குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, July 27, 2012

149.பதிவுகள் முளைத்து,தொலைந்த காலம் !


பதிவுகள் அழியும் காலம் என்று ஒரு கதைத் தொகுதி புத்தகமாக வந்திருக்கிறது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்!

வலைப் பதிவுகளைப் பொறுத்த வரை கூகிள் நிறுவனம் இலவச பகிர்வான்-சர்வர்-சேவையை நிறுத்தினாலே,பல தமிழ் வலைப் பதிவுகள் தன்னால் அழிந்து விடும்.

காரணம் தமிழ் வலைப் பதிவுகளில் பல பதிவுகள் மிக மேம்போக்கான,சுய சொறிதலுக்கான நோக்கம் கொண்டே எழுதப் படுவன;எழுத்தில் சிறிதளவு ஆர்வமும் ஒரளவு பரிச்சயமும் இருந்த பலரும்,தன் எழுத்தை வலையில் எளிதாகப் பார்க்க முடிந்த நிலையும்தான் பலர் வலைப் பதிவு தொடங்கக் காரணம்.

பின்னர் பஸ் டிரைவரிலிருந்து,பஜ்ஜி விற்பவர் வரை எதையாவது பற்றி,என்னவாவது எழுதினால் பரந்துபட்ட வலையுலகில்,படிக்க சிலராவது மாட்டுவார்கள்;அப்படியே ஒப்பேற்றிக் கொண்டு இருக்கலாம் !

இன்றும் கூட பல ஒற்றுப் பிழைகள்,சொல்,பொருள் பிழைகளுடன்,கொச்சை நடையில் எழுதப் படும் பல பதிவுகள் எனது மேற்கண்ட கூற்றுக்கு சான்றாக,நூற்றுக் கணக்கில் இருக்கின்றன.

இந்தப் பொது சிந்தனைக்கு,நான் உட்பட,எவரும்,தொடக்ககாலப் பதிவர் நிலையில்,விதிவிலக்காக இருக்க முடியாது.

தொடக்ககாலம் என்று நான் சொல்வது-பதிவு தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகள் வரை! பெருவிரல் விதியாகச்-ரூல் ஆஃப் தம்ப்-சொல்லி விடக் கூடிய ஒரு உண்மை,ஒருவர் எழுதும் பதிவுகளில்,அவருக்கே திருப்தி தரக் கூடிய,படிப்பவர்களுக்கு பயனளிக்கக் கூடிய பதிவுகள் எழுதத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே வரும் என்பது.

பலர் என்னுடன் சண்டைக்கு வரக் கூடும்;ஆனால் வலையுலகில் நேர்த்தியாக எழுதுகிறார்கள் என்று உளமாரத் தோன்றக் கூடிய எந்த ஒரு பதிவரின் பதிவுகளையும் சிறிது ஆய்வுக்கு உட்படுத்தினால்,எந்த உண்மை எளிதில் விளங்கும்.

இன்னும் சிலர்,தங்கள் இயங்கு தளங்களில் தங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக புத்திசாலித்தனமாக வலைப்பதிவுகளைப் பயன்படுத்துபவர்கள்.

தன்னுடைய இருப்பை அறிவித்துக் கொண்டேயிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அரசியல் கழைக் கூத்தாடிகள் அல்லது அவர்களுக்கு சொம்படிப்பவர்கள், பத்திரிகையாளர்கள்,புத்தக வெளியீட்டாளர்கள், கம்பெல்லிங் விளம்பர மோகிகள் போன்ற பலரும் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள்.சொல்லத் தேவையன்றி இவர்களின் இருப்புக்கும் தொழிலுக்கும் வலைப்பதிவுகள் ஏதோ ஒரு வடிவில் உதவி செய்கின்றன.

என்னைப் பொறுத்த வரையில் எழுத்தில் பள்ளிக் காலம் முதலே பரிச்சயம் இருப்பினும் இணையம் என்னும் எளிய ஊடக வசதியும்,அதைப் பரப்புவதற்கு தமிழ்மணம் போன்ற திரட்டி வசதிகளும்,இலவசமாக பகிர்வானை கூகிள் கொடுப்பதும்,விட்டு விட்ட எழுத்தைத் தொடர முக்கியக் காரணம்.

சந்தேகமின்றி நான் முதல் வகைப் பதிவாளனாக தொடங்கிய,அதே நிலையில் ஓரளவு பரந்த வாசிப்பும் கொண்ட ஒருவன். ஆனால்
தொடக்க நிலைப் பதிவாளர்களில்  பெரும்பாலானவர்களைப் போல,பாத் ரூம் போவது தவிர்த்த, எந்த ஒரு தினப்படி நிகழ்ச்சியையும் பதிவாக்க முயன்றவன் அல்ல,நிச்சயமாக.

எனது பதிவைப் படித்த ஒருவனுக்கு துளி அளவாவது,சிந்தனையில்,செயலில் முன்னேற்ற மாற்றத்தை நிகழ வேண்டும்,படித்த எழுத்து கடுகளவாவது மனதில்,சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்பதே எப்போதும் எனது எழுத்தின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பதை நான் அறுதியிட்டுக் கூறமுடியும்.

மேலும் செல்ஃப் ஹெல்ப் குழுக்கள் போல்,நான் உனக்கு பின்னூட்டுகிறேன்,நீ எனக்குப் பின்னூட்டு என்ற சுயசொறிதல்களிலும் எனக்கு உடன்பாடில்லை. இதனால் ஐந்து வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பினும் நான் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை மிக சொற்பமே.

ஆனால் நிச்சயமாக, எந்த ஒரு பதிவையும் நான் திரும்பவும் படிக்க நேர்கையில்,என்ன இவ்வளவு குப்பையை,குப்பையாக எழுதி இருக்கிறோம் என்று நான் ஒருமுறை கூட உணர்ந்ததில்லை ! அந்தக் குறைந்த பட்ச நேர்மையும் திருப்தியும் என்னுடைய பதிவுகளின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

இத்தகைய சூழலில் என்னுடைய பதிவுகளைக் குறிப்பிட்டு வலைச்சரத்தில் சிலர் பாராட்ட எழுதி இருப்பதை,சில நாட்களுக்கு முன்னரே எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது.அவர்களில் சிலர் எழுதியது 2008,2009 வாக்கில்! அவற்றை இப்போதுதான பார்க்க நேர்ந்தது.

அவர்களின் பாராட்டை உரிய நேரத்திலேயே பார்க்க இயலாதிருந்த என்னுடைய நிலைக்காக அவர்களிடம் மன்னிப்பு வேண்டவும்,அவர்களின் பாராட்டுக்கு நன்றியை ஒரு பதிவின் வாயிலாகவாவது தெரிவிப்பது என்னுடைய கடமை என்று தோன்றியதாலும் இந்தப் பதிவு.

அவர்கள் எழுதிய நேரத்திலான எனது மௌனம், அவர்களுக்கே ஏன்தான் இவனைப் பற்றி எழுதினோமோ என்று கூடத் தோன்ற வைத்திருக்கலாம் !


 :))


சின்னப்பையன் - அவரது முதல் பதிவில் ஊக்கப்படுத்தி எழுதியதற்காக மட்டுமே என்னைக் குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை :)).2008 ல் எனது பதிவைக் குறிப்பிட்டிப் பாராட்டி எழுதி இருக்கிறார்..நன்றி.

மாதங்கி - சிங்கை வட்டாரத்தில் அறியப்பட்ட எழுத்தாளர் இவர்.சில புத்தகங்களும் கொண்டு வந்திருக்கிறார்.2009 ஏப்ரல்'ல் எனது வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை பதிவைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதி,வலைப்பதிவைப் பாராட்டியிருக்கிறார்.நன்றி.

ஆர்விஎஸ்-2011 சூலையில் என்னுடைய பெண் எழுத்துப் பதிவைக் குறிப்பாகச் சுட்டிப் பாராட்டி எழுதியிருக்கிறார்.நன்றி.

மோகன்ஜி - 2012 ஏப்ரலில் இவரது காமச்சேறு என்ற பதிவில் மிக நீண்ட விவாதங்களில் நான் பதில் சொல்லும்படியானது; அவரும் அவருடைய பத்தியில் எனது பங்கீடு பற்றிய குறிப்புடன் எனது பதிவுப் பக்கம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.நன்றி.

துரை டேனியல் - 2012 ஆகஸ்டில் என்னுடைய பழைய்யய்யய்யய்ய பதிவான தமிழ்ப் புத்தாண்டு பற்றிய பதிவுச் செய்தியைக் குறிப்பிட்டு பாராட்டுகளை அளித்திருக்கிறார்.நன்றி.

இவை தவிர எனது நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்தும்,மற்றும் லாம்ப்ரட்டா,எனது ஐயா'வைப் பற்றிய பதிவு,தமிழும் சிவமும்(இன்னும் இது முற்றுப் பெறவில்லை!),தமிழ் இலக்கிய சுட்டியில் நான் எழுதி அனைத்தும் போன்ற பதிவுகள் எனக்கே திருப்தி தந்தவை.

வேறு எதையோ வலையில் தேடப் போகவே என்னுடைய பதிவைப் பற்றிய, நண்பர்களின் இந்தப் பரிந்துரைகள் எனக்குத் தெரியவந்தன.

இவர்களில் எவரையும் கூட நான் தொடர்ந்து படிப்பவனல்லன்;பேசியோ,மின்மடலிலோ அறிந்தவனல்லன். ஏதோ ஒரு கணத்தில் இவர்களது எண்ணத்தில்,சிந்தனையில் என் பதிவும்,எழுந்தும் மீளெழுந்திருக்கிறது,குறிப்பிட வைத்திருக்கிறது என்பது எனக்கு எப்போதுமே நிறைவான ஒன்று.

எழுதுவதன் நிறைவு அது மட்டும்தான்.

மிக்க நன்றி நண்பர்களே !!!

()

எழுத வேண்டும் என்று நினைப்பதைக் காட்டிலும் அதிக நேரத்தை படிப்பதில் செலவு செய்பவன் நான்.

படித்தவற்றைப் பற்றி நான் சிந்திந்த வற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எழுச்சி பல நேரங்களில் ஏற்பட்ட போதிலும், கொடுப்பாரில்லை அங்கு கொள்வாரிலாமையால் என்ற 'உயர்ந்த சூழலால்' பெரும்பாலும் நேரத்தைக் கொன்று எழுதுவதற்கான உந்துதல் ஏற்பட்டதில்லை.

ஆனாலும் திரு.சொக்கன்(நாகா) எழுதிய தினம் ஒரு பா- பதிவை நேற்றுக் (த்தான்) கண்ணுற நேர்ந்த போது,அவர் ஏற்கனவே அதை 365 நாட்களுக்குப் பிறகு நிறுத்தி விட்டிருந்தது தெரிந்தது.

அவரது உறுதிப்பாடு ஆச்சரியமானது. ஏன் அதை இன்னும் ஒரு 365 நாட்களுக்காவது நாம் தொடரக் கூடாது என்று தோன்றியது.

படித்தவற்றைப் பகிர வேண்டும் என்ற உள விருப்பத்தை விட, 365 நாட்கள் விடாது ஒரு தமிழ்ப் பாடலைப் பற்றிய எழுத வேண்டிய கட்டாயத்தைத் தனக்கு விதைத்துக் கொள்ளும் அந்த மனநிலை எனக்குப் பிடிந்திருந்தது;எழுத்திற்கும் கருத்திற்கும் நேர்மை செய்ய இயலும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருப்பதால், எனது இன்னொரு பதிவான மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற பக்கத்தில் இதைத் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இதையே அழைப்பாகவும்,எச்சரிக்கையாகவும்(!?) சொல்லி வைக்கிறேன். நன்றி.

:)


148.மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம்


தி சண்டே இந்தியன் பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன் வந்த குஜராத் முதல்வர் மோடியின் பேட்டி இது.

எனக்குத் தெரிந்து கடந்த 10 வருடங்களில் இவ்வளவு தெளிவாக,வளர்ச்சி-அரசாண்மை-மக்கள் முன்னேற்றம் பற்றி இந்தியாவில் ஒரு முதல்வர் பேட்டி அளித்து நான் படித்ததாக நினைவில்லை.சொல்வது தவறென்றால் என்னைக் குட்டுங்கள்..

உ.பி.யின் அகிலேஷ் யாதவ் பதவியேற்றவுடன் ஒரு பரவலாக இளம் முதல்வர் என்று செய்திகளில் அடிபட்டார்;ஆனால் அவரது செயல்பாடுகளைப் பார்க்கையில்,(20 லட்சம் தொகுதி நிதியில் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு கார், மின்தடைப் பிரச்னையை சரிசெய்ய மந்திரம் இல்லை...)பொங்கிய பாலில் ஊற்றிய நீராக எழுச்சியும் நம்பிக்கையும் அழுந்தி விட்டன.

மோடியின் மீதான விமர்சனங்கள் இன்னமும் இருக்கின்றன;அவை நிழலாக அவரைத் தொடரக் கூடும்.

மோடியைப் பற்றிப் பேசினாலே பலர் அவர் ஒரு பயங்கரவாதி என்ற அளவில் அவரைப் பற்றிய தூற்றல்களை முன் வைக்கின்றனர்.இந்த நேரத்தில் எனக்கு
சிங்கப்பூரின் உருவாக்கத்திற்குக் காரணமானவர் என்று அறியப்படும் சீனீயர் லீ(லீ க்வான் யூ),அவரது மிக சமீபத்திய பேட்டிகளின் தொகுப்பாக வந்திருக்கும் புத்தகத்தில்(ஹார்ட் ட்ரூத்ஸ் ஃபர் சிங்கப்பூர் டு க்ரோ), ஒரு கேள்விக்கு அளித்த பதில் நினைவுக்கு வருகிறது.

ஒரு தலைவர் அன்பானவராக அறியப்படவேண்டுமா,மரியாதைக்குரியவராக அறியப் படவேண்டுமா, அல்லது பயப்படத்தக்கவராக அறியப்படவேண்டுமா என்பது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.( அவரே மிகவும் மதிக்கப்பட்ட,அச்சத்துடன் பார்க்கப்பட்ட ஒரு தலைவரே!).

லீ அவர்களின் பதில்: அது ஒவ்வொருவரின் தலைமைத்துவத்தைப் பொறுத்தது;ஆனால் நான் மரியாதைக்குரியவராகப் பார்க்கப்பட வேண்டுமா அல்லது அஞ்சப் படத்தக்கவராக அறியப்படவேண்டுமா என்றால்,அஞ்சப்படத்தக்கவராக அறியப்படுவதே அரசாண்மைக்கு நல்லது;அந்தக் கருத்தை நான் ஒரு பொருட்டாக எண்ண மாட்டேன்.

இந்த கான்டெக்ஸ்டில் இதைச் சொல்லியிருப்பதால் என்னை ஒரு பக்கா ஆர்எஸ்எஸ் வாதி என்று முத்திரை குத்தலாம்;ஆனால் முழுக்க முழுக்க நான் பரந்து பட்ட அரசாண்மை,மக்கள் முன்னேற்றம்,சீரான நிர்வாகம் என்ற அளவில் மட்டுமே பார்க்கிறேன்.

மோடியைப் பற்றியும் இதை வித கருத்தாக்கம் நிலவுகிறது.

ஆனால் சந்தேகமின்றி அவர் ஒரு ஊக்கமாக செயல்படும் தலைவர்; பாஜக பிரதமர் வேட்பாளர் அவரே என்று தயக்கமின்றி ஒரு முகமாக அறிவிக்க வேண்டிய நேரம் இது !

நன்றி-தி சண்டே இந்தியன் பத்திரிகைக்கு


‘மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம்’’


பிரியங்கா ராய் | பிப்ரவரி 3, 2012 15:32
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் வருகிறேன்.  மேலும் அது முன்னேறியுள்ளது. உங்களால் எப்படி சாத்தியமானது? ஏதாவது மந்திரக்கோல் வைத்திருக்கிறீர்களா?

மக்களின் பங்கேற்புடன் அரசு நடப்பதுதான் நல்ல நிர்வாகத்தின் ரகசியமாகும். மாநிலத்து மேம்பாட்டுப் பணியை நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறோம். வளர்ச்சி என்பது அரசின் திட்டமோ, குறிக்கோளோ மட்டுமல்ல. அது மக்களின் இயக்கமாகும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்பதை பரப்புவதற்காகவே சத்பவனா உண்ணாவிரதம் அனுசரிக்கப்பட்டது. வளர்ச்சியில் ஓர் உயரத்தை எட்டுவதற்கு நாம் விரும்புவோமெனில், நமது ஒற்றுமையைக் குலைத்து பிரிவினைக்குத் தூண்டும் வெறுப்பின் விஷத்தை அகற்றவேண்டும். எங்கள் சமூகத்தில் நிலவும் விஷத்தை அகற்ற முடிந்ததால்தான், தற்போது இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இன்று ஒவ்வொரு குஜராத்தியும் மாநில வளர்ச்சிப் பணி தொடர்பாக பெருமை கொண்டுள்ளார். இன்னும் கூடுதலாக வளர்ச்சிக்குப் பங்களிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதே சூழ்நிலையை முழு தேசத்திலும் கொண்டுவராவிட்டால் நாம் வளரமாட்டோம்.
இத்தனை வேகமான வளர்ச்சிக்கு வேறு காரணங்கள் உண்டா? 
நாட்டின் முழு வேளாண்மை வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், 2.4% மட்டுமே. ஆனால் குஜராத் கடந்த பத்து ஆண்டுகளில்  10 சதவிகிதத் துக்கும் மேல் வேளாண்மையில் வளர்ச்சி அடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட குஜராத் வறட்சிக்கும், தண்ணீர் பிரச்னைகளுக்கும் உரிய இடமாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு முறையாவது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் டேங்கர் நீரை நம்பியிருந்தன. தொழில் வளத்தைப் பெருக்குவதற்காக விவசாயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லை. தீவிரமான தொழில் வளர்ச்சிக் கொள்கையோடு வேளாண்மை வளர்ச்சிக்காகவும் ஆற்றலையும் வளங்களையும் செலவிட்டோம். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினோம். குஜராத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் பங்குபெற்றார்கள். மழைநீர் தடுப்பணைகள் கட்டுவதற்கு மக்களிடம் 60 சதவிகிதத்தை அரசு தருவதாகவும், மிச்சம் 40 சதவிகிதத்தை பங்களிக்கும்படியும் கேட்டோம். தொழில்நுட்பத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்தி பயிற்சி அளித்தோம். இதன்மூலம் 6 லட்சம் தடுப்பணைகள் மற்றும் மழைநீர் குளங்கள் கட்டப்பட்டன. இதனால் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. புதிய குளங்களால் ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இன்று குஜராத்தில் கோதுமை, பருத்தி, வாழை, பப்பாளி, கரும்பு, தக்காளி என பலவிதமான பயிர்களைப் பார்க்கமுடியும். சௌராஷ்டிராவின் மிக மோசமான வறட்சி நிலவிய பகுதிகள்கூட வளம்பெற்றுள்ளன. தற்போது விவசாயிகள் தங்கள் பகுதியில் இருக்கும் தடுப்பணையை கவனித்துக்கொள்வதற்கு பயிற்சி பெற்றுள்ளனர். இதுதான் குஜராத் வளர்ச்சியின் ரகசியமாகும். ஒவ்வொரு திட்டத்தையும் நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறோம். உதாரணத்துக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் குழந்தைகள் சேரும் விகிதம் 60 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது 100 சதவிகிதமாக வளர்ந்துள்ளது. பள்ளியிலிருந்து இடையில் வெளியேறும் குழந்தைகளின் சதவிகிதம் 30 முதல் 40 % இருந்தது. தற்போது 2 சதவிகிதமாக காணப்படுகிறது. ஏனெனில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முடிவு செய்துவிட்டனர்.
நீங்கள் பல்வேறு வகையான உத்சவங்களை நடத்துகிறீர்கள். இதற்குக் காரணம் என்ன?
வெவ்வேறு திட்டங்களை ஆரம்பிக்கும்போது அவற்றை முக்கியமான நிகழ்ச்சிகளாக மாற்றவே உத்சவங்களை நடத்துகிறேன். இவை வெறுமனே கொண்டாட்டம் மட்டும் கிடையாது. கடும்கோடையான ஜூன் மாதத்தில் நடத்தும் க்ருஷி உத்சவ நிகழ்வில் அரசு அதிகாரிகள் தங்களது குளிர்பதன அலுவலக அறைகளை விட்டு வெளியேறி கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்திப்பார்கள். பருவ காலத்திற்கு முன்பு என்னென்ன செய்யவேண்டும் என்று மக்களுக்கு ஆலோசனைகள் கூறுவார்கள். இந்த க்ருஷி மகோத்சவம் முழு மாதமும் நடைபெறும். இதை உண்மையில் வியர்வைத் திருவிழா என்றே சொல்லவேண்டும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களையும் பங்கேற்க வைக்கிறோம். நல்ல விதைகள், மண், உரங்கள் பற்றி விவசாயிகளிடமிருந்து அந்த மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ஆய்வகங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளை வயல்களுக்கு அழைத்துச் செல்கிறேன். இந்த நடைமுறை மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது.

மண்வள அட்டை திட்டம் பற்றி கூறுங்கள்?
இந்தியாவில் மனிதர்களுக்கு ஆரோக்கிய அட்டை இல்லை. ஆனால் குஜராத்தில் மண்ணின் ஆரோக்கியத்துக்கான அட்டை உள்ளது. தனது மண்ணில் எந்தப் பயிர் சிறப்பாக வளரும் என்று விவசாயிக்கு அறிவுறுத்த இத்திட்டம் பயன்படுகிறது. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நான் 10&ஆம் வகுப்பு மற்றும் 11&ஆம் வகுப்பு மாணவர்களின் உதவியை நாடினேன். அவர்களுக்கு மண் ஆய்வு செய்யும் பயிற்சி அளித்தோம். மாநிலத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களும் கோடை காலத்தில் இந்த மாணவர்கள்  ஆய்வு செய்வதற்காக திறந்தே இருந்தன. இதன்மூலம் மாணவர்களுக்கும் கொஞ்சம் வருமானம் கிடைக்கும். ஆய்வகங்களின் தரமும் உயரும். ஒவ்வொரு ஆண்டும் தங்களது மண்ணின் வளம் எவ்வகையில் இருக்கிறது என்பதை விவசாயிகள் தெரிந்துகொள்ள முடியும். இதில் அரசின் பங்களிப்பு எங்கே இருக்கிறது? நாங்கள் இத்திட்டத்தைத் தொடங்கினோமே தவிர, மற்றதெல்லாம் மக்களின் பணிகள்தான். பால் உற்பத்தியை எடுத்துக்கொள்ளுங்கள்.  இந்த ஆண்டு 60 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளோம். இது ஓர் அதிசயமாகும். குஜராத் முழுவதும் கால்நடைகளுக்காக 3000 முகாம்கள் நடத்தியுள்ளோம். ஒரு மாடு இந்த முகாமுக்கு வருவதற்கு இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரமே நடக்கும்படி பார்த்துக்கொண்டோம். கால்நடைகளை தொடர்ந்து இப்படியாக கண்காணிப்பதன் மூலம் அவற்றை அடிக்கடி தாக்கிய 112 வியாதிகளை ஒழித்துள்ளோம். கால்நடைகளுக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை மற்றும் பல் சிகிச்சை கொடுக்கும் ஒரே மாநிலம் குஜராத். இதனால்தான் 60 சதவிகித உற்பத்தி ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் தங்கள் கால்நடைகள் மூலம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்த விவசாயிகள் 1600 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.
உ.பி. மற்றும் பீகாரை ஒப்பிடும்போது குஜராத் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று சொல்வது வழக்கம். இது சரியல்ல. நாட்டின் எந்தப் பகுதி குடிமகனையும் புண்படுத்தும் விஷயம் இது. ஒவ்வொரு குடிமகனும் திறமை வாய்ந்தவரே. எல்லோரும் நாட்டை நேசிப்பவரே. வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்த ஒப்பீட்டை செய்யக்கூடாது. லால்பகதூர் சாஸ்திரி உணவு தானியங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்று கூறியபோது, பீகார் மற்றும் உ.பி. மக்கள்தான் கடுமையாக உழைத்து தானிய கிடங்குகளை நிரப்பினர். லால்பகதூர் சாஸ்திரியால் முடிந்த விஷயம் மற்றவர்களால் ஏன் முடியவில்லை? அதனால் குடிமக்களை குற்றம் சொல்லவேண்டாம்.
குஜராத்தில் வளர்ச்சிப் பணிகளை எளிதாகச் செய்யமுடியும் என்று கூறுகிறார்களே?
மற்ற தலைவர்கள் பற்றி விமர்சிக்கவோ, எதிர்மறையாகப் பேசவோ நான் விரும்பவில்லை. 10 ஆண்டு முதலமைச்சர் அனுபவத்தில் இந்த நாடு வளர்ச்சி பெறுவதற்கான சிறந்த ஆற்றலுடன் திகழ்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்த வளர்ச்சியைப் பெறமுடியும் என்று என்னால் கூறமுடியும்.
அப்படி என்றால் என்ன மாற்றம் தேவை?
தலைவர்களிடம்தான் மாற்றம் தேவை. அவர்கள் வாக்கு அரசியலிலிருந்து வெளியே வந்து வளர்ச்சி அரசியல் பற்றி சிந்திக்கவேண்டும்.
குஜராத்தைப் போல மற்ற மாநிலங்களிலும் அதே அதிசயங்களை நிகழ்த்தமுடியுமா?
ஒவ்வொரு மாநிலமும் தனி இயல்பைக் கொண்டது. அந்த தனித்துவத்திலிருந்துதான் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவேண்டும். குஜராத் முதல்வர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நான் 100 சதவிகிதம் எனது ஆற்றலைத் தந்தேன். இந்தப் பணிகளிலேயே நான் எதிர்காலத்திலும் கவனம் செலுத்துவேன். அதனால் வேறு சிந்தனைகள் எனக்கு இல்லை.
ஏகப்பட்ட பணிகள் உங்களைச் சுற்றியுள்ளன. தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறதா?
மூன்றரை மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். இது போதாது எனத் தெரியும். மருத்துவர்களும், நண்பர்களும் என்னை எச்சரிக்கிறார்கள். ஆனால் எனது பணிநேரத்தை அதற்குமேல் சுருக்கிக்கொள்ளமுடியாது. ஆரோக்கியமாக இருப்பதற்காக யோகா, பிரணாயாம பயிற்சியை ஒன்று முதல் இரண்டு மணிநேரம் செய்கிறேன்.
ஊழலைப் பொறுத்தவரை உங்களது புத்தாண்டு தீர்மானம் என்ன?
என்னால் முழுமையாக ஊழலை ஒழிக்கமுடியும் என்று தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. ஆனால், நான் ஊழல் செய்யக்கூடாது என்று தீர்மானம் எடுத்தேன். அதன் விளைவை முழு அரசு அமைப்பிலும் காணலாம். கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் எங்கள் மேல் இல்லை.

சிறிய பரப்பளவில் நல்ல நிர்வாகத்தையும் ஒழுங்கையும் எளிதாக அமைத்து விடலாம்;சிங்கப்பூர் மாடலை இந்திய மாநிலங்களுக்குப் பொருத்திப் பேசாதே என்று எனது நண்பர்கள் என்னிடம் அடிக்கடி விவாதங்களிடேயை சொல்வதுண்டு.அதை மறுதளிப்பதற்காற சரியான ஆவணம் மேற்கண்ட பேட்டியும்,மோடியின் செயல்பாடும்...

வெல்டன் மோடி !

Sunday, July 15, 2012

147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்




நீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் அந்த நிகழ்ச்சி துவக்கப் பட்ட போது வெளியான தொடர் விளம்பரங்கள்;குறிப்பாக கௌசல்யா சுப்ரஜா ஏகாம்பரம்!



சிங்கப்பூரில் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளி வெளி வழியாக-லைவ் டெலிகாஸ்ட்- வருவதில்லை;இந்தியாவில் நடந்து ஓரிரு வாரங்கள் கழித்துத்தான் வருகிறது என்பது எனது அவதானம்.தொடங்கப்பட்ட போது நிகழ்ச்சி அவ்வளவு நன்றாக இல்லையெனினும் போகப்போக சூர்யா கொஞ்சம் தேறி ஓரளவு நன்றாகவே நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார்.இப்போது பருவத்தின் இறுதிப் பகுதி என்று சொல்லி நாம் அமைப்புக்கு உதவி செய்யும் செய்கையோடு நிகழ்ச்சி நிறுத்தப் பட்டிருக்கிறது.

இது ஒரு தற்காலிக நிறுத்தம் என்றும், சிறிது காலம் கழித்து வேறொரு நடிகர் மூலம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதும் என்னுடைய இப்போதைய அனுமானம். பெரும்பாலும் என்னுடைய அனுமானங்கள் சரியாக இருப்பதைப் பிற்காலத்தில் நானே உணர்ந்திருக்கிறேன்;இப்போதும் அந்த விருப்பம் இருக்கிறது.

ஏன், சூர்யா நன்றாகத்தானே நடத்தினார்,இளம் பெண்கள் வாயின் இருபுறமும் ஊற்றும் ஜொள்ளு தெரியாத அளவிற்குக் கூட நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்களே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்....சிறிது அலசலாம்.

ஊற்றும் ஜொள்ளு...

தமிழக ஊடக சூழலில் இந்த நிகழ்ச்சியை இன்றைய நிலையில், வேறு எந்த நடிகர் நடத்தியிருந்தாலும் இந்த அளவுக்குக் கூட வரவேற்பு இருந்திருக்காது என்பது நிச்சயம்.

மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பொங்கி வந்து ஏன் இருக்காது, தல நடத்தியிருந்தால் பட்டை கிளப்பியிருப்பார்,தளபதி நடத்தியிருந்தால் சரவெடி என்றெல்லாம் உதார் விட்டாலும், இன்றைய நடிகர்களில் தமிழை ஓரளவு சரியாக,அழகாக இல்லாவிட்டாலும் அபத்தமாக இல்லாத அளவில் உச்சரிக்கும், பேசும் இயல்புடைய நடிகர்கள் தமிழக ஊடக சூழலில் கமலகாசன்,பிரகாஷ்ராஜ்,சூர்யா,ஜீவா ஆகிய நால்வர் மட்டுமே முதல் வரிசையில் வருகிறார்கள்.

கமலகாசன் அவருக்கே வெளிச்சமான காரணங்களுக்காக விளம்பரப் படங்களில் கூட நடிப்பவர் அல்ல, எனவே அவர் தொலைக்காட்சி தொடரை நடத்துவதெல்லாம் வாய்ப்பில்லாத ஒன்று. பிரகாஷ்ராஜ் நன்றாகவே செய்வார் என்றுதான் தோன்றுகிறது,ஆனால் இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான நட்சத்திர மதிப்பு அவருக்கு இல்லை என்று தொகா கருதியிருக்கக் கூடும்.இதே காரணத்திற்காகவே ஜீவாவும் புறந்தள்ளப்பட்டு சூர்யா தெரிவு செய்யப்பட்டிருப்பார் என்பது எனது எண்ணம்.

ஏன் நடிகர்கள்தான் நடத்த வேண்டுமா,மற்ற புகழ் பெற்ற நபர்கள், பொதுச் சேவையில் இருப்பவர்கள் இல்லையா என்று கேட்டால்,நீங்கள் தமிழக சூழலில் வாழத் தகுதியற்றவர்கள்! இன்றைய தமிழகத்தில் நடிகர்கள் கு**வினால்தான் பொழுது விடியும் என்ற அளவில்தான் மாண்புமிக பொது சனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஊடகங்கள் இணைந்து தமிழகத்தின் மேல் திணித்திருக்கும் ஒரு மாயை.தகுதியில் இருந்து தலைவன் வரை அனைத்தும் திரைப்பட நடிகர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்று நோக்கில் ஊடகங்களின் செயல்பாடு இருக்கிறது.

எனவே இவற்றைத் தவிர்த்து விட்டு மெயின் மேட்டருக்கு வருவோம்.

டிஆர்பி எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தரவரிசைப் படியும் இந்த நிகழ்ச்சி முதல் நிலையில் இருந்ததாக செய்திகள் தெரிவிகின்றன.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியை ஏன் திடீரென்று நிறுத்துவானேன் என்பது கேள்வி..

எனக்குத் தோன்றும் பதில்கள்:

1. விஜய் தொலைக்காட்சிக்கு எதிர்பார்த்த டப்பு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்காது.டிஆர்பி எகிறினாலும் விளம்பரங்கள் எந்த அளவிற்கு வந்தன என்பது ஒரு புறமிருக்க நிகர லாபம் எவ்வளவு என்பது கணக்கீட்டுக்குரிய ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு மொத்த சம்பளமாக சூர்யாவிற்கு 20 கோடிகள் தருவதாகப் பேசியிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தன. பரிசுத் தொகை வழங்கிய பணம்,சூர்யாவின் சம்பளம், தயாரிப்பு செலவுகள் போக, விளம்பர வருமானம் மட்டுமே தொலைக்காட்சியின் நிகர வருமானமாக இருக்கும். குறைந்தது 100 சதவிகித மார்ஜின் ஆஃப் சேப்ஃடி இல்லாத ஒரு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகள் வழங்குவது அரிது என்று ஊடக வட்டாரங்களில் சொல்கிறார்கள்.(மார்ஜின் ஆஃப் சேஃப்டி என்றால் என்ன என்பவர்கள் இளங்கலை வணிகவியல் புத்தகங்களை நாடலாம்!)

2. இந்த 100 சதவிகிதப் பணமும்,சூர்யா நிகழ்ச்சியை நடத்திய விதத்தால் பயங்கரமாக அடி வாங்கியது. முடிவதற்கு மூன்று வாரங்கள் முன்னால் வரை,தவறான பதில் சொன்ன ஒருவரை சூர்யா, 'தேவைப்பட்டால் லைஃப் லைன் இருக்கு சார்' என்று சொல்லாமல் இருந்ததில்லை;அதே நேரம் சரியான பதிலைச் சொல்லிவிட்டால் சட்டென்று அவர் அந்த பதிலை உறுதி செய்து விடுவார்.(அவரது இந்த குணவிலாசம் பற்றிக் கடைசியாக விரிவாகப் பார்க்கலாம்!). இதனால் தொகா நிறுவனத்திற்கு வர வேண்டிய வருமானம் அடிவாங்கியிருக்கக் கூடும்.அதை வெளியில் அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்;ஆனால் சூர்யாவிடம் இது பற்றி நிச்சயம் பேசியிருப்பார்கள். இதன் விளைவு கடைசி மூன்று வாரங்களில் நன்கு தெரிந்தது. அந்த நேரங்களில்தான் சரியாக விடை சொன்ன மனிதர்களையும் சூர்யா குழப்ப முற்பட்டார்.
ஆனால் அமிதாப் இதை தவறாமல் எல்லோருக்கும் செய்தார் என்பதையும் சேர்த்துப் பாருங்கள்,ஏன் கேபிசி அவ்வளவு நாட்கள் ஓடியது என்றும் ஏன் நீவெஒகோ சட்டென்று நிறுத்தப் பட்டது என்றதற்குமான காரணம் புரியும்.

3. முர்டோக் போன்ற விற்பன்ன தொழில் முதலைகள், அவர்கள் வைத்திருக்கும் இலக்கில் லாபம் தராத எந்த ஒரு தொழிலையும் அல்லது தொழிலின் ஒரு கூறையும் தொடர மாட்டார்கள்.அவர்களுக்கு தொழிலில் லட்சியம்,தொலைநோக்கு,நேர்மை,கடமை என்பதெல்லாம் தனித்தனி வார்த்தைகளல்ல;அனைத்திற்கும் ஒரே பொருள்தான்-இலக்கு வைத்திருக்கும் அளவுக்குப் பணம்.

காட்டாக ரிலையன்ஸ் குழுமம் கூட்டு சதவிகித்ததில்-காம்பவுண்டிங் ரேட் பெர் ஆனம்- 35 சதவிகிதத்திற்குக் குறைவாக லாபம் தரும் எந்த ஒரு தொழிலையும் நடத்துவதில்லை என்பதை விதியாக வைத்திருக்கிறது.அப்பேர்ப்பட்ட ரிலையன்ஸ் குழுமம் கூட ஒன்லி விமல் என்ற, டெக்ஸ்டைல் பிரிவை,அது 15 சதவிகித லாபம் மட்டுமே தந்த போதிலும், சுமார் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.அதை 2012 ல் தூக்கிக் கடாசி விட்டார்கள்.ஒன்லி விமல் டெக்ஸ்டைல் பிரிவுத் தொழில் மட்டும் விற்கப் படப் போகிறது !

20 ஆண்டுகளுக்கும் மேலாக அதை முகேஷ் அம்பானி விடாது தொடர்ந்ததற்கு ஒரே காரணம்,அவரது தந்தை முதன்முதலில் பெரிதாக நிறுவிய தொழில் குழுமப் பிரிவு ஒன்லி விமல் என்பதால்.

ஒன்லி விமல் பிரிவு பிரசித்தமடைந்து கொண்டிருந்த நேரத்தில் அனில் அம்பானி நாடு முழுவதும் வியாபாரிகளைச் சந்திப்பதற்காகப் பயணப் பட்டார். அந்த நேரத்தில் அவரை மதுரையில் சந்தித்துப் பேசிய சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போது அவரை விட சில வருடங்கள் மட்டும் சிறியவனான(இப்போதும் தான் :) ) ஒரு மொட்டு விட்டுக் கொண்டிருந்த சிஏ வாக அவரைச் சந்தித்தேன். அவர்களது மூச்சும் பேச்சும் பிசினஸ் மயமாக இருப்பதை எளிதாக உணர வைத்தது அந்த சந்திப்பு.

அப்பேர்ப்பட்ட குஜராத்திகளுக்குக் கூட பிசினஸ் செண்டிமெண்ட் இருக்கிறது;தந்தையின் முதல் தொழில் என்பதால் இவ்வளவு காலம் அதை இழுத்து ஓட்டிய முகேஷ் போன்றவர் இல்லை முர்டோக். ஸ்டார் குழுமத்தில் ஒத்துவராத தொழில் அல்லது பிரிவை பட்டென்று வெட்டுவார்கள். இங்கிலாந்தில் முர்டோக் வைத்திருந்த ஒரு செய்தித்தாளுக்கு இது சமீபத்தில்(உண்மையிலேயே சமீபத்தில்!) நடந்தது.

அதேதான் நீவெஒகோ'க்கு இப்போது நடந்திருக்கிறது; ஆனால் திரும்பவும் துவக்குவார்கள்,வேறொரு நடிகரை வைத்து !

4. பின் ஏன் சூர்யாவை வைத்து துவக்கினார்கள் ? மேற்சொன்ன விதயங்களை முன்னரே யோசிக்காத அளவிற்கு விதொகா குழுமம் முட்டாள்தனமான மேலாண்மையைக்-மேனேஜ்மெண்ட்- கொண்டிருக்கிறதா?
நிச்சயமாக இல்லை !

இன்றைய நிலையில் ரஜினி அல்லது கமல் இந்த நிகழ்ச்சியைத் துவக்கியிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய முகவிலாசம் இந்த நிகழ்ச்சிக்கு சூர்யாவால் கிடைத்தது.இளையவர்கள்,முதியவர்கள்,இளம் பெண்கள்,குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமானவர்களையும் சூர்யா கவர்ந்திருக்கும் நிலையில்,சூர்யாவின் அந்த விளம்பரப் புகழ் பிம்பம், இந்த நிகழ்ச்சிக்கான சூப்பர் அடித்தளமாக அமைந்தது.

இந்த விளம்பர அனுகூலத்திற்கான அறுவடையை அடையாமல் தொகா இந்த நிகழ்ச்சியை விட்டு விடாது !

5.மேலே கண்டபடி சூர்யா அநியாயத்திற்கு நல்லவராக இருந்ததால் எளிய மனிதர்களை சந்தித்த போது அவர்களுக்காக உண்மையில் வருந்தி,உருகினார்;அவர்கள் இயன்ற அளவு வெற்றி பெற தன்னால் இயன்ற வரை அவர் உதவியதாகவே பட்டது.
இப்படியை நீடித்தால் கல்லா போண்டியாகி விடும் என்று தொகா'க்கு தெரிந்து விட்ட கணம் வந்தபோது, நிகழ்ச்சியை நிறுத்தி விட்டார்கள் !


தொகா.யின் பார்வையில் மேலே கண்டவை நடந்திருந்தாலும் பொதுவான பார்வையில் இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்து என்ன?

சூர்யா என்னும் நடிகர் ஏற்கனவே நடிகராகப் புகழின் உச்சிக்கு சில அடிகள் தூரத்தில்தான் இருந்தார்; இந்த நிகழ்ச்சியில் அவரது நடத்தை,பங்களிப்பு,சாதாரண மக்களின் மீதான அவரது பார்வை ஒரு தமிழ்த் திரையுலகின் நடிகனது பார்வையாக இல்லாது,மனிதனின் பார்வையாக இருந்தது. திரையுலகின் வேறு எந்த ஒரு நடிகரும் இவரளவிற்கு மானுடத் தன்மையுடன் இருக்க முடியாது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நிதர்சனமாகத் தெரிந்தது.

ஒரு சாதாரண மனிதனாக அவர் எளிய மனிதர்களுடன் தன்னை எளிதில் இணைத்துக் கொள்ள முடிந்தது;அவர்களின் துக்கங்களும் துயரங்களும் அவரது கண்ணில் நீர் வர வைத்தன;அவரது திரையுலக நட்சத்திர அந்தஸ்து மற்றும் திகட்டும் அளவிற்கான பணம்  ஒரு மனிதனாக அவரது மனத்தையும்,இயல்பான இரக்க மனத்தையும் மாற்றிவிடவில்லை என்பதை இந்த நிகழ்ச்சி தெற்றென எடுத்துக்காட்டியது. எல்லோரும் பார்க்கிறார்கள்  என்ற காரணத்திற்காக ஒரு மனிதர் எப்போதும் நடித்துக் கொண்டிருக்க முடியாது.

இயல்பான அவரது நல்ல குணம் பல இடங்களில், நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.ஒரு சாதாரண பொது சனத்தின் வீட்டிற்கு அவரது அம்மா நடக்க இயலாத நிலையில் இருக்கிறார்;அவரது பெண் அவரைத் தனது மகள் போல்,தான் தாயாய் மாறிக் கவனிக்கிறார் என்ற அன்பை மதித்து அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த எளிய பண்பும்,அந்த பண்பின் வெளிப்பாடும் அவரை தமிழர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக்கும்.
சிகரங்களை நோக்கிய ஒரு பயணம்....

அதே போல் இந்த நிகழ்ச்சி எளிய துவக்கங்களில் தோன்றி, சாதிக்கும் மன உறுதியைத் துணைக் கொண்டு, மேல்நிலைக்கு வரும் வழியை முட்டித் திறந்து வரப் பலர் தயாராக இருக்கிறார்கள் என்பதை, சிஏ தேர்ச்சி அடையப் போகும் மீனவப் பெண்ணின் கதை மூலம் சொன்னது.அடிப்படை வசதிகள் இருந்தாலும் சாதாரண கிராமப் புறத்தில் இருந்து கிளம்பி, எந்த வழிகாட்டிகளும் இல்லாமல், 80 களின் இறுதியில் கல்வியின் மூலம் வாழ்வின் சிறிது மேல்நிலையை அடைந்த என்னைப் போன்றவர்களுக்கு அந்தப் பெண் வந்த எபிசோட் கண்ணில் நீர் வர வைத்திருக்கும்;எனக்கும் வந்தது.

கடைசி நாளன்று சிவகுமார் வந்து பங்கு பெற்று,இவன் தந்தை என்னோற்றான் கொல் என்று வியக்கும் படியான மகிழ்வை அனுபவித்தார்.


ஆனால் அவர் போகும் போது சொன்ன ஒரு வாக்கியம் என்னை நேற்று முழுவதும் சிந்திக்க வைத்தது.

பள்ளி வைத்து நடத்திய ஒரு மூதாட்டி, உங்கள் மகனை அற்புதமான மனிதனாக நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள் என்று சொன்ன போது, அவர் திருத்தமாக ஒரு வாக்கியம் சொன்னார்...
" நான் அவனை நல்ல மனிதனாக வளர்த்தேன் என்பதை விட,நல்ல ஒரு ஆத்மா எனது மகனது உடல் வடிவத்தில் இந்த உலகில் வாழ எங்கள் மூலமாக வந்தது, அதுதான் உண்மை " என்றார் !!!

அந்தக் கணத்தின் கனத்த உண்மையை சூர்யா உணர்ந்திருப்பார் என்றே அவரது அந்தக் கணத்தின் தோற்றம் உணர்த்தியது.  இந்த நிமிடம் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நிமிடம் என்றே சூர்யாவும் சொன்னார். நல்ல ஒரு தகப்பனும், தகுதியான ஒரு மகனும் ஒரே கோட்டில் இணைந்த அழகிய ஒரு தருணம் அது !

அந்தக் கணம்....

ஒரு மனிதனாக உயர்ந்த சூர்யா என்னும் சரவணன்...


பளிச்சென்று திரை விலகியது போல சைவ சித்தாந்தத்தின் முற்றான உண்மையை அந்த ஒரு வாக்கியம் உணர்த்தியதாக எனக்குப் பட்டது ! 

எந்தரோ மகானுபாவு  அந்தகிரி வந்தனமு !!! 

Monday, July 9, 2012

146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2


ஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன்.

அது மிக நீண்டதால் படிப்பதற்கு சோர்வு தட்டலாம் என்று கருதி இரண்டாவது பகதிக்கு அச்சாரம் போட,அது முற்றுப் பெற்று வருவதற்கு மிக நீண்ட நாட்களாக விட்டன.

இரண்டாவது பகுதி அவனருளாலே இப்போதுதான் முற்றுப் பெற்றது.


முதல் பகுதியின் தொடர்ச்சி .....







உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் .
28


உவட்டா-தெவிட்டாத,சலிக்காத
தெவிட்டாத-சலிக்காத
ஐம்புலன்- மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்னும் ஐந்து புலன்கள்


பொதுவாக உபதேசம் கேட்பது எவருக்கும் சலிப்பேற்படுத்தும் ஒரு செயல்;எவரும் நமது நடத்தைகளுக்கோ அல்லது வாழ்க்கைக்கோ உபதேசங்களை விரும்பி ஏற்பதில்லை;ஆனால் ஔவையார் வாக்கில் விநாயகரின் வாக்கில் வரும் உபதேசம் சலிப்பேற்படுத்தாத,இனிமையுடன் கூடியதாக இருப்பதோடு ஞானத் தெளிவையும் காட்டுகிறது.

மேலும் இவ்வுலகின் பிறந்த உயிர் விடுதலை பெற்று இறைத் தன்மை அடைவதற்கு ஐம்புலன்களின் பிடியில் இருந்து உயிர் விடுபட வேண்டும்.
பொறி வாயில் ஐந்தவித்தான் என்று இறைவனை விளிக்கிறது திருக்குறள்.இதையே ஐம்பொறிகளையும் அவித்தவன் இறைவனாகவும் கூடும் என்று பொருள்படுத்திக் கொள்ளலாம்.

அதே வள்ளுவப் பெருந்தகை  சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு  என்று இறை நிலையை அடையும் ஆசை அல்லாத ஒருவனுக்கும் கூட, இந்த உலகம் ஐம் பொறிகளையும் தன் கைக் கொண்டு அவற்றை அடக்கி ஆளத் தெரிந்தவனிடம் , அவனது கைப்பிடிக்குள் இருக்கும் என்கிறது.


அந்தப் பெருநிலையை,சிறப்பு நிலையை அடையும் வழியாக ஐம் புலன்களையும் அடக்கி ஆளும் உபாயத்தை, என்மீது இயல்பாகவும்  இனிமையாகவும் பிரியமாகவும்  இருக்கும் அன்பின் பாற் பட்ட கருணையினால் இனிதாக எனக்கு அளித்து ரட்சிக்கும் விநாயகப் பெருமானே....


கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே.
32

கருவிகள்- தத்துவங்கள் 36
இரு வினை-நல் வினை,தீ வினை என வினைகள் இருவகை
நான்கு தலம்- நான்கு வழிகளால் அடையப் பெறும் நான்கு இடங்கள்
சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகியவை நான்கு வழிமுறைகள்;அவற்றைப் பழகி சேவகநிலை,மைந்தநிலை,நட்புநிலை,காதல்நிலை என்ற நிலைகளை ஆன்மா எய்த முடியும்.இந்த நான்கு நிலைகளே சாலோகம்(சேவகம்),சாமீபம்(மைந்தநிலை),சாரூபம்(தோழமை),சாயுச்சியம்(காதல்நிலை,இரண்டறக் கலந்து தாமே ஈசனாகி விட்ட அத்வைத நிலை)
மூன்று மலம்- ஆணவம்,மாயா,கன்மம் ஆகிய மும்மலங்கள்

உயிருக்கு அல்லது உயிரை உடலில் இயக்குவதற்கான  கருவிகள் 36 என்று சொல்கிறது சைவ சித்தாந்தம்.இந்த நிலம் முதல் நாதம் வரையிலான 36 தத்துவங்களும் உயிரின் மேல் செயல்பட்டு நல்வினை,தீவினை என்னும் இருவித வினைகளுக்கு அவ்வுயிரை உட்படுத்துகின்றன.அவ்வினைகளின் விளைவுகளை ஆன்ம உய்வடைய வேண்டும் என்ற நோக்கத்திற்கே பயன்படுத்துவோர்,அவ்வினைகளின் எச்சத்தைக் கொண்டு மீண்டும் உலக வாழ்வில் பிறந்து உழல மாட்டார்கள்;மாறாக  பரம்பொருளுக்கு சேவகநிலை,மைந்தநிலை,நட்புநிலை,காதல்நிலை  போன்ற வழிகளின் மூலம் சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்னும் நிலைகளை அடைய இறையைச் சிந்தித்து  முயற்சிப்பார்கள்; இம்முயற்சியில் ஆணவம்,கன்மம்,மாயை என்னும் மும்மலங்கள் வழிமறித்து ஆன்மாவை திசைதிருப்பி வினைகளின் வழியை திரும்பச் செலுத்த  முயலும்.

 நான்கு தலங்களின் வழியாக உயிர் நான்கு விதமான நிலைகளை அடைய முடியும்.இந்த மொத்த செயல்பாடுகளுக்கிடையே மும்மலங்கள் ஏற்படுத்தும் மாயா நிலைகளும் உயிரை அலைக்கழிக்கும்.

கணபதியின் அருள் அன்பானது, ஆன்மாவின் மேல் செயல்படும் 36 கருவிகளை ஒடுக்கும் வழியை அறிவித்து,அவற்றின் விளைவாக ஏற்படும் இருவித வினைகளை அறுத்து நீக்கி ஆணவ,மாய,கன்ம மலங்களின் மயக்கத்தை தெளிவித்து, சரியை,கிரியை,யோகம் மற்றும் ஞானம் ஆகிய நான்கு வழிமுறைகள் மூலம்-methods-அடையக் கூடிய நான்கு வித நிலைகளான சாலோகம்-சிவனடியார்கள் கூட்டத்தில் வாழ்வது,சாமீபம்-சிவத்தின் அருகில் வாழும் நிலை-புனிதவதி போல,சாரூபம்-சிவத்தின் வடிவாகவே தாமும் வாழ்வது,சாயுச்சியம்-சிவமே தன்னுள் கலந்து தான் அவன் வேறுபாடு இல்லாத நிலை- ஆகிய நிலைகளை இனிதாக அடையும் வண்ணம் எனக்கருளும் விநாயகப் பெருமானே...


ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே .
36

ஒன்பது வாயில்- இரு கண்,இரு செவி,இரு நாசி,வாய்,கருக்குழி,எருக்குழி என்னும் ஒன்பது வாயில்களைக் கொண்டது உடலம்.
ஐம்புலன்கள் - கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் வழி பார்த்து,கேட்டு,முகர்ந்து,ருசித்து,உணர்ந்து ஆன்மா வினைகளின் வழிப் படுகிறது.
ஆறாதாரம்-மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆஞ்ஞை போன்ற ஆறு ஆதார நிலைகள்.ஆன்ம சக்தி நிலைபெறும் ஆறு இடங்களாக இவை வகைப் படுத்தப் படுகின்றன.
பேறா நிறுத்தி- அசையாது நிறுத்தி நிலைபெறச் செய்வது


ஆன்மா செயல்படும் மனித உடலானது ஒன்பது வாயில்களைக் கொண்டது;இந்த ஒன்பது வாயில்களைப்  பயன்படுத்தி ஐம்புலன்களின் வழியாக கருவிகள் செயல்பட்டு ஆன்மாவை வினைகளின் வழி செலுத்துகிறது; கருவிகள் ஐம்புலன்களின் வழி ஒன்பது வாயில் உடலில் குடி கொண்டிருக்கும் ஆன்மாவை வினைப்படாமல் தவிர்க்க, ஒரு மந்திரம் போல  தனது எல்லையற்ற அருளைச் செலுத்துவதன் மூலம், புற உலக மாயை,கருவிகளை நிறுத்தி, பேச்சற்ற மோன நிலையை நல்கி,ஆன்மசக்தியை ஆஞ்ஞை எனப்படும் சுழிமுனையில் அசையாது நிறுத்தி அருளும் விநாயகப் பெருமானே...




இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி
40


இடை,பிங்கலை - இரு வித சுவாச சுத்தி முறை.
சுழிமுனை - புருவ மத்தியில் இருக்கும் ஆறாவது ஆதார நிலை
மூன்று மண்டலம் - சந்திர,சூரிய அக்னி (மதி,பரிதி,தீ) என வகைப்படுத்தப்படும் உடலியக்க சுவாச சக்தி மண்டலங்கள்  
நான்றெழு பாம்பு - தொங்கி நிற்கும் பாம்பு வடிவ குண்டலினி எனப்படும் ஆன்ம சக்தி


நமது சுவாச சுத்தி வழிமுறைகளில் இடை,பிங்கலை எனும் இருவித சுவாச மண்டலங்களில் மூச்சு இயங்கலாம்.இதைத்தான் சந்திரகலை,சூரிய கலை என்று யோகாசனக் கலை கூறுகிறது.இந்த சுவாசத்தை விரும்பிய கலையில் நிறுத்தும் ஆற்றல் வாய்ந்தவர்கள் விரும்பிய குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அளவில் திருமந்திரம் சுவாச சித்தியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

திருமந்திரத்தில் ஒரு அழகான பாடல் பின்வருமாறு-
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாரில்லைகாற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குகூற்றை உதைக்கும் குறி அதுவாமே.

இருவித நிலைகளில் நிலவும் சுவாசத்தைப் படித்து,பிடிக்கும் கணக்கை அறிதல் மிகக் கடினம்.அப்படி அறிந்து கொண்டவர் இறவா நிலையை அடையும் வண்ணம் உடல் மூப்பற்றுத் திகழ முடியும்.திருமூலரே 3000 ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பது கதை மட்டுமல்ல,நடந்திருக்க முடியும் என்று நம்பக் கூடிய சாத்தியமே என்பதைக் காட்டத்தான் இப்பாடல் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.


இவ்வாறு இருவித நிலைகளில் திகழும் சுவாச சூட்சுமத்தை அறிவித்து கடைசி ஆதாரமாகிய சுழிமுனைக் கபாலத்தில்,சூரிய சந்திர அக்னி மண்டலங்களில் இழைந்து முட்டி நிலவும் ஆன்ம சக்தியான குண்டலினி சக்தியை,அசையாது சுழிமுனையில் நிறுத்தி நிலைபெறச் செய்வதோடு மட்டுமல்லாது ,அந்த நிலைபெறச் செய்த ஆன்ம சக்தியின் சுவையை எனது நாவிலும் உணர்த்தும் வல்லமை பெற்று அருளுகிற விநாயகப் பெருமானே.....




குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே .
44


குண்டலி - குண்டலினி எனப் படும் ஆன்மசக்தி
கூடிய அசபை - கூடியிருக்கும் உயர்நிலை
விண்டெழு - விளக்கி வாய்விட்டுச் சொல்லும் நிலை

குண்டலினி எனப்படும் ஆன்மசக்தியை சுழிமுனையில் அசையாது நிலைநிறுத்திய நிலையை குண்டலி அதனில் கூடிய அசபை என்ற வாக்கியம் விளக்குகிறது;இந்த நிலையை ஒரு சொல்லவொன்னாத இனிய ஆன்மநிலை என்று யோகம் கூறுகிறது.

திருமந்திரம் 3-584 ம் பாடலில்
எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே
கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே
உருவிடும் சோதியை உள்கவல்வார்க்கு
கருவிடும் சோதி கலந்து நின்றானே 

குதம் மற்றும் கருக்குழிகளுக்கு இருவிரற்கடை தொலைவினில் உருவிக் கொண்டு அலையும்  வண்ணம் நிலவும் ஆன்ம சக்தியை கவனித்து உள் எழுப்ப வல்லார்க்கு மீண்டும் கருவினில் நுழையா நிலையான இறைநிலை கிடைக்கும் என்பது பாடலின் பொருள்.இக் கருத்தையே இந்த நான்கு வரிகளும் விளக்குகின்றன.

அவ்வாறு சுழிமுனையில் நிலைபெற்றுத் திகழும் ஆன்மசக்தியின் இனிமை நிலையை  வாய்விட்டு விளக்கி உரைத்து விளக்கி அருள் செய்வது கணபதியின் அருள். அந்த அருள் மூலாதாரத்தில் மூண்டு திகழும் கனலை காலால் எழுப்பும் வித்தையை (யோகாசானத்தில் இது ஒரு உயர்ந்த உட்பொருள் நிரம்பிய ஆசனம், விநாயகர் வடிவத்தின் குதிகால் மூலாதாரத்தை அழுத்தி நிற்கும் வடிவத்தை உற்று நோக்கலாம்!)  கருத்தில் விளங்கும் வண்ணம் அறிவித்து அருள் செய்யும் விநாயகப் பெருமானே....



அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்.
48


அமுத நிலை- ஆன்ம சக்தி சுழிமுனையில் திகழும் அமுத நிலை
ஆதித்தன் இயக்கம் - உடலின் சூரிய மண்டல இயக்கம்
குமுத சகாயன்- குமுத மலரின் சகாயனான சந்திரன்
இடைச் சக்கரம் - சூரிய மண்டலமான நாபியின் மேலிருக்கும் பதினாறு கலைகளுடன் கூடிய சக்கரம்


நமது உடலின் ஆறு ஆதாரங்களின் வழி ஆன்ம சக்தி உயிர்ச் சக்தியாக வழிந்து திகழ்கிறது.அதன் கடை நிலையில் மூலாதாரத்தில் திகழ்த்து கரு உருவாக்க சக்தியாக மாறுகிறது.

சூரிய மண்டலம் நாபிக்கு மேலும் சந்திர மண்டலம் தலைக்குக் கீழும் தண்டுவட நரம்புப் பாதையில் குறியீட்டு நிலையில் திகழ்கின்றன; சந்திர மண்டலத்தில் இருந்து வழியும் உயிர்ச்சத்தானது சூரிய மண்டலத்தில் நிகழும் அக்னியால் உறிஞ்சப் படுவதால் ஆன்மக் கனல் மூலாதார நிலையிலேயே இருக்கிறது.

யோகப் பயிற்சி வழிகளின் ஊடாக சுழிமுனையில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரைக் குறியீட்டு நிலைக்கு, ஆன்ம சக்தியை மூலாதாரத்தில் இருந்து எழுப்பி சந்திர மண்டலத்தினின்று கீழ் வழி உயிர்ச்சக்தி வழியாது மேல்வழி திருப்பி,சுழி முனைப் பீடத்தை திறக்கும் வல்லமை பெறும் போது,ஆன்ம சக்தி பேரானந்த நிலைக்கு, பிறப்பற்ற நிலைக்குச் செல்கிறது.

இந்த வழிமுறைகளை உடலியக்க சக்கரங்கள் மற்றும் உறுப்புக்களின் இயக்க நுணுக்கங்களை விளங்கச் செய்து சூரிய இடைச் சக்கரத்தின் நிலை, திங்கள் மண்டலத்தினின்று வழியும் உயிர்ச் சக்தி, அது இயங்கும் ஆதித்த-சூரிய மண்டல இயக்க விளக்கம், இவற்றையெல்லாம் ஆன்ம சக்தி கடந்து சுழி முனைப் பீடத்தை உடைத்துத் திறக்கும் வித்தையை அறிவித்து அருளும் விநாயகப் பெருமானே....



சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரி எட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
52



சண்முக தூலம்- அறு கோணத்திலிருக்கும் பருப் பொருள் உண்மை
சதுர்முக சூட்சம்-  நான்கு முக சூட்சும உண்மை
புரியட்ட காயம்- எட்டு நிலைகளால் விளக்கப்படும் உடல்
தெரி எட்டு நிலை- ஐம்புலன்களோடு மனம்,சித்தம்,அகங்காரம் என்ற கரணங்கள் சேர்ந்த எட்டு நிலை

அறு கோணம் ஞான நிலையைச் சார்ந்தது; பல எந்திரச் சக்கரங்கள் எழுதும் போதும், வீடுகளில் எளிய கோலம் போடும் போதும் கூட இரண்டு முக்கோணங்களை ஒன்றன் மீது ஒன்று தலைகீழாகப் பொருத்தி அறுகோணச் சக்கரம் வரைவதைப் பார்த்திருப்போம்.

சிவசக்தியின் உட்பொருள் சக்தி ,நான்முகத்தின்னுள் அமைந்த அறுகோண வடிவத் தூலத்தில் திகழ்கிறது என்பதை உணர்த்தவே, முருகனுக்கு அறுகோணச் சக்கரத்துடன் தொடர்பு ஏற்படுத்தி வைக்கப்பட்டது.

இந்த சிவ சக்தி உட்பொருளை ஆன்ம உயிர் உணரும் வண்ணம் உடலின் எட்டு நிலைகளிலும் எனக்கு அறிவிக்கச் செய்து, சிந்தனை வழி எண்ணித்தெளியும் முகமாக(எண்முகமாக) உடலியக்கத்தின் எட்டு நுட்பத் தன்மைகளை புலப்படும் வண்ணம் எனக்கு அறிவித்து அருளும் விநாயகப் பெருமானே.... 




கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து  
56



கருத்தினில் - அறிவில் விளங்கும் வண்ணம்
கபால வாயில் - சுழிமுனையின் ஆதார நிலையும்,அதற்கு மேலான கபாலத் திறப்பின் பெருவெளி நிலை வாயிலும் 
இருத்தி- நிலை பெறச் செய்து
முத்தி- ஆன்மா ஆதார நிலையின் இறுதியை அடைந்து திகழும் இன்புற்ற நிலை
முன்னை வினை- ஆன்ம உயிரின் பற்பல முன் பிறப்பு வினை நிலைகள்


ஆன்மநிலையில் உயர்ந்த பெரியவர்கள் உடலத்தை நீக்கும் போது கபாலப் பெருவழியின் வழி ஆன்ம உயிரை நீக்கிக் கொள்ளும் பேறு பெற்றவர்களாகத் திகழ்வதுண்டு; இறப்பின் உயர்ந்த நிலையாக இது அறியப் படுகிறது.அதனையே கபால மோட்சம் என்று புராணங்கள் விவரிக்கின்றன.

உலகிற்கு ஆன்ம உயிர் அனுப்பப் படும் போது கருவி,வினைகளின் எச்சங்களைப் பொறுத்து அந்த ஆன்ம உயிருக்கான உடலம் சிவசக்தியால் தேர்ந்தெடுக்கப் படுகிறது.
தாயின் சுவாசத்தின் உதவியால் தானும் சுவாசித்துக் கொண்டிருக்கும் குழந்தை உலகைப் பார்க்க கருக்குழி வழி வெளிவரும் கணத்திலேயே அந்தக் குழந்தைக்கான ஆன்ம உயிர் கபாலத்தின் உச்சி வழி குழந்தையின் உடலத்தினுள் சென்று நிலைபெறுகிறது.

குழந்தையின் நாபிக் கொடி அறுத்து குழந்தை முதலில் உலகத்தின் காற்றைச் சுவாசிக்கும் கணம் வரை உள்ள நேரத்தை எடுத்துக் கொண்டு ஆன்ம உயிர் அக்குழந்தையின் உடலில் செயல்படத் துவங்குகிறது.

பிறந்த குழந்தையின் கபால உச்சி இதன் காரணமாகவே குழியுடன் மேற்தோலால் மட்டும் மூடப்பட்டுத் திகழும்; எச்சரிக்கையாகத் தடவிப் பார்க்க கபால உச்சியில் இதனை உணரலாம்.

உடலில் உயிர் நிலவவும்,உடலத்திலிருந்து விடைபெறும் நிகழ்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது கபாலப் பெருவெளி.

உயிர் உடலில் நிலவும் ஆயுட்காலத்திலேயே ஆன்ம உயிர் சக்தியை சுழிமுனை மற்றும் கபாலப் பெருவெளி வரை உலவச் செய்யும் திறனை அடைபவர் ஆன்ம உயிரை உயர்நிலையில் செலுத்தும் நிலையை அடைகின்றனர்.

அந்த நிலையே யோகத்தின், ஞானத்தின் உயர்நிலை.


எனது ஆன்ம உயிர்ப் பொருளை எனது சிந்தனைக்கு அறிவித்து, ஆன்மா தோன்றிய காலம் தொட்டு சேர்த்து வைத்திருக்கின்ற வினைகளை முதல் வரை களைந்து,(முதல் என்பது principal, அதற்கு வினைகள் மென்மேலும் பல பிறப்புகளில் சேர்ந்து interest பெருகுகிறது.அவற்றை முதல் வரை முற்றாகக் களைந்து அருள்கிறார் விநாயகப் பெருமான் என்பது நுண்ணிய பொருள்)  எனது ஆன்ம உயிரை ஆதாரத்தின் இறுதி நிலையான சுழிமுனை மற்றும் பெருவெளியில் வாயிலைக் காட்டி நிறுத்தி எனது ஆன்மாவுக்கான பேரானந்த நிலையை எனக்கு அருளும் விநாயகப் பெருமானே....


வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில்   
60



வாக்கும் மனமும் இல்லா மனோலயம் - பேச்சும் சிந்தனையும் ஒருமுகப் பட்டு கருவி,வினைகள் ஒன்றுமில்லாது திகழும்  மனநிலை
இருள் வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன - இருளாகவும்,வெளிச்சமாகவும் உள்ள இரு நிலைகளிலும் ஒன்றே என உணரும் உயர்நிலை

சும்மா இரு என்று ஞானியர்கள் உபதேசத்திருக்கிறார்கள் என்பது பல கதைகளில் கூட விளக்கப் பெற்றிருக்கிறது. ஒன்றும் செய்யாமல் சோம்பித் தூங்குவது சும்மா இருத்தல் என்று நாம் பலர் அதைப் புரிந்து கொண்டிருக்கிறோம்.

அந்த நிலை உடலால் சும்மா இருக்கும் நிலை இல்லை; ஆன்மா கருவிகள்,வினைகள்,மாயை
ஆகிய எவற்றின் பாற்படாமல் சிவசிந்தனையில் திளைத்திருக்கத் திகழும் நிலை.

அதைத்தான் வாக்கும் மனமும் இறந்த நிலை காணில் யாக்கைக்கு அழிவில்லையாம் என்று பாடிச் சென்றார் ஔவைப் பிராட்டி.

அத்தகு மோன நிலையை காட்ட மட்டும் செய்யாது,அந்த நிலையில் ஆன்மா தேங்கி நிலைத்து நிற்கும் வண்ணம் எனது சிந்தனையைத் தெளிவித்து, இருளும் ஒளியும் ஒன்றே என உணரும் நிலையில் எனது ஆன்மாவை அருளானந்த நிலையில் அழுந்தி இருக்கச் செய்தருளும் விநாயகப் பெருமானே.....


எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.
64

சதாசிவம் - சிவத்தின் இறுதி வடிவநிலை(சிவம்,மகேசுவரம்,சதாசிவம்)
சித்தம்- சிந்தனை



சித்தாந்தத்தின் படி சிவம் என்ற கடவுள் நிலை மற்ற அகச் சமயங்களில் நிலவும் கடவுளர்களை மீறிய நிலை;அதனினும் உயர்ந்த நிலை மகேசுவரம் எனப்படும் சிவனடியார்களின் ஆன்மாவாக சிவ சொரூபம் திகழும் நிலை;அதனினும் உயர்ந்தது சித்தாந்தத்தின் மேன்மையான அனைத்தையும் கடந்த சதாசிவ நிலை.


எனது சிந்தனையில் சிவ சொரூபத்தை விளங்கச் செய்து, மாயையின் பாற்பட்டும்,கருவிகளின் வினைகளின் பாற்பட்டும் அல்லலுறும் உலகாதாய சப்த சூழலிலும் ஆன்மாவிற்கு அந்த அல்லல்கள் அனைத்தையும் விலக்கி, ஆன்ம சக்தி சிவத்தின் இறுதி நிலையை அடையவல்ல அருள் வழியைக் காட்டி அருளி, முடிவற்ற ஆனந்த நிலையை எனக்கு அருளச் செய்து,சிவத்தின் இறுதி நிலையான சதாசிவ நிலையை காட்டி அருளச் செய்யவல்ல விநாயப் பெருமானே..... 




அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி.
68

கணுமுற்றி நின்ற கரும்பு - கணு முற்றி நின்ற விளைந்த கரும்பின் இனிமை
வேடமும் நீறும் - சிவ வடிவ வேடம் மற்றும் திருநீறு அணிந்த நிலை விளங்க
கூடும் மெய்த் தொண்டர் குழாம்- சிவத்தில் பற்றுக் கொண்டு இணைந்த அடியார்கள் குழுமம்


சைவசித்தாந்த தத்துவத்தின் படி சிவ சொரூபமான இறைவன் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் அல்லதுமாய் இருப்பவன்; மாணிக்கவாசகப் பெருமான் இறைவன் இயல்பை சிவபுராணத்தில் சொல்லும் போது

அன்பருக்கு அன்பனே,யாவையுமாய் அல்லையுமாய்சோதியனே,துன்னிருளே,
தோன்றாப் பெருமையனே,ஆதியனே, 
அந்தம்,நடுவாகி,அல்லானே 

என்று விளிக்கிறார்.

பிரபஞ்சம் எனப்படும் பால்வெளியில் இருக்கும் யாவும்,அந்த யாவும் அல்லாது ஏதாவது இருப்பின் அந்தப் பொருளும், ஒளியாகவும், இருளாகவும், இரண்டுமற்ற தோன்றாத் தன்மையும், முதலானதாவும்,முடிவான பொருளாகவும்,இரண்டிற்கும் இடைப்பட்டதாகவும்,எதுவும் அற்றதாகவும் திகழ்கின்ற சிவப் பரம் பொருளே என்று இறைவனின் இயல்பை விரித்துச் செல்கிறார்.

உலக சமயங்கள் எதிலும் இறைச் சக்தியை,பரம் பொருளின் தன்மையை இவ்வளவு பொதுமைப் படுத்திப் பேசும் சமயங்கள் இருக்கின்றனவா என்பது விவாதப் பொருள். அத்தகு மேன்மையான சிவத்தின் சக்தி அணுவிலும் அணுவிற்கு அணுவிலும்(போஸான் என்னும் கடவுள் துகள் !?) அவற்றிற்கு அப்பாலாகவும் திகழும் தன்மையை முற்றி நின்ற கரும்பின் இனிமை போலக் காட்டியருளி, சிவ வேடமும் நீறணிந்த மேனியும் கொண்ட சிவத் தொண்டர் கூட்டத்தினருடன் எம்மை இணைத்து ,சிவத்தின் மேன்மைப் பொருளை விளக்கி அருளும் விநாயகப் பெருமானே....,



அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே .
72

அஞ்சக்கரம் - அஞ்சு அக்கரம் - ஐந்தெருத்து மந்திரம்(நமசிவாய)
வித்தக - உயர்ந்த,மேன்மையான
விரைகழல் - விரைவாக செயல்படும் கால்கள்,பாதார விந்தம்


நமசிவாய மந்திரம் சிவத்தின் பொருளை விளக்க வல்லது.உலக வினைகளை நீக்கி, மும்மலங்களை நீக்கி ஆன்ம ஒளியை சிவசொரூபத்தில் நிலைக்க வைக்க வல்லது நமசிவாய மந்திரம்.

நமசிவாய  மந்திரத்தின் வழி மேன்மையை அடைந்த பெரியவர்கள் அந்த அனுபவத்தைத்தான் திருமுறைப் பாடல்கள் எங்கிலும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

நாவினுக்கருங்கலம் நமசிவாயவே என்பது அப்பர் பெருமான் வாக்கு; அவரே நற்றுனையாவது நமசிவாயவே என்கிறார்.

ஒருக்கால் எனது சிந்தை உன்னை வழுத்துவதை மறந்தாலும் எனது நாவானது இயல்பாகவே உன்னை சிந்தித்து திகழும் என்ற பொருளில் சுந்தர மூர்த்தி சுவாமிகள் நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே என்று அறிவித்தார்;

கூற்றுவன் வரும் காலம் கூற்றுவன் அஞ்சும் வண்ணம் திகழும் காப்புச் சொல் நமசிவாயவே என்ற பொருளில் கூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே என்றார் சம்பந்தப் பெருமான்.

அதனாலேயே ஐந்தெழுத்து மந்திரம் என்று சொல்லப் பட்டது நமசிவாய மந்திரம்.

அந்த மந்திரத்தின் விளக்கப் பொருள்தன்னை என்னுடைய நெஞ்சமும் அறிவும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எனது சிந்தனை அறிவு நிலையையும் கருத்தில் கொண்டு, ஆன்மா சிவத்தினை அடைந்து திகழும் தத்துவ நிலையை எனக்குத் தந்து ஆட்கொண்டருளக் கூடிய,மேன்மை பொருந்திய,எனது நிலையைக் கடைத்தேற்ற விரும்பி ஆட்கொள்ளும் வண்ணம், விரைவாகச் செயல்படும் பாதாரவிந்தங்களைக் கொண்ட விநாயகப் பெருமானே....உனது கழல்களே சரணம் ! சரணம் !! சரணம் !!!


விநாயகர் அகவலை தினந்தோறும் வழுத்தி ஆன்ம உயர் நிலையை அடைந்து இன்புற வாழ்த்துக்கள் !!!

Monday, July 2, 2012

145.அமெரிக்கா உடைத்தால் மண்குடம்;மற்றவர் உடைத்தால் பொன்குடம் !


போபாலில் நடந்த விஷ வாயுக் கசிவும் அதைத் தொடர்ந்த தலைமுறைகளைப் பாதிக்கும் சோக விளைவுகளும் நாம் அனைவரும் அறிந்தது.

அந்த விபத்து நடந்த போது முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் போபால் மக்களுக்கு என்ன நடந்தது,அவர்களுக்கான உடனடி உதவிகள் என்ன என்று பார்ப்பதை விட,யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சிஇஓ'வான அமெரிக்கர் வாரன் ஆண்டர்டனை தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்புவதில்தான் குறியாக இருந்தார்.

போபால் மக்கள் அடைந்த பாதிப்புகளுக்கும்,இரண்டு தலைமுறைகள் தாண்டியும் அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதும் நிலத்தடி நீர் விஷநீராக மாறி அதனால் வரும் நோய்த் தொற்றுகளும் கணக்கற்றவை.


இந்தியாவில் போபால் விபத்து நடந்த போது விஷவாயு வெடித்த நாளில் மட்டும் இறந்தவர்கள் 2259, இரண்டு மூன்று வாரங்களில் 3787 பேர் இறந்தார்கள். காயமடைந்தவர்கள் 5,58,127. அந்த பாதிப்பினால் பின்னர் இறந்தவர்கள் எண்ணிக்கை 8000 பேர்.இது தவிர ஊனம் மற்றும் மற்ற உபாதைகள் 38,478 பேரைப் பாதித்தன.

நொடியில் மறித்த குழந்தைகள் !

கால்நடைகள் கொத்துக் கொத்தாக இறந்தன !!

வரிசை வரிசையாக !! 
எண்ணற்ற குழந்தைகளின் பிணங்கள் எண்களால் மட்டுமே அறியப் பட்டன !
எண்களே அடையாளம் !
வீட்டுக்கொருவர் அல்லது இருவர் இறந்திருந்தார்கள் !! 

வீட்டிற்கொரு பிணம் !
















பிணங்கள் வரிசை வரிசையாக விழுந்து கொண்டிருந்தன !!!
தொடர்ந்த மரணங்கள் !












பிபிசி நிறுவனம் தொழிற்சாலைகள் சார்ந்த விபத்ததுகளில் உலக அளவில் மிக அதிகமான
உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்படுத்திய விபத்துகளில் ஒன்றாக இதை வகைப் படுத்தியது.




இந்த விபத்திற்கு அதிகபட்சமாக எடுக்கப் பட்ட சட்ட நடவடிக்கை என்ன தெரியுமா? யூனியன் கார்பைடு(டவ் கெமிக்கல்ஸ் என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இது இயங்கியது;தோண்டினால் இதில் எவனாவது காங்கிரஸ் அரசியல் வியாதி-சொற்பிழை அல்ல- முக்கியப் பங்குதாரராக இருக்கக் கூடும்) இந்தியாவின் 7 அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு ஒரு லட்சரூபாய்...ஆம் ஜஸ்ட் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மத்தியப் பிரதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது !
அர்ஜூன் சிங்கும் ராசீவும் வழியனுப்பி வைத்த ஆண்டர்சன் !
அதுவே சட்டத்தின் படி அதிக பட்ச அபராதத் தொகை என்று சொன்னது நீதி மன்றம் !!

சிலருக்கு ஆயுள் தண்டனை அளித்தது;அவ்வாறு தண்டனை விதிக்கப் பட்டவர்கள் தீர்ப்பு வருமுன்னேயே இயல்பாக வாழ்ந்து இறந்து போனார்கள் !!!

அவ்வளவுதான் அரசு செய்து கிழித்தது.


இந்நிலையில் அரசு முன்னின்று எதுவும் கிழிக்காத நிலையில் தனிநபர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் மன்ஹாட்டன் மாநிலத்தில் யூனியன் கார்பைடின் மீது வழக்குத் தொடர்ந்தார்.அந்த வழக்கில் வந்திருக்கும் தீர்ப்பு அலாதியான அமெரிக்கத் தீர்ப்பு.போபால் விபத்தின் பின்னால் நடந்த உயிரிழப்பு,சுற்றுச்சூழல் மாசு,நிலத்தடி நீர் மாசு போன்ற எவற்றிற்கும் யூனியன் கார்பைடு நிறுவனம் பொறுப்பல்ல.மத்தியப் பிரதேச மாநில அரசுதான் அவற்றிற்குப் பொறுப்பேற்று நிவாரணம் வழங்க வேண்டும்'என்ற அதி அற்புதமான தீர்ப்பை வழக்கி,வாரன் ஆண்டர்சனோ,யூனியன் கார்பைடு நிறுவனமோ சல்லிக் காசு தரும் அளவுக்குக் கூடக் குற்றமற்றவை என்று சொல்லி விட்டார்கள்.

இது தொடர்பாக இன்றைய தினமணியின் தலையங்கத்தின் ஒரு பகுதி ... முழுத் தலையங்கம் இங்கே இருக்கிறது.

டைம்ஸ் இந்தியாவிலும் இது பற்றிய செய்தி வந்திருக்கிறது. ஒரு முறை இந்தச் செய்திகளைத் தேடிப் படித்து விடுங்கள்;பொறுமையற்றவர்கள் பின்வரும் சில பத்திகளையாவது படிக்கலாம் !

போபால் விஷவாயு விபத்தில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் வாரன் ஆண்டர்சன் அந்த சம்பவத்துக்குப் பொறுப்பல்ல என்று அமெரிக்காவின் மேன்ஹாட்டன் மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, போபால் மக்களுக்காக இழப்பீடு பெற்றுத்தரப் போராடும் அமைப்புகளுக்குப் பெரும் அதிர்ச்சி என்பதோடு, அன்னிய நேரடி முதலீடுகளில் இனிமேலாவது இந்திய அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளது.
 யூனியன் கார்பைடு நிறுவனம் போபாலில் விட்டுச்சென்ற சயனைடு கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து கடந்த இரு தலைமுறைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்று பாதிக்கப்பட்டோர் சார்பில் ஜானகிபாய் சாஷூ என்பவரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. மனுவை இரண்டுமுறை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மூன்றாவது மனுவை ஏற்று விசாரித்த நீதிபதி ஜான் கீனன் அளித்துள்ள தீர்ப்பு, இனிமேல் இந்த வழக்கில் எந்தவிதமான இழப்பீட்டையும், நியாயத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் எதிர்பார்க்க முடியாது என்பதைத் தெளிவாக்குகின்றது.

 ""....யூனியன் கார்பைடு வேறு, யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் வேறு. இந்தியாவில் பல ஆயிரம் பேர்களது மரணத்துக்குக் காரணமான போபால் விஷவாயு விபத்துக்கு யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்தான் பொறுப்பு. யூனியன் கார்பைடு நிறுவனமோ அல்லது அதற்கு அன்றைய தேதியில் தலைவராகப் பொறுப்பு வகித்த வாரன் ஆண்டர்சனோ பொறுப்பல்ல'' என்கிறது மேன்ஹாட்டன் மாகாண நீதிமன்றத் தீர்ப்பு.
 யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் எடுத்த முடிவுகள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு எடுத்த முடிவுகள்தான் என்று வழக்குத் தொடுத்தவர்கள் வாதிட்டதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

பரிசோதிக்கப்படாத புதிய தொழில்நுட்பத்தை போபால் ஆலையில் புகுத்திய வாரன் ஆண்டர்சன், கடும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஆலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுவிழக்கச் செய்ததுதான் விபத்துக்கு அடிப்படைக் காரணம் என்று கூறியதையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

 ""...யூனியன் கார்பைடு நிறுவனம், போபாலில் இருந்த யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்டின் தாய் நிறுவனம் என்பது உண்மையே. ஆனால், இந்திய நிறுவனத்தின் ஒவ்வொரு முடிவுகளிலும் யூனியன் கார்பைடு தலையிட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இந்தத் தொழிற்சாலையை நிறுவுவதற்கான இடத்தைத் தேர்வு செய்தவர் ஆண்டர்சன் அல்ல. மத்தியப் பிரதேச மாநில அரசுதான் இடத்தை வழங்கியது. விபத்துக்குப் பின்னர் மூடப்பட்டுவிட்ட ஆலையில் ஏற்பட்ட நச்சு மாசினை அகற்ற வேண்டிய வேலையும் மாநில அரசையே சாரும்..'' என்கிறது தீர்ப்பு.
 ""யூனியன் கார்பைடு நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அமெரிக்காவில் இருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலையீடு இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லையா? அல்லது அதற்கான ஆவணங்களையும் தகவல் பரிமாற்றங்களையும் இல்லாமல் செய்துவிட்டார்களா? இந்த வழக்கில் இதற்கான ஆவணங்களைக் கைப்பற்ற இந்திய அரசு தவறியது ஏன்?'' - 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

இப்போது ஒரு ஃப்ளாஷ் பேக்.


2010'ம் ஆண்டு அமெரிக்கக் கடற்கரையோரமான கல்ஃப் ஆப் மெக்சிகோ பகுதியில் இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் நிறுவனக் கிணறு ஒன்றில் நடந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் பதினொரு பேர் இறந்ததோடு 17 பேர் காயமடைந்தார்கள்.அதோடு எண்ணெய்கிணற்றிலிருந்து வெடிப்பினால் வெறியேறிய எண்ணெய் சுமார் 4200 சதுரமைல்களுக்கு கடல்நீரில் பரவியது.


இந்த விபத்தினால் கடல் உயிரினங்கள் மற்றும் கடல்நீர் மாசு ஏற்பட்டது.மனித இழப்பு என்று பார்த்தால் பதினொரு பேர் மற்றும் காயமடைந்தவர்கள் 18 பேர்,அவ்வளவுதான்.அவர்களும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஊழியர்கள் ! அவர்களுக்கு நிறுவனத்தில் இருந்து நிச்சயம் தனியான இழப்பீடு வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் அப்பகுதி கடல் வாழ் உயிரினங்களில் பல பாதிப்புகள் இருப்பதாகக் கூவினார்கள்.அமெரிக்க நிர்வாகமும் ஒபாமாவும் சேர்ந்து கூவினர்.மீன்களும் திமிங்கிலங்களும் பரிதவிப்பதாகவும் கடல்நீர் எண்ணெய் கலந்து அமெரிக்காவே பாதிக்கப் பட்ட ரேஞ்சில் நாசா விண்கலங்கள் எடுத்த படங்களைப் போட்டு அதகளம் செய்தது அமெரிக்கா.



பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் அமெரிக்க செனட்டுக்கு வந்து மன்னிப்புக் கேட்க வைக்க வற்புறுத்தப் பட்டு மன்னிப்புக் கேட்டார்,

அதோடு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகுப்புநிதி உருவாக்கப்பட்டு அதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் பணம் கொடுத்தது. அந்த விபத்தின் காரணமாகப் கடற்கரையோரம் வசிப்பவர்கள் அல்லது கடல் சார்ந்த தொழில் முகவர்கள்,தங்களது தொழிலுக்கோ அல்லது உடமைகளுக்கோ அந்த எண்ணெய்க் கசிவின் மூலம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கருதினால் அந்த நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போது 2012.

போபால் விஷ வாயு விபத்திற்கு அரசு முனைந்து நின்று அமெரிக்க நிறுவனங்கள்,அமைப்புகள்,நீதிமன்றங்களில் முறையீடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் இழப்பீடு பெற வேண்டும் என்பது போக, ஒன்றும் நடக்காத விரக்தியில் தனிப்பட்டவர்கள் முயற்சித்து எடுத்த வழக்கில் மன்ஹாட்டன் நீதிமன்றம், போடா போக்கத்த பயல்களா.. என்று சொல்லி ஊற்றி மூடி விட்டது.

போபால் விஷ வாயு விபத்து வரலாற்றில் ஒரு வழியாக கல்லறைக்கு அனுப்பப் பட்டு விட்டது.


எனக்கு எழும் சில கேள்விகள் :

1.அமெரிக்கக் கடற்கரையோரத்தில் நடந்த விபத்தில் 30 பேருக்குள் காயமும் உயிரிழப்பும் நேர்ந்து ஒரு விபத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா குய்யோ முறையோ என்று கத்தி, பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் தலைவரை அமெரிக்காவிற்கு வரவழைத்து மன்னிப்பு வாங்க முடிகிறது. மீன்களும் திமிங்கிலங்களும் தவளைகளும் கடலில் இருந்து எழுந்து வந்து நஷ்ட ஈடு கேட்கும் என்று பிலாக்கணம் படித்து 20 பில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வாங்க முடிகிறது. ஆனால் லட்சக் கணக்கில் மக்கள் மடிந்த ஒரு விபத்து நடந்ததற்கு ஒரு மயிரும் தர மாட்டோம் என்று அதே அமெரிக்கா சொல்கிறது.காங்கிரஸ் கட்சியின் சொம்பு நக்கிகள் அமெரிக்க அதிகாரிகளின் கால்களில் விழுந்து கிடக்கிறார்கள் !
லட்சக் கணக்கில் மடிந்த மக்களின் உயிரிழப்பு ஒரு பொருட்டே அல்ல. என்ன விதமான தலைவர்களை நாம் பெற்றிருக்கிறோம்????

2. அமெரிக்கக் கடற்கரையில் வாழும் மீன்களை விட இந்தியாவில் வாழும் எண்ணற்ற உழைக்கும் மக்கள் பொருட்டற்றவர்களாகப் போனார்களா?

3.நமது தலைவர்கள் இந்தியாவின் குடிமக்களா அல்லது இன்னும் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கக் குடிமக்களாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. இன்னும் நாம் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கக் காலனி நாடுகளில் ஒன்றாக அவர்களது வைஸ்ராய்களால் ஆளப்படும் மக்களாக இருக்கிறோமா?

4.சாதாரண மனிதனான எனக்கே இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒப்பு நோக்க, எரிச்சலும் கோபமும் மண்டுகிறதே. நமது ஆட்சியாளர்கள் இவற்றைப் பற்றிக் கிஞ்சித்தும் யோசிப்பார்களா மாட்டார்களா?

நாம் சுதந்திர நாட்டின் பிரஜைகளா ? அல்லது இன்னும் மேற்குலத்தின் அடிமை நாடுகளில் ஒன்றா??

நன்றி- தினமணி,சுலேகா,டுடே இதழ் 

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...