குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, October 17, 2012

178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு!!!




தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற்ற காமம் எளிதாகியிருக்கிறது என்றும், இது நகர்ப் புறத்தில் மட்டுமல்ல கிராமங்களில் கூட எஸ்.எம்.எஸ் எனப்படும் செய்திச் சேவை வழி கூட முறையற்ற காமம் பரவ ஏதுவாகியிருக்கிறது என்ற ஒரு பார்வையை, அதன் நீதி அல்லது அநீதி பற்றிய எந்த நிலைப்பாட்டிலும் பட்டுக் கொள்ளாமலும் எந்தக் கருத்தாகத்தையும் முன்வைக்காமலும் 
எழுதப் பட்டிருக்கிறது.

எழுதியவர் தன்னைப் பத்திரிகைகளில் எழுதிப் பரிச்சயம் உள்ளவராகச் சொல்கிறார்; விவரிக்கத் தேவையன்றி இந்தப் பதிவிலும் 'அந்தப் பயிற்சி' தெரிகிறது.பதிவர் எந்தக் கனவில் இருக்கிறார் என்று தெரியவில்லை. கிராமத்தில் அறிமுகமற்ற பெண்ணுக்கு அறியாதவர் ஒருவர் கைத் தொலைபைசியில் அழைத்து, ராங் கால் என்று சொன்னால் கூட முதல் முறை மன்னிப்பார்கள்; இரண்டாம் முறை ஆள்வைத்து விசாரித்து, கம்புடன் வந்து கதவிடிப்பார்கள் !

இந்த முகநூல், சாட்டிங் காமம் எல்லாம் நகர்புறங்களிலும், இரண்டாம் நிலை நகரங்களில் மட்டும்தான்!

இவற்றிற்கான காரணம் என்ன என்ற சிந்தனை பொருள் பொதிந்தது; கவலை தரக் கூடியது.


()



மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை அறிவியல் துறை சார்ந்த கண்டு பிடிப்புகள் வந்த வண்ணமே இருக்கின்றன.அவற்றை மனிதகுலம் ஏற்றும் தள்ளியும் தன்னைப் புனரமைத்துக் கொண்டேதான் வந்திருக்கிறது.ஒரு குறிப்பிட்ட கண்டு படிப்பு அல்லது வசதியின் தாக்கம் சமூகத்தில் ஒழுங்கின்மையைக் கொண்டு வருகிறது என்று சொன்னால் முதல் முதலில் கண்டு பிடிக்கப் பட்ட ஆடை அணியும் வழக்கம், முதலில் கண்டறியப் பட்ட தொலைபேசி, முதலில் பயன்பாட்டுக்கு வந்து புகைப்படக் கருவி, முதலில் பயன்பாட்டிற்கு வந்த ஒளிப்படக் கருவி, முதலில் பயன்பாட்டிற்கு வந்த தொலைக்காட்சி வரை சமூகத்தில் ஒழுங்கின்மையை வளர்த்துக் கொண்டே வந்து இன்றைய நிலையில் சமூகம் குப்பையின் மொத்த வடிவமாக இருந்திருக்க வேண்டும்.
மேற்கண்ட கூற்று எவ்வளவு நகைப்புக்கிடமானது என்பதை படிக்கும் எவரும் சொல்லி விடக் கூடும்.

சமூகம் பிரமாதமாக இருக்கிறது என்ற பார்வையை முன்வைப்பது என்னுடைய நோக்கமில்லை; சமூகத்தில் பாலியல் சார்ந்த ஒழுங்கின்மை நிச்சயம் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்குக் காரணம் முகநூலும், கைத் தொலைபேசியும், எஸ் எம் எஸ்'ம் அல்ல. அவற்றைப் பயன்படுத்துபவர்களிடம் சேர்ந்து விட்ட முடை நாற்றமெடுக்கும் சிந்தனைகள் ! மேற்குலகம் சார்ந்தும், திரையுலகம் சார்ந்தும் தன் வாழ்வை மாற்றியமைத்துக் கொள்ளும் முட்டாள் தனத்தின் எச்சங்களே இந்த விளைவுகள்,

ஐடி என்று சொல்லப்படும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையின் வேலைகளால் எளிதாகக் கிடைத்த கணக்கற்ற பணம் இந்த நாற்றச் சிந்தனையின் ஊற்றுக் கண். எளிதாக அதிக அளவு பணம் சம்பாதிக்க வழிவகை செய்த ஒரு காரணத்திற்காக வேண்டுமானால் ஐடி துறையைக் குறை சொல்லலாம்; வேறு வகைகளில் அல்ல.

இருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு நிபுணத்துவம்-ப்ரொபஷனல்- சார்ந்த கல்வி கற்ற ஒருவர் கூட தன்னுடைய பணிக் காலத்தின் இறுதியில் சுமார் 40000 அல்லது 50000 ரூபாய் ஊதியமாகப் பெறுவது கடினமுடையதாகவே இருந்தது.ஆனால் ஐடி துறை வளர்ச்சி பெற்ற பிறகு தொழில் நுட்பவியல்-இன்ஜினீயரிங்- கற்ற ஒருவர் எளிதாக தன்னுடைய பணிக் காலத்தை 35000 ரூபாய் சம்பளத்துடன் தொடங்க முடிந்தது.



இந்த சம்பாத்தியத்தைக் கண்ணுற்ற முதல் தலைமுறைப் பெற்றோர்கள் தம்முடைய ஐடி துறைக் குழந்தைகளை தேவ தூதர்களாகக் கட்டமைத்துக் கொண்டார்கள்; அவர்கள் வாழ்வியல்,ஒழுக்க விதிமுறைகள், நற்பழக்க வழக்கங்கள் எதையும்,எப்படி மீறீனாலும் அதைக் கண்டிக்க இயலாத அடிமைகளாகத் தங்களைக் கற்பிதம் செய்து கொண்டார்கள். அல்லது அவர்களது மைந்தர்கள் தாங்கள் அத்தகைய முறைப்படுத்தல்கள் தேவையில்லாத, அவற்றிற்கு அப்பாற்பட்டவர்களாகத் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள். எனவே கீழை நாடுகளுக்கேயுரிய குடும்ப முறையில் அறிவுறுத்தி தமது மைந்தர்களை நல்வழிப் படுத்தும் தொன்று தொட்ட வழக்கத்தின் தொடர் கண்ணி இங்கு வெட்டப் பட்டது.

இது முதல் சறுக்கல்!


()


எளிதாக சம்பாதிக்கத் தொடங்கிய இந்தத் தலைமுறையினர், பணம் சம்பாதிக்கும் ஒரு காரியமே வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று நம்பத் தொடங்கிப் பின்னர் அதை உறுதியாக தீர்மானித்து விட்டார்கள்.அது அவர்கள் வாழ்வில் வெற்றியடைந்து' விட்டதாக அவர்களை நம்ப வைத்தது. இவ்வாறு வாழ்வின் வெற்றியை' அடைந்தவர்களுக்கு, வாழ்க்கையை எந்த முறையிலும் வாழலாம் என்ற கட்டுடைப்புத் தனம், மேற்குலகத்தின் வாழ்வு முறையைப் பார்த்து வந்தது. பணியிடத்தில் வரம்பின்றிப் படரும் காமம் 'பணியிடக் காதலா'க உருவகப் படுத்தப் பட்டது. இவற்றை நியாயப் படுத்தும் திரைப்படங்கள் ஏற்கனவே மேற்குலத்தில் பல இருக்கின்றன; மேற்குலக வாழ்வு முறையும் அவற்றிலிருந்து முற்றிலும் வேறு பட்டது அல்ல. ஒரு வகையில் மேற்குலத்தினரைப் பொறுத்த வரை அவர்களது வாழ்க்கை முறையை அவர்களது திரைப்படங்கள் பிரதிபலிக்கின்றன.

மேற்குலகத்திலிருந்து அனைத்தையும் காப்பி அடிக்கும் நமது அடிமை மனோபாவம், மேற்குலகத் திரைப் படங்களையும் காப்பி அடிக்கத் துவங்கியது.(இல்லை என்பவர்களுக்கு தெய்வத் திருமகள் முதல் துப்பாக்கி வரை எண்ணற்ற சான்றுகள் இருக்கின்றன).

மேற்குலக சமூக முறை தன்னை முன்னிலைப் படுத்தியது; தன் சுகம், தன் முன்னேற்றம், தன் சம்பாத்தியம் என்று சுழலும் தன்மையுடையது. கீழைச் சமூக முறை குடும்பம் சார்ந்தது. குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு பொருளீட்டினாலும், அவர்களின் பங்களிப்பு தமது தனிப்பட்ட வளர்ச்சியை விட, குடும்ப வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இயங்கி வந்தது.அந்த சமூக வாழ்வு முறையினால்தான், தான் படிக்காமல் வேலைக்குச் சென்று, தன் தம்பி தங்கைகளைப் படிக்க வைத்து உயர்நிலையை அடைய வைத்த பல தியாக சகோதரர்கள் பல குடும்பங்களில் ஆங்காங்கே தோன்றியிருந்தார்கள்.

ஐடி துறையின் மூலம் எளிதான சம்பாத்தியம், இந்த குடும்பம் சார்ந்த சமூக வாழ்வு முறையை ஒரு புயல் போல உடைத்துப் போட்டது. ஐடி துறையின் மற்றொரு அங்கமாக இருந்த மேற்குலகத் தொடர்பு அவர்களது வாழ்வு முறையை பரீட்சார்த்த முறையாக இந்த ஐடி சார்ந்த தொழிலில்,பணியில் அமர்ந்த கீழைச் சமூகத்திற்கு அறிமுகப் படுத்தியது. எளிதாகக் கிடைத்த அளவற்ற சம்பாத்தியத்தினால், வாழ்வின் அனைத்து நுட்பங்களையும்-ந்யூயன்சஸ்- வென்று விட்டதாக மனப்பால் குடிக்கத் துவங்கியிருந்த, முதல் தலைமுறை ஐடி சமூகம், தான் ஊறியிருந்த பண்பாடு,சமூக முறைப்படுத்தல்கள் சார்ந்த வாழ்வு முறையிலிருந்து வெளியேறி, மேலைச் சமூக வாழ்வு முறையை தழுவி மகிழ்ந்தது.

இது அடுத்த சறுக்கல்!


()


முதல் நிகழ்வில் தடைகள் நீங்கியது, இரண்டாவதில் எப்படியும் வாழலாம் என்ற சிந்தனையும், அவற்றைச் சரி என்று நம்ப வைக்கும் ஊடக சூழலுமே இந்த வர்ச்சுவல் காமத்தின் மூல காரணிகள். 

மனிதன் ஒரு சமூக விலங்கு; மனித மனம் ஒரு குரங்கு. 

தனக்கான வாழ்வியல் முறைப்பாடுகளில் கட்டுப்பாடுகளைத் தேவையற்றவை என்று உதறிய கணத்தில், அவற்றை மீறும் சாத்தியங்களையும் வசதிகளையும் வெகு வேகமாகத் தழுவத் தொடங்கின அந்தக் குரங்கு மனமும், விலங்கு வகையும். காமம் என்ற ஆதார உணர்ச்சிக்கு வடிகால்கள் இவ்விதம் தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் தானே உடைக்கப்பட்ட வெளியில், கிடைக்கும் எந்த வடிகாலும் சரியானதே என்ற சமனப்பாட்டிற்கு மனக்குரங்கு ஆயத்தமானது.


இந்த ஆயத்தத்திற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை.பொருளாதார சுதந்திரம் மற்ற எல்லாக் கட்டுகளையும் விடுவிக்கும் மந்திரக் கோலாகியிருக்கும் சூழலில், கண்காணிக்கும் ஒரு செயல் கூட கட்டுப் பாடுகளை விதிக்கும் நிலையாக மாறி, அவற்றை உடைக்கும் மனவெறியைத் தோற்றுவிக்கின்றன.

இந்த மனவெறிக்கு பணிச்சுமை, தனிமைச் சூழல், மன அழுத்தம் போன்ற பவிசான பூச்சுகள் கொடுக்கப்பட்டன.(ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உடைய குடும்பத்தைக் காக்க கட்டுமானம் போன்ற உடலுழைப்புத் துறைகளில் உழைக்கும் ஒரு குடும்பத் தலைவனுக்கும் இருக்கும் மன அழுத்தத்தை விட, ஐடி துறையில் இருக்கும் ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கும் என்பதை பேச்சுக்குக் கூட ஒத்துக் கொள்ள முடியாது!)

விடுவிக்கப் பட்ட அந்த மனவெறியின் விளைவுதான் இன்றைய அலுவலகக் காமம்; முகநூல் காமம்; அடுத்த வீட்டின் காமம் என்று எல்லைகளற்று விரியும் வடிகால்களின் வடிவம்.

இது ஒரு சமூகத்தின் சிந்தனையில் விளைந்த ஒரு நோய் ! இதைக் கட்டமைத்து, வழிப்படுத்த வேண்டிய மூத்த தலைமுறையினர் லட்சங்களில் கிடைக்கும் பணத்தின் மத்தியில் வாய் மூடி மௌனிகளாயிருக்கிறார்கள் !

தடைகளற்றுப் பாய்ந்து கொண்டிருக்கின்றன, காமத்திற்கான வடிகால்கள்.


()

காமத்தில் மட்டுமல்ல, சமூகத்தின் ஒழுக்க நெறிகள் என்ற அறியப் பட்ட பல முகாந்திரங்களிலும் இந்த வாழ்வு முறையில் நிகழ்ந்த மாற்றம் தன்னுடைய முத்திரைகளைக் கோரமாகப் பதிந்து கொண்டிருக்கிறது. புகை, போதை, மதுப் பழக்கங்கள், 'கொண்டாட்டத்தின்' கூறுகளாக மாறி விட்டன. திருமணத்திற்குப் பெண் தேடும் போது, மாப்பிள்ளைப் பையனுக்கு குடி, சூது போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லை என்று கூறிய காலம் போய், மாப்பிள்ளைப் பையன் 'சோஷியல் ட்ரிங்கர்' என்று விளித்துக் கொள்வது நாகரிகமாயிருக்கிறது. 

இந்த நிலையில் சமூக நெறிகளைப் பற்றிப் பேசுபவர்கள் பைத்தியக் காரர்களாகத் தோற்றமளிக்கிறார்கள்.

நன்னீராற்றில் கூட திடீரென்று உடைத்துக் கொண்ட வெள்ளத்தில் சருகுகளும் குப்பை கூளங்களும் மத,மதவென சுழித்துக் கொண்டு ஓடும்; ஆனால் அந்த சமயத்தில் நன்னீராற்று நீராக இருப்பினும் அது குடிப்பதற்கு உகந்ததாயிருக்காது. வெள்ளப் புரட்டின் ஆரவாரம் நின்ற பின் அமைதியாக ஓடத் துவங்கும் நதியே மீண்டும் குடிப்பதற்கு ஏதுவானதாக மாறும்.

சமூகத்தின் நியதியும் அதுவே !

ஆனால் ஒன்று...வாழ்க்கை என்பது ஒரு நியாயமான, குரூரமான ஆசான். அது அவரவர்களுக்கான பாடத்தை தயவு தாட்சண்யமின்றி கற்பித்து விட்டே நகர்கிறது.

அந்தப் பாடம் வசந்தமாக வருகிறதா,வலிகளுடன் வருகிறதா என்பதைத் தீர்மாணிக்கும் காரணி இன்னும் கூட நமது கைகளில்தான் இருக்கிறது!!!


31 comments:

  1. அறிவன்,

    நல்லப்பகிர்வு,பணத்தின் அடிப்படையிலே ஒழுக்கத்தின் அளவீடுகள் உள்ளது.

    ஒழுக்கமின்மை என பொதுவாக நினைக்கப்படுவது, பணம் படைத்தவர்கள் செய்தால் ஸ்டேட்டஸ் சிம்பல் :-))

    சுதந்திரம் என்பார்கள்.

    எனக்கு தெரிந்தே, ஒரு பெண்ணை படிக்க எப்படி வெளியூர் தனியா அனுப்புறதுன்னு சொன்ன பெற்றோர் , பக்கத்திலே படிக்க வச்சாங்க, ஐ.டி.யில் வேலை என்றதும் புனேவுக்கு தனியா அனுப்பி வச்சாங்க :-))

    நான்கு வருடத்தில் பெண் தனியாக வெளியூருக்கு போனால் தப்பில்லைனு முடிவுக்கு பெற்றோர் வந்துட்டாங்க.ஆனால் இப்போ அவங்க பயந்த காதல் ,கீதல் வந்தால் தப்பில்லை போல :-))

    ReplyDelete
    Replies
    1. ||ஒழுக்கமின்மை என பொதுவாக நினைக்கப்படுவது, பணம் படைத்தவர்கள் செய்தால் ஸ்டேட்டஸ் சிம்பல் :-))||

      பணம் படைத்தவர்கள் செய்தால் என்றில்லை; பணம் சம்பாதிக்கத் தெரிந்தவனுக்கு எந்த விழுமியமும் பொருட்டில்லை என்ற மனோபாவம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
      அது தனிமனிதன்,குடும்பம், சமூகம் போன்ற அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது.

      || எனக்கு தெரிந்தே, ஒரு பெண்ணை படிக்க எப்படி வெளியூர் தனியா அனுப்புறதுன்னு சொன்ன பெற்றோர் , பக்கத்திலே படிக்க வச்சாங்க, ஐ.டி.யில் வேலை என்றதும் புனேவுக்கு தனியா அனுப்பி வச்சாங்க :-))

      நான்கு வருடத்தில் பெண் தனியாக வெளியூருக்கு போனால் தப்பில்லைனு முடிவுக்கு பெற்றோர் வந்துட்டாங்க.ஆனால் இப்போ அவங்க பயந்த காதல் ,கீதல் வந்தால் தப்பில்லை போல :-))||

      உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து, பெண் படிப்பதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் பிற்போக்கு வாதி என்று உங்களை முத்திரை குத்தப் போகிறார்கள் !!!
      :))

      பெண் கல்வி கற்பது நல்லது; அவள் வேலைக்குச் செல்வது அதனினும் நல்லது. காதலிப்பதும் நல்லதே.

      காதலில் நிலைத்து, குடும்பத்தில் நிலைத்து அதை வளர்ப்பது முக்கியம்.

      காமத்தில் திளைத்து, பந்தமற்று வாழ்தல், ஆண் நண்பர்களுடன் வாழ்க்கை என்று திசை மாறுவதுதான் கொடுமை. அதைத் தடுப்பதில் சுய அறிவும், பெற்றோருடைய பங்கும் பெருமளவு இருக்கிறது.

      சுய அறிவு மழுங்கி விட்டிருக்கிறது; பெற்றோர் சொல்ல அஞ்சுகிறார்கள் !!
      ஆபத்தான அறிகுறி இது.

      Delete
    2. நன்றி வவ்வால்..ரீடரில் படிக்கிறீர்களா என்ன? உடனடி கருத்து, சுடச்சுட!

      Delete
    3. அறிவன்,

      புக் மார்க்கில் இருக்கு,அவ்வப்போது ரீடரிலும் படிப்பேன்,நேரத்தினைப்பொறுத்து.

      சூடா விவாதம் ஓடுகின்றது.

      மென்பொருள் துறையில் அவர்கள் செய்வதை ஜஸ்டிபிகேஷன்ன் செய்து ,இதான் நவீன வாழ்க்கை என ஜல்லியடிப்பதை நானே பார்த்துள்ளேன்.

      மற்றவர்கள் அப்படி சொல்லிக்கொள்ளாமல் கொஞ்சம் கூச்சப்படுவார்கள்.

      பெண்கள்"லைட்டா" டிரிங்க்ஸ் செய்யலாம் தப்பில்லை என்றே அடிக்கடி சொல்லக்கேட்கிறேன். வேறு எந்த துறையிலும் இப்படிலாம் பேசமாட்டார்கள்,முடியாது.

      சரக்கடிச்சுட்டு வாந்தி எடுத்துக்கிட்டு நிற்கும் பெண்களையும் பார்த்திருக்கேன், 25 வயசுக்கு மேல இருக்காது அவர்களுக்கு எல்லாம்.

      // வேலைக்குச் செல்வதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் பிற்போக்கு வாதி என்று உங்களை முத்திரை குத்தப் போகிறார்கள் !!!
      :))//

      அய்யய்யோ நீங்களே எடுத்துக்கொடுப்பீங்க போல இருக்கே, அதிக சம்பளம் கொடுக்கும் வேலைன்னதும் அதுவரைக்கும் எதுக்கு பயந்தாங்களோ அத பத்தி கவலைப்படலைன்னு உதாரணம் சொல்லவே அதனை சொன்னேன்.

      இதுக்கே அடிக்கடி பலர் எந்த பொறியியல் கல்லூரி நல்லா இருக்கும்னு என்னிடம் கேட்பாங்க , நாம ஒன்று சொன்னா ,அங்கே பசங்க பிஹேவியர் சரியில்லை, நல்ல காலேஜ்ஜா சொல்லும்பாங்க, நான் சொல்வது நல்ல கட்டமைப்பு உள்ள , கேம்பஸ் இன்டர்வியூ நடக்கிற, மக்கள் அதிகம் விரும்பும் கல்லூரியை, அதை தான் கேட்கிறாங்கன்னு நினைத்து சொன்னது.

      ஆனால் அவங்க பொண்ணை சேர்க்கப்போறாங்களாம், நல்ல காலேஜ்ன்னு அவங்க எதிர்ப்பார்க்கும் "தரம்" வேறு ,மேலும் சிலர் பொண்ணுங்க மட்டும் படிக்கும் பொறியியல் கல்லூரி சொல்லு,அதில எது நல்லா இருக்கும்னு கேட்பாங்க :-))

      இப்படி கல்லூரி வரைக்கும் பொத்தி பொத்தி வச்சுட்டு வேலைக்கு தனியா அதுவும் ஐ.டி துறைக்கு அனுப்பும் போது, கையில நிறைய பணம் , கேட்க யாருமில்லைனு சுதந்திரத்தினை அனுபவிக்க அல்லது எக்ஸ்பிளாய்ட் செய்யப்பார்க்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

      Delete
    4. || சூடா விவாதம் ஓடுகின்றது.

      மென்பொருள் துறையில் அவர்கள் செய்வதை ஜஸ்டிபிகேஷன்ன் செய்து ,இதான் நவீன வாழ்க்கை என ஜல்லியடிப்பதை நானே பார்த்துள்ளேன்.

      மற்றவர்கள் அப்படி சொல்லிக்கொள்ளாமல் கொஞ்சம் கூச்சப்படுவார்கள்.

      பெண்கள்"லைட்டா" டிரிங்க்ஸ் செய்யலாம் தப்பில்லை என்றே அடிக்கடி சொல்லக்கேட்கிறேன். வேறு எந்த துறையிலும் இப்படிலாம் பேசமாட்டார்கள்,முடியாது.

      சரக்கடிச்சுட்டு வாந்தி எடுத்துக்கிட்டு நிற்கும் பெண்களையும் பார்த்திருக்கேன், 25 வயசுக்கு மேல இருக்காது அவர்களுக்கு எல்லாம்.||

      மிகச் சரி..நானும் பார்த்ததாலேயே எழுத முடிந்தது. :))

      இதற்கு ஐடி துறையின் வெளி நாட்டு வேலைச் சூழல் மாதிரியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.
      மேற்குலகையும் திரையுலகையும் பின்பற்றியை நமது வாழ்க்கையையும்,அரசியலையும், ஆளுமையையும் எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்கிறேன்.

      சிவப்பாக இருப்பவன்|ள் திறமைசாலி, ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் அறிவாளிகள், மேற்குலக வாழ்வு முறை உயர்ந்தது,சுதந்திரம் நிரம்பியது, கீழை நாட்டு குடும்ப அமைப்பு முறை கட்டுப் பெட்டித் தனமானது போன்ற கருத்தாக்கங்கள் இதிலிருந்துதான் கிளம்புகின்றன.

      எனது வேலையில் ஒரு கால கட்டத்தில் ஜப்பானியர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு நேர்ந்த போது, அவர்கள் ஆங்கில அறிவு இல்லாததைப் பற்றிச் சிறிதும் வருந்த வில்லை; அனைத்து விவாதக் கருத்துக்களையும் ஜிலேபி ஜிலேபியாக ஜப்பானிய மொழியில்தான் குறித்துக் கொண்டார்கள். அனைவரும் தொழில் நுட்ப, வியாபார நிபுணர்கள். :))

      Delete
  2. //ஆனால் ஒன்று...வாழ்க்கை என்பது ஒரு நியாயமான, குரூரமான ஆசான். அது அவரவர்களுக்கான பாடத்தை தயவு தாட்சண்யமின்றி விட்டுச் செல்கிறது.// True!

    ReplyDelete
    Replies
    1. அறிவன்,

      வவ்வால் சரியாகச் சொன்னார். ஒழுக்கத்தின் அளவுகோல் பணவசதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

      தீயவை எப்போதும் சமுதாயத்தின் ஒரு அங்கமே. அவை தொழிற்நுட்பத்தினால் தான் வந்தது என சொல்ல இயலாது. ஆனால் அதிகரித்திருக்கிறது. தீயவர்களுக்கு தற்போதைய தொழிற்நுட்ப வசதிகள் பெருமளவு உதவி செய்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

      நகரத்திலாகட்டும், கிராமத்திலாகட்டும் தவறுகள் எதோ ஒரு சதவிகிதத்தில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. தற்போது அவற்றின் உருவங்கள் வேறாக இருக்கின்றன.

      Delete
    2. || தீயவை எப்போதும் சமுதாயத்தின் ஒரு அங்கமே. அவை தொழிற்நுட்பத்தினால் தான் வந்தது என சொல்ல இயலாது. ஆனால் அதிகரித்திருக்கிறது. தீயவர்களுக்கு தற்போதைய தொழிற்நுட்ப வசதிகள் பெருமளவு உதவி செய்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.||

      நண்பர் குட்டிப்பிசாசு,
      தொழில் நுட்பம் ஒரு கருவி. அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பது கர்த்தா.
      கர்த்தாக்களின் சிந்தனைகள் நாற்றம் பிடித்திருக்கின்றன என்பதுதான் நான் சொல்ல விழைவது. எளிய முயற்சியில் அதிகப் பணம் சம்பாதிக்கும் நிலை நிலவுவதால்,வாழ்வைப் பற்றிய அறக் கூறுகளின் சிந்தனை வழிகள் நீர்த்து சாக்கடையாகிக் கொண்டிருக்கின்றன என்பது துணைக் காரணம்.

      || நகரத்திலாகட்டும், கிராமத்திலாகட்டும் தவறுகள் எதோ ஒரு சதவிகிதத்தில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. தற்போது அவற்றின் உருவங்கள் வேறாக இருக்கின்றன.||
      கிராமங்களில் பந்தமற்ற சேர்ந்து வாழும் முறை இருக்கிறதா? நரக,நகரங்கள் இதை நியாயப் படுத்தவது போல் கிராமங்களில் பேச முடியுமா? இதைத் தனிமனித உரிமை என்றும் வாதம் செய்யத் தொடங்கி விட்டார்கள். மதுரைப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் தந்தை, மகள் வேலை பார்க்கும் சென்னையில் அவளைப் பார்க்க வந்து, அந்தப் பெண் பல ஆண் நண்பர்களுடன் ஒரு வீட்டில் வாழ்வதையும், தன்னையும் தன் நண்பர்களுடன் பங்கிட்டு வாழ்ந்த வாழ்க்கையும் பார்த்து, இதய அதிர்ச்சி நோயில் வீழ்ந்ததைப் பத்திரிகை செய்திகள் சொல்கின்றன.

      வெளியூர்கள், வெளி மாநிலங்களில் இருந்து பெரு நகரங்களில் வேலைக்காக வந்து தங்குபவர்களில் 60 சதவீதம் பேர் பந்தமற்றுச் சேர்ந்து வாழும் நிலை சரியே என்று சொல்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது..

      இவை தனி மனித உரிமை என்ற ஜல்லியடிகள் வரலாம்;ஆனால் இதில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஆரோக்ய சமூக,திருமண வாழ்வை அடையும் நிலை வராமலே போகலாம் என்பது உண்மை.

      அந்தப் பாடம் கிடைக்கும் போது, வாழ்வில் எதையும் சரி செய்ய இயலாத நிலையை அவர்கள் அடைந்திருப்பார்கள் என்பதுதான் சோகம் !

      Delete
  3. சிந்திக்க தூண்டிய அருமையான கட்டுரை. நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி நண்பர் நூருல்..

      Delete
  4. அறிவன்: என்ன சொல்றீங்க? வா மணிகண்டனுடன் நான் சண்டை எல்லாம் போட்டு இருக்கேன். ஆனால் இந்தப் பதிவில் எதுவும் தவறு தெரியலை.

    ***கிராமத்தில் அறிமுகமற்ற பெண்ணுக்கு அறியாதவர் ஒருவர் கைத் தொலைபைசியில் அழைத்து, ராங் கால் என்று சொன்னால் கூட முதல் முறை மன்னிப்பார்கள்; இரண்டாம் முறை ஆள்வைத்து விசாரித்து, கம்புடன் வந்து கதவிடிப்பார்கள் !***

    கம்பாவது, கடப்பாறையாவது. செல்ஃபோன் வச்சு அடிச்சாத்தான் உண்டு! டிவி என்கிற மீடியாவாலும் செல் ஃபோனாலும் கிராமமும் நாசமாப் போயித்தான் இருக்கு! எந்தக் காலத்தில் இருக்கீங்க, நீங்க??

    ***எளிதாக சம்பாதிக்கத் தொடங்கிய இந்தத் தலைமுறையினர், பணம் சம்பாதிக்கும் ஒரு காரியமே வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கிறது***

    அது எந்தக் காலத்திலும் உண்மைதானே???

    ReplyDelete
    Replies
    1. || அறிவன்: என்ன சொல்றீங்க? வா மணிகண்டனுடன் நான் சண்டை எல்லாம் போட்டு இருக்கேன். ஆனால் இந்தப் பதிவில் எதுவும் தவறு தெரியலை.||

      அவரது பதிவின் மொத்தமான தொனி, இவையெல்லாம் இயல்புதான், இவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தும் தொனியில் இருக்கிறது.
      கண்டிக்கப்பட வேண்டியவை கண்டிக்கப்பட வேண்டும் என்பது எனது பார்வை ! அதையே சுட்டியிருக்கிறேன்.


      ||கம்பாவது, கடப்பாறையாவது. செல்ஃபோன் வச்சு அடிச்சாத்தான் உண்டு! டிவி என்கிற மீடியாவாலும் செல் ஃபோனாலும் கிராமமும் நாசமாப் போயித்தான் இருக்கு! எந்தக் காலத்தில் இருக்கீங்க, நீங்க?? ||

      2012 ல் இருக்கிறேன். 2011 ல் திருச்சிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் மேற்சொன்ன வகையில் ஒரு சம்பவம் எனக்குத் தெரிந்தே நடந்தது. அதை வைத்தே சொல்கிறேன். கிராமங்களில் முறைதவறிய காமம் வழமையாக இன்னும் வரவில்லை; அதாவது ஐடி துறையில் பணி செய்யும் கண்மணிகளை ஒப்பு நோக்கும் போது !

      || ***எளிதாக சம்பாதிக்கத் தொடங்கிய இந்தத் தலைமுறையினர், பணம் சம்பாதிக்கும் ஒரு காரியமே வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கிறது***

      அது எந்தக் காலத்திலும் உண்மைதானே??? ||

      நான் அப்படிக் கருதவில்லை. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, முறையற்ற வழியில் சம்பாதிப்பவர்கள்தான் குறுகியகாலப் பணக்காரர்களானார்கள். அவர்களையும் சமூகம் நிந்தித்தை வந்திருக்கிறது.

      ஐடி'யாளர்களின் சம்பாத்தியம் போலவே ஊழலாளர்களின் சம்பாத்தியமும் ஒரே நேரத்தில் பெருகியது. அவர்களை முகத்திற்கெதிரே கொண்டாடினாலும், மறைவில் தூற்றுபவர்களே அதிகம்.

      ஐடியாளர்களை அவர்களது குடும்பமே தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுகிறது;அவர்கள் தவறிழைத்தாலும் கண்டு கொள்ளாமல் ! அதை நான் தவறு என்கிறேன் !!!

      Delete
    2. ***2012 ல் இருக்கிறேன். 2011 ல் திருச்சிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் மேற்சொன்ன வகையில் ஒரு சம்பவம் எனக்குத் தெரிந்தே நடந்தது. அதை வைத்தே சொல்கிறேன். கிராமங்களில் முறைதவறிய காமம் வழமையாக இன்னும் வரவில்லை; அதாவது ஐடி துறையில் பணி செய்யும் கண்மணிகளை ஒப்பு நோக்கும் போது !***

      ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற பழமொழி இங்கே ஏட்டு சுரைக்காய். கறிக்கு ஆவாது!

      Delete
    3. || ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற பழமொழி இங்கே ஏட்டு சுரைக்காய். கறிக்கு ஆவாது! ||

      இருக்கலாம்; ஆனால் அதுவும் ஒரு கூடுதல் எடுத்துக்காட்டு,அவ்வளவே. நான் பார்த்து அறிந்து முடிவு செய்ததையே சொன்னேன்.

      Delete

  5. ***காமத்தில் மட்டுமல்ல, சமூகத்தின் ஒழுக்க நெறிகள் என்ற அறியப் பட்ட பல முகாந்திரங்களிலும் இந்த வாழ்வு முறையில் நிகழ்ந்த மாற்றம் தன்னுடைய முத்திரைகளைக் கோரமாகப் பதிந்து கொண்டிருக்கிறது. புகை, போதை, மதுப் பழக்கங்கள், 'கொண்டாட்டத்தின்' கூறுகளாக மாறி விட்டன. திருமணத்திற்குப் பெண் தேடும் போது, மாப்பிள்ளைப் பையனுக்கு குடி, சூது போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லை என்று கூறிய காலம் போய், மாப்பிள்ளைப் பையன் 'சோஷியல் ட்ரிங்கர்' என்று விளித்துக் கொள்வது நாகரிகமாயிருக்கிறது. ***

    அதென்ன திடீர்னு ரொம்ப கவலைப் பட ஆரம்பிச்சுட்டீங்க?

    குடிகாரன் இன்னைக்கு ஷோஷியல் ட்ரின்கர் னு காலரை தூக்கிவிட்டிக்கொண்டு சொல்லிக்கிட்டுத்தான் திரிகிறான்.

    நீங்க அதை ஏற்றுக்கவில்லையா???

    ஏன்???

    ReplyDelete
    Replies
    1. || அதென்ன திடீர்னு ரொம்ப கவலைப் பட ஆரம்பிச்சுட்டீங்க?

      குடிகாரன் இன்னைக்கு ஷோஷியல் ட்ரின்கர் னு காலரை தூக்கிவிட்டிக்கொண்டு சொல்லிக்கிட்டுத்தான் திரிகிறான்.

      நீங்க அதை ஏற்றுக்கவில்லையா???

      ஏன்???||

      உங்கள் கேள்வி நகைப்பை வரவழைக்கிறது.

      குடியை அதன் எந்த வடிவத்திலும் நான் ஏற்பதில்லை; அங்கீகரிப்பதும் இல்லை.
      தனிமனிதன் வீட்டுக்குள் எவருக்கும் தொந்தரவில்லாமல் குடிப்பது அவனுடைய தனி உரிமை. அதைத் தடுக்கவோ கண்டிக்கவோ முடியாது; கூடாது என்பது ஜல்லியடி என்பது எனது பார்வை.

      நீங்கள் அமெரிக்காவிம் சிகாகோ விலோ, அல்லது யூகே விலோ வாழ நேரும் நிலையில் எவருக்கும் தொந்தரவில்லாத குடி, அவசியமானதாக இருக்கலாம்.

      இந்தியா போன்ற வருடத்தின் 11 மாதம் சூடு சூ***க் கிழிக்கும் தேசத்தில், குடிப்பது என்பது பணமும், திமிரும், செருக்கும் சேர்ந்த குணத்தின் விளைவாகவே என்று நான் பார்க்கிறேன்.

      இந்த குடிப்பழக்கம் தனி நபருக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பல தீங்குகளை கடந்த பத்தாண்டுகளில் நிகழ்த்தியிருக்கிறது; நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

      Delete
    2. ****உங்கள் கேள்வி நகைப்பை வரவழைக்கிறது.

      குடியை அதன் எந்த வடிவத்திலும் நான் ஏற்பதில்லை; அங்கீகரிப்பதும் இல்லை.
      தனிமனிதன் வீட்டுக்குள் எவருக்கும் தொந்தரவில்லாமல் குடிப்பது அவனுடைய தனி உரிமை. அதைத் தடுக்கவோ கண்டிக்கவோ முடியாது; கூடாது என்பது ஜல்லியடி என்பது எனது பார்வை.****

      உங்க பார்வைதான் இங்கே பிரச்சினை! பதிவுலகில் என்ன நடக்குதுனு தெரியாமல் இப்படி கண் மூடித்தனமாக இருந்துகொண்டு என்னைப் பார்த்து நகைக்கிறீங்க, பாவம்! ஐயா, ஊரறிய குடியைப் பெருமையாகப் பிதற்ரும் குடிகாரர்கள்தான் பதிவுலகில் அதிகம். அது உம் கண்களுக்குத் தெரியாதது பரிதாபம்! :(

      ***நீங்கள் அமெரிக்காவிம் சிகாகோ விலோ, அல்லது யூகே விலோ வாழ நேரும் நிலையில் எவருக்கும் தொந்தரவில்லாத குடி, அவசியமானதாக இருக்கலாம்.

      இந்தியா போன்ற வருடத்தின் 11 மாதம் சூடு சூ***க் கிழிக்கும் தேசத்தில், குடிப்பது என்பது பணமும், திமிரும், செருக்கும் சேர்ந்த குணத்தின் விளைவாகவே என்று நான் பார்க்கிறேன்.

      இந்த குடிப்பழக்கம் தனி நபருக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பல தீங்குகளை கடந்த பத்தாண்டுகளில் நிகழ்த்தியிருக்கிறது; நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.***

      எதையாவது அர்த்தமி இல்லாமல் பேசாதீங்க. நான் இந்தியாவ்வில் வாழும் குடிகார்களைப் பத்தித்தான் பேசிக்கொண்டு இருக்கேன். உம் கண்ணை திறந்து உம்மைச் சுற்றி என்ன நடக்குதுனு பாரும், ஐயா!

      Delete
    3. || உங்க பார்வைதான் இங்கே பிரச்சினை! பதிவுலகில் என்ன நடக்குதுனு தெரியாமல் இப்படி கண் மூடித்தனமாக இருந்துகொண்டு என்னைப் பார்த்து நகைக்கிறீங்க, பாவம்! ஐயா, ஊரறிய குடியைப் பெருமையாகப் பிதற்ரும் குடிகாரர்கள்தான் பதிவுலகில் அதிகம். அது உம் கண்களுக்குத் தெரியாதது பரிதாபம்! :( ||

      பதிவுலகின் பல பங்களிப்பாளர்கள் ஐடி துறையில்தான் இருக்கிறார்கள். மேலும் ஐடி'யாளர்களைப் போல தொழில் சார்ந்த பிரிவில் பெரும் எண்ணிக்கையில் குடிப் பிரியர்கள் வேறு துறைகளில் இல்லை.இதில் பதிவர்கள் என்று தனியாகப் பிரித்து எழுதத் தேவையில்லை; மேலும் பதிவர்களைப் பற்றி இங்கு தனியாக நாம் விவாதிக்கவுமில்லை.

      தொடர்பற்ற ஒரு கோணம் நீங்கள் முன் வைப்பது !

      அனைத்திற்கும் மேல், நான் தெளிவாகவே எழுதினேன், குடிப் பழக்கத்தை அதன் எந்த வடிவத்திலும் நான் எதிர்க்கிறேன் என்று..

      || எதையாவது அர்த்தமி இல்லாமல் பேசாதீங்க. நான் இந்தியாவ்வில் வாழும் குடிகார்களைப் பத்தித்தான் பேசிக்கொண்டு இருக்கேன். உம் கண்ணை திறந்து உம்மைச் சுற்றி என்ன நடக்குதுனு பாரும், ஐயா!||

      என் பின்னூட்டத்தைச் சரியாகப் பாருங்கள். நானும் இந்தியாவில் வசிக்கும் இந்திய ஐடியாளர்களைப் பற்றியே பேசுகிறேன். உங்களுக்கு எதுவும் அர்த்தமாகவில்லையா என்ன? :))

      Delete
  6. நகரத்தில் இருக்கும் பெண்களை தாராளமாக நம்பலாம் கிராமத்தில் இருப்பதுகளை நம்பவே முடியாது அதுங்க பாட்டுக்கு வயக்காட்டில் பொய் எல்லாம் பண்ணிவிட்டு வருங்க, காலம் ரொம்ப கேட்டுப் போயிருக்கு நண்பரே. கடைசியில் உள்ள கார்ட்டன் ரொம்ப அருமை!!

    ReplyDelete
    Replies
    1. || நகரத்தில் இருக்கும் பெண்களை தாராளமாக நம்பலாம் கிராமத்தில் இருப்பதுகளை நம்பவே முடியாது அதுங்க பாட்டுக்கு வயக்காட்டில் பொய் எல்லாம் பண்ணிவிட்டு வருங்க, காலம் ரொம்ப கேட்டுப் போயிருக்கு நண்பரே. கடைசியில் உள்ள கார்ட்டன் ரொம்ப அருமை!! ||

      நிச்சயம் இல்லை நண்பரே.

      கிராமத்தில் இருந்து வந்தவர்களிடம் பொய் பேசுவதில் சிறிதளவாவது மனத் துணுக்கம்,நேர்மையில் சிறிதளவாவது நம்பிக்கை நிச்சயம் இருக்கும்; நகர நாகரிகம் அனைத்தையும் துடைத்துவிட்டு தன் சுயநலத்தில் மாறாத உறுதியுடன் இருக்கும். சுயநலத்திற்குக் கேடு வரும் போது எந்த நெறிகளும் முக்கியமில்லை என்ற நிலை நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு எளிதாகக் கை கூடும். இதை பல முறை நான் நேரில் உணர்ந்திருக்கிறேன்.

      வருகைக்கு நன்றி ஜெயதேவ்.

      Delete
  7. அய்யா நானும் நிசப்தத்தின் பதிவை படிதேன்! நீங்கள் விமர்சிப்பது போல் அவர் ஒன்றும் சொல்லவில்லை!..... ... மேலும் ஒழுக்கம் என்பது அந்த சமுகத்தின் அரசியல் பொருளாதார கட்டமைப்பை சார்ந்தது இங்கு அரசின் கொள்கையான உலகமயமாக்கல் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருளாதாரத்தை கொண்டு வந்த பிறகு இங்கு அது சார்ந்த பண்பாடு கலாச்சாராம் நிலவுவதை எவ்வாறு தடுக்க முடியும் ? ..............................மேலும் குடும்ப அமைப்பு திட்டமிட்டு சீரழிக்க பட்டு விட்டது................... இன்று எந்த குழந்தையும் நீங்கள் அருகில் வைத்து பராமரிக்க முடியாது தன்னுடைய அடிப்படை கல்விக்கே பெற்றோர்களை பிரிய வேண்டி இருக்கிறது கிராமங்களில் விவசாயம் அழிக்கப்பட்டு விட்டதால் மக்கள் நகரம் நோக்கி செல்கிறார்கள் அங்கு கிடைக்கும் கூலியை வைத்து குடும்பத்துடன் வாழ முடியாது......................... ஆகவே பிரிந்த குடும்பம்கட்டுப்பாடு இழந்து விடுகிறது இது தான் கிராமம் முதல் நகரம் வரை உள்ளநிலை உங்களுக்கு சந்தேகம் இர்ருக்குமானால் உங்கள் கிராமத்தில் உள்ள ஒரு இளைங்கன் அல்லது ஒரு இளைங்கி இடம் செல்போனை வாங்கி பார்க்கவும் இது தனி நபரோ அல்லது குறிப்பான இடம் சார்ந்த பிரச்சனையோ அல்ல இது இந்த சமூக அமைப்பு சார்ந்த பிரச்னை யாரும் இதில் இருந்து தப்ப முடியாது ................

    ReplyDelete
  8. விவாதத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன்..

      மறுத்துப் பேசுவதற்காக எழுதவில்லை;இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கூடக் கெடும் போது,இளைய தலைமுறையினருக்கு நறுக்கென்று சொல்ல வேண்டியதிருக்கிறது. :))

      Delete
  9. உண்மைதான் நண்பரே. சமூகம் சீரழிந்து கொண்டு வருவதை யாருமே இப்பொழுது பொருட்படுத்துவதில்லை. எல்லாமே சகஜமாகிவிட்டது. இனி மீண்டும் கடந்த காலம் திரும்புமா இல்லை நாம்தான் இனி மீண்டு வருவோமா?
    எழுதியவருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
    சூரியா

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சூரியா,
      காலம் வருவதும் இல்லை; செல்வதும் இல்லை.
      நாம்தான் வந்தும், உழன்றும், பின் மறைந்தும் கொண்டிருக்கிறோம்.

      நாம் கெட்டு விட்டு, காலம் கெட்டு விட்டது என்கிறோம்..

      நம்மையும், சுற்றத்தையும் திருத்துவோம்...காலம் நலமாகும் !

      :))

      எழுதியவர் சங்கப்பலகை அறிவன் என்ற ஒரு ஆசாமி..ஆசாமிக்கு உங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.

      :)))

      Delete
  10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் அஉ.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாய்ப்புக்கள்...

      Delete
  11. Replies
    1. நன்றி நண்பர் மாற்றுப் பார்வை.
      முதல் வருகைக்கும் நன்றி.அடிக்கடி வந்து படித்து உங்கள் கருத்துக்களைத் தருக..

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...