குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, April 23, 2009

102-குறுந்'தொகைகள்-26-04-2009




இலங்கைத்தமிழர்களின் இன்னல்கள் உச்சத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கப்போகும் தேர்தல்கள் கிளர்த்தும் நாடகங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறுகின்றன.

மக்கள் அனைவரும் முட்டாக்**கள் என்று நினைத்துக் கொண்டு அரசியல் வாதிகள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.தமிழர் தலைவருக்கு மக்களுக்கு எப்படியாவது பல நாடகக் காட்சிகளை நடத்திக் காட்டி தன் 'மக்களை' உயர்த்தும் சாத்தியங்கள் இருக்கிறதா என்று முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்;இன்னும் கழைக்கூட்டாடி மாதிரி குட்டிக் கரணம் அடித்துக் காட்டுவது மட்டும்தான் மிச்சம்,கூடிய விரைவில் அதையும் எதிர் பார்க்கலாம்.

அம்மா ஆயுசு முழுதும் இலங்கையில் கண்ணுக்குத் தெரிந்தார்கள்;இப்போது இலங்கைத் தமிழர்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள்;'புலிகள்' எல்லாம் காற்றில் மறைந்து விட்டார்கள் போலிருக்கிறது....ம்ம்ம்ம்...தேர்தல் எல்லாம் செய்யும் வேலை!

நேற்றுவரை தமிழர் பாதுகாப்புப் புண்ணாக்கு வியாபாரம் செய்தவர்களுக்கு இன்று இரண்டோ அல்லது ஏழோ இடங்கள் எல்லாவற்றையும் மறந்து ஐயாவும் அம்மாவும் தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள்;இனி தேர்தல் முடிந்து சிலகாலம் வரை இலங்கைத் தமிழர்களை பற்றிய எந்த விவரமும் இவர்கள் வாயில் இருந்து வராது.

பல காரணங்களால் தேசிய அளவில் காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக மாறிப் போய் விடும் என்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு மூன்று தேர்தல்களில் கை கொடுக்கும் தமிழகம் கவிழ்த்து விடுமோ என்று பயந்து மீண்டும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு வெளிப்படையாக இலங்கையில் என்ன நடந்தாலும்,எவ்வளவு தமிழர்கள் அழிந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை எனபதை வெளிப்படையாக அறிவித்து விட்டால் நல்லது..ஏதாவது செய்வார்களா என்ற பொய் எதிர்பார்ப்பாவது இல்லாமல் போகும்.

அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் போர்நிறுத்த வேண்டு கோளும் அதற்கான இலங்கையின் எதிர்வினையும் மேலும் கலக்கமளிக்கும் இந்தச் சூழல் அவலத்துடன்,அச்சமூட்டுகிறது.

0 0 0

கோவை செண்ட்ரல் எக்ஸைசில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கே.ராஜேந்திரன் எழுதிய ஒரு கவிதை,மீண்டும் சுஜாதாவின் கட்டுரைகளில் இருந்து...

மங்கிய வெளிச்சத்தில்
பளபளக்கும் இமைக்காத கண்கள்
வைக்கோல் திணித்த
கன்றுக்குட்டியின் ஒட்டுத்தோல் பார்த்து
மனம் மறுகும்
முரட்டு விரங்களின்
இயந்திர உரசலுக்கு
மெல்லிய நாவின்
ஈர ஸ்பரிசங்களும்
பிஞ்சுப் பற்கடிப்பும்
நினைவில் தேங்கும்
சாட்டைக் கம்பு
நினைவுக்கு வர
அடைத்த துவாரம்
அரை மனதாய்த் திறக்கும்
மார்வலி மரத்து
வெள்ளை ரத்தம் வடிக்கும்

பசு என்னும் தலைப்பில் வந்த இந்தப் புதுக்கவிதை நவீன கவிதையின் பரிமாணங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.பல கவிதைகப் பரிச்சயங்களில் எனக்கு எப்பொழுதும் தோன்றும் 'இன்னும் சிறிது செப்பனிட்டிருக்கலாமோ'என்ற எண்ணம் இக்கவிதைக்கும் ஏற்பட்டது.


(எனக்குத் தோன்றிய)tinkered version

மங்கிய ஒளியில்
வைக்கோல் போர்த்து
அசையா நின்ற ஒட்டுத் தோல் குட்டி;
மெல்லிய நாவின் ஈர ஸ்பரிசமும்
பிஞ்சுப் பற்கடிப்பும்
தேங்கும் நினைவில் மறுகும் மனம்;
சாட்டைக் கம்பு சுழல
முரட்டு விரல்களின்
எந்திர உரசலில்
அடைத்த மடியின் துவாரம்
மார்வலி மரத்துத் திறக்க
வடிகிறது..
வெள்ளை ரத்தம் !

இந்த செப்பம் பல சமயங்களில் நல்ல கவிதையை உன்னதமானதாக மாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன.
நண்பர் ராஜேந்திரன் இப்போது பதிவெழுதிக் கொண்டிருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது;சினப்பட்டால் மன்னிப்பாராக !


0 0 0

மதுரைக் காரரும் சென்னை(நிதி)க் காரரும் (தேர்தலுக்காக)வெளியிட்ட சொத்து விவரம் ஒரு பதிவில் பார்க்க நேர்ந்தது.அதுவே 30,40 கோடிகளில் இருக்கிறது.
எந்த ஒரு கல்வித் தகுதியோ,தனிப்பட்ட வணிக நிறுவனமோ இல்லாத அன்ப நண்பர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு சொத்து என்று சுதந்திர இந்தியாவில் எவரும் கேட்க மாட்டார்கள் போலிருக்கிறது.
மாதம் முழுதும் நாயாய் உழைத்தும் நம்மால் ஆயுளில் ஒரு கோடி சேர்க்க முடியுமா என்று மலைப்பாயிருக்கிறது...

ம்ஹ்ம்...

வாழ்க இந்தியா,வாழ்க அரசியல்!

0 0 0

விருட்சம் கவிதைகளி'ல் யுவன் எழுதிய பிரவாகத்தில் ஒரு துளி

எனக்குப் பிடிக்கும்
என்றறியாமலே
ஒலியெழுப்புகின்றன
பறவைகள்.
நான் விழித்து
எழாத போதும்
விடிந்து விடுகிறது பொழுது.
கவிதையின் கணமொன்றை
கண்கள் துழாவ
காலடியில் பாய்ந்து மறைகிறது
கணங்கள் பிரவாகம்

நல்ல கவிதை என்பது ஒரு சொந்த உன்னதம்;அதற்கு இது ஒரு உரைகல்.இந்தக் கவிதை நிச்சயமான ஒரு கவிதை அனுபவத்தை சட்டென்று தருகிறது;கடைசி வரியை கணங்களின் பிரவாகம் என்று மாற்றினால் இக்கவிதை இன்னும் கூர்ப்படுவதாக உணர்கிறேன்!

0 0 0

Tuesday, April 21, 2009

101-சுஜாதா,சூப்பர் சிங்கர் மற்றும் சில மறைபொருள்கள் !

தமிழில் புதுக்கவிதை சென்ற சில பத்தாண்டுகளில் புயல் போலக் கிளம்பி,நல்ல-அல்ல கவிதைகளைத் தரம் பிரிப்பது வைக்கோல்
போரில் ஊசி தேடுவதை விடக் கடினமானதாக ஆகிவிட்டது.ஏதேனும் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதலில் தோன்றுவது
கவிதை வடிவம்தான்..அதை ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் பின்னர் மற்ற வற்றில் பார்வையைத் திருப்புவார்கள்..

எங்களுடைய சமூகத்தின் கூட்டமைப்பின் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாள் அன்று கொண்டாட்டங்களும் சில போட்டிகளும்
வைப்பார்கள்;90 களில் ஒரு முறை ஒரு மகானுபவர் யோசைனையில் கவிதைப்போட்டி வைத்து விட்டார்கள்.அதில் படிப்பாளி(?!) என்று என்னை
நடுவர்களில் ஒருவராக்கி என்னை எல்லாக் கவிதைகளையும் கேட்க வைத்தார்கள்.(அந்த வதை அனுபவம் பல நாட்களுக்கு நினைவில் இருந்தது வேறு விதயம்!).சொல்லத் தேவையன்றி,அந்த அசம்(பவ)பாவிதத்திற்குப் பின் நான் ஒரு மோசமான
நடுவராக அறியப்பட்டேன்.

முதல் பரிசுக் கவிதை என்ன தெரியுமா?

அலைகள்,
கடல் கன்னி
கரைக்கு அனுப்பும்அன்பு முத்தங்கள் !

போகட்டும்....நல்ல கவிதைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன..கீழே சில நல்ல அல்லது கவரும்
கவிதைகளும்,அவற்றிற்கான சில ரசிப்புகளும்..

* * * * * * * * * * * * * * * * * * * * *

தமிழ்க் கவிதைகளின் தற்காலப் போக்கைக் காட்டும் நான்கு கவிதைகளை இங்கே தருகிறேன்.முதலில் குமுதம் வாசகர்களுக்கு எளிதில்
புரியக் கூடிய கவிதை.என் நண்பர் பாவண்ணன் எழுதியது.

'இடித்துச் சிதைத்தார்கள் ஒருநாள்
எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனை
காரணங்கள் சொல்வதா கஷ்டம்...
பஸ்ங்க வந்து ரயில் அழிச்சாச்சு வருமானமே இல்ல
ஊர்க்கு நடுவுல பஸ் ஏறுவானா
ஊர்க்கோடிக்கு வந்து ரயில் புடிப்பானா?
என் இளமையின் ஞாபகம் வேற விதம்
ஒவ்வொரு மணிக்கும் ஓடும் ரயில்களுக்கு
வரிசையாய் நின்று சல்யூட் அடிப்போம்
குதிரை வண்டியில் வந்திறங்கி
கூட்டமாய் காத்திருப்பவர்களை
ஆலவிழுதில் ஊஞ்சல் கட்டி
ஆடியபடி பார்த்ததிருப்போம்
அரையனாவுக்கு நாவல்பழம் வாங்கி
ஆளாளுக்குத் தின்றபடி
மரங்கள் நடுவே பாதைபோட்டு
ரயில்கள் போல நாங்களே ஓடுவோம்
தேடிவரும் அம்மா
எங்களைக் காண்பது ரயிலடியில்தான்
காலம் மாறிவிட்டது இன்று
என் பிள்ளை பார்க்க
ரயில் இல்லை இப்போது
அகால நள்ளிரவில் ஊளையிட்டுச் செல்லும்
சரக்கு ரயிலைக் காட்ட முடியாது
தண்டவாளம் மட்டும் இருக்கிறது
பழகின ஏதோ ஒன்றின் மிச்சம் போல

இந்தக் கவிதை வெளிவந்தது 'காலக்கிரமம்' என்னும் சிற்றிதழ்,ஆசிரியர் ஆத்மாஜி.மொத்தம் 18 பக்கம்.முழுவதும்
கவிதைகள்.மேற்சொன்ன கவிதை மிக எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய,சிறுவயதில் நாம் பார்த்துப் பரவசப்பட்ட ரயில்களை ஞாபகப்
படுத்தும் evocative கவிதை.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இழந்தது ரயில் மட்டும் இல்லை என்பது புரியாவித்தாலும்
பரவாயில்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * *

தமிழின் நவீன கவிதைகள் எல்லாமே அத்தனை எளிமையானவை அல்ல;முன்பு மேற்சொன்ன பாவண்ணனின் கவிதையை விடச் சற்று
அதிகமாகச் சிந்திக்க வைக்கும் கவிதை ஒன்றை அடுத்துத் தருகிறேன்,அதை எழுதியவர் விக்கிரமாதித்யன்.

போன வருஷச் சாரலுக்கு குற்றாலம் போய்
கை(ப்) பேனா மறந்து
கால்(ச்) செருப்பு தொலைத்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல் வெள்ளிக் கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியலையே இன்னும்.

'ஆகாசம் நீல நிறம்' என்னும் தொகுப்பில் இருபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்(ஆம்,22 ஆண்டுகளுக்கு முன்தான் !!!!!)இந்த
அபாரமான கவிதை ஏன் இதுவரை கண்ணில் படவில்லை என்று கேட்டு விக்ரமாதித்யன் 'மேலும்' என்னும் பத்திரிகையில் மே 1993
இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.'எனக்கொண்ணும் நஷ்டமில்லை,22 வருஷ இருட்டில் ஒரு தீக்குச்சி பொருத்தி வைத்துப்
பார்க்கிறேன்.எளிமையை ஏற்காத இவர்கள் மனசை லேசாக குத்திக் காட்டுவேன்,அவ்வளவுதான்' என்கிறார்.

இந்த அபாரமான கவிதை கவனிக்கப்படாத்து ஆச்சரியம்தான்.இதற்குப் பரிகாரமாக லட்சக்கணக்கான வாசகர்கள் இதைக் கவனிக்கட்டும்
என்று தீக்குச்சி என்ன,தீப்பந்தமே ஏற்றிக் காண்பிப்பதில் பெருமை அடைகிறேன்.

இந்தக் கவிதையும் புரிவதில் உங்களுக்குச் சிரமம் இருக்காது என்று தோன்றுகிறது.கை(ப்) பேனா,கால்(ச்) செருப்பு ப்பன்னா
ச்சன்னாவை எதற்கு கவிஞர் அடைப்புக் குறிக்குள் போட்டார் என்று கேட்டு உங்களை சங்கடப் படுத்த விரும்பவில்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * *

பதிலாக அதே காலக்கிரமம் இதழில் வெளியான் இரு கவிதைகளைக் கொடுத்து கவிதைகளின் புரிதல் நிலைகளைச் சற்றே கஷ்டப்படுத்த
விரும்புகிறேன்.

பத்தாமடை
சித்ராங்கியே
மூணாம் படை
மூப்பாயியைப்
போய்ப் பார்
முதுகில் கூடையும்
இடுப்பில் குழந்தையும்
கக்கத்தில் ரைஃபிளுமாகக்
காத்திருக்கிறாள்
மணல் தடுப்புகளுக்கு
பின்னால்

குருநாத் கணேசனின் இந்தக் கவிதை புரிந்தும் புரியாமலும் கோடி காட்டுகிறதல்லவா?இதில் சித்ராங்கி யார்,மூப்பாயி யார் என்று
வியப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு வித்ததில் இலைமறை காய் மறைவாகப் புரிவதுடன் சற்று சங்கடப் படுத்துகிறதல்லவா...அது
போதும்.

இப்போது பிரம்மராஜன் கவிதைகளுக்கு நீங்கள் தயாராகலாம்.

திணைப் புறம்பின் விழுப்
புண்கள் தாமே
தேடியதுன்னை
வியர்க்கும் மணல் மேடுகள்
ஊடே ஞானிகப்படுத்தும் தோள்
வலியில் மொக்கு உட்குழிய
மின்சாரம் அலற
நான் முகத்திலொன்று வாட
நீரின் நினைவு நினைக்கும்
நின்பனை நிலம்
சாவில் முளைக்கும்
வாழ்வின் வைரஸ் பூவே
போற்றி!

பாவண்ணனிலிருந்து பிரம்மராஜன் வரை கவிதை வடிவங்கள் எத்தனை விதமானவை என்று மாதிரி காட்டுகிறது.பிரம்மராஜன் கவிதை
புரிகிறது,புரியவில்லை என்ற தளத்தில் இயங்குவதல்ல.இது ஒரு surreal சித்திரம் போல பார்ப்பவனின் மன விகற்பங்களுக்கு ஏற்ப
அதன் புரிதல் ஆளுக்கு ஆள் மாறுபடும்.புரிகிறதா?

* * * * * * * * * * * * * * * * * * * * *

அண்மையில் கோவையில் ஒரு சிறுகதைப் பட்டரையின் போது,'நிகழ்' பத்திரிகையில் மனுஷ்ய புத்திரன் எழுதிய 'கால்களின்
ஆல்பம்' என்கிற கவிதையை வாசித்துக் காட்டிய போது,அது எவ்வளவு தூரம் கேட்டவர்களின் மனசைப் பாதித்தது என்பதை படித்து
முடித்தபின் உணர்ந்தேன்.பலபேர் என்னிடம் வந்து கை குலுக்கினார்கள்.ஒரு பெண்மணி மனுஷ்ய புத்திரனின் விலாசம் கேட்டு
அவருக்குப் பணம் அனுப்ப வேண்டும்,ஏதாவது செய்ய வேண்டும் என்றார்,கண்களில் கண்ணீருடன்.

* * * * * * * * * * * * * * * * * * * * *

மேற் குறிப்பிட்ட ஐந்து பத்திகளும் எழுத்தாளர் அமரர் சுஜாதாவின் கட்டுரைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.இவை 90 களின்
மத்தியில் எழுதப்பட்டவை.ஒரு புகழ் பெற்ற,தின எழுத்துலகின் பெரும் வாசகர் வட்டத்தைப் பெற்ற சூப்பர் ஸ்டார் எழுத்தாளரான
அவர்,நல்ல கவிதைகளையும் கவனிக்கப்பட வேண்டிய திறமையான கவிஞர்களையும்,அவர்கள் அப்போது எந்த வித அடையாளங்களற்று
இருந்தும்,அவர்களை அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தார்.இதை ஒரு கடமையாகவே கருதிச் செயல்பட்டார் என்றும் எனக்குத்
தோன்றுகிறது.

மனுஷ்யபுத்திரன் சுஜாதாவின் மறைவின் போது எழுதிய,அவருக்கும் பின்னவருக்குமான பரிச்சயம் ஏற்பட்ட விதங்களும்,அப்போது அவர்
இருந்த(முன்னவர்) நிலையையும் விவரித்த அந்தப் பத்தியைப் படித்து நெகிழாதவர்கள் குறைவு.

அப்படிபபட்ட நேர்மறை மனிதர் இறந்த போது(ம்),அவரின் சாதிய அடையாளங்கள் குறித்த வசைச் சொற்கள் பரவலாக-குறிப்பாகப்
பதிவுலகில்-எழுந்தன.

விஜய் தொலைக்காட்சியில் இப்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று.அந்த நிகழ்ச்சியும்
விஜய் தொலைக்காட்சி நிறுவன்ம் அதை நடத்தும் விதத்திலும் அபாரமாக ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

இந்த நிகழ்ச்சியில் மூன்று நடுவர்கள்,திரு.உன்னி,திருமதி.சுஜாதா மற்றும் திரு.சீனிவாஸ்.

இதுவரை நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் நல்ல திறனுடன் பாடும் போட்டியாளர்களில் ரவி,ரஞ்சனி,விஜய் மற்றும் அஜீஷ்
ஆகிய நால்வரும்தான் இறுதிக்கு வருவார்கள் என்று நான் கணித்திருந்தேன்.(சூப்பர் சிக்ஸ் வரை).ஆயினும் அது வரை நடந்த
சுற்றுகளிலேயே சீனிவாஸ்,போட்டியாளர் ரவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போலத் தோன்றியது எனக்கு.ஆயினும் இசையில்
எனக்கிருக்கும் எளிய திறமைகளுக்கு விஞ்சிய விதயங்களை நடுவர்கள் கண்டிருக்கலாம் என்ற எண்ணமும் வந்தது.

குரல் பயிற்சியாளர் அனந்த் வந்தபிறகு டார்க் ஹார்ஸாக ரேணு முந்தினார்;பல பாடல்களைக் கலக்கலாகப் பாடினார்.

செமிபைனல் சுற்றுகளின் போது இரு நடுவர்கள் வெளிப்படை மதிப்பீடும் ஒரு நடுவர் மறைமுக மதிப்பீடும் செய்வர் என்று
அறிவிக்கப்பட்டது;அப்போது அது ஏன் என்றும் யோசித்தேன்.(பின்னர்தான் விளங்கியது!).தனித்தனியாக ஒருவரையொருவர்
போட்டியிட்டுப் பாடிய அந்த சுற்றுகளிலும் சீனிவாஸ் போட்டியாளர் ரவிக்கு அதிக மதிப்பெண்களும்,அஜீஷுக்கு குறைவான
மதிப்பெண்களும் கொடுத்தார்-இருவருமே ஒரே அளவில் ரசிக்கும்படி பாடியும்!

இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப சுற்றுகளில் விளையாட்டுப் பையனாகத் தோன்றிய அஜீஷ் செமி சுற்றுகளில் கலக்கினார்;ஒரு பாடல்
கூட சோடை என்று சொல்ல முடியவில்லை;ஆனால் ரவியின் திறனில் குறிப்பிட்டு அவதானிக்கும் படி எந்த முன்னேற்றமும்
காணக்கிடைக்கவில்லை.அவர் ஆரம்பம் முதலே நன்றாகத்தான் பாடிக் கொண்டிருந்தாலும் outstanding என்று சொல்லத்தக்க
விதத்தில் பாடவில்லையெனினும் ரவியைப் பற்றிய சீனிவாஸின் கமெண்டுகள் ஆகா ஒகோ என்ற அளவிலேதான் இருந்தன.

மதிப்பெண் வழங்கும் போது இரண்டு சுற்றுகளில் அஜீஷுக்கு குறைவான அளவில் மதிப்பெண்ணும்,ரவிக்கு அதிக மதிப்பெண்களும்
வழங்கி முதல் மூன்று இடங்களில் ரவியை உறுதி செய்தும்,அஜீஷை வெளித் தள்ளவும் ஏதுவான கேவலமான செயலைச் செய்தார் சீனி.இது மிக வெளிப்படையாகவே தெரிந்தது.

ஆனால் உன்னி,சீனி செய்த அந்தத் தவறைச் சரி செய்தார்,தம் மதிப்பெண்களின் மூலமாக.

அவர் அளித்த மதிப்பெண்கள் பாடியவர்களின் திறனுக்கு அளிக்கப்பட்ட சரியான மதிப்பெண்களாகவே தோன்றியது(அஜீஷுக்கு முதல் இடமும்,ரேணுவுக்கு இரண்டாம்
இடமும்,ரவிக்கு மூன்றாமிடமும் அவர் அளித்த மதிப்பெண்களைச் சேர்த்த பின்னர் கிடைத்தன்).அவரின் மதிப்பெண்களின்
மூலம்,அஜீஷ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.
திறனுக்கேற்ற மதிப்பீடுகளைச் செய்யத் தவறிய சீனியின் அசிங்கமான செயலைப் பார்த்த போது,மாறுபட்டு சுஜாதாவின் கவிதை
அறிமுகங்கள்தான் எனக்குத் தோன்றியது;பல மறைபொருள் சிந்தனைகளும் வந்தன..

பாராட்டும் விதத்தில் நடந்த உன்னி நெஞ்சை நிறைத்தார் !

சுஜாதா,உன்னி போன்ற உயர்ந்த மனிதர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

Saturday, April 11, 2009

100-நூறுகளின் நாயகன் !!!








நூறு என்ற எண்ணுக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் உண்டு.இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று வைணவ சம்பிரதாயத்தில் மட்டுமல்ல மற்றவரும் நூறாண்டு வாழ்க என்றுதான் வாழ்த்துவார்கள்.

தலைவரு ஒருக்கா சொன்னா நூறு தரம்...கேட்டிருக்கிறோம்,ரசித்துக் கூட இருக்கிறோம்.

கிரிக்கெட் விளையாட்டிலும் நூறுகளுக்கு தனியான மதிப்பு உண்டு.
ஒருநாள் போட்டிகளில் தன் வாழ்நாள் முழுதும் அடிக்க முடியாத ஒரு நூறை தன் கடைசிக் காலத்தில் நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் எடுத்ததன் மூலம் ஒரு பெரிய தர்மசங்கடத்தைத் தவிர்த்தார் காவஸ்கர்.இத்தனைக்கும் அப்போதும் பின்னரும் பலகாலம் வரை-நான் சரியென்றால் நம் கதாநாயகன் அந்த சாதனையை முறியடிக்கும் வரைக்கும்-அவர்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக எண்ணிக்கைகளில் நூறுகளை அடித்தவர்.(34)

1989 ல் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் தன் கிரிக்கெட் வாழ்வைத் துவங்கினார் டெண்டுல்கர் என்றழைக்கப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.அப்போது அவருக்குப் பதினாறு வயதுதான்.குழந்தைத் தனம் மாறாத முகம்.உள்ளூர் போட்டிகளிலும் ஒரு சீசனில்தான் விளையாடி இருந்தார்.இருப்பினும் அவரது விளையாட்டுத் திறனும் அப்போதே வியக்க வைத்த அவரது உள்நாட்டுப் போட்டி ரன் விகிதங்களும் உதவ ஸ்ரீகாந்தின் தலைமையிலான இந்திய அணியின் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டார் டெண்டுல்கர்.

முதல் டெஸட் போட்டியில் டெண்டுல்கரின் ரன்கள் 15 மட்டுமே;முதல் ஒருநாள் போட்டியிலோ டக் அவுட்!

பாகிஸ்தானின் வக்கார் யூனிஸும் அந்த தொடரில்தான் அறிமுகமானார்.அவரதும் அகரமதுமான புயல்வேகப் பந்து வீச்சில் பலமுறை உடலில் அடி வாங்கினார் டெண்டுல்கர்.அகரமின் பந்து வீச்சு அவரது மூக்கை உடைத்தது,உண்மையாகவே.ரத்தம் கொட்டிய மூக்குடன் ரிட்டையர் ஹர்ட் ஆகாமல் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்து ஆடினார் டெண்டுல்கர்.

அடுத்து நியூசிலாந்து டூரில் டெஸ்ட் மேட்சில் 88 வரை அடித்தார்.

அடுத்த ஆஸ்திரேலியத் தொடரில்தான் சிட்னி போட்டியில் அழகான 148 ரன்கள் அடித்தார்,அதுவும் unbeaten..அந்த தொடரில்தான் ஷேனும் அறிமுகமானார்..அந்தப் போட்டியில் வர்ணனை நேரத்தில் மெர்வ் ஹெக்ஸ் ஆஸ்திரேலிய கேப்டன் பார்டரிடம் சொன்னாராம்,'this little prick is going to get more runs than you, AB'

எவ்வளவு அழகான தீர்க்க தரிசனம்...இன்று சச்சின் 85 சதங்கள் அடித்து விட்டார்.டெஸ்ட் போட்டிகளில் 42,ஒரு நாள் போட்டிகளில் 43.நூறு நூறுகளுக்கு இன்னும் 15 தான் பாக்கி ! எளிதாக அடித்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன்,பலரும் நம்புகிறார்கள்..

அந்த ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின்னர் வார்னே பல போட்டிகளில் டெண்டுல்கரை எதிர்த்துப் பந்து விசிய மேட்சுகள் எல்லாம் விஷுவல் ட்ரீட் களாக அமைந்தன;பல போட்டிகளில் இந்தியாவுக்கான் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய டெண்டுல்கர் இந்தியாவுக்குக் காப்பாற்றிக் கொடுத்த போட்டிகள் எண்ணிலடங்காதவை.

1994 ல் ஆக்லாந்தின் ஒருநாள் போட்டியில்தான் முதன் முதலில் துவக்க ஆட்டக்காரராக இறங்கினார் டெண்டுல்கர்.இறக்கியவர் அஸாருத்தீன்,அவர்தான் அப்போதைய அணித்தலைவர்.ஒருநாள் போட்டிகளில் அவரது ஆட்டத்துக்கான ஒரு புதிய பரிமாணத்தைத் திறந்து வைத்தது அந்த ஆட்டம்!பின்னர் அணியின் நிரந்தர துவக்க ஆட்டக்காரரானார்,சமீபகாலம் வரை,சுமார் 13 ஆண்டுகளுக்கு.
ஆட்டம் துவக்குவது டெண்டுல்கருக்கு மிக வசதியாகப் போயிற்று;அவர் சொன்னார்,ஆடுவதற்கு நிறைய ஒவர்கள் கிடைக்கிறது,நிறைய ஒவர்கள் இருக்கும் போது,நிறைய ரன்கள் வருகின்றன என்று !கிரிக்கெட்டின் பல ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டு விட்டன 1994 க்குப் பிறகான அந்த 13 ஆண்டுகளில்!


அசாருத்தீன்,கங்கூலி,திராவிட் கேப்டனாக இருந்த காலங்களில் பல குழப்பங்களும் நடந்தன,ஆனால் டெண்டுல்கரின் கிராஃப் எந்த வித பெரும் இடையூறும் இன்றித்தான் இருந்தது.இடையில் சில காலம் கேப்டனாகவும் இருந்தார்,ஆனால் ஒரு கேப்டனாக அவரால் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை.2004 க்குப் பிறகான மூன்றாண்டுகளில் பல காயங்கள்,தோள்பட்டை லிகமண்ட் கிழிந்த நிகழ்வு போன்ற பல குறைகளால் அவதிப்பட்டார்.ரன்களும் குறையத் துவங்கின.

ஆனால் தோனி கேப்டனான பின்னர் அவர் திரும்ப தன்னை புத்தாக்கம் செய்து கொண்டது போலத் தெரிகிறது.சமீப காலத்தில் அவரது ஆட்டத்தில் பழைய நெருப்புப் பொறி பறக்க வில்லையெனினும் பண்பட்ட ஆட்டம் மீண்டும் முகிழ்கிறது.

எல்லாவற்றிற்கும் மத்தியில் டெண்டுல்கரின் குணமும்,ஆட்டக்களத்திலும்,வெளியிலும் அவர் நடந்து கொள்ளும் முறையில்தான் அவரது முழு குணமும் வெளிப்பட்டது.எவருக்கும் எளிதாக அணுகும் வண்ணம் இருப்பது,செய்தியாளருக்கு எப்போதும் அணுக்கத்தில் இருப்பது,ஆட்டக்களத்தில் எவரையும் முறைப்பது,எதிர்ப்பது போன்ற தாதாத் தனங்கள் இல்லாது,தனது பேட் மூலம் மட்டுமே பேசுவது போன்ற அவரது குணங்கள் அவரது புகழை உயர்த்தின.

கெய்க்வாட் பயிற்சியாளராகவும் அஸார் கேப்டனாகவும் இருந்த காலங்களில்,ஒரு மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும்,அஸாரும் கூட அதில் பங்கேற்றிருக்கலாம் என்ற சூழலிலும் டெண்டுல்கரிடம் வந்து கெய்க்வாட் வருந்திய போது,'நாளைய போட்டியை இந்தியாவுக்காக நான் ஜெயித்துக் காட்டுவேன்' என்று உறுதியளித்த டெண்டுல்கர் சொன்னதைச் செய்தார்.இது பின்னர் கெய்க்வாட்டின் பேட்டி ஒன்றில் வெளிவந்தது,அஸார் மீது குற்றச்சாட்டு பதிவான காலங்களில்.இது மற்றும் அவரது தந்தை இறந்த சமயத்தில் உலகக்கோப்பை ஆடிக் கொண்டிருந்த அவர் இந்தியா வந்து இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு மீண்ட அவர் மறுநாள் ஆட்டத்தில்(கென்யா என்று நினைவு) ஆடிய திறனும்,ஹென்றி ஒலங்கோ என்ற கத்துக் குட்டி பௌலர் கேட்ட who is tendulkar என்று கேட்ட கேள்விக்கு,அவரது ஓவரில் அளித்த 33 ரன்கள் பதிலும் மறக்க இயலாதவை!

நியூசியின் செய்தியாளர் ரிச்சர்ட் பூக் ஒரு முறை டெண்டுல்கரின் ஹோட்டல் அறைக்கு எதிர் அறையில் இருக்க நேர்ந்ததை நினைவு கூர்கிறார்.டெண்டுல்கரின் அறைக் கதவு இரவு 12 மணி வரையும் மீண்டும் காலை 7 மணியிலிருந்தும் பல ரசிகர்களாலும் நண்பர்களாலும் தட்டப்பட்டுக் கொண்டே இருந்ததையும்,எவருக்கும் முகம் சுளிக்காது அனைவரையும் அனுமதித்த அவரது பொறுமையையும் சிலாகித்து எழுதுகிறார் ரிச்சர்ட்.

கிரிக்கெட் களத்திற்கு வெளியேயான டெண்டுல்கர் இவ்வளவு அணுக்கமாக இருந்தாலும்,உள்ளார்ந்து அவர் கிரிக்கெட் களத்துக்குள்ளான விருப்ப மனிதர்.

100 நூறுகளை அவர் கடக்கும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை!வரும் உலகக் கோப்பையில் விளையாடும் பட்சத்தில் இப்போது இருக்கும் அணியின் கட்டமைப்பைப் பார்க்கையில் அவரது நிறைவேறாத கனவான உலகக் கோப்பைக் கனவும் நிறைவேறலாம்!

ஒரு கவிஞரின் மகனான இவரது கவிதை மனமும் கூட கிரிக்கெட்டில்தான் காணக்கிடைக்கும்...ஃப்ரண்ட் புட்டில் அவரது கவர் ட்ரைவும்,நேரான் ஸட்ரைட் டிரைவும்,பேக் ஃபுட்டில் அவரது ஸ்கொர் கட்டும் கிரிக்கெட் விளையாட்டு என்பதை விட மட்டையால் அவர் மைதானத்தில் எழுதும் கவிதையைப் போலத்தான் தோன்றும்.கங்கூலியின் ஆஃப் சைட் ஷாட்டுகளையும் கூட இவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்!

கிரிக்கெட் விளையாட்டின் உன்னதங்களில் மேற்கண்ட ஷாட்டுகளை விட அரிதான காட்சிகள் இருக்க முடியாது;அவை நிகழ்ந்து கொண்டிருக்கும் கணங்களைப் பொக்கிஷப் படுத்துவோம்,இப்போதைக்கும் பின்னாளைக்குமான அரிதான கணங்களாய் !!!!

பி.கு: வலது மூலையில் மேலே எதற்கு கோபிகா இருக்கிறார் என்று முழிப்பவர்களுக்கு....சச்சின் என்று கூகிளாண்டவரில் தேடிய போது சச்சின் படத் துவக்க விழாவில் பங்கேற்ற அம்மணியின் படமும் வந்தது...சரி,நல்லாத்தானே இருக்கு அப்படின்னு வச்சுட்டேன்.....ஓ.கே ?!!!!!!

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...