே கருதிச் செயல்பட்டார் என்றும் எனக்குத்
தோன்றுகிறது.

மனுஷ்யபுத்திரன் சுஜாதாவின் மறைவின் போது எழுதிய,அவருக்கும் பின்னவருக்குமான பரிச்சயம் ஏற்பட்ட விதங்களும்,அப்போது அவர்
இருந்த(முன்னவர்) நிலையையும் விவரித்த அந்தப் பத்தியைப் படித்து நெகிழாதவர்கள் குறைவு.

அப்படிபபட்ட நேர்மறை மனிதர் இறந்த போது(ம்),அவரின் சாதிய அடையாளங்கள் குறித்த வசைச் சொற்கள் பரவலாக-குறிப்பாகப்
பதிவுலகில்-எழுந்தன.

விஜய் தொலைக்காட்சியில் இப்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று.அந்த நிகழ்ச்சியும்
விஜய் தொலைக்காட்சி நிறுவன்ம் அதை நடத்தும் விதத்திலும் அபாரமாக ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

இந்த நிகழ்ச்சியில் மூன்று நடுவர்கள்,திரு.உன்னி,திருமதி.சுஜாதா மற்றும் திரு.சீனிவாஸ்.

இதுவரை நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் நல்ல திறனுடன் பாடும் போட்டியாளர்களில் ரவி,ரஞ்சனி,விஜய் மற்றும் அஜீஷ்
ஆகிய நால்வரும்தான் இறுதிக்கு வருவார்கள் என்று நான் கணித்திருந்தேன்.(சூப்பர் சிக்ஸ் வரை).ஆயினும் அது வரை நடந்த
சுற்றுகளிலேயே சீனிவாஸ்,போட்டியாளர் ரவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போலத் தோன்றியது எனக்கு.ஆயினும் இசையில்
எனக்கிருக்கும் எளிய திறமைகளுக்கு விஞ்சிய விதயங்களை நடுவர்கள் கண்டிருக்கலாம் என்ற எண்ணமும் வந்தது.

குரல் பயிற்சியாளர் அனந்த் வந்தபிறகு டார்க் ஹார்ஸாக ரேணு முந்தினார்;பல பாடல்களைக் கலக்கலாகப் பாடினார்.

செமிபைனல் சுற்றுகளின் போது இரு நடுவர்கள் வெளிப்படை மதிப்பீடும் ஒரு நடுவர் மறைமுக மதிப்பீடும் செய்வர் என்று
அறிவிக்கப்பட்டது;அப்போது அது ஏன் என்றும் யோசித்தேன்.(பின்னர்தான் விளங்கியது!).தனித்தனியாக ஒருவரையொருவர்
போட்டியிட்டுப் பாடிய அந்த சுற்றுகளிலும் சீனிவாஸ் போட்டியாளர் ரவிக்கு அதிக மதிப்பெண்களும்,அஜீஷுக்கு குறைவான
மதிப்பெண்களும் கொடுத்தார்-இருவருமே ஒரே அளவில் ரசிக்கும்படி பாடியும்!

இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப சுற்றுகளில் விளையாட்டுப் பையனாகத் தோன்றிய அஜீஷ் செமி சுற்றுகளில் கலக்கினார்;ஒரு பாடல்
கூட சோடை என்று சொல்ல முடியவில்லை;ஆனால் ரவியின் திறனில் குறிப்பிட்டு அவதானிக்கும் படி எந்த முன்னேற்றமும்
காணக்கிடைக்கவில்லை.அவர் ஆரம்பம் முதலே நன்றாகத்தான் பாடிக் கொண்டிருந்தாலும் outstanding என்று சொல்லத்தக்க
விதத்தில் பாடவில்லையெனினும் ரவியைப் பற்றிய சீனிவாஸின் கமெண்டுகள் ஆகா ஒகோ என்ற அளவிலேதான் இருந்தன.

மதிப்பெண் வழங்கும் போது இரண்டு சுற்றுகளில் அஜீஷுக்கு குறைவான அளவில் மதிப்பெண்ணும்,ரவிக்கு அதிக மதிப்பெண்களும்
வழங்கி முதல் மூன்று இடங்களில் ரவியை உறுதி செய்தும்,அஜீஷை வெளித் தள்ளவும் ஏதுவான கேவலமான செயலைச் செய்தார் சீனி.இது மிக வெளிப்படையாகவே தெரிந்தது.

ஆனால் உன்னி,சீனி செய்த அந்தத் தவறைச் சரி செய்தார்,தம் மதிப்பெண்களின் மூலமாக.

அவர் அளித்த மதிப்பெண்கள் பாடியவர்களின் திறனுக்கு அளிக்கப்பட்ட சரியான மதிப்பெண்களாகவே தோன்றியது(அஜீஷுக்கு முதல் இடமும்,ரேணுவுக்கு இரண்டாம்
இடமும்,ரவிக்கு மூன்றாமிடமும் அவர் அளித்த மதிப்பெண்களைச் சேர்த்த பின்னர் கிடைத்தன்).அவரின் மதிப்பெண்களின்
மூலம்,அஜீஷ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.
திறனுக்கேற்ற மதிப்பீடுகளைச் செய்யத் தவறிய சீனியின் அசிங்கமான செயலைப் பார்த்த போது,மாறுபட்டு சுஜாதாவின் கவிதை
அறிமுகங்கள்தான் எனக்குத் தோன்றியது;பல மறைபொருள் சிந்தனைகளும் வந்தன..

பாராட்டும் விதத்தில் நடந்த உன்னி நெஞ்சை நிறைத்தார் !

சுஜாதா,உன்னி போன்ற உயர்ந்த மனிதர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...