குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, November 16, 2009

110.குறுந்' தொகைகள்-161109

இலங்கையில் இந்த வருட மத்தியில் நடந்த கோர மனித இன அழிப்பு இந்த நூற்றாண்டின் மிகப் கொடூரமான மனித அழிவுகளில் -human genocide-முக்கியமானது என்று சொல்லலாம்.இதன் கதாநாயகர்கள் இலங்கையில் மூவர் என்றால் அதற்கு கதை வசனம் எழுதிய தமிழக வசனகர்த்தாவும் தில்லி இயக்குனர்களும் மலையாள டெக்னீஷியன்களும் பேருதவி புரிந்தார்கள்.

திரை விழுந்து பலகாலம் ஆன இப்போது கதாநாயகர்களுக்குள் லாப நட்டக் கணக்கு பற்றிய சண்டை துவங்கியிருக்கிறது;தமிழர்களுக்கான போரு(அழிப்பு)க்குப் பின்னான நிவாரணங்கள் கிடைக்க வேண்டும் என்று அப்பவே சொன்னேன்'வகையான கதைகள் வெளிவருகின்றன.ஆடு நனைகிறது என்று அழுத ஒநாய்க் கதைகள் நினைவுக்கு வருகிறது.

இன்னும் சிறிது காலத்தில் நடைபெற்ற அவலங்கள் பற்றிய மேலும் பல பகீர்த் தகவல்கள் வரலாம்.

எல்லாவற்றிற்கிடையிலும் நவம்பர் 27 ஏதாவது அற்புதம் கொண்டுவருமா என்று ஏக்கங்கள் பல திசைகளில் நிலவுகின்றன;பல விமர்சனங்கள் இருந்த போதிலும் ஒரு மனிதனின் இருப்பும்-காணப்படா தன்மையும் இலங்கைத் தமிழர்களில் தோற்றுவித்திருக்கும் பெரும் மாறுதல்கள் அவலத்திற்கும் வியப்பிற்கும் உரியன.

பாரா எழுதிய ஒரு கட்டுரையில் போல புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மனிதர் என்ற நிலையிலிருந்து ஒரு தத்துவம் என்ற நிலைக்கு மாறி வெகுகாலம் ஆகிவிட்டது'என்பது முற்றிலும் உண்மை.

**********

டெண்டுல்கரின் கிரிக்கெட் உலகின் 20 ஆண்டுகள் எங்கும் கொண்டாடப்படுகின்றன.டெண்டுல்கரின் சாதனைகளை வேறு எவரும் தொடமுடியாதவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் ஆஸ்த்ரேலியத் தொடர் அவர் நினைத்திருந்தால் வெல்லப்பட்டிருக்கலாம் என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
5ஆவது ஆட்டத்தின் 175 ரன்கள் நிச்சயம் ஒரு ஜெம்'மான ஆட்டம்தான்;சொல்லப்போனால் சச்சினின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அது எளிதில் வரும்.ஆனால் அவரால் அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தர முடியவில்லை.

ஒரு 19 ரன்கள்!!!


போட்டி ஆரம்பத்தில் 17000 ஐத் தொட 7 ரன்கள் எடுக்க அவர் செலுத்திய கவனத்தில் பாதியைப் கடைசி 19 ரன்கள் எடுக்கவும் செலுத்தி இருக்கலாம் !

இது உண்மை,பலர் என்னை விமர்சிக்கத் தயாராக இருந்தாலும் !(எங்கேப்பா புரூனோ?)

**********

ஒரு பயிற்சி சோதிடக் கலையின் பல புத்தகங்களுடன் உருட்டிக் கொண்டிருந்த 8 மாத காலம் முடிவுக்கு வந்திருக்கிறது;இனி அவற்றை விசாரத்துக்கு எடுத்துக் கொள்ள உத்தேசம்.

இதற்காகவே ஒரு வலைமனை எப்போதோ தயாராகி விட்டது;ஆனாலும் அதில் ஆரம்பத்தில் போட்ட ஒன்றிரண்டு பதிவுகளைத் தவிர அதைத் தொடவேயில்லை.இனி அதிலும் பதிவுகள் வரும்.

என்னுடைய இந்த 8 மாத காலத் தேடலில் எனக்கு சோதிடக் கலை புரிந்ததோ இல்லையோ,பளிச்சென்று புரிந்த இன்னொரு விதயம்-தமிழில் சோதிடம் பற்றி முழுதாக அறிய நல்ல,படிப்புச் சுவையுடன் கூடிய அதே சமயம் உள்ளுறையில் சொதப்பாத புத்தகம்,இல்லை என்பது.அல்லது அது என் கண்ணில் படவில்லை!

8 மாதம் சோதிடம் படித்து நீ என்ன கண்டாய் என்ற கேள்விக்குப் பதில்:மனிதர்களைப் பற்றிய என்னுடைய புரிதல்களை அது இன்னும் மேம்படுத்தியிருக்கிறது.தவிர்க்க இயலாத சில நிகழ்வுகளை முன்னுணரலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.என்னுடைய முந்தைய பகுத்தறிவும் சில நுண்கலைகளும் பதிவின் சாரத்தில் நம்பிக்கை கூடியிருக்கிறது-thanks to jolly Jumber & Muthuswami.

:-)

*********

மரபணு மாற்றப்பட்ட தாவர விதைகள் பற்றிய ஒரு பதிவு யாரோ எழுதி இருந்தார்கள்.தமிழகத்தில் குறிப்பாக கிராமப் புறங்களில் இதன் தாக்கம் பெரிதாக உணரப்படுகிறது.

காய்கறி பயிரிடும் கிராமப் பெரியவர்கள் பலருடன் அளவளாவும் போது அவர்கள் சொல்வதைக் கேட்டால் பகீரென்கிறது;சாதாரண வகை விதைகள் அதாவது நாட்டுக்காய்கறிகளின் விதைகள்,இப்போது கிடைப்பதில்லையாம்.விதை சேமிப்பாளர்களும் நாட்டுப் புறங்களில் இல்லை.காரணங்கள் பொருளியல் சார்ந்தவை.

கிராமப் புறங்களில் கிடைக்கும் புது வகை தக்காளி கல் குண்டு போல 20 நாட்களுக்குக் கெடாமல் கிடக்கிறது;அதை சமையலில் பயன்படுத்தும் போது 20 நிமிடம் வதக்கினாலும் தக்காளி வதங்குவதில்லை,தோல்தான் சுருங்குகிறது.உணவின் ருசியிலும் தக்காளியின் சுவை தெரிவதில்லை.ரப்பர் துண்டைக் கடித்தது போலத்தான் இருக்கிறது.

கத்திரியிலோ சமைத்த குழம்பில் உரவாடை மூக்கை அடைக்கிறது.பயிரிடும் பெரியவர்கள் சொல்வது:நாட்டுத் தக்காளி தை,மாசி,பங்குணி,சித்திரை போன்ற நான்கு மாதங்களில்தான் நல்ல மகசூல் தரும்;வருடத்தன் மற்ற நேரங்களில் பயிரிட்டால் 4 காய் காய்க்கும் செடியில் 1 காய்தான் காய்க்கும்.ஆனால் நன்றாக விளையும் அந்த 4 மாதங்களில் தக்காளியின்(கொள்முதல்) விலை கிலோ 2 ரூபாய்தான்;பயிரிட்டும் நஷ்டமடைவதை விட வருட முழுதும் நன்றாக விளைச்சல் தரக் கூடிய ரப்பர் தக்காளி-ஆம்,அப்படித்தான் அழைக்கிறார்கள்-மேல்,பயிரிடுவோர் கண்ணீர் வடிக்காமல் இருப்பார்கள்...

விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகளும் அரசும் விதைகளை மேம்படுத்தும் ஆய்வு மற்றும் விவசாயப் பொருள் சேமிப்பு\பாதுகாப்பில் மேம்பாடு போன்ற நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தாவிட்டால் தக்காளியின் சுவை நம் குழந்தைகளுக்கு மறந்து போகலாம் !

********

உன்னைப் போல் ஒருவன் பார்த்தேன்.முன்னரே வெட்னஸ்டே பார்த்திருக்கிறேன்.

தோன்றிய எண்ணம்:கமலின் அடுத்த சொதப்பல்.கூடவே அவரின் தொலைக்காட்சி நேரலையில் நஸ்ருதீனை எள்ளாமல் எள்ளிப் பேசிய பேச்சு வேறு நினைவில் வந்து எரிச்சல்படுத்தியது.

கமல்,do some thing viewable next time!

Thursday, November 12, 2009

109.கடவுள் இருக்கிறாரா ???!!!!


கடவுள் இருக்கிறாரா?

இந்தக் கேள்விக்கு ஆத்திகர்கள் ஏழையின் சிரிப்பு,குழந்தையின் புன்னகை,காலை மலர்கள்,ஆட்டுக் குட்டி என்றெல்லாம் தேடச் சொல்கிறார்கள்;ஆயினும் இவையெல்லாம் கடவுள் என்று ஒருவர் இருந்து அவரால் விளையும் விளைவுகள் என்றால் இந்த விளைவுகளை ஏற்படுத்தும் காரணகர்த்தாவையும் பார்க்க,ஸ்பரிசிக்க,உணர முடிய வேண்டும்.


அவர் இருக்கிறார் என்று நம்பும்படி வியக்த ரூபமாகத் தோன்றாத வரை அவரை எப்படி , எப்போது நம்புவது?


அறிவியலுக்கு-இயற்கையின்,பிரபஞ்சத்தின் செயல்பாட்டை விளக்குவதற்கு-ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு கடவுள் தேவைப்பட்டால் அந்தக் கடவுளை நம்பலாம்.


அறிவியலுக்கு கடவுள் தேவைதானா?


அறிவியல்,குறிப்பாக இயற்பியல் என்ன சொல்கிறது?இந்தப் பிரபஞ்சம் திடப்பொருள்,சக்தி என இருவகையானது.


திடப்பொருள் என்பது நீங்கள்,நான்,மூக்குக் கண்ணாடி,நாய்க்குட்டி,சூரியன்,சந்திரன்,லல்லு,அப்போலோ விண்கலம்,பான்பராக்,மரக்கட்டை,நாமக்கட்டி இதெல்லாம்தான்.இவைகளை ஆதாரமாகப் பார்த்தால் கார்பன்,பாஸ்பரஸ்,இரும்பு,துத்தநாகம் போன்ற தனிமங்கள்;இன்னும பதம் பிரித்துப் பார்த்தால் ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள்;இந்த ட்ரான்களை இன்னும் நுட்பமாகப் பார்த்தால் க்வார்க்குகளால் அமைந்த ஹேட்ரான்கள்,லெப்டான்கள் என்று வகுத்திருக்கிறார்கள்.


இது திடப்பொருள்.


சக்தி என்பது ஒளிக்கதிர்கள்,எக்ஸ்ரே,உஷ்ணம்,ரேடியோ அலைகள் போன்றவை.இவை நான்கு விதமான ஆதார ஈர்ப்பு விசைகளால் வருவது எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.அணுக்கருவுக்குள் உள்ள வலுவான விசை,அணுக்கருவுக்கு வெளியே உள்ள லேசான ஈர்ப்பு விசை,மின்காந்த விளைவு,புவிஈர்ப்பு என மொத்த சமாச்சாரம் நான்குதான்.


இது சக்தி.


இவை இரண்டையும் ஒருமைப்படுத்தி விளக்கும் முயற்சிகள் ஐன்ஸ்டீனிலிருந்து அனைவராலும் முயற்சிக்கப்பட்டு அண்மையில் சிலர் வெற்றிபெற்று நோபல் பரிசு பெற்றனர்.திடப்பொருள்,சக்தி இரண்டுமே ஒன்றுதான் என்று அறிவியலால் நிரூபிக்க முடிகிறது.அறிவியல் சக்தி,திடப்பொருள் இரண்டையும் ஒருமையாகப் பார்க்கிறது.


இறுதியாக,அறுதியாக அறிவியல் 'பிரபஞ்சத்தின் உண்மை' என்று சொல்வது கீழ்வரும் இரண்டு விஷயங்களைத்தான்.


1.பௌதிக இயற்பியல் விதிகள்.ஆதாரமாக இந்த விதிகளின் படிதான் பிரபஞ்சத்தின் அத்தனை திடப்பொருள்களும் சக்தி வடிவங்களும் இயங்குகின்றன்.இந்த விதிகளை அவர்கள் சில கணித சமன்பாடுகளாக விவரிக்கிறாரகள்.


2.இந்த விதிகள் செயல்படத் துவங்கிய போது இருந்த நிலை ஆரம்ப நிலை-இனிஷியல் கண்டிஷன் என்கிறார்கள்.அதை வர்ணித்து விட்டால் அதற்கு அடுத்த நிலை,அதறகு அடுத்த நிலை,இப்படி இன்றைய தினம் வரை எல்லாவற்றையும் விளக்கி விடலாம்.


இந்த ஆரம்ப நிலையையும் விதிகளையும் உன்னிப்பாகப் பார்க்கும் போது அவைகளில ஒரு தேர்ந்தெடுப்பும் ஒழுங்கும் இருப்பதை குறிப்பிடுகிறார்கள்.எத்தனையோ விதத்தில் பிரபஞ்சம் ஆரம்பிக்கலாம்;எத்தனையோ விதமான உயிர்கள் தோன்றியிருக்கலாம்;ஆனால் குறிப்பட்ட விதத்தில் பிரபஞ்சம் தோன்றி குறிப்பிட்ட விதமான பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றியது வரை தீர்மானித்தது யார் அல்லது எது?


*********


We live in the most propable of all possible worlds என்பது வால்டேரின் வாசகம்.பிரபஞ்சம் ஏன் 'அப்படி' இல்லாமல் 'இப்படி' இருக்கிறது என்பதற்கு இந்த வாசகம் பதில் தருகிறது.இப்படி இல்லையென்றால் இந்தக் கேள்வியே வராது என்பதுதான் பதில்.இது வசீகரமான வாதமாக இருந்தாலும் தப்பானது.


கடவுள் யார் என்பதற்கு முன் நாம் யார் என்று பார்க்கலாம்.நாம் ஒரு சிக்கலான மாலிக்யுலார் கூட்டணி அமைப்பு.நம் இருப்பிடம?சூரியக் குடும்பத்தில் ஒரு அற்பமான கிரகம்.சூரியனே ஒரு சராசரி நட்சத்திரம்தான்.ஸ்பைரல் காலக்ஸியின ஓர ஓரத்தில இருக்கிறது.இவ்வளவு அற்பமான் மனிதனுக்காகத்தான பிரபஞ்சமே உண்டாயிற்று என்ற வாதம் சரியல்ல.நாம உருவாவதற்கு சூரியக் குடும்பமும அருகாமையில் சில நட்சந்திரங்களும் அவைகளின் ஈரப்பும் தேவையாக இருந்திருக்கலாம்.ஆனால் கோடானு கோடி காலக்ஸிகள்,கோடானுகோடி நடசந்திரங்கள நம்மைச் சுற்றிலும் சமச்சீராகப் பரவியிருப்பதை நம்மால் நுட்பமாக அறிவியல் கருவிகளைக் கொண்டு பாரக்க முடிகிறது.அவையெல்லாம் இந்த ஆறடி மனிதன் உண்டாவதற்குத்தான் என்று சொல்வது 'டூ மச்!'


**********


நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் பிரமிப்பூட்டும் ஒரு பாடல்...

ஒன்றும் தேவும உலகும
அன்று நானமுகன தன்னொடு
தேவருலகோடு உயிர் படைத்தான்.


பைபிள் In the beginning was the world என்கிறது.இவைகள் எல்லாம் பிரபஞ்சத்தின் ஆரம்பக் கணத்தை அல்லது சிருஷ்டிக கணத்தைச் சொல்கின்றன.


காலம் என்பது சாசுவதமானதல்ல:பிரபஞ்சம் உண்டான் போதுதான் காலமும் ஜனித்திருக்கிறது என்பதுதான் அறிவியலின் முடிவும்.காலம பிரபஞ்சத்துடன் பதினைந்தாயிரம் கோடி வருடங்களுக்கு முன்னர் பிறந்தது என்று காஸ்மாலஜி என்னும பிரபஞ்சவியல் சொல்கிறது.அப்படி காலத்துக்கு ஒரு ஆரம்பம் இருந்தால் பிரபஞ்சத்திறகு ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும்,யாராவது படைக்க வேண்டும்.அப்படி இருப்பதற்கு அவர் நிலை கொள்வதற்கு காலம் தேவை!அதாவது 'காலம்' இல்லாமல் 'காலத்தைப்' படைக்க முடியாது.


இதுதான் அறிவியலாளர்கள் கடவுளை நம்புவதில் உணரும் சிக்கல் !


*************


பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரவாரமான ஆரம்பம் இருந்திருக்கிறது.ஒரு தீர்மானமில்லாத முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிவியல தெளிவாக நிரூபித்து விட்டது.மனித இனத்தின பல புராதன நமபிக்கைகளில் முக்கியமானவை பிரபஞ்சம் அழிவில்லாத்து,சாசுவதமானது;அதற்குப் பிறப்பும இல்லை,இறப்பும் இல்லை என்பது.இரண்டுமே அறிவியலால் பொய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன.


நம் கணக்கு சமன்பாடுகள்,விணவெளியில் இப்போது மிஞ்சியிருக்கும் அந்த லேசான உஷ்ணம் இவைகளையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது பிரபஞ்சத்தின் அதிர்ச்சிகரமான பிறந்த தேதியின் அத்தாட்சிகள தெரிகின்றன.அந்தக் கணத்தை ஏறபடுத்தியவர் கடவுள் என்றால்,அவர் ஏன் பிரபஞ்சத்தை ஓர் வாணவேடிக்கை போல் பற்ற வைத்து விட்டு அது பாட்டுக்கு இயங்கட்டும் என்று மேட்டினி பார்க்கப் போய் விட்டாரா?


பிரிட்டிஷ் இயற்பியலாளர் ரஸ்ஸல் ஸ்டானார்டு கடவுளை ஒரு புத்தகத்தின் ஆசிரியருடன் ஒப்பிடுகிறார்;புத்தகம் எழுதப்பட்டு விட்டது.காலம் அதன் பக்கங்கள்.நாம் ஒன்றன் பின் ஒன்றாக படித்துக் கொண்டிருக்கிறோம்.படிக்கப் படிக்கத்தான் முழுப்புத்தகமும் தெளிவாகும்-இது ஒரு கருத்து.



***********


இயற்கையின் எல்லா விதிகளையும் கணிதச் சமன்பாடுகளாக நாம் தெரிவிக்க முடிகிறது.e=mc^2 என்பது ஒரு சமன்பாடு.இது ஒரு இயற்பியல் உண்மையின் வடிவம்.கணிதம் துல்லியமான ஒரு இயல்.எந்தவிதமான படிமங்களையும் உண்மை வடிவங்களையும் சாராமல் கணித இயல் தனித்து இயங்க முடியும்.நடைமுறை வாழ்க்கையுடன் எந்தவித தொடரபுமற்ற நூற்றுக் கணக்கான தேற்றங்களும் நிரூபணங்களும் அதில் அமைக்க முடியும்.


கிரேக்கர்கள் மற்றும் புராதண இந்திய வானியலாளர்கள் காலத்திலிருந்து எண்கணிதம் மனிதனை வசீகரித்து வந்திருக்கிறது.எண்களுக்கும் கடவுள் தன்மைக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக எல்லா மத நம்பிக்கைகளும் இருக்கின்றன்.பிதகோரஸ்,அரிஸ்டாட்டில் போன்றவர்கள எண்களில்தான் கடவுளே இருப்பதாக நம்பினார்கள்.


எண்களுக்கு சில விநோத குணங்கள் இருக்கின்றன.உதாரணமாக 28 என்கிற எண் அதை வகுக்கும் எண்களான 14,7,4,2,1 இவைகளின் கூட்டுத்தொகை.அது போல 6.இவ்வகை எண்கள் ஆதர்ச எண்கள்-Perfect numbers- என்றழைக்கப்படுகின்றன;இவ்வகை எண்களுக்குக் கடவுள்தன்மை இருப்பதாக எண்ணினார்கள்.கெப்ளர் கடவுளை ஒரு ஜியோமெட்ரி நிபுணர் என்று கூறினார்.புராதன நம்பிக்கைகள் பலவற்றில் 1 என்ற எண்ணுக்குத் தனியான முக்கியத்துவம் இருந்தது.புனித அகஸ்டைன் பைபிளில் எண்களின் பங்கை விரிவாக அலசியிருக்கிறார்.எண்களுக்கு மனித மனத்திற்கு அப்பாற்பட்ட குணங்கள் ஏற்கனவே இருக்கிறதா என்று யோசித்தார்கள்.


காட்டாக 1,8,27 என்பவை முறையே 1,2,3 ன் கணப் பெருக்ங்கள்.இவைகளைக் கூட்டினால்(1+8+27=36) வரும் 36 ன் வர்க்கமூலம் 6.அது 1+2+3 எண்களின் கூட்டுத்தொகை!


இந்த எண்களின் விநோத குணம் நாம் இதை கண்டுபிடிப்பதற்கு முன்னரும் இருந்ததா?இருந்தால் எங்கே,எந்த மனத்தில் இருந்தது போன்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன.மார்ட்டின் கார்ட்னரும் இதை ஆமோதிக்கிறார்."கணித உண்மைகள் முன்பே இருந்தன, எவரெஸ்ட் மலை போல.நாம் அவைகளை மெல்ல அறிந்து கொண்டு இருக்கிறோம்".


இவைகள் ஒருவேளை கடவுளின் செயல்களோ அல்லது இவைகள்தான் கடவுளோ என்று தோன்றுகிறது அவர்களுக்கு.ரூடி ரக்கர் என்பவர் "மனவெளி(Mindscape) என்று ஒன்று இருக்கிறது.அங்கே கணித உண்மைகள் வசிக்கின்றன.அவைகளை நாம் ஒவ்வொன்றாக கண்டறிகிறோம்"என்கிறார்.


சிலசமயம் இம்மாதிரியான உண்மைகளின் தரிசனங்கள் சற்றும் எதிர்பாராமல் நிகழ்கின்றன.இதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.ஸ்ரீனிவாச ராமானுஜன் சில கணக்குகளுக்கு விடைகள் கனவில் கிடைத்ததாகச் சொல்கிறார்.ஒரு உன்னத உதாரணமான அவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து கணிதவியலை சம்பிரதாயமாக கற்றுக் கொள்ளாமல் சுயமாகப் படித்துத் தெரிந்து கொண்டு மேற்கத்திய அணுகலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் கணிதத்தை அணுகி பல தேற்றங்களை நிரூபணம இல்லாமலேயே குறிப்பெழுதி வைத்தார்.அவைகளை தற்செயலாக அறியவந்த ஹார்டி "என் வாழ்நாளில் இது மாதிரியான தேற்றங்களை இதுவரை பார்த்ததில்லை.ஒருமுறை பார்த்தாலே அவை கணிதமேதையால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது" என்றார்.


ராமானுஜன் 33 வயதில் இறந்து விட்டார்.இதுவரை ராமானுஜனுக்கு எப்படி அந்த சக்தி வந்தது என்பதற்கு விளக்கமில்லை.அவருடைய மூளையிலிருந்து அவை ஒரு நதிப்பிரவாகம் போல வெளிப்பட்டிருக்கின்றன.ராமானுஜனுக்கு மனவெளியுடன் தொடர்பு இருந்ததா?இதுபோல பெங்களூர் சகுந்தலா தேவி.இவர்கள் எல்லாம் மனவெளியுடன் நேரடித் தொடர்பு கொள்கிறார்களா?இந்த மனவெளிதான் கடவுளா?


***********



ஒரு அற்புதமான தமிழ் எழுத்தாளர் இப்போது இல்லை என்பதே வருத்தத்துடன் நினைத்துப் பார்க்க வைத்தது அந்தப் புத்தகம்.அவரின் பெரும்பாலான-கிட்டத்திட்ட அனைத்து- கட்டுரைகள்,புத்தகங்களைப் படித்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இந்தப் புத்தகம் ஒரு ஆச்சரியம்.


கடவுள் இருக்கிறாரா என்ற தலைப்பிலேயே அமைந்த இந்தப் புத்தகம் நல்ல வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு தவிர்க்க இயலாத பரிந்துரை.



புத்தகம் : கடவுள் இருக்கிறாரா ?
ஆசிரியர் : அமரர் சுஜாதா

Monday, November 2, 2009

108.குறுந்'தொகைகள்-1109

ஆண்கள் வெளியே சென்று விட்டு வந்தால் சுகமாகச் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறார்கள்;பெண்கள் அவர்களைக் கவனித்து,பருக ஏதாவது கொடுத்து ஆசுவாசப்படுத்திய பின்னர்தான் சகஜமாகப் பேச ஆரம்பிப்பார்கள்.


வீட்டில் இருக்கும் பெண்களோ கணவர் வந்தவுடன் சொல்ல ஆயிரம் விதயம் வைத்திருப்பார்கள்;வந்து நுழைந்த மாத்திரத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாயிருப்பார்கள்.ஆனால் ஆண்கள் காது கொடுத்தால்தானே? மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது முட்டாள் பெட்டியைத் தட்டி விட்டு அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்;இன்னும் சில வீடுகளில் இவற்றைப் பொருட்படுத்தாமல் கணவனிடம் பேச\பகிர்ந்து கொள்ளது துவங்கும்போது செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.


இந்த ஆண்\பெண்களுக்கிடையான இடைவெளியை அதிகப் படுத்தும் முக்கியக் காரணமாகக் கூட பார்க்கப் படுகிறது.சில பெண்கள் என்ன மனுசன் இவன்? என்று சலித்துக் கொள்வதும் நடக்கும்.ஆண்களின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக் காட்டி ஆண்களே பகிரத் தெரியாதவர்கள் என்ற பொதுமைப் படுத்திய நிந்தனையும் இதனால் எழுகிறது.

இதில் எது சரி? ஆண்களின் மேல் எழும் நிந்தனையா அல்லது ஆண்களின் குணமா?

குணாதிசயங்கள் சார்ந்த-behavioral science ஆய்வின் பின்னணி ஒரு சுவையான கோண்த்தை முன்வைக்கிறது.


ஆணின் இந்த குணம் மனித இனத்தின் ஜீன்களில் பொதிந்திருக்கும் செய்தித் தன்மையினால் வருகிறது என்கிறது அப்பார்வை.கற்காலத்தில் குடும்பத்திற்கான வேட்டை உணவைத் தேடி வெளியேறும் ஆண் உயிரி காடு மேடுகளில்,மழை வெயிலில் நனைந்து காய்ந்துதான் தன் உணவைப் பெற வேண்டியிருந்தது;போதுமான உணவு கிடைக்க வில்லையெனில் ஒவர்டைம் செய்தாவது வேட்டையை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.


அடுத்தது வேட்டையைச் சுமந்து தன் இருப்பிடத்திற்கு,பெரும்பாலும் குகைக்குத் திரும்பும் கடமை.இந்த குகைக்குத் திரும்பும் நேரம் பெரும்பாலும் அடர் குளிர் சூழலாயிருக்கும்-கற்காலத்தின் தட்ப வெப்ப நிலையைக் கருதும் போது!


திரும்பும் ஆண் இனம் முதலில் செய்வது நெருப்பை மூட்டி களைப்பும் குளிரும் போக சிறிது நேரம் நெருப்பின் அருகில் உட்கார்ந்து குளிர் காய்வதுதான்.அதற்குப் பிறகுதான் எல்லாமே.

மனிதனின் இந்தக் கற்கால குணம் ஜீன்களில் பதிந்து போயிருப்பதால் தான் இன்றளவிலும் ஏதாவதொன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்காரும் குணம் ஆண்களிடம் இருக்கிறது என்கிறது அந்த ஆய்வுப் பார்வை.


என்ன,நெருப்புக்குப் பதில் முட்டாள் பெட்டி,அவ்வளவுதான் வேறுபாடு.

பெண்களும் தானே வேலைக்குப் போகிறார்கள்?அவர்கள் ஏன் அப்படி வீட்டுக்குள் வந்தவுடன் உட்கார்வதில்லை என்ற கேள்வி எழுகிறதுதானே?

யாராவது பின்னூட்டுவார்கள்,பார்க்கலாம்!


()


பழனி,சபரிமலை போன்ற திருத்தலங்களுக்கு நடந்து போகின்ற பக்தர்கள் பலர்.அதுவும் தை மாத காலத்தில் பழனியை நோக்கிச் செல்லும் எல்லாச் சாலைகளிலும் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது உண்டு;அந்த அளவிற்குப் பலர் நடைப் பயணம் போவார்கள்.

எனக்குத் தெரிந்த மலேசிய நண்பர் ஒருவர் இந்த நடைப் பயணம் போவதற்காகவே விடுப்பு எடுத்துக் கொண்டு இந்தியா செல்வார்.


எனக்கு இந்த வகையான கடின சித்த பக்தி வழிகளில் உடன்பாடு இல்லையாயினும் அவ்வாறு செல்பவர்களின் உணர்வை மதிக்க வேண்டும் என்று தோன்றுவதுண்டு;தேர்ந்த வாசிப்பும் சிந்தனையும் கொண்ட சிலர் கூட இவ்வாறு நடைப் பயணம் போவார்கள்;அவர்களைக் கேட்டார் அதற்கு ஆரோக்கியப் பார்வையில் பதிலளிப்பார்கள்.


இதில் இன்னொரு விதயத்தையும் நான் அவதானித்து நான் வியந்திருக்கிறேன்.இந்துக்கள் மட்டுமின்றி முகமதியர்களும் கூட உடலை வருத்தி உபவாசம் இருக்கும் காலம் இந்த மார்கழி,தை மாத காலமே.ஆண்டின் இந்த காலகட்டத்தில் ஆன்மிகத்தில் கூட எல்லா மதத்தினரும் தேர்ந்து உடலை வருத்திப் பண்படுத்த விழைவதற்கும் ஏதாவது ஜெனிட்டிகல் காரணங்கள் இருக்கக் கூடும் !


யாராவது ஆய்வு நண்பர்கள் இதை விளக்கலாம்!


()


மேற்கண்ட நடையர்களில் பலர் சோர்வை உணராமல் இருக்க பாடிக் கொண்டே செல்வதுண்டு;இதற்காகவே பாதயாத்திரை சிறப்பு ஒலித்தட்டுகள் சென்ற பத்தாண்டுகளில் ஏராளமாக வந்திருக்கின்றன.


இதற்கான வித்து சமீப நூற்றாண்டில் காவடிச் சிந்து வடிவப் பாடல்களால் ஊன்றப்பட்டது.அதிலும் பாடல்களின் எளிமை,பொருண்மை,சந்த நயம் பொருந்திய ஏராளமான பாடல்களை தமிழுக்கு அளித்தவர்களில் சமீப காலத்திய அண்ணாமலை ரெட்டியார் குறிப்பிடத்தக்கவர்.


இவரது பாடல்களை சந்தத்தில் பாடக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்;அம்மாவின் குரலில் பல சிந்துப் பாடல்களை அனுபவித்துக் கேட்ட நினைவு இப்போதும் நிழ்லாடுகிறது;அப்போதெல்லாம் அதை மின்வடிவத்தில் சேகரிக்கும் எண்ணம் தோன்றியதில்லை,இப்போது மிகவும் தோன்றுகிறது...ஆனால் வருடத்தில் அம்மாவைச் சந்திக்கும் நாட்கள் அருகிக் கொண்டிருக்கும் காலம் இது..

எனக்குக் கிடைத்த ரெட்டியாரின் பாடல்களில் ஒன்றின் இசைவடிவம் பின்வரும் ஒலிக் கீற்றில்..கேட்டுப் பாருங்கள்..


நானே ஒரு ஒலிக்கீற்றை பதிவு செய்து வலையேற்றலாம் என்று நினைத்திருந்தேன்...பிழைத்தீர்கள் !



உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...