குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, April 30, 2012

140-காமம்-நித்தியம்-அவலம் !!

இந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது.

அத்தி பூத்தாற்போல் எப்போதாவது அரசு நல்ல ஒரு முடிவை எடுக்கும் தருணங்கள் வரும்;இது அது போன்ற ஒன்று.ஆனால் இதற்கும் ஒரு எதிர்ப்பு வருகிறது.அதாவது இது குழந்தைகள் உரிமையைக் கெடுப்பதாகக் கூறி ஒரு கூட்டம் இதை எதிர்ப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறார்களுக்கு காமம் பற்றிய கல்வி இருக்க வேண்டும் என்று பரவலாகப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காமம் பற்றிய கல்விக்குப் பதிலாக உடற்கூறு பற்றிய கல்விதான் அவசியம் என்பது எனது புரிதல்.இது பற்றி விளக்கமாக ஏற்கனவே நான் இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன்.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பது சொல்லாடல் மட்டுமல்ல;அனுபவமும் உண்மையும் கூட.டீன் ஏஜ் எனப்படும பதின்ம வயதுகளில் ஏற்படும் உடற்கூறு மாற்றங்களைப் பற்றிய சரியான அறிவுதான் சிறார்களுக்குத் தேவையே தவிர காமம் பற்றிய அறிவியல்|கலை அறிவு தேவையல்ல;அதெல்லாம் இல்லாமலேயே உடலியல் மாற்றங்களால் காமம் தொடர்பான எந்த விதயத்தையும் தீப்பற்றியது போலப் பற்றிக் கொள்ளும் பருவம்,பதின்ம வயதுகளின் பருவம்.

இந்த நேரங்களில் கிடைத்த எந்த வாய்ப்பிலும் காமம் பற்றிய பரிசோதனைகளில் ஈடுபட உடலும் மனமும் துடிக்கின்ற பருவம் இது;இந்த நேரங்களில் சரியான உடலியல் கல்வியோடு,காமத்திலிருந்து விலகி இருப்பதே நல்ல மன,உடல் வளத்திற்கும்,நலத்திற்கும் சரியானது.

திருமணத்திற்கான முன்பான காமம் ஒத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று என்ற ஜல்லியடிகள் பெருத்துப் போனதும்,அதற்கான விளைவுகளைப் பெண்கள் மட்டும் சுமக்கும் அவலங்களும்தான் நடக்கிறது.


முற்போக்கானவை என்றும் காமம் பற்றிய கல்வி அவசியம் என்றும் கூவிய எல்லா நாடுகளிலும் இன்று குழந்தைத் தாய்கள் அதிகமானதும் மன முதிர்ச்சி அடைவதற்கு முன்னால் காமமும்,குழந்தைகளும் பெற்று அதோடு விவாகரத்துகளும் பெற்று வாழ்க்கை வெம்பிய சூழலில் வாழும் வாழ்க்கைதான் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிகிறது.

எனவேதான் பல வாழ்வு நலன் சிறக்க வழிசொல்லும் பல புத்தகங்களும் ஆக்கங்களும் நமக்கு ஓயாது சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் மேற்கண்ட சட்டத் திருத்தம் மிகத் தேவையானதும் பாராட்ட வேண்டியதுமான ஒன்று.இதை எதிர்ப்பவர்கள் குழந்தை நலன் தொடர்பான குழு என்று டைம்ஸ் செய்திப் பத்திரிக்கையில் தெரிகிறது;முட்டாள்கள் !!

சிங்கப்பூரின் அரசாண்மை பற்றிய எனக்கு மிகுந்த ஆர்வமும்  நுண்பார்வையும் உண்டு;காரணம் சிங்கப்பூரை மறு நிர்மாணம் செய்ய சீனியர் லீ 1950 களின் இறுதியில் முடிவெடுத்த போது,எந்த ஒரு துறையிலும் உலகின் எந்த நாட்டில் அத்துறை மிகச் சிறப்பாக விளங்குகிறதோ அதை மாதிரியாக எடுத்துக் கொண்டு சிங்கப்பூரின் சூழலுக்குத் தகுந்தவாறு அந்த மாதிரியை மாற்றிச் செயல் படுத்தியதாக அவர் எழுதியிருக்கிறார்.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட,முன்னேறிய நாடாக அறியப்படும் சிங்கப்பூரிலும் சில கொள்கைகள் இறுக்கமான சட்டங்களுடன் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.அவற்றில் முக்கியமானவை சட்டரீதியான காமத்திற்கு அனுமதிக்கப் பட்ட வயது 18,மற்றும் குற்றவியலில் சில பெருந்தீங்கான செயல்களுக்கு மரண தண்டனை போன்றவை முக்கியமானவை.சிங்கப்பூருக்கு வரும் பலரும்,'ஆகா,இந்த நாடு அற்புதமாகத் திகழ்கிறது' என்று வியப்பதற்கான கட்டுமானம் இது போன்ற சரியான அரசாண்மையிலும்,தயவு தாட்சன்யமின்றி கடைப்படிக்கப் படும் சட்ட விதிமுறைகளாலும்தான் சாத்தியம் என்பதும் பலர் கண்களுக்குத் தெரிவதில்லை.

இங்கு 18 வயதுக்குட்பட்ட பெண் ஒத்துக் கொண்டு எவருடனாவது உடலுறவு கொண்டால் கூட,சம்பத்தப் பட்ட ஆண்தான் குற்றச் செயல் புரிந்தவராகக் கருதப் பட்டு தண்டிக்கப் படுவார்.இதுவே சரியான பார்வை.

இப்போது ஒரு மாதத்திற்கு முன்னால் கூட சிங்கப்பூரின் புகழ்பெற்ற கட்டுமானத் துறை தொழில் விற்பன்னரின் குடும்பத்தின் வாரிசான ஒரு தொழிலதிபர் இவ்வாறு சிறார்களுடனான காமக் குற்றச் செயலில் பிடிபட்டு வழக்கிற்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்.

இந்தியாவில் இவ்வளவு சமூக ஒழுங்கெல்லாம் எதிர்பார்ப்பது துர்பலம்;ஆனால் பதின்ம வயதுக் காமம் தொடர்பில் சமூக ஒழுங்கு பற்றிய ஆக்கப் பூர்வ சிந்தனையில் முதல் படி இந்த வயது வரம்பு உயர்த்திய செயல்.

அதையும் சீரழிக்க ஒரு கூட்டம் கிளம்புகிறது..எப்படி உருப்படுவோம்?!

()

மதுரை ஆதீனத்திற்கு ரஞ்சிதா புகழ் நித்தியானந்தர் குருவாக நியமிக்கப் பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தச் செய்தி உண்மையெனில்,இது ஆத்திகர்களுக்கும் சைவ சமய அமைப்புகளில் பற்றுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒரு அவலமான செய்தி.

ஏற்கனவே இருந்த மதுரை ஆதீனத்தின் குருவே ஒரு காமெடிப் பேர்வழி,அந்தக் காமெடிப் பேர்வழி எதற்கு மயங்கி இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது இன்னும் சிறிது காலத்திற்குள் வெளிவரும்.

ஆனால் அதற்குள் சமய,இறைநெறியில் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருக்கும் பலருக்கும் இந்த நியமனம் செருப்படி போல் விழுந்திருக்கிறது..

ஒரு மிகத் தவறான முன்னுதாரமான இதனால் ஏற்படப் போகும் பல விபரீதங்கள் இப்போது எனக்குத் தெரிகின்றன.

நாசமடையும் காலத்தில் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்ற சொல்லாடலுக்கு தற்போதைய மதுரை ஆதீனம் பிரமாண்டமான உதாரணம்.

()

அபிஷேக் மனு சிங்வி பற்றிய ஒளிக் காட்சித் துண்டும் அதைப் பற்றிய செய்திகளும் அனைவரும் அறிந்தவைதான்.

ஒரு பெண் வழக்கறிஞர் நீதிபதி பதவி பெறுவதற்காக தன்னை ஒப்புதவித்த காட்சிகள்தான் அவை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதி பதவிக்கு நியமிக்கப் படுபவர்களின் பின்னணியும் அவர்கள் தகுதிக்காக மட்டும்தான் அவர்கள் பதவி உயர்த்தப் படுகிறார்களா என்பன போன்ற விதயங்களில் முக்கியத்துவம் பெற வேண்டிய இந்த விவகாரம் முறைதவறிய காமத்திற்காக மட்டுமே முக்கியத்துவம் பெறுவது வருந்தத் தக்கது.

சந்துரு போன்ற மிகத் திறமையும் நேர்மையும் மிக்க வழக்கறிஞர்கள் கூட பெரிய மனிதர்களின் பரிந்துரை இருந்தால்தான் நீதிபதியாக முடிகிறது என்ற செய்தி நண்பர் பிரபு ராஜதுரை வாக்கில் பத்ரியின் பதிவில் தெரிகிறது.

நாடு அவலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான நிச்சய நிகழ்வுகள் இந்த சிடி விவகாரமும் அதன் பின்னணி நிகழ்வுகளும் !!

()


சுப்ரமணியம் சுவாமிக்கு எவ்வி தொடர்புகள் மூலம் செய்திகள் கிடைக்கிறது என்பது இந்திய அரசியல் சூழலில் வியப்பூட்டும் ஒரு விதயம்.

2ஜி பூதத்தை முதலில் கட்டவிழ்த்தது அவர்தான். இப்போது சிதம்பரத்தின் மகன் நடத்தும் நிறுவனத்திற்கும் 2ஜி யில் நடந்த பண,பங்குப் பரிவர்த்தனைகளுக்கும் உள் தொடர்பு இருக்கிறது என்று வழக்குத் தொடர்ந்திருக்கிறார்..

2ஜி வழக்கு வந்த சமயத்திலேயே திருவாளர் ப திருநள்ளாறுக் கோவிலுக்கெல்லாம் படையெடுத்தது நினைவிருக்கலாம்.. !!

:)





தினமணி மதிக்கு நன்றியுடன்..


Friday, April 27, 2012

139.குறுந்'தொகைகள்-27.04.2012


இன்றைய செய்திகளின் படி சச்சின் தெந்துல்கர் மற்றும் ரேகா போன்றோர் மாநிலங்களவையின் உறுப்பினர்களாக நியமிக்கப் படுவார்கள் என்று தெரிகிறது.

இது நியமன உறுப்பினர் பதவி.சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வரும் வழி கூட அல்லாது,மாநிலங்களில் வாரியத்தலைவர்கள் நியமிக்கப்படுவது போல குடியரசுத்தலைவர் நியமனத்தின் படி அமைவது.

மாநிலங்கள் அவையின் நோக்கம்,மக்களவையின் விவாதங்கள் அரசியல் கட்சிகளின் வழிகாட்டுதல் படி மட்டுமே நடக்கும் நேரங்களில்,அறிஞர் குழு ஒன்று அதற்கு மாற்றாக மக்கள் மற்றும் தேச நலன்கருதிச் செயல்பட வேண்டிய தேவை இருக்கும் என்று அரசியல் சட்ட அமைப்பாளர்கள் கருதியதால் நிறுவப் பட்டது.

அது இன்று பல கேலிக் கூத்தான நியமனங்களுக்குப் பயன்படுவது நகைப்புக்கிடமானது.

தெந்துல்கர்,ரேகா போன்றவர்கள் தமது சொந்தத் திறமைகளைப் பயன்படுத்தி அந்தத் துறைகளில் மேல்நிலைக்கு வந்தவர்கள்;அவர்களால் தேச முன்னேற்றதிற்கோ,மக்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கோ ஒரு சிறிதும் பயன்பாடு இல்லை.அவர்களைப் பாராட்டலாம்,வாழ்த்தலாம்,பரிசளிக்கலாம்,பணம் அளிக்கலாம்..

பல திரைப் பதுமைகளை மாநிலங்களைவைக்கு முற்காலத்தில் தேர்ந்தெடுத்தார்கள்;அவர்கள் அவை நடவடிக்கைகளில் என்ன சாதித்தார்கள்,என்ன பங்களித்தார்கள் என்பதை யாராவது தொகுத்தளித்தால் நல்லது.

இப்போது விளையாட்டுத் துறையிலும் இது துவங்கியிருக்கிறது.

தெந்துல்கர் என்னும் மனிதர்,விளையாட்டுத் துறையின் ஐகன் என்ற வகைகளில் அவர் நியமனம் சரியானதாக இருக்கலாம்;அவர் அவைக்கு உறுப்பினர் என்ற வகையில் என்ன நியாயம் செய்வார் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும் என்று சாரு ஷர்மா சரியாகவே சொன்னார்.

இந்த நியமனம்...சாரி,கொஞ்சம் ஓவர்!

()

ஸ்வீடன் நாட்டின் காவல் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற திரு.லின்ட்ஸ்ராமின் பேட்டிப் புத்தகம் இப்போது வெளிவந்திருக்கிறது.





போஃபர்ஸ் பீரங்கி வர்த்தகத்தில் என்ன நடந்தது என்பதை வெளிக் கொண்டு வந்தது அவரது மனசாட்சி உறுத்தியதால் மட்டுமே;இந்து பத்திரிக்கையின் சித்ராவும் ராமும் அதைக் கையில் வைத்துக் கொண்டு கிட்டத்திட்ட இரண்டு ஆண்டு இந்து பத்திரிகையின் விற்பனையை ஒப்பேற்றினார்கள்.

சித்ரா ஏதோ தானே புலன் விசாரணை செய்து கண்டு பிடித்தது போல பல பில்ட்அப் செய்திகள் கொடுத்தார்;ஆனால் உண்மையில் திரு லின்ட்ஸ்ராம் தானே வலியப் போய் சித்ராவிடம் வேண்டிய ஆவணங்களை அளித்திருக்கிறார்,எப்படியாவது இந்த ஊழலின் செய்தி வெளிவர வேண்டும் என்று கருதியதால் !

அப்படி இருந்தும்,நமது அரசுகளும் சிபிஐயும் 20 ஆண்டுகளாக 250 கோடி ரூபாயைப் பொசுக்கி விட்டு ஸ்வீடன் அரசும் அமைப்புகளும் வலிய வந்து தந்த செய்திகளை அரைக்கண் மூடி,பார்க்காமல் இருந்து விட்டு அந்த வழக்கில் ஒன்றும் பிடுக்க வில்லை.ஆனால் இப்போது தெளிவாக அறிக்கையில் க்வாட்ரோச்சிதான் இடைத்தரகின் பலனாளர் என்றும் அவரைக் காப்பாற்றவும்,இந்திய சட்டத்தின் கரங்களிலிருந்து அவர் தப்பிக்கவும் ராஜீவும் சோனியாவும் எல்லா சாத்தியங்களையும் மீறி உதவினார்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

ஆனால் நாமெல்லாம் எருமைத்தோலர்கள்..எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்;இரண்டு லட்சம் கோடி ஊழல்களையெல்லாம் வெற்றிகரமாக சீரணித்து சிவநிலையில் ஆழ்த்திருக்கிறோம்;பிசாத்து 64 கோடி ஊழல்,டிப்ஸ் கொடுத்த மாதிரி நினைத்து மறந்து விட்டிருக்கிறோம்..

ஆனால் ஒன்று,64 நடக்கும் போதே நிறுத்தி ஆப்படித்திருந்தால்,2 லட்சம் கோடியைப் பாராமல் தப்பித்திருந்திருப்போம்!

விதி வலியது!

()

ஆசிய நாடுகளில் குறிப்பாக நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் சூரிய ஒளியை மின் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் உத்திகள் நன்றாக உதவக் கூடியவை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெக்ட்ரா காற்றாலை நிறுவன ஆசியத் தலைவரை சந்திக்க நேர்ந்த போது அவர் மாற்று மின்சக்திக்கான வாய்ப்புகள் தொழில் அளவில் ஆசியக் கேந்திரத்தில் பிரமாதமாக இருக்கும் என்று அவரது நிறுவனம் நம்புவதாக முன்னுரைத்தார்.

இந்தியாவில் குஜராத் மாநிலம் அதைப் பெருமளவு சாதித்துக் காட்டியிருக்கிறது;இன்னும் தன்னிறைவுக்கும் உபரியான மின்சக்திக்கும் நர்மதை நதிக் கால்வாய்களில் நீர் மட்டத்திற்கு மேல் சூரிய ஒளி மின்சக்தித் தயாரிப்புத்  தகடுகளைப் பதிக்கும் பணி நடைபெறுவதாகவும் இயலுமானால் நர்மதை நதிப் படுகையின் மேலும் இதைப் பரிசீலித்துப் பார்க்கலாம் என்றும் மோடி விரும்புவதாகச் செய்திகள் வருகின்றன.

எல்லாவித குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் செயல்படும் ஒரு முதல்வராகவும், புதிய பாதைகளை வகுப்பவராகவும் மோடி தெரிகிறார். தமது சூழலுக்கேற்ற வகையில் புதிய திசைகளில் சிந்திப்பவர்கள்தான் எப்போதும் சாதனையாளர்களாக மாறுகிறார்கள் !

பொதுவாக எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்தி செய்யும் ஒரு அரசியல் தலைவர் எங்கும் சாத்தியமில்லை;சிங்கப்பூரின் லீ சீனியரை உள்நாட்டில் திட்டும் பல சிங்கப்பூரர்கள் ஏதாவது ஒரு வேறு ஆசிய நாட்டில் ஒரு வருடம் வசிக்க நேர்ந்தால் திரும்ப வந்து லீ'யின் காலைத் தொட்டுக் கும்பிடுவார்கள் என்பது நிச்சயம் !


மோடி பிரதமாரானால் இந்திய அரசியலிலும் அரசாண்மையிலும் நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.

இந்திய அரசியலில் வாராது வந்த மாமணி !

()

பதிவுலகில் ஒரு போக்கை சமீப காலமாக அவதானிக்கிறேன்.

எழுதுபவர் பெண்ணாகவோ அல்லது பெண் பெயரிலோ எழுதினால் ஆகா,பிரமாதம்,பேஷ் பேஷ் என்று  வரிசையில் வந்து சொல்வதற்கு ஒரு கூட்டத்தினர் காத்திருப்பது போல் தோன்றுகிறது.

பதிவுலகில் பல அனுபவங்கள் இருந்த போதிலும் கீதா சாம்பசிவம்,காயத்ரி சித்தார்த்,மதுமிதா,செல்வநாயகி,மங்கை,துளசி கோபால்,தமிழ்நதி போன்ற பெண் பதிவர்கள் காத்திரமாகவும்,கருத்துடனும் எழுதிக் கொண்டிப்பதைப் பார்க்கிறேன்.

அவர்களுடைய பதிவுகளில் அச்சுப் பிச்சென்ற பின்னூட்டங்கள் இருக்காது.ஆனால் சில சமீபத்திய பெண் பெயரில் தோன்றும் பதிவுகளில் இவ்வித விசில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது.

இது தோற்றப் பிழையா என்று தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.



()



இந்த குறுந்தொகைக்கான நகைச்சுவை ! சிறிது அவலச் சுவை சார்ந்திருந்தால் மன்னிக்கவும் !

:))

மேற்கண்ட பதிவிற்காக பதிவர் காவிரி மைந்தனுக்கும், படங்களுக்காக தினமலர்,என்டிடிவி'க்கு நன்றியுடன்

()

ஒரு பிற்சேர்க்கை..இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த தினமணி மதியின் தெந்துல்கர் நியமனம் தொடர்பான கார்ட்டூன் சொல்ல வேண்டியதை நச்சென்று இதை விட சொல்ல முடியாது.

பத்ரிக்கு சிறப்புப் பார்வை !
:))

Wednesday, April 18, 2012

138.ஒரு தற்கொலை,ஒரு தேர்வு-பல கேள்விகள் !!!




இன்றைய தினசரிகளில் இரு செய்திகள்.

-அண்ணா பல்கலை மாணவி தற்கொலை-காரணம் ஆங்கிலத்தில் பேச அல்லது எழுத வரவில்லை என்பதும்,கல்லூரிப் பருவத் தேர்வுகளில்-செமஸ்டர்- பல பாடத் தாள்களில் தேர்ச்சி பெறாமல் இருந்ததும் என்று முதலில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

-இன்னொரு தினமணி தலையங்கச் செய்தியில் ஒரு பள்ளியின் பொதுத்தேர்வு நடக்கும் போது மாவட்ட ஆட்சியர் தானே மேற்கொண்ட சோதனையில் கல்வி அதிகாரிகளும் கல்வி நிறுவன ஆசிரியர்களும் இணைந்து செய்த தேர்வு மோசடி பற்றிய செய்தி.மாணவர்கள் படும் சிரமத்தைக் கண்டு மனம் நொந்து அவர்களது கேள்வித்தாள்களுக்கான விடைகளை கல்வி நிறுவனமே தயாரித்து தேர்வு அறையில் விநியோகித்து அவர்கள் தேர்ச்சிக்கும்,தங்கள் பிழைப்புக்கும் உதவி செய்து கொண்ட நிகழ்ச்சி;நமக்கு நாமே திட்டத்தின் தேர்ந்த வடிவம்!




இரண்டு செய்திகளிலும் பொதிந்திருக்கும் விதயம் செயலும் விளைவும் எனப்படும் காஸ் அன்ட் எஃபக்ட் தியரி'யின் சான்றுகள்தாம்.

இரண்டாவது செய்தி பற்றியே இன்றைய தினமணியின் தலையங்கம் பேசுகிறது. காலையில் படித்த போது எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது;பள்ளியே முன்னின்று இவ்வாறு செய்யுமா என்ன? என்ற வியப்பால்.

என்னுடைய மனைவியிடம் மிகுந்த ஆச்சரியத்துடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட போது,அவர் என்னைப் பிராணியைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு,'இதிலென்ன ஆச்சரியம்,இது பல காலமாக நடப்பது தானே? பின் எப்படி பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி விகிதம் காண்பிப்பது? எங்களுக்குக் கூட எஸ்எஸ்எல்சி தேர்வில் விடைத்தாள் கொடுத்தார்கள்-அதாவது விடைகளை எழுதி-,ஆனால் ப்ளஸ் டூவில் தான் கொடுக்காமல் விட்டு விட்டார்கள்'' என்று என் அறியாமை இருளை அகற்றும் ஞானபானு'வானார்.

அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகிறது;பள்ளி இருந்த ஊர் ஒரு சாதாரண ஊராட்சி நிலையில் இருந்த ஊர்;தேர்வுநிலைப் பேரூராட்சி என்று பலகாலம் அறிவித்துக் கொண்டிருந்த ஊர்.

கடந்து பத்து,பணிரெண்டு ஆண்டுகளாய் வழக்கமாய் இருந்து வரும் விதயத்தை உடைத்துத் தெரிந்து கொள்ள அந்த மாவட்ட ஆட்சியருக்கும் எனக்கும் இன்றைக்குத்தான் வாய்த்திருக்கிறது! :)

இப்போது இந்த நிமிடத்தில் என்னுடைய தொடக்கக் கல்வி நிலையத்தையும்,தலைமை ஆசிரியர் மாணிக்க வாசகத்தையும் நன்றியுடன் நினைத்தும் மனத்தில் மீண்டும் நிறைத்தும் கொள்கிறேன்;மனித வாழ்வின் தொடக்கமான பள்ளிப் பருவத்தில் விழுமியங்களையும்,ஒழுங்கையும்,திருக்குறளையும்,நன்னெறியையும்,நல்வழியையும்,கொன்றை வேந்தனையும்,ஆத்திசூடியையும் அடித்துப் போதித்தவர்.நான்காகப் பிளந்த மூங்கில் மரச் சட்டத்தை அடிக்க உபயோகித்த மகானுபவர்;பள்ளி முடிந்தும் காலைப் பாடம்,மாலைப் பாடம் என்று பள்ளியிலேயே வைத்து ஆசிரியர்கள் கட்டாயம் அதை நடத்த வேண்டும் என்று வலியுறித்தியவர்;அதன் மூலம் ஆசிரியர்கள் தனியாக பாடவகுப்பு நடத்தி வியாபாரிகளாக மாறுவதைத் தடுத்தவர்;உண்மையான நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவரின் மகன்;பளபளவென்று துடைத்து வைத்திருக்கும் ராலே சைக்கிளில்தான் வருவார்;சைக்கிளை பள்ளிப் படிகளுக்குள் ஏற்றி வருவது கூடத் தெரியாமல் பூனை போன்று வந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் கண்காணித்தவர்;புகைபிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு ஆசிரியர் பள்ளி வளாகத்திலோ, பள்ளி நேரத்திலோ மாணவர்கள் பார்க்கும் வண்ணத்தில் புகை பிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அவரின் பகையை சம்பாதித்தவர்;நீதி போதனை வகுப்புகளைத் தவறாமல் தானே நடத்தியவர்;அந்த வகுப்புகளுக்கு மிகு முக்கியத்துவம் கொடுத்தவர்.

ஐந்து மகன்களைப் பெற்று ஐவரும் வெளிநாடுகளிலும் உள்நாட்டில் நல்ல நிலையில் இருந்தும் ஓய்வு பெற்று விட்ட பள்ளிக்கே செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டு இன்னும் ராலே சைக்கிளில் பள்ளிக்கு ஓடுபவர்;மகன்கள் மற்றும் மனைவியின் அறிவுறுத்தல்களுக்குப் பின்னர் இப்போதுதான் டிவிஎஸ் 50 வாகனத்திற்கு மாறியிருப்பவர்.

படிக்கும் காலங்களில் அவரைப் பார்க்கப் பயமும் சிறிது பிடிக்காமையும் தான் மனதில் எழும்;ஆனால் பள்ளியை விட்டு வெளியேறப் போகும் எட்டாவது வகுப்பிலேயே அவரைப் பற்றிய பயம் மறைந்து மரியாதை தோன்றியது.

வேறு பள்ளி,பள்ளி முடித்து  கல்லூரி என்று பல வித மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்த்ததும், கல்லூரி முடித்து தேசிய அளவிலான தேர்வுகள் என்று கற்றுக் கொள்ளுதலின் பரிமாணங்கள் விரிவடைந்த போது அவற்றை எதிர்கொள்ளும் திண்மை.நுண்ணறிவு,முயற்சி போன்றவற்றை திரு.மாணிக்க வாசகமும் அவரைப் பின்பற்றிய ஆசிரியர் குழாமும், எங்களது 14 வயதுக்குள் அவற்றை விதைத்து விட்டிருக்கிறார்கள் என்று அறிந்தபோதும் அவரது மீதான மரியாதை அன்பும் மதிப்பும் மிக்கதான மரியாதையாக மாறி விட்டிருக்கிறது.

மிகுந்த சுயமரியாதையும் எவருக்கும் நாம் இளைத்ததவரல்ல என்ற மனப்பாங்கும் உடைய நான்(அதை வளர்த்ததில் கூட அவருக்கு ஒரு பங்கிருக்கிறது! :) ),இன்று வரை அவரைப் பார்க்கும் தருணங்களில் அவரை அடிவீழ்ந்து வணங்கி ஆசி பெறுவதைத் மறப்பதில்லை.

மாணவர்களது கல்வி மட்டுமல்ல,கேரக்டர் எனப்படும் தனிமனிதத் தன்மையை செதுக்கி மனிதப் பண்புகளை வளர்ப்பவை கல்வி நிலையங்களும்,ஆசிரியர்களும் என்ற பார்வை தமிழக பள்ளிச் சூழலியலில் கடந்த புத்தாயிரப் பத்தாண்டுகளில் மாறி விட்டிருப்பது கைப் புண்ணாகத் தெரிகிறது.அதோடு ஒழுக்க மீறுதல்களையும் குறுக்கு வழிகளையும் கற்பிக்கும் இடங்களாவும் அவை மாறி விட்டிருக்கின்றன.

இவ்வித குறுக்கு வழிகளில் தேர்ந்து அவற்றைக் கடைசி வரை தீர்க்கமாகப் பயன்படுத்தி,குறுக்கு வழியாளர்களுடனேயே இணைந்து சமூகத்தின் பெரும்பகுதியான மக்கள் மாறி விட்ட சூழ்நிலையில் அவர்கள் சாமர்த்திய சாலிகளாக,வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப் படுகிறார்கள்.

இவ்வித 'சாமர்த்திய சாலிகளான' குறுக்கு வழி விற்பன்னர்கள் பெருகிய ஒரு சமூகத்தில் ஒரு டிஎஸ்பி பெண்ணென்றும் பாராமல் பொது இடத்தில் தான் காக்க வேண்டிய மனிதனைப் பெண்ணை அறைய முடிகிறது;எங்களது பிரதிநிதியாக சட்டசபைக்குப் போ என்று அனுப்பி வைத்த மக்களுக்கு நன்றியுடன் சட்டசபையில் பலான படம் பார்த்து விட்டு கூச்ச நாச்சமின்றி வாழ முடிகிறது; நாடு முன்னேறுவதற்கான தொழில்நுட்பங்களைப் புகுத்தும் செயல்களில் லட்சம் கோடி என்ற கணக்கில் கூசாமல் கையூட்டுப் பெற முடிகிறது;அந்தக் கொள்ளை வெளிப்படும் போது ஏதோ சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப் பட்டது போல சிறை மீண்ட வீரர்களாக திரிய முடிகிறது; ஊழல் பணத்தை உடலெங்கும் அணிகலனாய் மாட்டிக் கொண்டு திருமண ஊர்வலங்கள் நடத்த முடிகிறது;வாய்ப்பு இல்லாத இடத்தில் கூட லஞ்சம் வாங்க முயற்சித்தும்,வாய்ப்பு இருக்கும் இடங்களில் புகுந்து விளையாடியும் வாழ்வில் வெற்றி பெற்ற விற்பன்னர்களாய் வலம் வர முடிகிறது ! தலைவர்களாக அந்தக் கேவல சாமர்த்தியங்களை நிறுவன மயமாக்க முடிகிறது !!! அவர்கள்தான் தலைவர்கள் என்று சாதாரணர்களை நம்ப வைக்க முடிகிறது !!!

தற்கொலை செய்து கொண்ட மாணவி போன்ற சிலர்,அவ்விதக் குறுக்கு வழிகளை சரியாகப் பயன்படுத்த இயலாமலோ அல்லது குறுக்கு வழிகளைச் செயல் படுத்தும் வழியற்றவர்களாவோ இருக்கும் போது தற்கொலையாளர்களாக மாறுகிறார்கள்.

தீர்வு புரையோடிப் போன கல்வி முறைச் செயல்பாட்டிலும்,தனி மனித உன்னதப் பண்புகளை கருவறுத்துவிட்ட தற்காலக் கல்வி முறைகளிலும் இருக்கிறது.

அதை வழிமுறைப் படுத்த செயலூக்கமும்,நியாயப் பண்புகளில் உறுதியான நம்பிக்கை மிகுந்த தலைவரும் தேவை.

எனது முந்தைய பதிவொன்றில்(திறனற்ற செயலும்,செயலற்ற திறனும்) தலைவர்கள் திறனாளர்களாக இருக்க வேண்டுமா அல்லது நேர்மையாளராக இருக்க வேண்டுமா என்ற பொருளை நான் ஏற்கனவே தொட்டிருக்கிறேன்; அந்தக் கேள்வி அனைவருக்கம் வர வேண்டிய தருணம் இது.

தமிழக சூழலில் இன்னும் 20 ஆண்டுத் தூரத்தில் அப்படி எவரும் கண்ணில் தெரியவில்லை;தற்கொலைகளும் சீரழிவும் தொடரும் என்பதில் சந்தேகமும் இல்லை.

பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் !

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...